March 11, 2019

நான் ரசித்த எழுத்தாளர் வரிசை-1: கிஷோன்

ஈரமுள்ள வீடு
          இஸ்ரேல் நகைச்சுவை எழுத்தாளர் EPHRAIM KISHON எழுதிய ‘A  HANGING MATTER’ என்ற கட்டுரையைத் தழுவி, தமிழ் முலாம் கொடுத்து இங்கு தருகிறேன்.

                                           *                                       .
                                           *                                       *
     முதலில் ஒன்றைச் சொல்லி விடுவது முக்கியம். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு.  மோட்ச உலகிலும் இயற்கையின்  நடைமுறைகளிலும்   எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு.
     ஆனால் சமீபத்தில் குளிர் காலத்தின் போது இயற்கை  மீதிருந்த  மதிப்பு, மரியாதையெல்லாம் மாறிவிட்டது.
     விஸ்தாரமாகச் சொல்லுகிறேன்.  நான் சொல்லி முடிப்பதற்குள் உங்கள் கண்களிலிருந்து கண்ணீர் ஆறாய்ப் பெருகும்! 
    டிசம்பர் மாதம். திங்கட்கிழமை. பொழுது புலர்ந்தது. சூரியன் பளீரென்று உதித்து உலகையே உற்சாகப்படுத்தினான். ஜன்னல் வழியாகச் சூரியனை பார்த்து  “ஆகா, வந்தாயே, என் மகாராஜனே” என்று அவனுக்குச் சின்ன வரவேற்பைச்சொன்னேன்.

     ஆயிரம் வருஷம் காத்திருந்த மாதிரி, சூரியன் தலை காட்டியதற்கு விழாவே எடுக்கும் அளவுக்கு மகிழ்ச்சியில் குதித்தோம். ஒரு வாரத்திற்கு மேல் துணிகளைத் தோய்க்க முடியாமல், சுருட்டி சுருட்டி மூட்டைக் கட்டி வைத்திருந்தோம். 
  
 மூட்டைகளைப் படுக்கையின் கீழே, மேஜையின் கீழே, (வேண்டாத சாமான்கள்  நிரம்பிய பரணில் (எதையும் தூக்கிப் போடாதீங்க; எந்த சமயத்தில் எந்த சாமான் உதவும்  என்று உங்களுக்குத் தெரியாது.  காதறந்த  ஊசியும் உபயோகப்படும்”-  இது என் மனைவி என்னும் அரிஸ்டாட்டிலின் தத்துவம்!)    நிறைந்து இருந்ததால் அங்கு கிடைத்த இரண்டு அங்குல இடத்தில்,  துணிகளைத்  திணித்து வைத்திருந் தோம்.
மழை காரணமாக ஜன்னல்களைத் திறக்கவில்லை. வீட்டின் தரை  சொத சொதவென்று இருந்தது. மூட்டைகளில் இருந்த துணிகளில், டவல் போன்றவை சற்று ஈரமாக இருந்தன. அதனால், அவை ஒரு ஸ்பெஷல்   வாசனையுடன் இருந்தன. (இந்த வார்த்தை சரியில்லைதான்வேறு வார்த்தையைப்  போட மனம்  வரவில்லை! - கிட்டதட்ட சர்க்கரை ஆலைகளிலிருந்து வரும் மொலாசஸ்ஸே  சந்தனமணம்  என்று நாங்கள் கருதும் அளவுக்குத் துணிகளின் வாசனை  எங்கள் மூக்கை உண்டு, இல்லை என்று ஆக்கிவிட்டன!)
     விடிந்தது காலை. வாராது வந்த மாமணி போல சூரியன் வந்தது. யாம் செய்த தவத்தால் பளிச்சென்ற ஒளிச்சிதறலுடன் சூரியன் வந்தான்.