Showing posts with label குட்டிக் கட்டுரை. Show all posts
Showing posts with label குட்டிக் கட்டுரை. Show all posts

April 16, 2013

பழமொழி விளக்கம் -கடுகு

நமது பழமொழிகளில் பல, வழக்கில் உருவம் மாறிவிட்டுள்ளன,
சிலவற்றைத் தவறான பொருளில் உபயோகிக்கிறோம். செம்மொழிக்குச் செய்யும் பணியாக ஒரு சில பழமொழிகளுக்கு ’சரியான’ விளக்கம் இங்கு தரப்படுகிறது


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்


 இந்தப் பழமொழியைத் தோற்றுவித்தவர்  தனவந்த்ரி என்ற வைத்திய நிபுணர் என்பது ஆராய்ச்சியில் தெரிகிறது. இன்றைய காலகட்டத்தில் பல டாக்டர்கள் இந்தப் பழமொழியை அறிந்து வைத்திருப்பதுடன், அவர்கள் பெரிய கார்கள், பங்களா, டி.வி, போன்ற பல வசதிகளுடன் வாழ்வதிலிருந்தும் தெரிவதாவது: இந்தப் பழமொழியின் உண்மையான உருவம், நோயுற்ற வாழ்வேு குறைவற்ற செல்வம்.மக்களுக்கு நோய் ஏற்பட்டால், டாக்டர்களுக்கு நல்ல வருவாய்!

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
\

இதைப் போல் தவறான பழமொழி எதுவும் இருக்கமுடியாது. அம்மியைப் போய் யாராவது அடிப்பார்களா? அடியின் வலி தாங்காது அது நகர்ந்து போகுமா?அம்மியை நகர்த்த வேண்டுமென்றால் அதைத் தூக்கி வைத்தால் ஆயிற்று. அதை போய் அடிப்பானேன்? அது என்ன பாவம் பண்ணிற்று? சரியான பழமொழி என்ன தெரியுமா?
அடி மேல் அடி அடித்தால் அம்மாமியும் நகர்வாள். கொடுமைபப்டுத்தும் மாமியாரை ஊருக்கு எப்படி அனுப்புவதாம். என்ன கேட்டாலும் முகத்தில் அடித்தாற்போல் சொல்லிக் கொண்டே இருந்தால் ”போதுமடா சாமி” என்று சொல்லி ஊருக்குக் கிள்ம்பிப் போய் விடுவார்!  யாரோ ஒரு கெட்டிக்கார நாட்டுப்பெண் கண்டுபிடித்த பழமொழி அல்லது சூத்திரம் இது,

 சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி

சங்கு என்பது ஊதுவதற்காகவே அமைந்தது. அதை ஊதினால் எப்படிக் கெட்டுப் போகும்? மேலும் ஆண்டிகள் சங்கு  ஊதி பிழப்பை நடத்துகிறவர்கள், அவர்களுக்கா  சங்கு ஊதத் தெரியாது? ’சும்மா இருந்த சங்கை’ என்றால் என்ன அர்த்தம்?  சங்கு சும்மா இல்லாமல் ஓடி ஆடி ‘ஐஸ்பாய்’ விளையாடிக் கொண்டிருக்குமா, என்ன?
இந்த பழமொழியின் சரியான  உருவம்  ”சும்மா இருந்த சங்கை ஊதி கொடுத்தான் ஆண்டி” என்பது தான்!

ஆண்டி சங்குக் கடை வைத்திருக்கிறான். அவனிடம் வந்து சங்கு வாங்குபவர்களுக்கு. சங்கை ஊதிக்காட்டிக் கொடுக்கிறான். இது தான் உண்மையான கருத்து.