அமெரிக்காவின் சிறந்த கவிஞர்களில் ஒருவர் ராபர்ட்
ஃப்ராஸ்ட். அவரை இந்தியாவில் பிரபலமாக்கிய பெருமை ஜவஹர்லால் நேருவுக்கு உரியது.
மே, 21
1964 அன்று நேருஜி காலமானார். பகல் இரண்டு மணிக்கு அவர் காலமான தகவல் வந்ததுடன்
அலுவலகங்களை இரண்டு மணிக்கு மூடப்போவதாக அறிவிப்பும் வந்தது. அஞ்சலி
செலுத்துவதற்காக அவரது தீன்மூர்த்தி இல்லத்துக்குப் போனேன். கூட்டம் சொல்லி
மாளாது. கதவுகளை மூடி யிருந்தார்கள். பொதுமக்கள் அஞ்சலி செலுத்த நுழைவாயில்
அருகிலுள்ள கூடத்தில் உடல் வைக்கப்படும் என்று அறிவித்தார்கள்.
என் வீடு
மிக அருகில் இருந்ததால் வீட்டிற்குப் போய்விடலாம்; இரவு 1 மணி 2 மணிக்குத்
திரும்பி வந்தால் கூட்டம் குறைந்திருக்கும், அப்போது அஞ்சலி செலுத்தலாம் என்று
எண்ணி வீட்டுக்குப் போய்விட்டேன்.
இரவு 2
மணிக்குச் சென்றோம்.. கூட்டம் அதிகம் இல்லை. பத்து நிமிஷத்தில் உள்ளே
போய்விட்டோம். நேருவின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு வந்தோம். அவருடைய அலுவலக
அறையைப் பார்க்கவேண்டும் என்று ஆர்வமாக இருந்தது. யாரையும் வேறு எங்கும் போக விடவில்லை.
நேரு
இறந்த சில நாட்களுக்குள்ளாகவே ஒரு தகவல் பத்திரிகைகளில் வந்தது. அவர் தனது மேஜை
மேலிருந்த டயரியில் ஒரு ஆங்கிலக் கவிதையின் நான்கு வரிகளை எழுதி வைத்திருந்ததைப்
பத்திரிகைகள் வெளியிட்டன.




