December 21, 2019

மெய் சிலிர்த்திடும் என்பது மெய்!

இந்த பதிவிற்கு இரண்டு முன்னோட்டங்கள் தேவைப்படுகின்ன.
பதிவில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். முதலில் இரண்டு பேரை பற்றி சுருக்கமான குறிப்பைத் தருகிறேன்


1. ஹாரி எமர்சன் ஃபாஸ்டிக் (1878-1969) [ HARRY EMERSON FOSDICK ] என்ற
பாதிரியார். இவர் சாதாரண பாதிரியார் அல்ல; அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தேவாலயத்தை நிறுவியவர். சுமார் 50 புத்தகங்களை எழுதியவர்.
இவரது தந்தை, அமெரிக்காவின் மிகப் பெரிய செல்வந்தரான ராக்பெல்லர் நிறுனத்தில் பணியாற்றியவர்- அதுவும் நன்கொடை அளிக்கும் இலாகாவில்!
ஃபாஸ்டிக் எழுதியுள்ளஎழுதியுள்ள புத்தகங்களில் ஒன்று: ON BEING FIT TO LIVE WITH. அதில் கிடைத்த ஒரு தகவல் மெய் சிலிர்க்கச் செய்தது. அந்தத் தகவலைப் பதிவாக அளிக்கிறேன்.

2. நியூட்டன் பேக்கர் (1871-1937) [NEWTON BAKER] : இவர் ஒரு பிரபல வழக்கறிஞர், அரசியல்வாதி, சிறந்த பேச்சாளர். அன்றைய கால கட்டத்தில் அமெரிக்க அதிபராக இருந்த வுட்ரோ வில்சன் [Woodrow Wilson] இவரை தனது யுத்த இலாகா செயலராக (1916 -1921) நியமித்திருந்தார். மேலும், இவர் பிரபல ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு அறங்காவலாரகவும் இருந்தார். இவர் பின்னால் அமெரிக்க அதிபர் பதவி தேர்தலில் நின்றவர்.

( இவர்களின் படங்களை மேலே MAST HEAD-ல் பாருங்கள். இருவரும்
TIME பத்திரிகையின் அட்டையில் இடம் பெற்ற பிரமுகர்கள்.)

நியூட்டன் பேகர், தன்னிடம் கூறிய ஒரு தகவலைப் பாதிரியார் ஃபாஸ்டி க் தன்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளார். அந்தத் தகவலைப் பார்க்கலாம்
* *
யுத்த இலாகா செயலர் என்ற முறையில், நியூட்டன் பேகர் பல ராணுவ மருத்துவமனைகளுக்குச் சென்று, போரில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களைச் சந்தித்து நலம் விசாரிப்பது மற்றும் ஆறுதல் கூறுவது வழக்கம். அப்படி ஒரு சமயம் மருத்துவமனைக்குச் சென்ற சமயம் அங்கு சிகிச்சை பெற்றுவரும் ஒரு ராணுவ வீரரைப் பார்த்த போது, அவருடைய ரத்தமே உறைந்து போய்விட்டது! (மனதைத் திடப்படுத்திக் கொண்டு படியுங்கள்.)
அந்த ராணுவ வீரர் ஒரு இளைஞன். அந்த வீரனை மருத்துவமனையை ஒட்டி இருந்த புல்தரைக்கு சக்கர நாற்காலியில் ரு நர்ஸ் கொண்டு வருவதைப் பார்த்தார்; அப்படியே இரத்தம் உறைந்தது போல் உணர்ந்தார். காரணம் அந்த இளைஞனுக்கு இரண்டு கால்களும் இல்லை; ஒரு கையையும் இழந்திருந்தான்; இரண்டு கண்களும் பறி போயிருந்தன. போதாக்குறைக்கு போரில் ஏற்பட்ட காயங்களால் அவன் முகம் கன்னாபின்னாவென்று குரூரமாகக் காட்சியளித்தது.
அந்த ராணுவ வீரன் மிகவும் சகஜமாகப் பேசிக் கொண்டிருப்பதையும் கவனித்தார். வாழ்க்கையே அதலபாதாளத்திற்கு சென்று விட்ட நிலையில் இப்படி ஒரு ஆள் இருக்கமுடியுமா என்று வியந்தார்.
அந்த மருத்துவமனையைச் சுற்றிவிட்டுத் திரும்பி விட்டார்.

December 05, 2019

பத்து ஆண்டு நிறைவு


கடுகு தாளிப்புவிற்கு   பத்து  ஆண்டு நிறைந்துள்ளது.

 2009’ம் ஆண்டு டிசம்பர் மாதம், கல்கி அவர்களின் நினைவு நாளில் இந்த வலைப்பூவைத்  துவக்கினேன்.
   தனியாளாக நம்மால் எத்தனை பதிவுகள் எழுதி, தட்டச்சு செய்து, பதிவாகப் போட முடியும் என்று ஒரு கணம்கூட யோசிக்கவில்லை; தயங்கவும் இல்லை.  காரணம், “தம்பி, நீ எழுது என்று, கிட்டத்தட்ட 65 வருடங்களுக்கு முன்பு   சொன்ன (அல்லது ஆசீர்வதித்த) கல்கி அவர்கள் என்னை வழிநடத்திச் செல்வார் என்ற நம்பிக்கை என்னிடமிருந்து தான்!  ஏன், இன்றும், பத்து ஆண்டுகள் பதிவுகள் எழுதிய பிறகும், அவர் மீது உள்ள நம்பிக்கை ஒரு சத விகிதம் கூட குறையவில்லைஅவர் என் குருநாதர் என்று நான் கூறிக் கொண்டால்  எனக்குப் பெருமை ஏற்படலாம்.  ஆனால்அவருடைய சீடன் நான் என்பதால் அவருடைய திறமைக்கும், புகழுக்கும் எவ்வித ஏற்றமும் இல்லை. 

 கிட்டத்தட்ட
 
630 பதிவுகள் போட்டுள்ளேன். இது பெரிது அல்ல. இந்த சமயத்தில் ஒரு தகவலைச் சொல்ல மனம் விழைகிறது. என் வலைப்பூவின் தலைப்பு  ஓவியங்கள் (Masthead) எல்லாவற்றையும்  நானே வடிவமைத்துள்ளேன். வலைப்பூ இல்லாவிட்டால் இவ்வளவு படங்களை (சுமாராக) உருவாக்கவும்,  பதிவு எழுதுவதற்காகப் பல புத்தகங்களைப் படித்திருக்கவும் மாட்டேன். வலைப்பூ  என்னுடைய உந்து சக்தியாக விளங்கி வருகிறது.
     இவை எல்லாவற்றையும் விட என் வலைப்பூவைப் படிக்கும் உங்களில் பலர் எழுதிய பாராட்டுகளும்  ‘சபாஷ்களும்  வைட்டமின் மாத்திரைகளாகச் செயல் பட்டுள்ளன. இதை எல்லாம் எண்ணிப் பார்க்கும் போது என் மனதில் மகிழ்ச்சியை விட அதிகமாக நெகிழ்ச்சிதான் ஏற்படுகிறதுவார்த்தை ஜாலத்திற்காக இப்படி எழுதவில்லை. அப்படி எழுதினால் அது என்னை நானே ஏமாற்றிக் கொள்வதாகும்.
 அனைவருக்கும் நன்றி. முக்கியமாய்  எழுத்தாளர் சுஜாதா தேசிகன் அவர்களுக்கு  ஸ்பெஷல் நன்றி. அவர் தான் பதிவுகள் எழுதும்படி முதன் முதலில் (அன்புக்) கட்டளை இட்டார்.
       அனைவருக்கும் வணக்கம்.      -- கடுகு