Showing posts with label விருது உரை. Show all posts
Showing posts with label விருது உரை. Show all posts

March 15, 2013

அப்புசாமி விருது - என் ஏற்புரை

முன் குறிப்பு: சென்ற ஆண்டு எனக்கு அப்புசாமி நகைச்சுவை பதக்கம் அப்புசாமி- சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளையால் தரப்பட்டது,  விழாவில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர், டில்லி கணேஷ், சித்ராலயா கோபு, பாக்கியம் ராமசாமி அவர்கள், எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள், எழுத்தாளர்  ராணிமைந்தன் அவர்கள் பேசினார்கள்.
அப்போது நான் பேசிய உரையை இங்கு தருகிறேன். =================================================== 
அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள், இன்று என் வாழ்நாளில் ஒரு முக்கிய தினம்.  அற்புத தினம், உன்னத தினம், பெருமைக்கும் பெருமிதத்திற்கும் உரிய தினம்.
நான் கனவிலும் எதிர்பாராத ஒரு கௌரவம் எனக்கு  அளிக்கப்பட்டிருக்கிறது.
நகைச்சுவைக்காகவே அமைக்கப்பட்டடுள்ள ஒரு அறக்கட்டளை என்னைக் கௌரவித்து இருப்பதாலும், அந்த அறக்கட்டளையை அமைத்துள்ளவர் திரு பாக்கியம் ராமசாமி என்பதாலும் அது தரும் விருது, கூடுதல் மதிப்பையும் அந்தஸ்தையும் பெற்றுள்ளது.
=                   =            =
கல்கி, தேவன், சாவி, நாடோடி, துமிலன், ஆர்.கே.நாராயணன், எஸ்.வி.வி போன்ற நகைச்சுவை விற்பன்னர்களால் ஈர்க்கப்பட்ட நான்
நகைச்சுவை எழுத முற்பட்டபோது, எனக்குத் திறமையைவிட ஆர்வம்தான் அதிகம் இருந்தது. அந்த காலகட்டத்தில் ஆர்வமே திறமை என்று  எண்ணிக் கொண்டிருந்த சிறுவன் நான்.
1962-ல்  டில்லி சென்றதும்,, குமுதத்திற்குச் சில பேட்டிக் கட்டுரைகள் நான் அனுப்பினேன். அவைகளைச்  செதுக்கிச் சரிப்படுத்தி, குமுதத்தில் பிரசுரித்தார்கள். தொடர்ந்து எழுதி வந்தேன்.

இந்த சமயத்தில் 1967-ல் தினமணி கதிரில் சாவி பொறுப்பேற்றதும் அவரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. சாவியே கைப்பட எழுதியிருந்தார். அறிமுகம் கூட இல்லாத எனக்கு சாவியிடமிருந்து கடிதம்!.


“தினமணி கதிரின் ஆசிரியர் பொறுப்பேற்றுள்ளேன். கதிருக்கு ஒரு நகைச்சுவை கதையை எழுதியனுப்புங்கள்” என்று எழுதியிருந்தார்.

’எனக்கு எழுதத் தெரியும், அதுவும் கதை எழுதத்தெரியும், அதுவும் நகைச் சுவையாக!’ என்ற தவறான தகவலை அவருக்கு யார் சொல்லியிருப்பார்கள்?

அந்த கடிதத்தை என் தலையில் வைத்த கிரீடமாக கருதிக்கொண்டேன். ’மிஸ்டர் பஞ்சு’ என்ற தலைப்பில் ஒரு கதை எழுதி அனுப்பினேன். மறு வாரமே அது பிரசுரமாயிற்று. இது விசேஷமல்ல. கதிரின் அட்டையில் ’மிஸ்டர் பஞ்சு நகைச்சுவை கதை --- அகஸ்தியன்’ என்று வேறு போட்டுவிட்டார்.

நகைச்சுவை என்னும் கரைகாணமுடியாத கடலில் என்னை இறக்கி, நீந்தச் செய்துவிட்டார் சாவி. அன்றிலிருந்து நகைச்சுவை புத்தகங்களாகவே படித்து வருகிறேன் MAD MAGAZINE துவங்கி SPIKE MILLIGAN, GEORGE BURNS, EVAN ESAR, JOEY ADAMS, WILLIAM HAZLETT UPSON, RICHARD ARMOUR, BOB HOPE, ART BUCHWALD, OGDEN NASH, PIERRE DANINOS என்று பல நூறு எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படித்து, அவர்களின் செய்முறைகளை உள்வாங்கி ஓரளவு திறமையை வளர்த்துக் கொண்டுள்ளேன்,
சாவியின் கேரக்டர் கட்டுரைகளைப் பார்த்து நானும் கேரக்டர் கட்டுரைகளை கதிரில் எழுதினேன். அவரைப் பின்பற்றி நானும் ’இங்கே போயிருக்கிறீர்களா?’ கட்டுரைகளை எழுதினேன்.

இது மாதிரியே மதிப்பிற்குரிய குருநாதர் பாக்கியம் ராமசாமி அவர்களின் எழுத்திற்குத் தீவிர ரசிகனானேன். ஒரு சில சமயம் அவர் எழுதிய பதப்பிரயோகங்களை அப்படியே நானும் உபயோகித்துள்ளேன்.

 
ஒரு நகைச்சுவை கதையில் சீரியஸான விஷயம் வந்தால் அதையும் அவர்  நகைச்சுவையாக எழுதியிருப்பார். உதாரணத்திற்கு ஒன்றிரண்டு சொல்லுகிறேன். அவர் எழுதினார்: ”அவனுக்கு கோபம் கோபமாக வந்தது. அவன் முகத்தில் எள் பிளஸ் கொள் வெடித்தது என்று எழுதியிருந்தார். வெறுமனே எள்ளும் கொள்ளும் என்று எழுதியிருந்தால் அதில் நகைச்சுவை இருந்திருக்காது.