March 10, 2010

ஸ்ரீதரும் நானும் (UPDATED VERSION)

"ஏண்டாப்பா ஸ்ரீதர்!  நான் போட்ட மெந்தியக்குழம்பு சாதத்தைச் சாப்பிட்டவன் தானே நீ. இப்போ நீ பெரிய சினிமா டைரக்டர் ஆயிட்டே! ரொம்ப சந்தோஷம்”, என்று என் அம்மா எத்தனை தடவை சொல்லியிருப்பாள் என்பது எனக்குத் தெரியாது. அப்படி சொல்வதில் அம்மாவுக்கு சந்தோஷம். யாரைப் பார்த்து சொல்வாள்? கல்யாணப் பரிசு, காதலிக்க நேரமில்லை, நெஞ்சில் ஓர் ஆலயம் போன்ற திரைப்படங்களை உருவாக்கிய ஸ்ரீதரைப் பார்த்துதான். அப்படி என்ன உங்கள் வீட்டு மெந்தியக் குழம்பிற்கு  விசேஷம் என்று கேட்கிறீர்களா?  பொறுங்கள் ஆரம்பத்திலிருந்தே ஆரம்பிக்கிறேன்.
    ’டைரக்டர் ஸ்ரீதரும் நானும்’ என்ற தலைப்பிட்டு எழுதப்படும் இந்த கட்டுரையைப் பார்த்து யாரும் என்னை கேலி செய்ய முடியாது . காரணம் ஸ்ரீதரும் நானும் சுமார் 65 வருட நண்பர்கள். . ஆம், அறுபத்தைந்து வருஷங்கள்! அதுவும் சாதாரண நட்பு அல்ல. ஆழமான நட்பு
    செங்கல்பட்டுதான் எங்கள் ஊர்.  நாங்கள் இருவரும் கிளாஸ்மேட். பள்ளிக்கூட நாட்களிலேயே அவருக்கு நாடக, சினிமா ஆர்வம் உண்டு. பள்ளிக்கூட விழாக்களில் ஸ்ரீதர் எழுதிய நாடகங்களை நாங்கள் நிறைய மேடை ஏற்றியுள்ளோம். ’ஏழாவது எட்டாவது பாரம் படிக்கும் பையன் இவன் என்ன பெரிய நாடகம் எழுதியிருக்கப் போகிறான்?’என்று எங்கள் பள்ளி ஆசிரியர்கள் அலட்சியப்படுத்தவில்லை. மாறாக ஊக்கமளித்தார்கள். நாடகஙகள் போட வசதியாக இருக்கும் என்று நாற்பதுகளில் எங்கள் பள்ளியில் திறந்த வெளி அரங்கம் கட்டியது நிர்வாகம் ஸ்ரீதர் குரூப்பில் சித்ராலயா கோபு, நான் எப்போதும் இருப்போம். நாங்கள் நெருங்கிய நண்பர்கள்.
  


செங்கல்பட்டில் ஸ்ரீதர் இருந்த வீடு நத்தம் என்ற பகுதியில் இருந்தது. எங்கள் வீடு மேலமையூர் என்ற பகுதியில் இருந்தது.  சுமார் ஒன்றரை மைல் இடைவெளி. லீவு நாட்களில் ஸ்ரீதர் என் வீட்டிற்கு வந்தால் இரண்டு மூன்று மணி நேரம் அரட்டைதான். அதன் பின் ஸ்ரீதரை வழி அனுப்பும் சாக்கில் அவருடன் போய் போய் போய் அவர் வீட்டிற்கே போனதும் உண்டு. எங்கள் வீடுகளுக்கு இடைப்பட்ட தூரத்தில்தான் கோபுவின் வீடு. அங்கே சிறிது நேரம் மண்டகப்படி போடுவோம்.

ஸ்ரீதருக்கு ஸ்போர்ட்ஸில் ஈடுபாடு உண்டு. (நான் அந்த பக்கமே போகமாட்டேன்.படிப்பிலும் ஸ்ரீதர் முன்னணியில் இருந்தார்  உதாரணத்திற்கு:
         ஒரு சமயம் நாங்கள் ஒன்பதாவது வகுப்பிலிருந்தபோது ஹெட்மாஸ்டர் ஸ்ரீதரைக் கூப்பிட்டு அனுப்பினார். பத்தாவது வகுப்பில் அவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். ஸ்ரீதர் அந்த வகுப்பிற்குள் போனதும் "ஸ்ரீதர் வா, இந்த கணக்கை போர்டில் போட்டுக் காண்பி. இந்தப் பசங்களுக்கு ஒண்ணும் தெரியவில்லை" என்றார். ஸ்ரீதர் மட மட வென்று போட்டுக்கண்பித்தார்.   அதே மாதிரி பள்ளிக்கூடத்தில் மாஸ் டிரில் பயிற்சியின் போது மைதானத்தில் ஒரு மேஜையின் மேல் இன்னொரு மேஜையைப் போட்டு அதன் மேல் ஸ்ரீதரை நிற்க வைப்பார் டிரில் மாஸ்டர், ஸ்ரீதர் செய்வதைப் பார்த்து எல்லா மாணவர்களும் செய்வோம்.
ஸ்ரீதருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தீவிரம் இருந்தது ஆகவே பள்ளிப் படிப்பு முடிந்ததும் கல்லூரியில் சேர முனையவில்லை. அப்போதிருந்தே சென்னைக்குச் சென்று சினிமா வாய்ப்புக்களைத் தேடத் தொடங்கினார். இதற்கிடையில் அவர் குடும்பம் செங்கல்பட்டிலிருந்து தங்கள் சொந்த ஊரான சித்தாமூருக்கே போய் விட்டது. (மதுராந்தகம் அருகில் சித்தாமூர் இருக்கிறது.)
      ஆகவே சித்தாமூரிலிருந்து செங்கல்பட்டுக்குப் பஸ்ஸில் வந்து, பிறகு ரயிலில் சென்னைக்குப் போய் பல கம்பெனிப் படிகள் ஏறி இறங்கி ஏமாற்றத்துடன் திரும்பி வருவார், கடைசி ரயிலைப் பிடித்து செங்கல்பட்டிற்கு வரும்போதி இரவு மணி பன்னிரண்டாகிவிடும் (நம்ப மாட்டீர்கள் அந்த ரயிலுக்கு திருடன் வண்டி என்று தான் பெயர்.) அந்த இரவு நேரத்தில் மதுராந்தகம் போக பஸ் வசதி இருக்காது.ஆகவே எங்கள் வீட்டிற்கு வருவார் -- பயங்கர பசியுடன். வீட்டிலிருப்பதை என் அம்மா போடுவார். அப்படி ஒரு நாள் போட்டது தான் மெந்தியக் குழம்பு சாதம். இது தான் அம்மா பெருமை அடித்துக் கொண்ட மெந்தியக் குழம்பு.
சாப்பிட்ட பிறகு ஸ்ரீதரும் நானும் வாசல் திண்ணையில் படுத்துக் கொண்டு வெகு நேரம் பேசிக் கொண்டிருப்போம். சென்னையில் யாரைப் பார்த்தார், யாரைப் பார்க்கமுடியாமல் திரும்பி வந்தார் என்பதை விவரமாகச் சொல்வார். ஏமாற்றங்கள் அவரைச் சோர்வடையச் செய்ததில்லை.    நானும் ”எதற்கு ஸ்ரீதர் உனக்கு அலைச்சல்?” என்று சொன்னதில்லை சொன்னாலும் எடுபடாது என்பதும் ஒரு காரணம்.
          சினிமாவில் நடிக்க வாய்ப்பும் வரவில்லை, சினிமாக் கம்பெனி எதையும் அணுகி வாய்ப்பும் பெற முடியவில்லை. கடைசியில் டி. கே. சண்முகத்தைச் சந்திக்க முடிந்தது . டி. கே. சண்முகத்திடம் ரத்தபாசம் கதையைச் சொன்னார், அதை நாடகமாக எழுதிக் கொடுக்கும்படி டி. கே. ஷண்முகம் சொன்னார், ஸ்ரீதரும் எழுதிக் கொடுக்க, நாலைந்து மாதங்களுக்குப் பிறகு நாடகம் மேடை ஏறிற்று. மகத்தான வெற்றியும் பெற்றது.  அதன் காரணமாக அதையே திரைப்படமாக எடுக்கும் எண்ணம் அவருக்கு வர, ரத்தபாசம் திரைப்படமாக வந்தது.  டி. கே ஷண்முகம் அவர்களே படத்தில் நடித்தார்.

   ஸ்ரீதர் திரை உலகில் புகுந்து சாதிக்கவேண்டும் என்ற தன் எண்ணத்தையும் ஆர்வத்தையும் வளர்த்துக்கொண்டே வந்தார். ரத்தபாசம் திரைப்படத்தால் ஸ்ரீதருக்கு பெரிய தொகை எதுவும் கிடைக்கவில்லை என்றாலும் சினிமா உலகில் அவர் பெயர் பரவியது.

இப்போது நினைத்துப் பார்க்கிறேன். சித்ரா டாக்கீஸில் ஸ்ரீதரின் ரத்தபாசம் திரைப்படம் ஸ்பெஷல் காட்சி கிட்டத்தட்ட கடைசி வரிசையில் ஸ்ரீதர், கோபு, நான் மூவரும் உட்கார்ந்திருந்தோம். படம் ஆரம்பித்து திரையில் டைட்டில்கள் வந்தன. கதை வசனம் ஸ்ரீதர் என்று வந்தபோது மூன்றே மூன்று பேர் உற்சாகமாக கைத்தட்டினார்கள். அந்த மூன்று பேரும் நாங்கள் தான்.  ஸ்ரீதரின் பிற்கால மாபெரும் புகழுக்கு அது ஒரு அஸ்திவாரமாக அமைந்தது.

ஸ்ரீதர் தமிழ்த் திரையுலகின் ஒரு திருப்புமுனையாக வருவார் என்று நாங்கள் கனவில் கூட நினைக்கவில்லை. ஸ்ரீதர் என்னும் மாபெரும் கலைஞன் அந்தக் கணம் விஸ்வரூபம் எடுக்கத் தயாராகிவிட்டான்.
*            *                  *
    நான் சென்னை  ஜி.பி. ஓ. வில் வேலைக்குச் சேர்ந்தேன். கோபு ஜி. பி.. ஓ. வுக்குப் பின்புறம் இருந்த ’செகண்ட் லைன் பீச்சில் இருந்த ’கவாலா கம்பெனி’யின் மேனேஜராக இருந்தார். அந்தக் கம்பெனியின் ஊழியர்களின் எண்ணிக்கை ஒன்று என்ற ரகசியம் நமக்குள்  இருக்கட்டும்!  ஆகவே ஸ்ரீதர் எங்கள் இருவரையும் பார்க்க அவ்வப்போது ஜி.பி.ஓ. வருவார். அப்படி ஒரு நாள் ஸ்ரீதர் என் ஆபீஸுக்கு வந்தார். நாங்கள் இருவரும் கோபுவைப் பார்க்க கவாலா கம்பெனிக்கு போனோம். அது முதல் மாடியில் இருந்தது. கீழே இருந்துகொண்டே ”கோபு” என்று கத்தினோம். மாடியிலிருந்து எட்டிப் பார்த்த கோபு "கத்தாதீங்கோ. வேலையாக இருக்கிறேன் வெய்ட் பண்ணுங்கள்," என்றார்.
    ”என்னடா பெரிய வேலை. கால் கடுதாசி கொடுத்துவிட்டு வந்து சேர்” என்று ஸ்ரீதர் குரல் கொடுத்தார்.
    அடுத்த சில நாட்களில் கோபுவும் கால் கடுதாசி கொடுத்துவிட்டு ஸ்ரீதருடன் இணைந்து விட்டார்.
கல்யாணப் பரிசு, வெண்ணிற ஆடை  போன்ற படங்கள் ஸ்ரீதரை ஓஹோ என்று எங்கேயோ தூக்கிச் சென்றுவிட்டன. அவருடைய வெற்றிக்குக் காரணம் அவருடைய கற்பனைத்திறன் மற்றும் எழுத்துத்திறன்

    ஒரு உதாரணம்.  செங்கல்பட்டில் கொளவா ஏரி என்ற ஒரு பெரிய ஏரி இருக்கிறது. அதுதான் செங்கல்பட்டின் மெரீனா. திரை உலகில் கால் ஊன்றிய சிறிது காலத்திற்குப் பிறகு ஸ்ரீதர் என் வீட்டிற்கு வந்தார். ”என்னுடன் வா ஒரு புதுக் கதையை பிளான் பண்ணியிருக்கிறேன். உங்கிட்டே சொல்லணும். ஏரிக்கரையில் உட்கார்ந்து பேசலாம்” என்று சொல்லி அழைத்துப் போனார். கிட்டத்தட்ட  வரிவரியாக அல்லது ஷாட் ஷாட்டாக. நெஞ்சில் ஓர் ஆலயத்தின் கதையை விவரித்தார். இதைச் சொல்லிமுடிக்க ஒரு மணி நேரத்திற்குமேல் ஆயிற்று. அவர் சொல்லச் சொல்ல காட்சிகள் என் கண் முன்னே விரிந்தன. அந்த நினைவுகள் இன்றும் ஐம்பது வருஷத்திற்குப் பிறகும் பசுமையாக உள்ளன. பின்னால் படம் திரைக்கு வந்தபோது போய்ப் பார்த்தேன். ஏதோ பார்த்தப் படத்தைப் பார்ப்பது போல் எனக்குத் தோன்றியது. ஸ்ரீதர்தான் அவ்வளவு விரிவாகக் கதையைச் சொல்லியிருந்தாரே!
    கதை வசனம் டைரக் ஷன் என்று மூன்று பணியையும் முதலில் தமிழ்த்திரை உலகில் செய்தது ஸ்ரீதர் தான்\
*     *                   *                 *                 *
அவ்வப்போது அவர் வீட்டிற்குப் போவேன். சித்ராலயா ஆபீசுக்குப் போவேன். எப்போதும் கல கல என்று இருக்கும். ஆபீசிலேயே ஒரு பெரிய அறையில் டேபிள் டென்னிஸ் மேஜை வைத்து இருந்தார்.அவர் வீட்டில் ஒரு ஜமா இருக்கும். நடிகர் முத்துராமன், ஏ,வி,எம்.ராஜன், மாலி, நாகேஷ், வண்ணிற ஆடை மூர்த்தி, கோபு, வின்சென்ட் எல்லாரும் ரகளை பண்ணிக்கொண்டு இருப்பார்கள்.
      ஒரு சமயம் ஸ்ரீதரின் சித்ராலயாவில் நானும் சேர்ந்து விடலா\மா என்று நினைத்தேன். ஸ்ரீதர், கோபுவிடம் பேசினேன். : ”இத பாரு. உனக்கு இந்த சினிமா ஃபீல்ட் சரிப்பட்டு வராது. உன்னையும் எனக்குத் தெரியும் சினிமா ஃபீல்டும் எனக்குத் தெரியும். . அதனால்தான் சொல்கிறேன்” என்று ஸ்ரீதர் சொன்னார்.  ”நீ சொன்னால் சரிதான், ஸ்ரீதர்” என்று சொல்லிவிட்டேன்  இதனால் எனக்கு ஏமாற்றமோ  வருத்தமோ  இல்லை. ஸ்ரீதரின் கடைசி மூச்சு உள்ளவரை எங்கள் நட்பு இருந்தது.
*           *                  *
 ஒரு பழைய சம்பவத்தை இப்போது சொல்லலாம் என்று நினைக்கிறேன். சினிமாவில் வய்ப்புக்காக ஸ்ரீதர் அலைந்து கொண்டிருந்த காலகட்டம். ஒரு ஞாயிறு அன்று பகல் 12 மணிவாக்கில் அவர் சித்தமூரிலிருந்து என்  வீட்டடிற்கு வந்தார்.” வா. மெட்ராசுக்குப் போகலாம். அபூர்வ சகோதரர் படம் இப்ப ரிலீஸ் ஆகி இருக்கிறது. எம். கே, ராதா நடிச்சது. பாத்துட்டு வரலாம். வா” என்றார். என்னிடம் இருந்த சில்லறைகளைத் திரட்டி கொண்டு சென்னைக்கு வந்தோம். வெலிங்டன் தியேட்டருக்குச் சென்றோம். பயங்கரக் கூட்டம். “ நீ..இங்கேயே இரு. நான் இரண்டு டிக்கட் வாங்கிண்டு வரேன”  என்று சொல்லிவிட்டு கூட்டத்திற்குள் புகுந்தார். கால் மணி நேரம் கழித்து, ஜல்லிக்கட்டு வீரனைப் போல் வியர்க்க விறுவிறுக்க இரண்டு டிக்கட்டுடன் வந்தார். ராதாவின் தீவிர ரசிகர் அவர்.  சில வருஷங்கள் கழித்து எம்.கே.ராதாவே அவரைப் பார்த்து “ ஹலோ, ஸ்ரீதர்” என்று அழைப்பார் என்று நாங்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.
சில வருடங்கள் கழித்து ஸ்ரீதர் சினிமாத்துறையில் கால் ஊன்றிய பிறகு, ஒரு நாள் ஸ்ரீதரின் படப்பிடிப்பைப் பார்க்க  விஜயா ஸ்டூடியோவிற்கு  ( மீண்ட சொர்க்கம் என்று நினைக்கிறேன்)  சென்றேன்.
விளக்குகளை மாற்றி அமைப்பதற்காக பிரேக் விட்டு விட்டு “ வா. இப்படி ஒரு ரவுண்ட் போய் விட்டு வ்ரலாம்” என்றார் ஸ்ரீதர்.  சிறிது தூரம் போயிருப்போம். தூரத்தில் வந்துகொண்டிருந்த ஒருத்தரைக் காட்டி “ அதோ வராறே.. அவர் யார் என்று தெரியுமா?” என்று கேட்டார்.” தெரியலயே” என்றேன்.
“ என்னது? தெரியலையா! அவர்தான் எம். கே. ராதா” என்றார். அவர் நெருங்கி வந்ததும் ஸ்ரீதர் அவருக்கு வணக்கம் தெரிவித்தார்,
“ ஹலோ ஸ்ரீதர்” என்று கூறிக் கொண்டே, ஸ்ரீதரின் தோள் மேல் கையைப் போட்டு, தன்னுடன் அழைத்துக் கொண்டு போனார், ஸ்ரீதர் சைகை காட்ட, நான் அவர்களைப்  பின் தொடராமல் நின்று விட்டேன். . சிறிது தூரம் சென்று விட்டு, ராதாவிற்கு வணக்கம் தெரிவித்து விட்டு ஸ்ரீதர் திரும்பி வந்தார்.
        ”ராதா என்ன கேட்டார் தெரியுமா?..’என்ன ஸ்ரீதர். நீ பெரிய டைரக்டர். உன் படத்தில் எனக்கு ஒரு ரோல் கூட இல்லையா?’ என்று கேட்டார்.  ’அண்ணே.. நீங்க என் படத்திலே நடிக்க நான் கொடுத்து வெச்சிருக்கணும். அடுத்த படத்தில் கட்டாயம் உஙகளை அழைக்கிறேன’ என்று சொன்னேன்.. வந்து உனக்கு ஞாபகம் இருக்கா, நாம் இரண்டு பேரும் அபூர்வ சகோதரர்கள் படம் பார்க்க மெட்ராஸ் வந்தது எல்லாம்.. அவரை நான் டைரக்ட் ப்ண்ணபோறேன்!” என்று மிக்க பெருமிததுடனும் மகிழ்ச்சியுடனும் கூறினார்
*             *          *           *.
நான் டில்லிக்கு மாற்றலாகிப் போய்விட்டாலும் சென்னை வரும்போதெல்லாம்  குறைந்தது  இரண்டு மூன்று தடவையாவது ஸ்ரீதரைப் பார்க்காமல் போகமாட்டேன். அவருக்குப் பாரிசம் வந்து படுத்த படுக்கையாகி விட்டார் என்று அறிந்ததும்,  டில்லியிலிருந்து வந்து பார்த்தேன். என்னால்  அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் ஸ்ரீதர்  தன் நோயை பற்றி பேசியது கொஞ்சம்தான். புதிதாக துவஙக இருந்த ஒரு டி.வி. சேனலுக்கு எப்படியெல்லாம் நிகழ்ச்சிகளைத் தரலாம் என்பது பற்றி பேசியதுதான் அதிகம். அந்த சேனல்காரர்கள் அன்று காலைதான் வந்து பேசிவிட்டு போயிருந்தார்கள்.

ஸ்ரீதரின் மனைவி சகோதரி தேவசேனாவைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். இவருடைய பொறுமையும், பதவிசும். “காதல் ஒருவனைக் கைபிடித்து அவன் காரியம் யாவினும் கைகொடுத்து”  குடும்பத்தை நிர்வகித்த திறமையும் அபாரம்.  பதிநான்கு ஆண்டுகள் படுக்கையிலேயே இருந்த ஸ்ரீதரை அக்கறையுடன் கவனித்துக் கொண்டார். சென்ற ஆண்டு ஸ்ரீதர் காலமானார். அன்றுதான் சகோதரி தேவசேனா கண்ணீர்விட்டதைப் பார்த்தேன்..
*              *                   *                 *
எம்.ஜி. ஆர்., சிவாஜி, ஜெமினி,ஆகிய மூன்று பெரிய ஹீரோகளையும் டைரக்ட் பண்ணியவர். ராஜ்குமார், ராஜேந்திர குமார். வைஜயந்திமாலா, ஜெயலலிதா.அமிதாப், ராஜ்கபூர் மற்றும்  நம் ரஜினி, கமல் ஆகியவர்களை டைரக்ட் பண்ணியவர்.
 . அவருக்குச் செங்கல்பட்டில் 1959-ல் பாராட்டு விழா நடத்தினோம். கலைஞர் திலகம் என்ற பட்டத்தையும் கொடுத்தோம்.  மாண்புமிகு பக்தவத்சலம், ஜெமினி கணேசன் வந்திருந்தனர்,          
            ஸ்ரீதரைப் பற்றி எழுத எவ்வளவோ உள்ளன. சில ஆண்டுகளுக்குமுன், காங்கிரஸ் தேர்தல் பிரசாரப்படம் எடுத்துத் தரும்படி டில்லியிலிருந்து ஒரு வி.ஐ.பி,.  ஸ்ரீதரைக் கேட்டடார்,. இவர் என்னைச் சேர்த்துக் கொண்டு கதையை உருவாக்கி, விரிவான டிரீட்மெண்ட் எழுதி அனுப்பினார்.. அதை ராஜீவ் காந்தியே பார்த்து ஓ.கே சொன்னது போன்று எத்தனையோ  விஷயங்கள் உள்ளன. அவற்றைப் பிறகு பார்க்கலாம். இப்போது என் மனம் மிகவும் கனக்கிறது.

20 comments:

  1. Fantastic Sir... It was a pleasant surprise to read about an admirable personality like Sridhar Sir... we could feel the depth of your mutual friendship, respect and possessiveness that you had for each other in each and every word.

    Undoubtedly Sridhar sir is a born genius… When people watched movies only for MGR and Shivaji, Shridhar created a space and an audience for himself in the highly challenging Cinema industry….

    - Sri

    PS: Waiting for the article "Cho and Nanum" ;^)

    ReplyDelete
  2. வலைஞன்March 10, 2010 at 1:37 PM


    Simply Brilliant

    எவ்வளவு லக்கி ஆளுய்யா நீர்,பூசணிக்காய் !!

    (உங்களைப்போய் கடுகுன்னு சொன்னா அதைவிட முட்டாள்தனம் எதுவும் இருக்காது)

    வாழ்க நின் குலம்!

    ReplyDelete
  3. Dear Kadugu Sir

    You are truly blessed,looking at the range of friends you have had.

    Yes, "Kaadalikka neramillai" is my all time favourite and i must have seen that movie zillion times.

    Namaskaram

    Raju-Dubai

    ReplyDelete
  4. சார், வணக்கம், உங்களுக்கு பின்னூட்ட முயன்று தோற்றுப் போனதில் மூன்றாவது முயற்சி இது. உங்களின் உறுத்தாத நகைச்சுவை கலந்த கட்டுரைகள் வாசிக்க மிக சுவாரசியம். உங்கள் மனைவியை இவ்வளவு கிண்டல் செய்து எழுதியும் எப்படி உயிரோடு தப்பியிருக்கிறீர்கள் என்பதை நினைக்க ஆச்சரியமாயிருக்கிறது. :)

    இந்தக் கட்டுரை முதற்கொண்டு நீங்கள் எழுதும் அனைத்தையுமே ஆவலாக வாசிக்கிறேன். தொடருங்கள்.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. திரு சுரேஷ் கண்ணன்:
    உங்கள் பின்னூட்டம்.
    ”இந்தக் கட்டுரை முதற்கொண்டு நீங்கள் எழுதும் அனைத்தையுமே ஆவலாக வாசிக்கிறேன்”என்று எழுதி இருக்கிறீர்கள். பழைய பதிவுகளையும் படியுங்கள். You will lose nothing but your peace of mind!!

    ReplyDelete
  7. சந்தேகத்துக்கிடமில்லாமல் அவர் தமிழ் சினிமாவின் திருப்புமுனைதான்.பகிர்தலுக்கு நன்றி.

    (புதிய போஸ்டிங் போட்டிருககிறேன்.. http://kirukkugiren.blogspot.com/2010/03/blog-post.html. நேரமிருக்கும்போது ஒரு விசிட் அடிக்கவும்)

    ReplyDelete
  8. முகமூடிMarch 12, 2010 at 2:14 PM

    நானும் எங்கே இவர் ஸ்ரீதர் பற்றி எழுதக்காணமேன்னு இருந்த வேளையில் இந்த கட்டுரை ஒரு இன்ப அதிர்ச்சி. இதன் part 2, 3.... எல்லாம் எதிர்பார்க்கிறோம். கோபு பற்றியும் மறக்காமல் எழுதவும்.

    ReplyDelete
  9. அன்பின் கடுகு சார், உங்களை சில நாட்களாக தொடர்பு கொள்ள எண்ணியிருந்தேன். உங்கள் ப்ளாக் முகவரி எனது இன்று எனது ப்ளாக் நண்பர் மூலமாக கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி. உண்மையைச் சொல்லவேண்டுமானால் போன வாரம் தான் தங்களின் கமலா கல்யாண வைபோகமே புத்தகத்தை வாசித்தேன். அதுவே தங்களின் படைப்புகளின் முதல் அறிமுகம் (ரொம்ப லேட்டாகத் தான் தங்களின் எழுத்தை படிக்க ஆரம்பித்திருக்கிறேன்). ஆனால் அதுமுதலே உங்களின் எழுத்தின் விசிறியாகிவிட்டேன். என்ன் சுவாரசியம் என்றால் நானும் நகைச்சுவையை பிரதானமாய் வைத்துத் தான் என் ப்ளாகில் எழுதிவருகிறேன். (தங்களை மாதிரியே சில சமயம் எனது மனைவியை வைத்து தான் காமெடியே ...தங்களுக்கு கமலா மாதிரி எனக்கு தங்கமணி (புனைப் பெயர் தான்). தங்களை மாதிரியே எனக்கும் நித்திய கண்டம் பூர்ணாயுசு தான் :)).

    முடிந்த போது என் பக்கமும் வந்து "தூ இதெல்லாம் ஒரு எழுத்தா...நகைச்சுவையா.." என்றாவது ஆசிவதித்தால் தன்யனாவேன்.

    ReplyDelete
  10. இந்த் பின்னூட்டத்தை வெளியிட வேண்டிய கட்டாயம் இல்லை
    ***************
    முந்தின பின்னூட்டம் போட்ட பிறகு தான் கவனித்தேன் நீங்க என் ப்ளாக் பக்கம் வந்தால் லேட்டஸ்ட் போஸ்ட் அத்தனை சொஸ்தமாக இல்லை. சரி எதற்கு உங்களுக்கு சிரமம் என்று எனது சில ஆக்கங்களின் லிங்க் இதோ இங்கேயே தந்துவிடுகிறேன். நேரில் யாரவது கழுத்தறுத்துக் கொண்டிருந்தால் ...வேலை இருக்கு கிளம்புங்கன்னு சொல்லி ஆக்ட் குடுப்பதற்காகவாது உபயோகப் படும் என்று நம்புகிறேன் :))

    நாய்ப்பொழப்பு - http://dubukku.blogspot.com/2006/03/blog-post_09.html

    கல்யாணம் - http://dubukku.blogspot.com/2007/05/blog-post_16.html

    வித்துவான் - http://dubukku.blogspot.com/2010/02/blog-post_28.html

    பிரசவம் - http://dubukku.blogspot.com/2007/03/blog-post.html

    ReplyDelete
  11. அன்புள்ள டுபுக்கு,
    உங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன்.உஙள் பதிவிலும் பின்னூட்டத்தைப் போட்டுள்ளேன்.
    கமலா என் உண்மையான மனைவியின் உண்மையான பெயர். கம-LAW என்று கூட எழுதலாம்.

    ReplyDelete
  12. ராஜ சுப்ரமணியன்March 14, 2010 at 7:07 PM

    இன்று (14 மார்ச்) மாலை பொதிகை டீவியில் ஸ்ரீதரின் “கல்யாணப் பரிசு” படம் பார்த்தேன். நீங்கள் ஸ்ரீதரைப் பற்றி எழுதியது நினைவுக்கு வந்து, மனம் கனத்து விட்டது.

    ReplyDelete
  13. வந்து ஆசிவதித்தமைக்கும் திருத்தங்கள் சொன்ந்தற்க்கும் கோடானு கோடி நன்றி. உங்களுடைய பதிவுகள் அனைத்தையும் படிப்பது தான் எனக்கு இந்த வார முக்கியமான வேலை. பதில் சீராக நீங்க நான் அனுப்பிய என்னுடைய மத்த லிங்குகளை படிப்பீர்கள் என்று பட்சி சொல்லுகிறது...(உங்க ஊர்ல பதில் மரியாதை விசேஷமாமே அப்படியா :)) ஜோக்ஸ் அப்பார்ட்...நான் உங்களுடைய ரசிகராய் விளையாட்டாய் பேசுவதை தவறாக எண்ண மாட்டீர்கள் என்று நம்புகிறேன். மிக்க நன்றி. //உங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன் என்று சொல்லி தப்பு பண்ணிட்டோமே என்று ஃபீல் பண்ணாதீர்கள்,....சாரி டூ லேட்..அதெல்லாம் வாபஸ் தர முடியாது// கல்யாணம் பதிவு நீங்கள் சொன்ன பாணியிலேயே எழுதியிருக்கிறேன். குறைந்த பட்ச தண்டணையாக அதை மட்டுமாவது முடிந்த போது வாசிக்கவும். (பார்த்துக் கொண்டே இருங்கள்...தொச்சு எவ்வளவோ தேவலை என்று ஆகிவிடப் போகிறது :))) )

    ReplyDelete
  14. கடுகு சிறுத்தாலும் காரம் பெரிசு அப்படீங்கறது இது தானா

    நல்ல நட்புகள் கிடைக்க நீங்கள் கொடுத்துத் தான் வைத்திருந்திருக்க வேண்டும்

    virutcham

    ReplyDelete
  15. please write about gopu also. he is also a geneious.

    gopala krishnan

    ReplyDelete
  16. மதிப்பிற்குரிய திரு.அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    ரொம்ப அருமை. ஸ்ரீதர் அவர்கள் கல்கியில் எழுதிய ‘திரும்பிப் பார்க்கிறேன்’ பைண்ட் செய்து வைத்து இருக்கிறேன். அவர் நடத்திய சித்ராலயா பத்திரிக்கை தொடர்ந்து படித்து இருக்கிறேன். அதில் கோபு பழைய அனுபவங்களைத் தொடராக எழுதியிருந்தார். அதே போல குமுதத்தில் சினிமா சான்ஸ் கேட்டுத் தொந்தரவு செய்த ஒரு தாதா(மாதிரி) காரக்டரை வைத்து, பல வாரங்கள் எழுதியிருந்தார். இவையெல்லாம் புத்தகங்களாக வெளியிட்டு இருக்கிறாரா? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன். திரு கோபு அவர்களின் மனைவி கமலா சடகோபன் எழுதிய “கதவு” நாவல்(கலைமகள் நாவல் போட்டியில் பரிசு பெற்றது) படித்து ரசித்து இருக்கிறேன். அவரது மற்ற நாவல்களும் படிக்கக் கிடைக்கின்றன. ஏன் திரு கோபு அவர்கள் மட்டும் புத்தகங்கள் வெளியிடவில்லை? கொஞ்ச நாளைக்கு முன்னால் கலைஞர் டி.வி.யில் அவரது பேட்டி(சிறிது நேரம்) பார்த்தேன். அவரது நகைச்சுவையும் உங்களுடையது போலவே - FLAWLESS!!!



    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete
  17. திருமதி சுப்ரமணியம் : உங்கள் பின்னூட்டத்தைப் பார்தேன். எப்போது ?தெரியுமா? நேற்று இரவு கோபுவைப் ப்ற்றி கட்டுரை எழுதி முடித்த பிறகு! .. டைப் அடிக்கவேண்டும்ம்ம்ம்ம்ம். (யாராவது மூக்கால் அழுவது கேட்கிறதா?) பிறகு போஸ்ட் பண்ணுவேன்.

    ReplyDelete
  18. மதிப்பிற்குரிய அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    திரு கோபு குமுததில் எழுதிய தொடரின் பெயர் ஞாபகம் வந்து விட்டது. (அப்போதிலிருந்து யோசிச்சுட்டே இருக்கேன்) “துரத்துகிறார் துரைகண்ணு” என்ற தொடர்தான் அது.

    காலையிலிருந்து இந்த வலைப் பூதான் படிச்சுட்டே இருக்கேன். பழைய தினமணி கதிர் பக்கங்கள் ஞாபகத்துக்கு வருது. உங்களுடைய பஞ்சு கதைகளுக்கு திரு நடனம்தானே படம் வரைந்து இருந்தார்? முதல்வன் படத்தில் கதாநாயகனுக்கு அப்பாவாக நடித்து இருந்தார் இல்லையா? அந்த ஸ்கெட்ச் எல்லாம் இருக்கா சார்? திரு பஞ்சு கொஞ்சம் தொப்பையாக கொஞ்சம் நடிகர் நீலு சாயலில் இருப்பார், திருமதி பஞ்சு மடிசார் கட்டியிருப்பாங்க, சரிதானே. அப்புறம் அந்தக் கதையில் ஒரு பெண்மணி பஞ்சுவை அங்கிள் என்று கூப்பிடுவாரே, எல்லாம் மலரும் நினைவுகளாக வந்துக்கிட்டே இருக்கு. திருமதி & திரு பஞ்சு ரெண்டு பேரும் அப்புசாமி-சீதாப் பாட்டிக்கு வாரிசாக வந்திருக்க வேண்டியவங்க அப்படிங்கறது என் எண்ணம்.

    டைப் அடிக்கணுமா, நீங்க சொன்னால் போதும், செய்து தர இங்கே நிறைய பேர் இருப்பாங்க, நீங்க தொடர்ந்து பதிவு செய்யுங்க, ப்ளீஸ்

    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete
  19. திருமதி சுப்ரமணியம் அவர்களுக்கு,
    விரவில் கோபுவும் நானு வரும். ’துரத்துகிறார் துரைக்கண்ணு’ எனக்கு ஞபகத்தில் இருக்கிறது. அதில் நானும் வருகிறேன்!
    பஞ்சு கதையில் வரும் அழகி: பிரியம்வதா. நடனம் முதல் முதல் பத்திரிகையில் படம் போட்டது என் கதைக்குத்தான். நல்ல நண்பர்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!