அடுத்த இரண்டு நாள் பிரச்சனை இல்லாமல் கழிந்தது.
வாஷிங் மெஷினில் துணிகளைப் போட்டு ஸ்டார்ட் செய்தேன். ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?” என்பது போல், ஓசைபடுத்தாமல் வேலை செய்தது.
“கமலா…. வாஷிங் மெஷின் பரவாயில்லை. தெரியாமல் பாதி விலைக்கு கொடுத்துவிட்டார் போலிருக்கிறது, “என்று சொன்னேன். நான் இப்படிச் சொன்னதை வாஷிங் மெஷின் கேட்டுக் கொண்டிருந்ததோ என்னவோ, தன்னைப் பற்றி குறைவாக நான் சொல்லிவிட்டேன் என்று நினைத்ததோ என்னவோ, சட்டென்று நாலைந்து தும்மல், ஐந்தாறு இருமல், மூன்று நான்கு ஹைஜம்ப் என்று செய்தது…” கமலா…கமலா.. முதல்லே வாஷிங் மெஷினை நிறுத்து… அது என்னவோ ஸ்கிப்பிங் கயிறு இல்லாமலேயே குதிக்கிறது. கொஞ்சம் விட்டால் தவளை மாதிரி தத்தித் தத்தி ஹாலுக்கு வந்துவிடும்…” எந்த ஸ்பிரிங்கெல்லாம் உடைஞ்சிருக்கோ,, வெளியில் ’பாடி’ யெல்லாம் காட்பாடியாக இருந்ததே என்று பார்த்தேன். கொஞ்சம் துரு தானே என்று நினைச்சேன்….” இப்படி நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே , காலிங்பெல் அடித்தது…” கமலா.. யாரோ யாரோ மணி அடிக்கிறாங்க.. இந்த வாஷிங்மெஷின் ஊரையே கூட்டிடும் போல இருக்கு.. நம்பியார் மாதிரி இன்னொரு வில்லனாக இருக்கும்..” என்றேன்.
“ஏன் பயந்து சாகறீங்க? நான் போய் பார்க்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டே, கமலா போய், மெல்ல கதவைத் திறந்தாள்.
ஒரு மாமி கம்பீரமாக நின்றுக் கொண்டிருந்தாள். (எனக்கு நிம்மதியாக மூச்சு விடமுடிந்தது’)
“நமஸ்காரம் மாமி.. நான் மேல் வீட்டிலே இருக்கிறேன்.. நீங்க புதுசா வந்திருக்கீங்களா?... என் பேர் பாமா சித்தி.. ஆமாம்மா.. இந்த சித்தி என் பேரோட எப்படியோ ஒட்டிண்டுத்து… எங்க குடும்பத்துலேயே நான் தான் கடைசிப் பொண்ணு. என் அக்கா பசங்க, சித்தி சித்தின்னு கூப்பிட்டு சித்தி என் பேரோட ஒட்டிக் கொண்டது. எல்லாருக்கும் நான் சித்தி.. எங்க ஆத்துக்காரர் கூட பாமா சித்தின்னு தான் கூப்பிடுவார்.. போகட்டும் .. உங்க பேர் என்ன?”
“ “என் பேரு கமலா…” என்றாள் கமலா..
கீழே போனேன். தபால்காரர் நாலைந்து கவரைக் கொடுத்துட்டு, இந்த அட்ரஸ்க்கு வந்த கவர்… இந்தாம்மா ,” என்று சொல்லி தபால்களைக் கமலாவிடம் கொடுத்தார்.
”ரொம்ப தாங்ஸ் பாமா சித்தி” என்றாள் கமலா. பாமா சித்திக்கு உச்சி குளிர்ந்துவிட்டது.
“ஆமாம் ..கமலா,, இந்தக் கவரில் ஒன்று ‘அமுதம்’ பத்திரிகையிலிருந்து வந்திருக்கிறது. .. உன் ஆத்துக்காரர் அங்க வேலை செய்யறாரா?”
“இல்லை சித்தி. அவர் கதை எழுதறவர்..”
”அப்படியா..ரொம்ப சந்தோஷம். கவர்ல ‘செக் வந்திருக்குமாக்கும்’ என்று கேள்வியாக கேட்காமல், ஒரு யூகமாகச் சொன்னார்.
”ஆமாம்.. சித்தி..”
“கமலா… நான் கேட்குறேன்னு தப்பா நினைச்சுக்காதே.. உன்னைப் பார்த்தால் என் அக்கா பேத்தி மாதிரி இருக்கிறது. அதனால் உரிமையுடன் கேட்கிறேன்..”










