October 21, 2019

வியக்கத் தெரிந்த மனமே!


கௌரவம்  அளிக்கப்பட  வேண்டிய  முறை இதுதான்!

        பம்பாய் பல்கலைக்கழகத்தில் 2015’ம் வருஷம் ’சமஸ்கிருத தினம்’ என்று ஒரு நாள் கொண்டாடினார்கள். விழாவில் சமஸ்கிருத வளர்ச்சிக்கு   நிறைய பணிகள் புரிந்து வரும் டாக்டர் கௌரி என்ற ஒரு சமஸ்கிருத அறிஞர்  கௌரவிக்கப்பட இருந்தார். 

அவருக்குக் கௌரவம் அளிக்க  மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அழைக்கப்பட்டிருந்தார்.

                   விழா மேடையில் டாக்டர் கௌரி, விழா நிர்வாகிகள், 
மற்றும் பல்கலைக்கழக  உயர் அதிகாரிகள் அனைவரும் 
அமர்ந்திருந்தார்கள்.  முதல்வருக்காக காத்திருந்தார்கள்.  குறித்த 
நேரத்திற்கு முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வந்தார்.   

        மேடையேறிய  முதல்வர் தனக்கு ஒதுக்கப் பட்டிருந்த நாற்காலியில் அமரச் செல்லவில்லை. மாறாக அந்த சமஸ்கிருத விருது பெறவிருக்கும் பெண்மணி உட்கார்ந்து இருந்த இடத்திற்குச் சென்று, பவியத்துடன் குனிந்து, அவர் காலைத் தொட்டு நமஸ்கரித்து விட்டு, மைக்கின் முன் சென்று உரை நிகழ்த்த ஆரம்பித்தார்."There are very few people left on this earth, in this era who really deserve this gesture and Dr. Gauri is one of them".        
ஃபட்னாவிஸின் பணிவையும், காலைத் தொட்டு நமஸ்கரித்ததையும்
பார்த்து அனைவரும் அப்படியே வியப்பில் உறைந்து போனார்கள்.


              தற்போது டாக்டர் கௌரி கேரளாவிலுள்ள சின்மயானந்தா 
பல்கலைக்  கழகத்தில் டீன் பதவியில் உள்ளார்.

(இத்தகவலைத் தந்தவர்: குறிப்பிட்ட விழாவிற்குச் சென்றிருந்த  திருமதி வீணா அமோலிக் அவர்கள். அவருக்கு என் நன்றி.)

இன்னொரு வியப்புத் தகவல்.

பலே விற்பனை

சமீபத்தில் Lillian Eichler Watson  என்ற எழுத்தாளர் 70 வருஷத்திற்கு முன்பு தொகுத்த ஒரு புத்தகம் லாட்டிரி பரிசு மாதிரி எனக்குக் கிடைத்து. எல்லா கட்டுரைகளும் அபாரமான கட்டுரைகள் மட்டுமல்ல, நெகிழ்ச்சியூட்டும் கட்டுரைகள். அதில் படித்த ஒரு கட்டுரைக்கு,  தமிழ் உடையான வேட்டியைக் கட்டி, அடுத்த பதிவாக விரைவில் போடுகிறேன். சற்று நீண்ட பதிவாக இருக்கும். இரண்டு மூன்று பாகங்களாகப் போட வேண்டியிருக்கும் எனக் கருதுகிறேன்.
 லில்லியன் 1922 -ல்   A BOOK OF ETIQUETTE  (ஒழுங்கு நடைமுறைகள் (?)) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார். அது இரண்டு  வருஷத்தில் இருபது  லட்சம் காபிகள் விற்றன. லாபம் மட்டும் இரண்டரை லட்சம் டாலராம்  (இன்றைய கணக்கில் 30 லட்சம் டாலர் இருக்கும்!)

JEOPARDY கேள்விகள்
அமெரிக்க டி.வி.யில் முப்பத்தைந்து வருஷமாக நடந்து வரும் வினாடி வினா நிகழ்ச்சியான JEOPARDY-யில் இதுவரை கேட்கப்பட்ட கேள்விகளின் எண்ணிக்கை எழுபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமாம்.

மின்னல் வேகம்
பிரபல ஜெர்மன் கார் நிறுவனம்:  BUGATTI (புகாட்டி).  கார் பந்தயத்திற்கு உகந்த காரை அவர்கள் தயாரித்து வெள்ளோட்டம் விட்டார்கள். மணிக்கு  304 மைல் வேகத்தில் பறந்ததாம்.

October 02, 2019

நானும் ஒரு ஷேக்ஸ்பியர்- ஒரு ஜகஜ்ஜாலப் புரட்டு



கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களில் இடையிடையே ஒரு சில   சொந்தப்  பாடல்களைப் பல புலவர்கள் புகுத்தி வைத்துள்ளது  அனைவரும் அறிந்ததே.
கம்பன் பெயரோடு தாங்களும் சேர்ந்து பெருமைப்படலாம் என்ற எண்ணத்துடன் இந்த இடைச்செருகல் பாடல்களை உருவாக்கி வந்துள்ளார்கள்!
  அவற்றைக் கண்டுபிடித்து நீக்குவதற்கு மிகுந்த திறமையும் புலமையும் வேண்டும்;  டி.கே.சி போன்று ஆழ்ந்த சிந்தனை உடையவர்கள்  விழிப்புடன் ஈடுபட்டால் இந்த கலப்பட பாடல்களை கண்டுபிடிக்க முடியும்.
  இந்த  பித்து உலகெங்கும் பலரைப் பிடித்து ஆட்டும் அல்ப ஆசை! ஆனால் இங்கிலாந்தில் ஒரு இருபது வயது பையன் செய்த தில்லுமுல்லுவுக்கு ஈடு எதுவும் கிடையாது.  சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. அதாவது ஷேக்ஸ்பியர்  காலமான பிறகு, நூறு ஆண்டுகள் கழிந்த பிறகு நடந்த தில்லு முல்லு!

       வில்லியம் ஹென்றி அயர்லாந்து என்ற இளைஞன் என்ன செய்தான் தெரியுமா?  அவன் லண்டனில் ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் ஏதோ பழைய பத்திரங்களைத் தேடியபோது, ஒரு பத்திரத்தில் ஷேக்ஸ்பியரின் சாட்சிக் கையெழுத்து இருப்பதை பார்த்தான்.  

அவன் உடலில் மின்சாரம் பாய்ந்தது.

 ஷேக்ஸ்பியர் எழுதிய சில நாடகங்களைப் படித்து இருந்ததால், அவருடைய கையெழுத்தைப் பார்த்ததும் அவனை ஒரு வெறி பிடித்துக் கொண்டது.  ஷேக்ஸ்பியரின்  நாடகங்களை ஆழ்ந்து படிக்க ஆரம்பித்தான். 

   அத்துடன் நிற்கவில்லை. சுமார் ஒன்றரை வருஷம்  பத்திரத்தில் இருந்த ஷேக்ஸ்பியரின் கையெழுத்தைப் பார்த்து,  அப்படியே  எழுதப் பழகினான்.  
இத்தனைக்கும் அவரது நாடகங்களின் ஒரிஜினல் கையெழுத்து பிரதிகள் யாவும் மறைந்து போயிருந்தன. 
இளைஞன் அயர்லாந்திற்ககு மேடை நாடகங்களில் மிகவும் ஆர்வம் உண்டு அவனே நடிகனாக வேண்டும் என்று விரும்பினான். அத்துடன் கவிதைகள் எழுதுவதிலும் அவனுக்கு விருப்பம் உண்டு .
படிப்பில்  அவன் படு சூனியம். அவனுடைய பள்ளிக்கூட தலைமையாசிரியர் ஒரு சமயம் கூறியது  “ உன்னால் பள்ளிக்கூடமே அவமானம் அடைகிறது.” .
அவனுடைய பெற்றோர்களும் அவனை ’வடிகட்டி’ என்றுதான் சொல்வார்கள்