June 17, 2010

உமி பிளஸ் அவல்

அன்புடையீர்...!

வணக்கம்.
1. உமி பிளஸ் அவல்
என் பதிவுகளில் தப்பித் தவறி சிற்சில நல்ல பகுதிகளை நான் தெரிந்தோ தெரியாமலேயோ போடுவதைப் பார்த்திருப்பீர்கள். அவைகளைப் பாராட்டிப் பின்னூட்டம் போடுகிறீர்கள். மிக்க நன்றி.
             நகைச்சுவையிலும் பல அபூர்வ உண்மைகளும் வாழ்க்கைக்கு உதவக்கூடிய பாடங்களும்  உள்ளன. என் பதிவுகளில் நல்ல நகைச்சுவை இருக்கும். (இது பற்றி கருத்து வேறுபாடு இருப்பதாக வதந்தி!) மனதை தொடக்கூடிய, மனிதனை உயர்த்தக்கூடிய விஷயங்களும் இருக்கும்.
உங்கள் மனதைத் தொட்ட, நெகிழச் செய்த அல்லது எண்ணங்களை மேம்படுத்த செய்த பதிவுகளை நீங்கள் படித்தால் மட்டும் போதாது. அவற்றை உங்கள் குழந்தைகளிடம் சொல்லுங்கள். இப்படி நல்ல விஷயங்களைச் சொன்னால் அவர்களுக்கு வேறு எந்த நல்ல புத்திமதிகளையும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இம்மாதிரி சின்னச் சின்ன சம்பவங்கள், கருத்துக்கள் அவர்கள் மனதில் அவர்களை யறியாமலேயே பதிந்து அவர்களிடம் உன்னதப் பண்புகளைத் தானாகவே வளர்க்கும்.
             இது ஏதோ ஒப்புக்குக் கூறும் யோசனை அல்ல. என் பேத்திக்கு இது மாதிரி எத்தனையோ விஷயங்களையும் பொன்மொழிகளையும் கூறி வருகிறேன். அவை   அவளை - வயது 12 - பல விதத்திலும் அழகாகச் செதுக்கி வருவதைப் பார்க்கிறேன். பல பண்புகள் யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே அல்லது நிர்ப்பந்தப்படுத்தாமலேயே அவளுக்குள்ளே விதைக்கப்பட்டு வளர்ந்து வருவதைப் பார்க்கிறேன்.
      இதை ஜம்பப் புகழ்ச்சியாகக் கருதாதீர்கள்.
     என் பதிவுகளில் உமி அதிகமிருக்கும். எப்போதாவது அவல் கிடைக்கக் கூடும். அதை ரசித்து, ருசித்துப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பதே என் வேண்டுகோள்.
அடுத்து ....
2. நாலு பேர் சொன்னாங்க!
உங்களில் பலர் எழுதும் பின்னூட்டங்களில் நல்ல தகவல்கள் மற்றும் கருத்துகள் உள்ளன. சிலவற்றை உங்களில் சிலர் படிக்கத் தவறி  இருக்கக்கூடும். ஆகவே ஒரு சில பின்னூட்டங்களை எடுத்துப் பதிவாகப் போட்டிருக்கிறேன்.
3. நகைப் பெட்டி!
 நான் பல நோட்டுப் புத்தகங்களிலும்  கணினியிலும் பல  சுவையான  ஆங்கிலப் பொன்மொழிகளையும், உரைகளையும், கவிதைகளையும், குறும்புப் பாடல்களையும்  அறிவுரைகளையும் திரட்டி வைத்துள்ளேன்.  மொழிபெயர்த்தால் வார்த்தைகளின் அழகும் வாக்கியங்களின் சிறப்பும் போய்விடும்  என்பதால் அவ்வப்போது ஆங்கிலத்திலும் ஒரு பதிவு போடலாம் என்று கருதுகிறேன்.

-கடுகு

6 comments:

  1. மதிப்பிற்குரிய திரு.அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    குழந்தைகளுக்கு நேரடியாக புத்திமதி சொல்வதை விட, சம்பவங்களாகவும், படித்த விஷயங்களாகவும் சொல்ல வேண்டிய அவசியத்தை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

    நீங்கள் எழுதுவது எல்லாமே அருமைதான். ஏன் உமி என்று சொல்கிறீர்கள்? சரி, முதலில் இந்தத் தன்னடக்கத்தை நாங்கள் கற்றுக் கொள்ள முயற்சிக்கிறோம்.

    அன்புடன்

    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete
  2. திரு கடுகு அவர்களுக்கு, உங்கள் உமி+அவல் கருத்தில் எனல்லு ரொம்பவும் உடன்பாடு - ஒரு சின்ன திருத்தத்துடன் - உமியைத் தேட வேண்டியிருக்கிறது. உங்கள் பேத்தி புண்ணியம் செய்திருக்கிறாள். அவளுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.
    தயவு செய்து நகைப் பெட்டியையும் சீக்கிரம் திறவுங்கள்.
    - ஜகன்னாதன்

    ReplyDelete
  3. Sir,
    Rarely we see UMI....but most of the time we get AVAL. ( Your prabhandam work itself is enough to take care of your grand daughter...My best wishes to her)

    OPEN THE JWEL BOX!!!! ( We will let you know whether it is 24 or 22 carat)

    Kothamalli

    ReplyDelete
  4. AND PLEASE WAIT FOR FEW DAYS..
    THEY WILL ALL BE OF 24 CARAT BECAUSE THEY WERE WRITTEN BY GREAT THINKERS...
    ( AND NOT BY TINKERS LIKE ME!)

    ReplyDelete
  5. உமியிலிருந்தும் மின்சாரம் எடுக்கலாமே? இது ஒரு புறம் இருக்க, உமி என்றதும் எனக்கு ஒரு கதை ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு பணக்காரன் தன் சொத்துக்களை தனது நான்கு மகன்களுக்கும் பிரச்சனை இல்லாமல் உயில் எழுதி வைப்பதற்கு, ஓர் உத்தியைக் கையாண்டான். மேஜை மீது உமி, கரி, மண், எலும்பு ஆகியவற்றை வைத்து ஆளுக்கு ஒன்றை எடுத்துக் கொள்ளச் சொன்னான். அப்படியே எடுத்துக் கொண்டார்கள். உமி எடுத்தவனுக்கு பயிர் நிலத்தையும், கரி எடுத்தவனுக்கு தங்கம், வைர நகைகளையும், மண் எடுத்தவனுக்கு வீட்டையும், எலும்பு எடுத்தவனுக்குக் கால்நடைகளையும் எழுதி வைத்தான். அதாவது, 'சொத்துக்கு நீங்கள் இப்படி அடித்துக் கொள்கிறீர்களே, அவற்றின் கடைசி கதி இதுதான்' என்று சொல்லாமல் உணர்த்தினான் அவன்.

    ReplyDelete
  6. ஆஹா, ‘நாலு பேரு சொன்னாங்க’ பதிவுக்கு அடுத்த மேட்டர் ரவிப்ரகாஷ் கொடுத்து விட்டார். (திரு ரவிப்ரகாஷ் அவர்களே, உங்கள் கதை உண்மையில் அற்புதம்.) - ஜகன்னாதன்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!