February 05, 2020

நீச்சலும் கூச்சலும்

 ஞாயிற்றுக்கிழமை. சிறிது சாவகாசமாகப் பொழுதைக் கழிக்கலாம் என்று நினைத்து, பேப்பரில் வந்திருந்த குறுக்கெழுத்துப் போட்டியில் இறங்கினேன்.  என் தலையெழுத்து வேறு மாதிரி இருந்திருக்க வேண்டும்.

வாயில் மணி அடித்தது. கதறியது என்று கூட சொல்லலாம். மனுநீதி சோழனின் மணியை, கன்றை இழந்த பசு அடித்தது போன்று இருந்தது. நான் சோழனும் இல்லை; எங்கள் பேட்டையில் மாடோ, கன்றோ எதுவும்  கிடையாது. என்னிடம் தேர் எதுவும் கிடையாது. இருந்தும் இந்த மணி ஓசை  ஒரு பழமொழியைத் தான்  லேசாக மாற்றி, நினைவுபடுத்தியது. 'யானை வரும் பின்னே; மணி ஓசை வரும் முன்னே!’ என்பதை லேசாக மாற்றி, 'மணி ஓசை வரும் முன்னே; தொல்லை வரும் பின்னே’ என்பது மாதிரி எனக்குத் தோன்றியது
மணியோசை கேட்டு சமையலறையிலிருந்து எதிரொலி மாதிரி என் அருமை மனைவி கமலா   ”காது கேட்கலயா? உங்களுக்கு இடி இடிச்சாக் கூட  காது கேட்காது. உங்களுக்கு இருக்கிறது காது இல்லை;   ‘கேட்-காது’ தான் இருக்கு” என்று சொல்லி, தன்னுடைய சொல் நயத்தைத் தானே ரசித்தபடி, தன் முதுகில் தானே ஒரு ஷொட்டு கொடுத்தபடியே வந்து  வாயிற் கதவைத் திறந்தாள் கமலா.

“வாடா.. .. வாம்மா.. வாடா குழந்தை”  என்று  அன்பு, கரிசனம், பாசம், பரிவு, வாத்ஸல்யம், கனிவு... இன்னும் எனக்குத் தெரியாத பல பாவங்களுடன் கமலாவரவேற்றாள். பூர்ண கும்பம், வாழை மரம், நாதஸ்வர இசை, வேத கோஷம் தான் இல்லை! ஆமாம், திடீரென்று தொச்சுவும் அவனுடைய  அருமை மனைவி அங்கச்சியும்,  அவர்களுடைடைய நண்டு ஒன்றுடன் வருவார்கள் என்று அவள் எதிர்பார்க்க வில்லை.
 “ சும்மா  காலார நடந்து வந்தோம்..அத்திம்பேரைப் பார்த்து ரொம்ப நாளாச்சே என்று வந்தோம்”  என்று தொச்சு சொல்லிக் கொண்டிருக்கும் போது, அங்கச்சி  குறுக்கிட்டு,  “அது மட்டும் இல்லை, அக்கா. எங்க  அபார்ட்மென்ட்   காலனியில் நீச்சல் குளம் கட்டி இருக்காங்க. சூப்பரா இருக்கு. பசங்க அதகளம் பண்ணறங்க. காலனியில் இருக்கிற நண்டும் சுண்டும்…..”  என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது, நான் இடைமறித்து  “அப்படியா? நம்ப நண்டுதான் லீடரா?” என்று கேட்டேன் 
 “பிரச்சினையே அதுதான், அத்திம்பேர். எதுக்கு இந்தப் பொடியன் வந்திருக்கான் தெரியுமா? அவனுக்கு நீச்சல் தெரியாது. தொளைச்சு எடுக்கிறான், 'நீச்சல் கத்து கொடு' என்று. அவனை  ‘நண்டு’ என்று நீங்க சொன்ன வேளை, அவனை நிஜமாகவே நண்டாக நீங்க ஆக்கி வைக்கணும்” என்றாள் அங்கச்சி.
   “அங்கச்சி..   ‘கெக்கே பிக்கே’ என்று ஏதாவது சொல்லிண்டே இருக்காதே. நான் விளக்கமா சொல்றேன், அத்திம்பேர்” என்றான்  தொச்சு.
ஏதோ நாடக வசனத்தை எழுதி, மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல தொச்சு, அங்கச்சி வசனங்கள் இருந்தன.

“உள்ளே வாடா, தொச்சு...வந்தவனை “வா” என்று சொல்லாமல், ஏதேதோ பேசிக் கொண்டே இருக்கிற வழக்கத்தை எப்பதான் விடுவீங்களோ!” என்றாள் கமலா. 
  “கமலா, முதலில் காபி கொண்டு வந்து கொடு” என்றேன். 
பொங்குகிற பாலில் சிறிது தண்ணீர் தெளித்தது போல்,  கமலாவின் கடுகடுப்பு ‘புஸ்’ என்று அடங்கிப்போயிற்று.  அது மட்டுமல்ல, உற்சாகம் ஊற்றாகப்  பெருக்கெடுத்தது.
 நான் சொல்லி முடிப்பதற்குள், எள் என்பதற்குள் எண்ணெயாக இருக்கும் என் மாமியார்  காப்பியுடன் வந்து விட்டாள்- வழக்கத்தை விட 50% அதிக பாசத்துடன்! 
 “தொச்சு! வாடா, அங்கச்சி வாம்மா. பப்ளி வாடா” என்று சொல்லியபடியே, மேஜையில் காப்பியை வைத்தாள்.
(பப்ளி? தொச்சுவின் பையனின் உண்மையான பெயர் என்ன என்று எனக்குத் தெரியாது. ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு பெயரில் அழைப்பார்கள். சில சமயம்  அது திட்டு மாதிரி கூட இருக்கும்;  உதாரணமாக, புளிமூட்டை, ரோடு ரோலர், பீம சேனா, ஃபுட்பால் தடியா, கரடிக் குட்டி, வெல்லக்கட்டி, பலூன் கண்ணா என்று பல பலப் பெயர்கள்.)
“தொச்சு.. நீ குழந்தையை ‘ பப்ளி’ன்னு கூப்பிடறயே, அது என்ன பப்ளி?” என்று கேட்டால், இந்த பெயர்களுக்கெல்லாம்  அர்த்தம், விளக்கம் எதுவும் கிடையாது. அத்திம்பேர்! என் பெயரை  ‘தொச்சு’ என்று வைச்ச மாதிரி, இதுவும் ஒரு பேர்... இந்த பப்ளி என்ற பெயர்  ‘பப்ளிமாஸ்’ என்ற பெயரின் சுருக்கம். அவ்வளவுதான்” என்பான்!)
காப்பியை நோக்கி பொடிநடையாக சென்றபடி “அத்திம்பேர்..  நாங்க இன்னிக்கு வந்ததே இந்த பப்ளிக்காகத்தான்…. எங்க காலனியிலே இப்போ சூப்பரா நீச்சல்குளம் கட்டி இருக்காங்க; போன வாரம் திறந்து வெச்சாட்டங்க. பசங்க பாடு கும்மாளம் தான். பாவம், பப்ளி  வெறுமனே வேடிக்கை பார்த்துண்டு  இருக்கான்” என்று தொச்சு சொன்னான்.
  அங்கச்சி,  “அவன்   நீச்சல் கற்றுக் கொள்ளத் துடியா துடிக்கிறான்” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே நான் “தொச்சு,   நீ சொல்லிக் கொடுக்க வேண்டியது தானே? என்று கேட் டேன்,