
வீட்டு வாசலுக்கு வரும் காய்கறிக்காரியிடம் "என்ன? கொத்தமல்லி ஒரு ரூபய்க்கு நாலு கட்டுதானா? அநியாய வெலை சொல்றியே! ஐந்து கொடேன்'' என்று பிசுக்காரமாகப் பேரம் பேசும் ஆசாமி, நாகரிக ஓட்டலுக்குப் போகும்போது , சற்றும் யோசிக்காமல் ’டிப்’பாக ஐந்து ரூபாய் கொடுப்பார்- சர்வர் கேட்காமல் இருந்தாலும்!
மாதச் சம்பளம் வாங்கும் ஓட்டல் சிப்பந்தி, தன் கடமையைச் செய்கிறார். அவருக்கு’டிப்' கொடுக்கிறோம். பாவம், தோட்டத்தில், தனியாவைப் போட்டு நீர் ஊற்றி, கட்டுக் கட்டி எடுத்து க் கொண்டு, வீடு தேடி வரும் கொத்தமல்லிக்காரியிடம் பேரம் பேசுகிறோம். எல்லாம் சூழ்நிலை வித்தியாசம் தான்!
இப்படிப் பேரம் பேசும் ஆசாமியைப் பெரிய கிளப்பில் பணம் வைத்துச் சீட்டாடும் போது பார்க்க வேண்டும். "ஏய், பையா... போய் நாலு பாக்கெட் பிஸ்கெட் வாங்கிக்கிட்டு வாடா'' என்று நூறு ரூபாய் நோட்டை வீசுவார். ஆட்டத்தின் நடுவில், "புது சீட்டுக் கட்டுகள் கொண்டு வா'' என்பார். சீட்டுக்கட்டின் விலை ஐம்பது ரூபாய். பத்து ஆட்டத்திற்குப் பிறகு அதையும் மாற்றச் சொல்வார். (ஒரு பெரிய கிளப்பில் சீட்டுக் கட்டுகள் வருடத்தில் சுமார் இருபது, முப்பதாயிரம் ரூபாய்க்கு வாங்குகிறார்கள்! இது பழைய கணக்கு. இப்போது எவ்வளவு இருக்கும் என்று எனக்குத் தெரியாது!)) இவரே கிளப்பை விட்டு இரவு 12 மணிக்கு வெளியே வரும் போது ஆட்டோரிக் ஷாக்காரரிடம் பேரம் பேசுவார். "என்னய்யா, சாரங்கபாணி தெருவிற்கு ஐம்பது ரூபா கேட்கிறே? நாற்பது ரூபா தரேன்'' என்பார்.
தபாலாபீசில் கியூவில் நிற்கும் ஆசாமி கத்துவார்: "என்ன இது? இன்னும் இரண்டு கவு ன்டரைத் திறக்கக் கூடாதா? இவங்களைக் கேட்பவர்கள் யாருமில்லை. '' ஆனால் இந்த ஆசாமி, தாலுகா ஆபீஸில், ஒரு ‘சலானி’ல் பணம் கட்ட நான்கு மணி நேரம் கூட காத்திருப்பார். ஒரு பேச்சுப் பேசுவாரா? ஊஹும். அங்கு காத்திருப்பவர்கள்தான் அதிகம். ஆகவே அந்தச் சூழ்நிலையில் இவரும் சாதுவாகிவிடுகிறார்.
பீச், சினிமா தியேட்டர் என்று போனால் பாப்கார்ன், ஐஸ் கிரீம் என்று கண்ணை மூடிச் செலவு பண்ணுவார்: கோவில் உண்டியில் பணம் போட, பர்ஸைத் துழாவித் துழாவிச் சில்லறையைத் தேடுவார்.
நாம் எல்லாரும் சூழ்நிலைகளின் கைப்பொம்மைகள்!
=====================
( அடுத்த பதிவு சற்று தாமதமாக வரும்.)










