Showing posts with label ரா.கி. Show all posts
Showing posts with label ரா.கி. Show all posts

September 25, 2012

ரா.கி.ரங்கராஜன் - ஒரு ஆத்மார்த்த அஞ்சலி : கடுகு

முன்குறிப்பு: இந்தக் கட்டுரையில் நிறைய ‘நான்’ வருவதைத் தவிர்க்க முடியவில்லை. நான் அறிந்த ரா.கி.ர’ வைப்பற்றி  எழுதும் போது, என் அனுபவ பூர்வமான  விஷயங்களைச்  சொல்லும்போது  தவிர்ப்பது சாத்தியமல்ல, கூடிய வரைக் குறைத்திருக்கிறேன்!)
+++++++++++++++

என் எழுத்துக்கு ஊக்கமும் ஆக்கமும் தந்த  முக்கியமானவர்களில் ஒருவர் ரா.கி.ரங்கராஜன்..

அவரை எப்போது முதன் முதலில் படித்தேன்? பல வருஷங்களுக்கு முன்பு ஒரு சிறுவர் பத்திரிகையில் ( அணில்?  ஜிங்க்லி ?  கல்கண்டு?) ‘பிரபலங்கள் பிள்ளைகள்” என்ற வரிசையில் கல்கி ராஜேந்திரன் அவர்களை, ரா.கி.ர  பேட்டி கண்டு எழுதினார்.. அப்போதே அவர் எழுத்தின்மீது எனக்கு அபிமானம் ஏற்பட்டது!

அதன் பிறகு குமுதத்தில் வந்த பல கதை, கட்டுரைகளைப் படித்து ரசித்து இருக்கிறேன். குமுதத்தில் எழுதுபவர்கள் எல்லாரும் நன்றாக எழுதுகிறார்களே என்று யோசித்ததும் உண்டு. அதனால் அதில் எழுதும் பல எழுத்தாளர்களூக்கு விசிறியாகி விட்டேன். பின்னால் நான் குமுதத்தில் எழுத ஆரம்பித்த (1963) பிறகு எனக்குத் தெரியவந்தது, ரா,கி,ர, , ஜ,ரா,சு, மற்றும் புனிதன் ஆகிய மும்மூர்த்திகள்தான் அந்தப் ‘பலர்’ என்று! அவர்களில் அதிகப் புனைபெயர் கொண்டவர் ரா,கி,ர’ வாகத்தான் இருக்கும் என்பது என் யூகம்.

(ஒரு சமயம் தினமணி கதிரில் அவர் படத்தைக் கார்ட்டூனாகப் போட்டு ஒரு துணுக்கு வந்ததது. ” நான் இரண்டு டஜன் புனைப்பெயர்களை வைத்துக் கொண்டு  எழுதுவதாகச் சொல்கிறர்கள். அதெல்லாம் ஒன்றுமில்லை... எனக்கு இருப்பதெல்லாம்  ஒரே ஒரு டஜன் புனைப்பெயர்கள்தான் !-ரா.கி.. ர..)  (40 வருஷத்திற்கு முந்திய துணுக்கு, நினைவிலிருந்து எழுதியுள்ளேன். லேசான தவறு இருக்கலாம்!)

அந்தப் புனைபெயர்களையெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டு மேலும் ரசித்துப் படித்தேன். இப்படி பல அவதாரங்களை எடுத்த அவர் இன்று இல்லை. அவருக்கு நான் ரசிகன்  மாணவன், குடும்ப நண்பன். இவற்றுடன் சில வருஷங்களுக்கு முன்பு, ஆண்டவன் செய்த ஏற்பாட்டினால் ஒரு திருமணம் மூலம் அவரது உறவினனும் ஆனேன்.

February 03, 2010

பத்மஸ்ரீ விருது பெற்ற ஜலகண்டபுரம் ராமசாமி கிருஷ்ணமூர்த்தி?

யார் இவர்? வழக்கம் போல்,  நமது பத்திரிகைகள் (தினமணி நீங்கலாக) இந்தத் தமிழரைப் பற்றி கண்டு கொள்ளவில்லை.  இவர் பிரபல நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியின் (ஜலகண்டபுரம் ராமசாமி சுந்தரேசன் - ஜ. ரா.சு)  சொந்த சகோதரர். டாக்டர் கிருஷ்ணமூர்த்தியை பற்றி பிரபல எழுத்தாளர்  குமுதம் ரா.கி. ரங்கராஜன்.  அண்ணா நகர் டைம்ஸில்  எழுதியுள்ளார். அதை இங்கு தருகிறேன். .அண்ணா நகர் டைம்ஸிற்கு நன்றி          -- கடுகு
=======================
சென்ற ஜனவரி இருபத்தாறாம் தேதி நான் சொல்லவொண்ணா சந்தோஷத்தில் இருந்தேன்.
‘குடியரசு தினத்தன்று சந்தோஷமாக இல்லாமல் மூஞ்சியைத் தொங்கப் போட்டுக் கொண்டா இருப்பீர்கள்?’ என்று கேட்காதீர்கள். என் சந்தோஷத்துக்குக் காரணம் குடியரசு தினம் மட்டுமல்ல; என் மதிப்புக்குரிய பிரியமான நண்பர் டாக்டர் ஜே.ஆர்.கிருஷ்ணமூர்த்திக்கு அன்று பத்மஸ்ரீ விருது வழக்கப்பட்டிருந்தது.
  பேப்பரில் ஜலகண்டபுரம் ராமசாமி கிருஷ்ணமூர்த்தி என்று நீளமாகப் போட்டிருந்தாலும் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் அவர் அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ‘குன்றத்தூர் டாக்டர்’தான். இந்நேரம்
எல்லோருக்கும் தெரிந்திருக்கும் டாக்டர் ஜே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி நகைச்சுவைப் பேரரசு ஜ. ரா. சுந்தரேசன் என்ற பாக்கியம் ராமசாமியின் தமையனார் என்பது. புரசைவாக்கம் வெள்ளாளத் தெரு, 116ம் எண் வீட்டின் முன்பக்கத்து அறையில் சகோதரர்கள் இருவரும் வசித்து வந்தார்கள். இரண்டு பேருமேபிரம்மசாரிகள். ஆனால் ஒண்டிக்கட்டைகள் அல்ல.
ஏதோவொரு மாபெரும் குடும்பம் அங்கே குடியிருப்பது போல இளைஞர்களின் அட்டகாசமும் இரைச்சலும் அட்டூழியமும் அமர்க்களப்படுகிற அறை அது. இன்னார்தான் வருவார். இன்னார்தான் போவார் என்ற விவஸ்தை கிடையாது. நிரந்தர அறைவாசியாக ஒருத்தர் இருந்தார். என்னவோ ஒரு ராவ். இவர் ஒருவர்தான் எங்கள் அமர்க்களங்களில் ஈடுபடாதவர். சீரியஸான பேர்வழி. விருட் விருட்டென்று சுந்தரேசனும் புனிதனும் நானும் எழுதுவதைப் பார்த்துவிட்டு ‘பூ! கதை எழுதுவதென்றால் இவ்வளவுதானா! நான் என்னமோ பெரிசாய் நினைத்திருந்தேன்!’ என்று வாய் விட்டே ஒரு நாள் சொன்னார்.