February 05, 2020

நீச்சலும் கூச்சலும்

 ஞாயிற்றுக்கிழமை. சிறிது சாவகாசமாகப் பொழுதைக் கழிக்கலாம் என்று நினைத்து, பேப்பரில் வந்திருந்த குறுக்கெழுத்துப் போட்டியில் இறங்கினேன்.  என் தலையெழுத்து வேறு மாதிரி இருந்திருக்க வேண்டும்.

வாயில் மணி அடித்தது. கதறியது என்று கூட சொல்லலாம். மனுநீதி சோழனின் மணியை, கன்றை இழந்த பசு அடித்தது போன்று இருந்தது. நான் சோழனும் இல்லை; எங்கள் பேட்டையில் மாடோ, கன்றோ எதுவும்  கிடையாது. என்னிடம் தேர் எதுவும் கிடையாது. இருந்தும் இந்த மணி ஓசை  ஒரு பழமொழியைத் தான்  லேசாக மாற்றி, நினைவுபடுத்தியது. 'யானை வரும் பின்னே; மணி ஓசை வரும் முன்னே!’ என்பதை லேசாக மாற்றி, 'மணி ஓசை வரும் முன்னே; தொல்லை வரும் பின்னே’ என்பது மாதிரி எனக்குத் தோன்றியது
மணியோசை கேட்டு சமையலறையிலிருந்து எதிரொலி மாதிரி என் அருமை மனைவி கமலா   ”காது கேட்கலயா? உங்களுக்கு இடி இடிச்சாக் கூட  காது கேட்காது. உங்களுக்கு இருக்கிறது காது இல்லை;   ‘கேட்-காது’ தான் இருக்கு” என்று சொல்லி, தன்னுடைய சொல் நயத்தைத் தானே ரசித்தபடி, தன் முதுகில் தானே ஒரு ஷொட்டு கொடுத்தபடியே வந்து  வாயிற் கதவைத் திறந்தாள் கமலா.

“வாடா.. .. வாம்மா.. வாடா குழந்தை”  என்று  அன்பு, கரிசனம், பாசம், பரிவு, வாத்ஸல்யம், கனிவு... இன்னும் எனக்குத் தெரியாத பல பாவங்களுடன் கமலாவரவேற்றாள். பூர்ண கும்பம், வாழை மரம், நாதஸ்வர இசை, வேத கோஷம் தான் இல்லை! ஆமாம், திடீரென்று தொச்சுவும் அவனுடைய  அருமை மனைவி அங்கச்சியும்,  அவர்களுடைடைய நண்டு ஒன்றுடன் வருவார்கள் என்று அவள் எதிர்பார்க்க வில்லை.
 “ சும்மா  காலார நடந்து வந்தோம்..அத்திம்பேரைப் பார்த்து ரொம்ப நாளாச்சே என்று வந்தோம்”  என்று தொச்சு சொல்லிக் கொண்டிருக்கும் போது, அங்கச்சி  குறுக்கிட்டு,  “அது மட்டும் இல்லை, அக்கா. எங்க  அபார்ட்மென்ட்   காலனியில் நீச்சல் குளம் கட்டி இருக்காங்க. சூப்பரா இருக்கு. பசங்க அதகளம் பண்ணறங்க. காலனியில் இருக்கிற நண்டும் சுண்டும்…..”  என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது, நான் இடைமறித்து  “அப்படியா? நம்ப நண்டுதான் லீடரா?” என்று கேட்டேன் 
 “பிரச்சினையே அதுதான், அத்திம்பேர். எதுக்கு இந்தப் பொடியன் வந்திருக்கான் தெரியுமா? அவனுக்கு நீச்சல் தெரியாது. தொளைச்சு எடுக்கிறான், 'நீச்சல் கத்து கொடு' என்று. அவனை  ‘நண்டு’ என்று நீங்க சொன்ன வேளை, அவனை நிஜமாகவே நண்டாக நீங்க ஆக்கி வைக்கணும்” என்றாள் அங்கச்சி.
   “அங்கச்சி..   ‘கெக்கே பிக்கே’ என்று ஏதாவது சொல்லிண்டே இருக்காதே. நான் விளக்கமா சொல்றேன், அத்திம்பேர்” என்றான்  தொச்சு.
ஏதோ நாடக வசனத்தை எழுதி, மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல தொச்சு, அங்கச்சி வசனங்கள் இருந்தன.

“உள்ளே வாடா, தொச்சு...வந்தவனை “வா” என்று சொல்லாமல், ஏதேதோ பேசிக் கொண்டே இருக்கிற வழக்கத்தை எப்பதான் விடுவீங்களோ!” என்றாள் கமலா. 
  “கமலா, முதலில் காபி கொண்டு வந்து கொடு” என்றேன். 
பொங்குகிற பாலில் சிறிது தண்ணீர் தெளித்தது போல்,  கமலாவின் கடுகடுப்பு ‘புஸ்’ என்று அடங்கிப்போயிற்று.  அது மட்டுமல்ல, உற்சாகம் ஊற்றாகப்  பெருக்கெடுத்தது.
 நான் சொல்லி முடிப்பதற்குள், எள் என்பதற்குள் எண்ணெயாக இருக்கும் என் மாமியார்  காப்பியுடன் வந்து விட்டாள்- வழக்கத்தை விட 50% அதிக பாசத்துடன்! 
 “தொச்சு! வாடா, அங்கச்சி வாம்மா. பப்ளி வாடா” என்று சொல்லியபடியே, மேஜையில் காப்பியை வைத்தாள்.
(பப்ளி? தொச்சுவின் பையனின் உண்மையான பெயர் என்ன என்று எனக்குத் தெரியாது. ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு பெயரில் அழைப்பார்கள். சில சமயம்  அது திட்டு மாதிரி கூட இருக்கும்;  உதாரணமாக, புளிமூட்டை, ரோடு ரோலர், பீம சேனா, ஃபுட்பால் தடியா, கரடிக் குட்டி, வெல்லக்கட்டி, பலூன் கண்ணா என்று பல பலப் பெயர்கள்.)
“தொச்சு.. நீ குழந்தையை ‘ பப்ளி’ன்னு கூப்பிடறயே, அது என்ன பப்ளி?” என்று கேட்டால், இந்த பெயர்களுக்கெல்லாம்  அர்த்தம், விளக்கம் எதுவும் கிடையாது. அத்திம்பேர்! என் பெயரை  ‘தொச்சு’ என்று வைச்ச மாதிரி, இதுவும் ஒரு பேர்... இந்த பப்ளி என்ற பெயர்  ‘பப்ளிமாஸ்’ என்ற பெயரின் சுருக்கம். அவ்வளவுதான்” என்பான்!)
காப்பியை நோக்கி பொடிநடையாக சென்றபடி “அத்திம்பேர்..  நாங்க இன்னிக்கு வந்ததே இந்த பப்ளிக்காகத்தான்…. எங்க காலனியிலே இப்போ சூப்பரா நீச்சல்குளம் கட்டி இருக்காங்க; போன வாரம் திறந்து வெச்சாட்டங்க. பசங்க பாடு கும்மாளம் தான். பாவம், பப்ளி  வெறுமனே வேடிக்கை பார்த்துண்டு  இருக்கான்” என்று தொச்சு சொன்னான்.
  அங்கச்சி,  “அவன்   நீச்சல் கற்றுக் கொள்ளத் துடியா துடிக்கிறான்” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே நான் “தொச்சு,   நீ சொல்லிக் கொடுக்க வேண்டியது தானே? என்று கேட் டேன்,

காபியை ஒரு முழுங்கு குடித்துவிட்டு, தொச்சு “அம்மா, எப்படிம்மா இப்படி பிரமாதமா காபி போடறே? அங்கச்சியும் போடறாளே!.. போகட் டும், என்ன சொன்னீங்க, அத்திபேர்? நீச்சல் நீயே சொல்லிக் கொடுக்க வேண்டியது தானே என்று தானே சொன்னீங்க…. ஐயோ, எனக்கு ஆயிரம் வித்தை  தெரிஞ்சிருந்தாலும் (!) இந்த பாழாப் போன நீச்சல் தெரியாது. அதனால வந்து….” என்று லேசாகத் தயங்கியபடி அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போது, அங்கச்சி “என்ன மென்னு முழுங்கறீங்க? நீங்க பணமா கடன் கேட்கிறீங்க?... நானே அத்திம்பேரைக் கேட்கிறேன். அத்திம்பேர் மாதிரி ஒருத்தர் கிடைச்சது நம்ப பாக்கியம். அத்திம்பேர், நீங்க நாலு நாள் வந்து, இந்தக் குழந்தைக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கணும்…பப்ளி அசகாய சூரன்.  இரண்டே நாளில் கற்றுக்கொண்டு விடுவான்” என்றாள். 
    “இரண்டு நாளில் கற்றுக்கொண்டு விடுவான் என்றால், நான் எதுக்கு நாலு நாள் வரணும்? அடுத்த இரண்டு நாள், ஒலிம்பிக் வீரனைப்போல நீச்சல் அடிக்கக் கத்துக்கப் போறானா?” என்று கேட்டேன்.  நான் எதிர்பார்த்தபடி அங்கச்சி, “இதுதான் அத்திம்பேர் என்கிறது... ஒரு அல்ப நீச்சல் விஷயத்திலும் ஜோக் அடிக்கிறார்”  என்றாள். (எல்லாம், ஐஸ்!) 
“நீச்சலும் சரி, ஜோக்கும் சரி... இரண்டும் ஒன்றுதான். இரண்டும் அடிக்கிற விஷயங்கள்தான்” என்றேன்
 இதற்குள் பொறுமை இழந்த என் மாமியார் “ஏண்டி கமலா, நீங்க பேசி க்கொண்டே இருப்பதை பார்த்தால், பப்ளி  நீச்சல் கத்துக்கப் போறானோ இல்லையோ, நன்னா ஜோக் அடிக்கக் கத்துண்டு விடுவான்” என்றாள்.
“அதுவும் இரண்டு நாளிலேயா?” என்று ஆகாயத்தைப் பார்த்து கேட்டேன். எதிர் விமர்சனம் எதுவும் வரவில்லை.   (எல்லாம் அனுபவத்தில் அடிபட்டு கற்றுக் கொண்ட பாடம்)
இன்னும் காலம் தாழ்த்தினால்  “இருந்து சாப்பிட்டு விட்டு போயேண்டா” என்று புத்திர பாசம் பொங்க, என் மாமியார் சொல்லக்கூடும். அதனால் நான் “சரி..சரி..  நாளைக்கு நான் வரேன், நீச்சல் பாடத்திற்குப் பூஜை போடலாம்.. ஏய், பப்ளிகுட்டி, நீ சரியா கத்துக்கலே, உனக்கும் சரியான பூஜை கிடைக்கும்” என்று சொல்லிச் சிரித்தேன். எல்லாரும் (என் மாமியார் உட்பட) சிரித்தார்கள்.
                       ***                         ******
 மறுநாள் காலை 5 மணிக்கு என்னை எழுப்பினாள் கமலா. 
“மணி ஆகலை? சீக்கிரம் எழுந்திருங்கோ. குழந்தை வந்து காத்துண்டு  இருப்பான்” என்றாள்
“எட்டு மணிக்குத் தானே நீச்சல் கற்றுக் கொடுக்க வரேன்னு சொல்லி இருந்தேன்” என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போது, கமலா  “அது எனக்குத் தெரியாதா? நீங்க எழுந்திருக்கணும், பேப்பரை எழுத்து எழுத்தாப்  படிக்கணும். அப்புறம் உங்க ஃப்ரண்ட் ராஜப்பா கிட்ட நியூஸ் மொத்த த்தையும் அலசணும். அதுவும்,  கோஸ்டரீகா பூகம்பம், நிகரகுவாவில் பஞ்சம், அங்கே வெள்ளம், இங்கே சுனாமி என்றெல்லாம் பேச வேண்டாமா?  அந்த நாடு எல்லாம் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாமல் அரட்டை அடிச்சாகணும், இல்லையா.  அப்புறம்,  நல்ல காலம். கிராமத்திற்கு போய் இருக்கிறாள் உங்கம்மா.   இல்லவிட்டால் பேரன், பேத்தி எல்லாரையும் பத்தி பேசணும்.  அதுக்குள்ள மணி எட்டு ஆயிடும்;  இல்லை எட்டுமணி நேரம்கூட ஆயிடும்… சரி, சரி, எழுந்து ரெடி ஆயிடுங்க” என்று அதட்டினாள். 

தீயணைக்கும் வீரர்கள் கூட இத்தனை பரபரப்பாக, அவசரமாக வேலையில் இறங்க மாட்டார்கள்.  நீச்சல் குளத்திற்குத் தீப்பிடித்து விட்டது மாதிரி அவசரம் அவசரமாக காலனிக்குப்   போகத் தயாரானேன். 
கமலா கொடுத்த மூட்டையை, இருமுடி கட்டிக் கொண்டு போவது போல், எடுத்துக் கொண்டு கிளம்பினேன் .  மூட்டையில் என்ன என்று கேட்காதீர்கள். இட்லி,  சட்னி, சாம்பார் என்று   தம்பி குடும்பத்திற்குக் கொடுத்து அனுப்பி இருந்தாள் கமலா. ராமருக்குக் கூட தம்பி லட்சுமணன் மேல் இத்தனை பாசம் இருந்திருக்குமோ என்பது சந்தேகம்.  
                  *                                     *
 தொச்சுவின் காலனிக்கு போய் சேரும் போது மணி எட்டாகி இருந்தது. தூரத்தில் ஒரே கூச்சலும் கும்மாளமுமாக இருந்தது.  நீச்சலும் கூச்சலும் உடன் பிறப்பு என்பது இன்று வரை எனக்கு தெரியாது. 
“எங்கே இருக்கிறது  நீச்சல் குளம்?” என்று யாரையும் கேட்க வேண்டிய அவசியமே இல்லை.  கூச்சல் வந்த திக்கை நோக்கிப் போனேன். அதை நெருங்குவதற்குள் அங்கச்சி மற்றும் சில கொசுறுகள் என்னை நோக்கி ஓடி வந்தன. இரண்டு கைகளையும் விரித்தபடி தொச்சு ஓடி வந்தான். அவன் என்னை பார்த்தபடி வரவில்லை என்பது இரண்டு  நிமிஷத்தில் தெரிந்துவிட்டது.
  “என்ன,  அத்திம்பேர்!  பெரிய மூட்டையைக் கொண்டு வந்திருக்கீங்க? ’எதுவும்  அனுப்பாதே’ என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு தான் வந்தேன். இவ்வளவு அனுப்பி இருக்கிறாள். இந்த அம்மா எப்பவும் நான் சொல்றதை கேட்கவே மாட்டாள்” என்றான்.
  “நீ சொல்றதை அம்மா அப்படி கேட்காமல் இருக்கிறதாலதானே, நீயும் சொல்லிண்டே  இருக்கே. ஒண்ணும் இல்லை... இட்லி, சாம்பார், சட்னி கொடுத்து அனுப்பி இருக்கிறாள். நீச்சல் கிளாஸ் ஆரம்பிக்கலாமா? எங்கே பப்ளிமாஸ்?” என்றேன்.
பப்ளி வந்தான். “சரி, சரி வாடா. ஆரம்பிக்கலாம்” என்றேன்
“எனக்கு ரொம்பப் பசிக்குது” என்று இழுத்தான்.
உடனே அங்கச்சி “இட்லியை பார்த்துட்டானோ இல்லையோ, பசி வந்துட்டது என்றாள்
“சாப்பிட்டுவிட்டு  நீச்சலடிக்கிறது உடம்புக்கு நல்லதில்லை, வாடா கண்ணா ! இன்னைக்கு நீச்சல் கிளாஸ் முடிந்ததும், பாவ்-பாஜி வாங்கித் தரேன்” என்றேன்.
“பாவ்-பாஜியா! ஆவ்!” என்று பெரிதாக ஏப்பம் விட்டான் பப்ளி.
மளமளவென்று நீச்சல் உடையுடன் பப்ளி வந்தான். நான் முதலில் தண்ணீரில் இறங்கினேன். 
 மேலே, நிறைய பேர் தங்கள் பேரன்கள் நீச்சலடிப் பதை, ஒலிம்பிக் நீச்சல் பயிற்சியாளர்கள் போல், “இப்படி அடி, அப்படி அடி ” என்று கத்திக்கொண்டு இருந்தார்கள். எந்த பாட் டி, எந்த பேரனுக்கு ஆடியோ பாடம்  நடத்துகிறார் என்று எனக்குத் தெரியவில்லை. இதுதான் தர்மக்கூச்சல்  என்பதுவோ, அதுவும் எனக்குத் தெரியவில்லை
    *                                *
தண்ணீரில் இறங்கினேன். “பப்ளி! வாடா குழந்தை” என்று அவனைக் கூப்பிட்டேன். அவன் “எனக்குப் பயமாயிருக்கு. தண்ணிக்குள்ள மூழ்கிப் போயிடுவேன்; ரொம்ப ஆழத்துக்கு போய்ட்டா என்ன செய்யறது? எனக்குப் பயமா இருக்குது” என்று கத்த ஆரம்பித்தான்.
 “அழாதேடா.. எவ்வளவு பெரிய பையனாயிட்டே..   எல்லாரும் சிரிக்கிறாங்க.... அதோ பாரு, மாடி வீட்டு வரது குட்டி, டால்பின் மாதிரி   நீச்சல் அடிக்கிறான்” என்றான் தொச்சு
  “அவன் வரதுக் குட்டி இல்ல; அவனோட பாட்டி அவனை ‘வாத்துக்குட்டி’ன்னுதான்   கூப்பிடுறா.. அதனால் அவனுக்கு நல்ல நீச்சல் வருது” என்று தன் கண்டுபிடிப்பை, லேசாக அழுதபடி சொன்னான், பப்ளிமாஸ்.
 “ஏ, பப்ளிமாஸ்!  படிக்கட்டு வழியாக இறங்கு.. ஆழமே  மூணு, நாலு அடி தான். இப்போ வரப் போறியா, இல்லையா?” என்று நான் சற்று கடுமையாக சொன்னதும்  “உன்னைக் குண்டு கட்டாகத் தூக்கிப் போட்டு விடுவேன்” என்று சொல்லியபடியே தொச்சு அவனை நெருங்கினான். 
அந்த சமயத்தில், கிட்டத்தட்ட இரண்டு செகண்டுகளில் நடந்ததை விவரிக்கப் பத்து நிமிஷமாவது ஆகும் .
 ஜல்லிக்கட்டு காளையை பிடிக்க முனையும் வீரனைப் போல் தொச்சு அவன்  மேல் பாய, பப்ளிமாஸ் சடாரென்று ஓடி -- இல்லையில்லை, கண்,மண் தெரியாமல்  நீச்சல் குளத்தின் ஓரமாக ஓட முற்பட்டான். அப்போது எதிரே வந்த ஒரு கேட்டரிங் பையன் மேல் மோதினான். அந்த கேட்டரிங் பையன் கையில் பெரிய தட்டையும், அதில் சுமார் 10 டம்ளர் மாம்பழ ஜூஸ் வைத்திருந்ததையும் அவன் கவனிக்கவில்லை.  அந்த கேட்டரிங் பையனும் கவனிக்கவில்லை.    நீச்சல் குளத்தின் அருகில் நாற்காலியில் உட்கார்ந்து இருந்தவர்களும் இதை கவனிக்கவில்லை.  “எடுத்தது கண்டனர் இற்றது கேட்டனர்” என்று கம்பன் சொன்னதை சற்று மாற்றி   “மோதியதைப் பார்த்தனர்; அடுத்து, ’ஐயோ’ என்ற பப்ளியின் அலறலைக் கேட்டனர் 
பப்ளி மட்டும் தண்ணீரில் விழவில்லை; கேட்டரிங் பையனும் விழுந்தான். அவன் கெட்டியாகப் பிடித்திருந்த  தட்டும், கண்ணாடி டம்ளர்களும்  தண்ணீரில் விழுந்து விட்டன. எல்லாம் இரண்டு செகண்ட்தான்.  அடுத்த ஷாட், பப்ளி  அலறி அழுவது கேட்டது.
(காலனியை கட்டிய கம்பெனி, தெரிந்தோ தெரியாமலோ சரியான அளவு சிமெண்ட் போட்டு கட்டி இருந்ததால், பப்ளி அலறலுக்கு கட்டடம் ஈடு கொடுத்து, விக்கல் வந்தது போல் லேசாக  ஆடி நின்றது!)
  “என்ன ஆச்சு?,  என்ன ஆச்சு?” என்று எல்லோரும், பதில் கிடைக்காது என்று தெரிந்திருந்தும் ஒருவரை ஒருவர்   கேட்டனர்.
 தண்ணீரில் நின்றுகொண்டிருந்த நான் இந்த நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
 எனக்குச் சற்று தள்ளி நின்று கொண்டிருந்த பப்ளி  ‘கால், கால்’ என்று கத்தினான்.  ‘காள், காள்’ என்று கத்துவது வழக்கம்; இது என்ன புதிதாக இருக்கிறதே என்று யோசித்தேன். 
 அடுத்த கணம், ஐயன் பெருமாள் கோனார் நோட்ஸ், பரிமேலழகர் உரை எதுவும் இல்லாமல் எனக்குப் புரிந்துவிட்டது.  “ஐயோ, காலில் கண்ணாடி குத்தி விட்டது” என்று எஃப்.எம். ஒலிபரப்பு மாதிரி கத்தினான். அதற்குள் அவனைச் சுற்றி தண்ணீரில் சிவப்பு கோலம் போட்டது மாதிரி ஏதோ மிதந்து கொண்டிருந்தது. உற்றுப் பார்த்தேன். ரத்தம்! பப்ளியின் காலிலிருந்து ரத்தம் வந்து, நீச்சல்  குளத்தைச் சிவப்பாக்கிக் கொண்டிருந்தது.
  அப்போது   யாரோ உரக்க விசில் அடித்தார்கள். “எல்லாரும் தண்ணீரை விட்டு வெளியே வாங்கோ, உடனே வாங்கோ” என்ற அறிவிப்பும் வந்தது. எனக்குப் புரிந்துவிட்டது.  பப்ளி மோதியதால் விழுந்த கண்ணாடி டம்ளர்கள், தண்ணீரில் விழுந்து உடைந்துவிட்டன. போதாக்குறைக்கு, பப்ளி அவற்றின் மீது குதித்தும் விட்டான். கண்ணாடித் துண்டுகள் அவன் பாதத்தைப் பதம் பார்த்துவிட்டன! எல்லோரும் பரபரப்பாக நீச்சல் குளத்தில் இருந்து மேலேறி வந்தனர். பின்னணி இசையாக, “ஐயோ காப்பாத்துங்க; இல்லைன்னா 108’க்கு போன் பண்ணுங்க; தெய்வமே! என் பிள்ளையைக் காப்பாத்து’ என்றும், இன்னும் பல வசனங்களையும் அழுது கொண்டே அங்கச்சி  பேசியது அங்கு யாருக்கும் புரியாவிட்டாலும்,  அனுதாபத்தைச் சம்பாதித்துக் கொடுத்தது.
 * * * எல்லாரும் ஒரு வழியாக தண்ணீரிலிருந்து வெளியேறி கொண்டிருக்க, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பக்கம், காரசாரமாக வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது.  தனி ஒருவருடன் நாலைந்து பேர் கைகலக்காத குறையாக  உரக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள்.      
திடீரென்று எதிர்க்கட்சிக்காரரிடம் “இங்க பாருங்க, ராபர்ட். உங்களுக்கும் வேண்டாம்; எனக்கும் வேண்டாம். இதோ என்னோட அத்திம்பேர் வந்திருக்கிறார். அவரிடம் கேட்கலாம். அவர் சொல்றதுக்கு நானும் கட்டுப்படறேன்; நீங்களும் கட்டுப்பட வேண்டும்” என்றான் தொச்சு.
“அவர்  உன்னோட அத்திம்பேர் என்றால், உன்பக்கம் தான் பேசுவார்” என்றார் ராபர்ட் என்னும் ‘அவர்’.
  எப்போது என் பெயர் வந்துவிட்டதோ, இனி நாம் சும்மா இருக்கக்கூடாது என்று    எண்ணி “சார், ராபர்ட்.  என்ன விஷயம்?” என்று நான் கேட்டேன்.
“குட் மார்னிங், சார்” என்று சொல்லியபடியே ராபர்ட் என்னிடம் வந்து  “ நான் இந்த காலனி பில்டர். நீச்சல் குளத்தை அன்பளிப்பாக நான் கட்டிக் கொடுத்தேன்   இதை பாருங்க, யாரோ ஒரு பையனுக்குக் கண்ணாடி குத்தி ரத்தம் வந்துட்டது. எல்லா தண்ணீரும் ரத்தம் ஆகிவிட்டது.  நீச்சல் குளத்தைச் சுத்தம் பண்ண வேண்டும். தண்ணிய காலி பண்ணிவிட்டு, பினாயில் போட்டு அலம்பி, திரும்பவும்   தண்ணீரை நிரப்ப வேண்டும்.  இதை நான் பண்ணனும்னு இவர் சொல்றார். அது என்ன சார் நியாயம்? ” என்று கேட்டு ராபர்ட்  மூச்சு வாங்கினார்
“அவருடைய கேட்டரிங் பையன் கண்ணாடி  டம்பளர்களைத் தட்டில் எடுத்துக் கொண்டு ஓரமாகப்   போனதாலே தானே, தட்டு  நீச்சல் குளத்தில் விழுந்தது?  நல்ல காலம், பப்ளிமாஸ் காலில் குத்தி விடவே எல்லா குழந்தைகளும் தப்பித்தார்கள்.  இல்லாவிட்டால் எல்லா குழந்தைகளுக்கும் ரத்த காயம் ஏற்பட்டிருக்கும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார். (அந்தக் காலனியின் கமிட்டியின் தலைவர் அவர் என்று பின்னால் எனக்கு தெரிந்தது. )
ராபர்ட் என்னிடம் வந்து ”சார், நீங்க  இந்தக் காலனிகாரர் இல்லை என்று நினைக்கிறேன்” என்று ஆரம்பித்தவுடனே, தொச்சு அவரிடம் “ராபர்ட், இவர் பெரிய எழுத்தாளர். என் பிரதர்-இன் -லா” என்றான்.  
” ஓ! அப்படியா?   நீங்க   நிறைய சிந்திக்கற வேலை செய்யறவர். நீங்கள் என்ன சொன்னாலும் நான் சம்மதிக்கிறேன்” என்றார் ராபர்ட். (என் தலைமேல் ஐஸ்கட்டியை வைத்த மாதிரி இருந்தது)
ராபர்ட் உரத்தகுரலில் “ஜோசப், ஏய்..ஜோசப்! சாருக்கு சூடா டீ கொண்டு வா.  ஈர உடம்போடு இருக்கார்” என்று கத்தினார். ( சூடான ஐஸ்!)
அவரிடம் நான் “பிரதர், ஒரு விஷயம் எனக்குத் தெரியணும். இப்போது, இந்த நீச்சல்குளத்துத் தண்ணீரை  பம்ப் பண்ணி எடுத்து விட்டு, பினாயில் போட்டு கழுவி விட்டு, மறுபடியும் தண்ணீர் நிரப்ப என்ன செலவாகும்? ” என்று கேட்டேன். சமாதான பேச்சுவார்த்தைக்கு வருகிறார் என்று ராபர்ட் ஊகித்து இருக்க வேண்டும். உடனே என்னை பார்த்து “அங்கிள், நீங்க பெரிய ரைட்டர். நாலும் தெரிஞ்சவர். கிட்டத்தட்ட நாலாயிரம் ரூபாய் ஆகும். தண்ணி லாரி, தண்ணீர் பம்ப், அது இது என்று பணம் செலவு இழுத்துக் கொண்டு போய்விடும்” என்று மிகவும் பவ்யமாக சொன்னார் 
“பாருங்க, ராபர்ட். பாதி செலவை நான் ஏத்துக்கிறேன்” என்று சொல்லி முடிப்பதற்குள் ராபர்ட், “ நான்  பாதி செலவை  ஏத்துக்கிறேன், சார்” என்றார். சுற்றியிருந்தவர்கள்  ‘வெரிகுட் ராபர்ட், சபாஷ் ராபர்ட்’ என்று குரல் கொடுத்தார்கள்!  
தொச்சு “வெரிகுட் அத்திம்பேர்” என்று சொன்னான். மனதிற்குள்ளேயே ‘அப்பாடா’ என்று அவன் சொல்லி இருக்க வேண்டும்.  அங்கச்சி “வெரிகுட் அத்திம்பேர், வெரிகுட் அத்திம்பேர்” என்று சொன்னாள். (அங்கச்சிக்குத் தொச்சு சைகை காட்டியிருக்க வேண்டும்.).
ராபர்ட் உரத்த குரலில்   “டேய், ஜோசப். எல்லாருக்கும் சாக்லெட் கொண்டுவந்து கொடுடா ” என்று உற்சாகமாகச் சொன்னார்
                      *                                *
வீட்டிற்குத் திரும்பி வந்தேன். வாசலிலேயே கமலாவும் என் மாமியாரும், சும்மா வந்து நிற்பது போல் பாவ்லா காட்டிக்கொண்டு இருந்தாலும்,  நீச்சல் குளத்தில் நடந்ததை விலாவாரியாக கேட்பதற்குக்  காத்திருப்பது தெரிந்தது. கடன்காரன் தொச்சு அங்கு நடந்ததை மசாலா போட்டுச் சொல்லி இருப்பான் என்பது என் ஊகம்.
“பாவம், பப்ளிக்குக் கண்ணாடி குத்திவிட்டதாமே?  அவன் தான் தண்ணீரில் இறங்க பயந்தானே, அவனை எதுக்கு  “வாடா,  வாடா” என்று கூப்பிட்டீங்க ?” என்று  கமலா ஆரம்பித்தாள். 
“கமலா, தொச்சு எல்லா விவரங்களையும் சொல்லி விட்டானா? வெரிகுட். கண்மண் தெரியாமல் பப்ளி  ஓடினான்; மாம்பழ ஜூஸ் கொண்டு வந்த சர்வர் பையன் மேல மோதினான்... விடு.. . எல்லாம் ஒரு மாதிரி சமாதானமாகப் போய் விட்டது, காலனியைக் கட்டிய கான்ட்ராக்டரோடு!” என்றேன்.
  “அத்திம்பேர் அவசரப்பட்டு 2000 ரூபாய்க்கு தரேன்னு சொல்லி சொல்லிட்டார். மொத்த செலவு 4,000 ரூபாய் என்று அந்த ராபர்ட்  சொன்னது சரியான வடிகட்டின ஏமாற்று வேலை. மொத்தம் 2000 ரூபாய் கூட ஆகாது. அப்படின்னு தொச்சு சொன்னான்” என்றாள் கமலா.
அப்போது என் மாமியார்  “கமலா, நீ எதுக்குப் போய் பில்லு, பில்லு என்று எதையாவது  சொல்லிண்டு இருக்கே? தொச்சுவுக்கு நல்ல பெயர் வாங்கித் தரணும்னு அப்படி சொல்லி இருக்கார். இவருக்கு அவன் எவ்வளவோ செஞ்சிருக்கான். அதனால அவனுக்காக சொல்லி இருக்கார்.... ஒண்ணும் தப்பு இல்லை” என்றாள் என் மாமியார்.

 என் காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை.
 அதை விட வியப்புக்குரிய விஷயம் “அம்மா, நீ சரியா தான் சொன்னே. வாங்கோ, காப்பி ஒரு கப் கொடுக்கிறேன். பாவம் குறுக்கெழுத்துப்  போட்டி கூட போடாம ஓடினீங்க” என்றாள் கமலா.  
என் கால்கள் தரையில் இல்லை. மாமியாரும், அருமை பெண்ணும் சொன்ன வார்த்தைகள் அப்படியே என்னை அலேக்காக தூக்கிக்கொண்டு போயின. இப்படி அவர்களை மாற்றியதற்கு 2000 என்ன, இன்னும் மேலே கூட செலவு பண்ணலாம்!  
“ஆண்டவா!  அவ்வப்போது இப்படி நான் 2000 ரூபாய் செலவு செய்வதற்கு உபாயம் செய்” என்று வேண்டிக்கொண்டேன்! 

(கதைக்குப் படம் போட்டு வாங்க நேரமில்லை!)
 கதை எழுதப்பட்ட தேதி: 02-02-2020 ( This is a Palindrome date- reads the same both Forward and Backward!)

9 comments:

  1. அருமை சார், மீண்டும் தொச்சுவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி :)

    ReplyDelete
  2. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    நீண்ட நாட்களுக்குப் பின் தொச்சு அங்கச்சி விஜயம். கண்ணாடி டம்ளர்கள் உடைந்தது உண்மையிலேயே எதிர்பாராத திருப்பம்தான். (நான் நீச்சல் ட்ரெயினிங் சம்பந்தமாக ஏதோ வரப்போகிறது என்று எதிர்பார்ப்பில் படித்தேன்.

    அதை விட எதிர்பாராத ஆச்சரியம் கதையின் கடைசியில் - மாமியாரின் பரிவு!

    “ஐயோ, எனக்கு ஆயிரம் வித்தை தெரிஞ்சிருந்தாலும் (!) - அந்த அடைப்புக்குறிக்குள் இருக்கும் ஆச்சரியக் குறி - அது க்ளாஸ்!!!

    நன்றி.

    அன்புடன்

    சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete
  3. //நாலு நாள் வந்து, இந்தக் குழந்தைக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கணும்… பப்ளி அசகாய சூரன். இரண்டே நாளில் கற்றுக்கொண்டு விடுவான்// - ரசித்த வரி.. எழுதும்போதே படிப்பவர்களுக்கு புன்னகை வரவழைக்கும் எழுத்து..

    ReplyDelete
  4. நீச்சல் கற்றுக் கொடுக்கப் போனதில் 2000 செலவு! ஆனால் அதிலும் ஒரு நல்லது நடந்திருக்கிறதே!

    சற்றே இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொச்சு! மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  5. தொச்சுவுக்கு வயதாவதே இல்லை!   அதே சுவாரஸ்யம்.

    ReplyDelete
  6. Anaonoymous:அருமை சார், மீண்டும் தொச்சுவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி :)
    -மிக்க சந்தோஷம். ஏன், Anonoymous ஆகப் போடுகிறீர்கள்? ஏதாவது பெயரைப் போட்டுக்கொள்ளலாமே.--கடுகு

    ReplyDelete

  7. சீதாலஷ்மி சுப்ரமணியம் அவர்களுக்கு, .
    (“ஐயோ, எனக்கு ஆயிரம் வித்தை தெரிஞ்சிருந்தாலும் (!) - அந்த அடைப்புக்குறிக்குள் இருக்கும் ஆச்சரியக் குறி - அது க்ளாஸ்!!!....)
    இந்த பின்னூட்டம் எனக்கு விருது கொடுத்தது மாதிரி இருக்கிறது. எவ்வளவு நுணுக்கமாக ரசித்திருக்கிறீர்கள்! இப்படிப்பட்ட நேயர்கள் இருப்பதால்தான் எனக்கு ஊக்கம் ஏற்படுகிறது; என் திறமையில் எனக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. இன்னும் உயரத்தைத் தொட முயல்வேன். மிக்க நன்றி. உங்கள் “க்ளாஸ்” என்ற ஒற்றை வார்த்தை, கல்கி அவர்கள் 1954’ல் சொன்ன “பேஷ்” மாதிரியானது = கடுகு





    ReplyDelete
  8. ஹாஹாஹா! நீண்ட நாட்களுக்குப் பிறகு தொச்சு விஜயம், சுவாரஸ்யம். 

    ReplyDelete
  9. நீண்ட நாட்களுக்குப் பிறகு, தொச்சு, அங்கச்சி அடாவடிகளைப் படித்து, சிரித்து மகிழ்ந்தேன். நன்றி.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!