Showing posts with label கல்கி. Show all posts
Showing posts with label கல்கி. Show all posts

December 05, 2019

பத்து ஆண்டு நிறைவு


கடுகு தாளிப்புவிற்கு   பத்து  ஆண்டு நிறைந்துள்ளது.

 2009’ம் ஆண்டு டிசம்பர் மாதம், கல்கி அவர்களின் நினைவு நாளில் இந்த வலைப்பூவைத்  துவக்கினேன்.
   தனியாளாக நம்மால் எத்தனை பதிவுகள் எழுதி, தட்டச்சு செய்து, பதிவாகப் போட முடியும் என்று ஒரு கணம்கூட யோசிக்கவில்லை; தயங்கவும் இல்லை.  காரணம், “தம்பி, நீ எழுது என்று, கிட்டத்தட்ட 65 வருடங்களுக்கு முன்பு   சொன்ன (அல்லது ஆசீர்வதித்த) கல்கி அவர்கள் என்னை வழிநடத்திச் செல்வார் என்ற நம்பிக்கை என்னிடமிருந்து தான்!  ஏன், இன்றும், பத்து ஆண்டுகள் பதிவுகள் எழுதிய பிறகும், அவர் மீது உள்ள நம்பிக்கை ஒரு சத விகிதம் கூட குறையவில்லைஅவர் என் குருநாதர் என்று நான் கூறிக் கொண்டால்  எனக்குப் பெருமை ஏற்படலாம்.  ஆனால்அவருடைய சீடன் நான் என்பதால் அவருடைய திறமைக்கும், புகழுக்கும் எவ்வித ஏற்றமும் இல்லை. 

 கிட்டத்தட்ட
 
630 பதிவுகள் போட்டுள்ளேன். இது பெரிது அல்ல. இந்த சமயத்தில் ஒரு தகவலைச் சொல்ல மனம் விழைகிறது. என் வலைப்பூவின் தலைப்பு  ஓவியங்கள் (Masthead) எல்லாவற்றையும்  நானே வடிவமைத்துள்ளேன். வலைப்பூ இல்லாவிட்டால் இவ்வளவு படங்களை (சுமாராக) உருவாக்கவும்,  பதிவு எழுதுவதற்காகப் பல புத்தகங்களைப் படித்திருக்கவும் மாட்டேன். வலைப்பூ  என்னுடைய உந்து சக்தியாக விளங்கி வருகிறது.
     இவை எல்லாவற்றையும் விட என் வலைப்பூவைப் படிக்கும் உங்களில் பலர் எழுதிய பாராட்டுகளும்  ‘சபாஷ்களும்  வைட்டமின் மாத்திரைகளாகச் செயல் பட்டுள்ளன. இதை எல்லாம் எண்ணிப் பார்க்கும் போது என் மனதில் மகிழ்ச்சியை விட அதிகமாக நெகிழ்ச்சிதான் ஏற்படுகிறதுவார்த்தை ஜாலத்திற்காக இப்படி எழுதவில்லை. அப்படி எழுதினால் அது என்னை நானே ஏமாற்றிக் கொள்வதாகும்.
 அனைவருக்கும் நன்றி. முக்கியமாய்  எழுத்தாளர் சுஜாதா தேசிகன் அவர்களுக்கு  ஸ்பெஷல் நன்றி. அவர் தான் பதிவுகள் எழுதும்படி முதன் முதலில் (அன்புக்) கட்டளை இட்டார்.
       அனைவருக்கும் வணக்கம்.      -- கடுகு 

August 01, 2018

கல்கி, என் கணவர்



 கல்கி அவர்களின் துணைவியார் திருமதி ருக்மிணி கிருஷ்ணமூர்த்தி அவர்கள், பல வருஷங்களுக்கு முன்பு ’குமுதம்’ 8-12-1966 இதழில், குடும்ப நிகழ்ச்சிகள் சிலவற்றை  நினைவு கூர்ந்தார்.
  
1924 ல் எங்கள் கல்யாணம் நடைபெற்றது. சம்பிரதாயமாகப் ’பெண்’ பார்ப்பதற்குஇவர்’ வரவில்லை. இவருடைய அண்ணாதான் நிச்சயதார்த்தம் செய்துவிட்டுப் போனார். கல்கியைப் பொறுத்தவரை இதை அவரது இரண்டாவது கல்யாணம் என்று வேடிக்கையாகச் சொல்லலாம். 

முதலில் இவருக்கு ஓரிடத்தில் கல்யாணம் நிச்சயமாகி,.... நிச்சயதார்த்தமும் நடைபெற்றுவிட்டது. ஆனால் கல்யாணம் நின்றுபோய்விட்டது… அந்தப் பெண்ணின் அப்பா ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். மாப்பிள்ளையைப் பற்றி விவரமாக விசாரித்ததில், இவர் காந்திக் கட்சியை சேர்ந்தவர் என்று அறிந்ததும், பெண்ணைக் கொடுக்கச் சம்மதிக்கவில்லை ......
     *                           *                          *
     நவசக்தி பத்திரிகையில் திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரிடம அப்போது இவர் வேலை பார்த்து வந்தார். சம்பளம் ஐம்பது ரூபாய். பழைய மாம்பலத்தில் முதன் முதலில் தனிக் குடித்தனம் வைத்தோம். ரொம்பவும் சிக்கனமாகவே இருப்பார். ராயப்பேட்டையிலுள்ள காரியாலயத்திற்கு மாம்பலத்திலிருந்து நடந்தே செல்வார். அப்போது  அவருடைய லட்சியம் எப்படியேனும் பாடுபட்டு உழைத்து 100 ரூபாய் சம்பளத்திற்கு உயர்ந்துவிட வேண்டும் என்பதே. திரு.வி.க.விடம் இவர் பக்தி விசுவாசம் உடையவர். நவசக்தியை விட்டு விலகும் போது, இவரைப் பிரிய திரு.வி.க.வுக்கு மனமே இல்லை. “எப்போது வேண்டுமானாலும் நீ திரும்பி வரலாம். உன்னுடைய இடம் காலியாகவே இருக்கும்,என்று பெருந்தன்மையுடனும், அன்புடனும் விடை கொடுத்தார்.
     நவசக்தியில் இருக்கும்போதே இவர் சம்பளத்தை ரூபாய் அறுபதாக உயர்த்தினார்கள். வேறு சிலர் இவரை வைத்துத் தனியாகப் பத்திரிகை  ஆரம்பிக்க வேண்டுமென்று முன்வந்தனர். இன்னும் பத்து ரூபாய் அதிகச் சம்பளம் தருவதாகச் சொன்னார்கள். என்னிடம் இந்த விவரங்களைச் சொன்னார் கல்கி. நான் இதற்கு சம்மதிக்கவில்லை. திரு.வி.க விடமே வேலையில் நீடிக்க வேண்டுமென்று சொன்னேன். அப்போது, “வயதில் சிறியவளாக இருந்தாலும் நீ விவேகத்துடன் பேசுகிறாய்.  சாதாரணமாகப் பெண் பிள்ளைகள் பத்து ரூபாய் அதிகம் வருவதென்றால், அதையே ஒப்புக் கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். அப்படி இல்லாமல் நீ நல்ல யோசனையே வெளியிடுகிறாய். உன்னுடைய எண்ணம் என்ன என்று அறியக் கேட்டேனே தவிர நானும் விலகப் போவதில்லை,என்றார்.................
    *                              *                                     *

June 10, 2013

தப்பு பண்ணிட்டேன்


1954 டிசம்பர்   நாலாம் தேதி சனிக்கிழமையன்று நான் ஒரு  தப்பு பண்ணிவிட்டேன். 50 வருஷம் ஆகியும் அந்தத் தப்பு என்னை வருத்தப்படச் செய்து கொண்டிருக்கிறது! இதோ விவரமாகச் சொல்கிறேன்.
சென்னை ஜி.பி.ஓவில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த காலம். அதுவும் ஜி.பி.ஓ. ரிக்ரியேஷன் கிளப்பின் கமிட்டி உறுப்பினர்,  கலைவிழா அமைப்பாளர் என்று சில பதவிகளை என்னுடன் ஒட்ட வைத்துக் கொண்டிருந்த காலம்.
4-ம் தேதி ஜி.பி.ஓ விளையாட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.  மாநிலக் கல்லூரி மைதானத்தில் பந்தயங்கள் முதலியன பகல் மூன்று மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவித்து இருந்தார்கள். பகல் இரண்டு மணிக்கே விளயாட்டு விழாவிற்குப் போகலாம் என்றும்  ஆபீஸில் அறிவித்து விட்டார்கள்.
எனக்கு ஸ்போர்ட்ஸில் ஈடுபாடு கிடையாது என்பதால் மைதானத்திற்குப் போக ஆர்வமில்லை. ஆனால் மைதானத்திற்குப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அடையாறு காந்திநகர் போகத் திட்டமிட்டேன்.
கல்கி அவர்கள் உடல் நலமில்லாமல் இருக்கிறார் என்ற தகவல் வந்ததால்,  அவரைப்  பார்க்க  அடையாறு  போகலாம் என்று எண்ணி கிளம்பினேன். அந்த சமயம் பார்த்து, கிளப் காரியதரிசி. “எங்கேப்பா கிளம்பிட்டே... இரு, ஒண்ணா போகலாம்: என்றார்.
” இல்லைப்பா.. அடையாறு போய் கல்கி அவர்களைப் பார்த்துவிட்டு நேரே மைதானத்திற்கு வந்து விடுகிறேன்; என்றேன்.
“அடையாறு போய்விட்டு வருவதற்குள் போட்டிகள் எல்லாம் முடிந்துவிடும்.  நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை. லீவுதான். அதனால் நாளைக்குப் போய் பார்த்துக் கொள்...” என்றார்
போதாதற்கு “ நீ  வந்து உற்சாக மூட்டினால்தான் களை கட்டும்” என்று நண்பர்கள் ‘பூ’ சுற்றிவிட்டார்கள். நானும் என் திட்டத்தைக் கைவிட்டுவிட்டு ‘சரி’ என்று அவர்களுடன் மைதானத்திற்குச் சென்றேன்.

மறுநாள் காலை ஏழு மணி ரேடியோ தமிழ்ச்  செய்தியில்  ‘ கல்கி அவர்கள் காலமாகி விட்டார்’ என்ற செய்தி வந்தது.  எனக்கு அளவில்லாத   துயரம்.  முன் தினம் அவர் வீட்டுக்குப் போக இருந்த திட்டத்தைக் கைவிட்ட முட்டாள்தனம்  அதை மேலும் அதிகமாக்கியது.

பின்னால் ஒரு தகவல் தெரிந்தது. கல்கி அவர்கள் காலமாவதற்கு முன் தினம் “ எனக்கு செங்கல்பட்டு பாலாறு தண்ணீர் குடிக்கவேண்டும் போலிருக்கிறது” என்று சொன்னராம், உடனே திரு சதாசிவம் அவர்கள், ஒரு திருகு மூடி போட்ட குடத்தை வாங்கி வரச் சொன்னாராம்.  மறு நாள் காலை ( 5ம் தேதி)  திரு வரதப்பனை ( திருமதி சரோஜினி வரதப்பனின் கணவர்) செங்கற்பட்டிற்கு அனுப்பினார்.  துரதிர்ஷ்டம், திரு வரதப்பன் தண்ணீருடன் வருவதற்குள் கல்கி அவர்கள் காலமாகி விட்டார். எங்கள் ஊர் தண்ணீரும் என்னைப் போல்  கொடுத்து வைக்கவில்லை.

முன் தினம் அவரைப் பார்க்கப் போகாத என் தப்பு இன்னும் என்னை வருத்தப்படச்செய்து கொண்டிருக்கிறது.