May 15, 2019

இதுதாண்டா கவர்ன்மென்ட்!

இருபது வருஷ சப்ளை
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும் போகும் பார்சல்களை, அங்கு டெலிவரி செய்வதற்கு நாம் கட்டணம் செலுத்த வேண்டும். அதே போல் அங்கிருந்து வரும் பார்சல்களை  இங்கு நாம் டெலிவரி செய்வதற்கு அவர்கள்  நமக்குக் கட்டணம் செலுத்தவேண்டும்.
 டில்லியில் தபால் துறை அலுவலகத்தில்  சர்வ தேச பார்சல் அக்கவுண்டிங்க் செக் ஷனில் இந்த வரவு-செலவு கணக்குகள், சுமார் 50-60 நாடுகளுக்குத் தயாரிக்கப்படும். (இது சற்று சிக்கலான கணக்கு. அதிகம் விவரித்தால் குழம்பிப் போவீர்கள்.)

          இந்த கணக்கு முறை, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட முறை.  இதில்  “இங்கிலாந்து - இந்தியா” கணக்கு மிகவும் முக்கியமானது. இங்கிலாந்து சார்பாகவும் நாமே கணக்குத் தயாரிக்க வேண்டும். சுமார் 20, 30 நாடுகளுக்குப் போகும் பார்சல்கள் எல்லாம்  லண்டன் வழியாகப் போகும்; லண்டன் வழியாக வரும்  (பிரிட்டிஷ் காலத்தில் அவர்கள் செய்த வழிமுறை.) 

சுதந்திரம் வந்து 30 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே மாதிரி பல்வேறு  நாடுகளிலிருந்து வரும் பார்சல்கள் லண்டன் வழியாக வரும். 
இதன் காரணமாக  இந்தியா - லண்டன் பார்சல் கணக்கு தயாரிக்கப்படும் படிவம் மிகப் பெரியதாக இருக்கும். பெரியது என்றால் நம்பமாட்டீர்கள்,  கிட்டத்தட்ட இரண்டு அடிக்கு மூன்றடி இருக்கும். சற்று தடிமனான காகிதத்தில் இருக்கும். காலப் போக்கில் பெரும்பாலான நாடுகள் காணாமல் போய்விட்டன அல்லது பெயரை மாற்றிக் கொண்டன. அல்லது நேரடியாகக் கணக்குகளை அனுப்பத் தொடங்கி விட்டன.
இந்த 'பிரிட்டன்- இந்தியா' கணக்கு மாதா மாதம் தயாரிக்கப்பட வேண்டும். நான்கு காபிகள் தயாரிக்க வேண்டும்.   அதுவும் ஒரே ஒரு நபர் செய்யும் வேலை. ஆக வருஷத்திற்கு 48 பாரங்கள் மட்டுமே  தேவைப்படும். 1950, 60  வாக்கில் எப்போதோ, என்ன அடிப்படையிலோ 1,000  பாரம் அச்சடித்து விட்டதால் (20 வருஷ சப்ளை!)  தீரவே இல்லை. ரிகார்ட் ரூமில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த   கட்டுகளில் அடியில் இருந்த கட்டுகள் அப்பளமாகப் போய் விட்டன.
புதிதாக, கச்சிதமாக,  சரியான தகவல்களுடன் அச்சடிக்கலாமென்றால், கையில் இருப்பது தீரும் என்றே தோன்றவில்லை. 
இந்த சமயத்தில் 1970 வாக்கில் ஒரு நாள்  ஒரு  சுற்றறிக்கை வந்தது.   எல்லா டிபார்ட்மெண்டும்  தேவையில்லாத பழைய ஃபைல்கள், ரிஜிஸ்டர்கள், பில் பண்டில்களை மூன்று நாட்களுக்குள் களைந்து விடவேண்டும் என்று  உத்தரவிட்டிருந்தார்கள்.  அப்பளமாகிப் போன இந்த FORMS  பண்டில்கள் உட்பட பல பழைய ரிகார்டுகளை அக்கவுன்ட்ஸ் ஆபீசர்  களைந்து விட்டார்.   ‘அப்பாடா’ என்று எல்லாரும் மூச்சு விட்டோம்.
       அதற்குப் பிறகு சில வாரங்கள் கழித்து, ஸ்டோர் செக் ஷனிலிருந்து ஒரு டெலிபோன் வந்தது. அதிர்ச்சிக் குண்டைப்  போட்டார்கள்.  எந்த படிவத்தைக் களைந்துவிட்டு ‘அப்பாடா’ என்று மூச்சு விட்டோமோ, அதே படிவம் ஆயிரம் காபி அச்சகத்திலிருந்து வந்திருந்தது! நாங்கள் கேட்காமலேயே அச்சடித்து அனுப்பி இருந்தார்கள். அடுத்த இருபது வருஷ சப்ளை!!!