April 01, 2010

அன்புள்ள டில்லி- 17

அன்புள்ள டில்லி கணேஷ்
    டில்லியில் பல சங்கங்கள் உள்ளன அவைகளில் நான்கு அமெச்சூர் நாடகக் குழுக்களும் உள்ளன. (இருந்தன என்று சொல்வதும் சரியாக இருக்குமோ?) இந்த நான்கு குழுவினருக்கும் நான் நாடகம் எழுதிக் கொடுத்தேன். அதன் காரணமாகவும் வேறு பல காரணங்களாலும்  இந்த நாடக மன்றங்கள் இப்போது செயலிழந்து உள்ளன. வருஷத்திற்கு ஓரிரு நாடகம் கூடப் போடுவதில்லை. இப்படிப்பட்ட குரூப்களில் இருந்த கணேசன் என்ற இளைஞர் நல்ல திறமைசாலி. நகைச்சுவை உணர்வும், விரைவில் எல்லாரையும் கவர்ந்துவிடும் சாமர்த்தியமும் இருந்தது. பேச்சில் நகைச்சுவை சரளமாகப் பொழியும். அவர் என் நண்பர்.
        ஒரு சமயம் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள ஆர். கே. புரம் கழகத்தின் ஆண்டு விழாவிற்குப் போயிருந்தேன். தலைவரோ வேறு யாரோ வரத் தாமதமாகவே, அரை மணி நேரம் ஏதாவது புரோகிராம் நடத்தித் தரும்படி என்னைக் கேட்டார்கள். நான் பெரிய கில்லாடி என்பதால் அல்ல. ஆளில்லா டில்லிப் பட்டணத்தில் என்னைப் போல் பல இலுப்பைப் பூக்கள் உண்டு.
    விண்வெளிப் பயணக் கதாகாலட்சேபத்தை நடத்தலாம் என்று தீர்மானித்தேன். பின் பாட்டு பாடவும், "ஆமாம் சாமி' என்று சொல்லவும் சில துணை நடிகர்கள் தேவை. ரிகர்சல் எதுவுமில்லாமல் எப்படி நடத்துவது? சங்கக் காரியதரிசியோ பரபரத்தார். கணேசனிடம் சரியாக மூன்று நிமிஷத்தில் கதையைச் சொன்னேன். அவர்தான் முக்கிய பின்பாட்டுக்காரர்.. சுமாராக பாடக்கூடியவர், "சமாளிக்கலாம்' என்று சொன்னார். மேடை ஏறிவிட்டோம்.
அடுத்த அரைமணி நேரம் ஒரே தமாஷாகக் கதை நடந்தது. எங்களுக்கே ஆச்சரியம், ஒரு ரிகர்சல் கூட இல்லாமல் நடத்தும் கதா காலட்சேபத்திற்கு  இவ்வளவு வரவேற்பா என்று!  கதையை எழுதியவன் நான் என்பதால் எனக்கு ரிகர்சல் தேவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் கணேசனுக்கு?   உண்மையான திறமைசாலியாகவும் கற்பனைத் திறனும் உள்ளவரகவும் இருந்ததால்  அவர் வெளுத்துக் கட்டி விட்டார்.
இந்த கணேசன் தான் டில்லி கணேஷ்  என்று பின்னால் பிரபலமடைந்து தமிழ்த் திரை உலகில்  கொடி கட்டிப் பறந்து கொண்டிருப்பவர். கொஞ்சம் டில்லி கணேஷைப் பற்றி இங்கு கூற விரும்புகிறேன்.
டிண்டா மாமி
டில்லியில் இருந்த போது கணேசன் பேச்சலர். எதோ ஒரு மெஸ்ஸில் சாப்பாடு. அது போரடிக்கும் போதெல்லாம் என் வீட்டிற்கு வருவார். கூட ஒரு நண்பரையும் அழைத்து வருவார். வீட்டிற்குள்ளே வந்ததும் முதல் காரியமாகத் தன் நண்பருடன் ஒரு சின்ன நாடகம் நடத்துவார்.
"எண்டா அவஸ்தைப்படறே? இப்போதுதானே உள்ளே நுழையறோம். அதுக்குள்ளே சாப்பிடறீங்களான்னா மாமி கேட்பாங்க? ஐந்து நிமிஷம்  பொறுத்தால் தட்டு போடுவாங்க. சும்மா இருடா...... சார், இவன் சரியான காய்ஞ்ச கிராக்கி'' என்பார். அவர்களுக்குச் சாப்பாடு பண்ணி போடுவோம். சில சமயம், நாங்கள் சாப்பிட்டு எல்லாவற்றையும் காலி பண்ணிய பிறகு வருவார். "அதுக்கென்ன மாமி அவசரம்? அரை மணியிலே சட்புட்டுன்னு ஒரு வெங்காய சாம்பார், உருளைக் கிழங்கு கறி பண்ணி அப்பளம் பொரிச்சுட மாட்டீங்களா? உங்க சாமர்த்தியம் யாருக்கு வரும்?'' என்று சொல்வார். கமலாவும் இந்த ஐஸிற்கு மயங்கி சமையல் பண்ணிவிடுவாள்.
கணேசன் ஒரு சமயம். சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சொன்னார்: “ மாமி,  நீங்க எந்த காய்கறி பண்ணாலும்  எனக்கு ஓ.கே. -- ஒரு கறியைத் தவிர.... ஆமாம்..இதென்ன கறி மாமி?  ரொம்ப டேஸ்ட்டாக,  அட்டகாசமாக இருக்கிறதே'' என்றார்
         " சரி.  அதிருக்கட்டும், கணேசன்..ஒரு கறி பிடிக்காதுன்னு சொன்னீங்களே, அது என்னன்னு சொல்லுங்கோ? என்று என் மனைவி கேட்டாள்.
      ” அதுவா? அது டிண்டா கறி. அது ஒரு வெஜிடப்பிளா? தண்டம்.. வாயிலே வைக்க வழங்காது. அதுவும் சண்டே என்றால்  மெஸ்ஸிலே  நிச்சயம் டிண்டா கறிதான். மாடு கூட சாப்பிடாது...மெஸ்ஸிலே அதையே போட்டுச் சாக அடிப்பான்.”
“ அப்படியா?”
“ ஆமாம், மாமி..... நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலையே? இது என்ன கறி?”
” சொல்லட்டா.. இது வந்து... இது... டிண்டா'' என்றாள் கமலா.
"என்னது டிண்டாவா? எனக்குப் பிடிக்காத கறி உலகத்தில் டிண்டாதான். நீங்க பண்ண விதத்தில் ரொம்பப் பிரமாதமாக இருக்கிறது. டிண்டாவைக் கூட இவ்வளவு ருசியாகப் பண்ண முடியுமா? மாமி, இனீமேல் நான் வரும்போதெல்லாம் டிண்டாவே பண்ணுங்கோ'' என்று சொல்லி ஐஸ் மலையையே கமலாவின் தலை மீது வைத்தார்.
இது போதாதென்று, "இனிமேல் உங்களை "டிண்டா மாமி' என்று தான் கூப்பிடப் போகிறேன்'' என்று கொசுறு ஐஸும் வைத்தார்.
பாவம் கமலா! அந்த ஐஸில் கரைந்து விட்டாள்.
அப்புறம் கமலா என்னிடம்  ”இன்னிக்கு சண்டே இல்லையா?.கணேசன் வந்தாலும் வருவார். டிண்டா வாங்கிண்டு வாங்கோ” என்று ஒவ்வொரு சண்டேயும் டிண்டா செய்ய ஆரம்பித்தாள்.  எனக்குதான் டிண்டா என்றாலே அலர்ஜி ஆகிவிட்டது!  கமலாவோ கணேசன் வரும்போதெல்லாம் தடபுடலாக உபசாரம் செய்ய ஆரம்பித்தாள்.
ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி
ராமகிருஷ்ணாபுரம் சௌத் இந்தியன் சொஸைட்டி அந்தக் காலகட்டத்தில் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது. நிறைய நிகழ்ச்சிகளை நடத்தி வந்தது. நல்ல கூட்டமும் வரும். அதில் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்தித் தரும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. குட்டி குட்டியாக ஓரங்க நாடகங்கள், நகைச்சுவைப் பாடல்கள், உரைகள் என்று கலந்து கட்டி நிகழ்ச்சியை பஞ்ச PANT-டவர்கள் (பஞ்ச பாண்டவர்களின் திரிபு) அளிக்கும்  LAUGH LAUGH LAUGH  என்ற தலைப்பில் 2 மணி நேர நிகழ்ச்சியைத் தயார் பண்ணி விட்டோம். நாலே நடிகர்கள். டில்லி கணேஷ், நான் (ஆமாம், நானேதான்) மற்றும் கிருஷ்ணமூர்த்தி, வைத்தி.
      நிகழ்ச்சியை வித்தியாசமாகத் துவக்க டில்லி ஒரு ஐடியா கொடுத்தார். அதன்படியே நடத்தத் தீர்மானித்தோம். இதுதான் ஐடியா. டில்லி கணேஷ் நைஜீரியா தேசத்திலிருந்து வந்த ஒரு ஆராய்ச்சியாளர். இந்திய கலாச்சாரத்தைப் பற்றி  அறிய வந்திருக்கிறவர். அவர் விசேஷ விருந்தினராக வந்த மாதிரியும் அவர் ஒரு சின்ன உரை நிகழ்த்துவது மாதிரியும் ஏற்பாடு.
ஹால் நிறைந்து விட்டது. மணி 6.30க்கு நிகழ்ச்சி ஆரம்பமாகப் போகிறது என்கிற ஆர்வத்துடன் எல்லாரும்   இருந்தபோது, சங்கக் காரியதரிசி மேடைக்கு வந்து நைஜீரிய புரொபசரைப் (டில்லி கணேஷ்) பற்றிக் கூறி விட்டு அவர் சில நிமிஷங்கள் பேசுவார் என்றும் அவரது நைஜீரிய மொழி உரையை, அம்மொழி தெரிந்த ஒருவர் (வைத்தி) மொழிபெயர்ப்பார் என்றும் அறிவித்தார்.
    கூட்டத்தில் நடுவே நானும் கிருஷ்ணமூர்த்தியும் உட்கார்ந்து இருந்தோம்.
டில்லி கணேஷ் ஒரு பெரிய ஜமக்காளத்தை கோணாமாணாவென்று போட்டுக்கொண்டு, தன் முகத்தில் தானே (?) கரியைப் பூசிக் கொண்டு மேடைக்குப் போய்ப் பேசினார். ஒரு வார்த்தை கூட புரியாதபடி ஸ்பஷ்டமாக நைஜீரிய மொழொயில் (!) பேசினார். வைத்தி அதை மொழி பெயர்த்தார். யாரும் சிரிக்கவில்லை. தலைவிதியே என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
 “கரி தடியன்”
எங்கள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு மாமி இன்னொரு மாமியிடம் ’”இந்த சங்கத்திலே என்னிக்கு டயத்தில புரோகிராம் ஆரம்பிச்சிருக்கா... எவனோ கரி தடியனைக்  கூப்பிட்டு அவன் ஏதோ கஷக்கு முஷக்குன்னு பேசறான். அதை தமிழ்லே வேற சொல்றாங்க... சீக்கிரம் முடிச்சு தொலைத்தால் தேவலை” என்று பொறுமை இழந்து சொன்னார்.
இதைத் தான்  நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். உடனே நாங்கள் இருவரும் எழுந்து ”ஏய் கணேசா... என்ன நினைச்சுகிட்டு இருக்கே? நாங்க வர்றதுக்கு ஐந்து நிமிஷம் லேட்டாயிட்டால், நீயும் வைத்தியும் ஆரம்பிச்சுட்டீங்களா உங்கள் தகிடுதத்தத்தை” என்று ஓவென்று கத்தினோம். நேரே மேடைக்குப் போனோம். விஷயத்தை விளக்கினோம்.
சபை அப்போது சிரித்த சிரிப்பு மறக்க முடியாது.  உண்மையிலேயே நைஜீரிய புரொபசர் என்று நம்பியிருந்ததால் தாங்கள் ஏமாந்து போனதையும் பொருட்படுத்தாமல் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
அதன்பிறகு அடுத்த இரண்டு மணிக்கு மேல் அவர்கள் சிரித்தது கின்னஸ் புத்தகத்தில் வரக்கூடிய அளவு சிரிப்பு. நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கியப் பங்கு டில்லி கணேஷூக்குச் சேர வேண்டும்.
அந்த நிகழ்ச்சியில் டில்லி கணேஷ் தனி நபராக ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். ஒரு நடுத்தரக் குடும்பத்தில் கலியாணம் நடக்கிறது என்பதுதான் ஒன் லைன்!. அந்தக் குடும்பத் தலைவராக மானோ ஆக்டிங் செய்வார். பந்தல் ஏற்பாடு, சமையல்காரருடன் மெனு போடுதல் என்று வரிசையாக வரும்.  கலியாணம் முடிந்து பெண்ணும் மாப்பிள்ளையும் அவரை நமஸ்கரிக்கும் போது நாத்தழுதழுக்க ஆசீர்வதிப்பார்... அடாடா.... ஒவ்வொருத்தரும் தாங்களே அந்தப்  பெண்ணின் தந்தை போன்று அப்போது உணர்வார்கள். தங்கள் கண்களில் நீர் தளும்பினாலும்,  டில்லி கணேஷின் இயற்கையான நடிப்பு அவர்களை அசத்திவிடும்!
    அடுத்த தடவை டில்லி கணேஷ் உங்கள் ஊருக்கு ஏதாவது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தால் இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்டச் சொல்லுங்கள். அற்புதமான நிகழ்ச்சி என்று,  கண்ணீரையும் சிரிப்பையும் அடக்கமுடியாமல் சொல்வீர்கள். இதற்கு நான் கேரன்டி! ( “ சார் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்பதே தெரியவில்லை” என்றெல்லாம் யாரும் சொல்ல வேண்டியதில்லை. மணியார்டர், செக், ட்ராஃப்ட், பிளாஸ்மா டி.வி, ஐ-பாட் என்று எத்தனையோ இருக்க கவலை எதற்கு!!!:) )
        கணேசனின் நடிப்புத் திறமை எப்போதோ எனக்குத் தெரிந்து விட்டது. அவருடைய நடிப்புத் திறமைதான் டில்லியில் என் வீட்டில் அவருக்குச் வெங்காய சாம்பார், உருளைக் கிழங்கு  கறி என்று  சாப்பாடு போட்டது. அதே நடிப்புத் திறமை இப்போது சென்னையில் சாப்பாடு போடுகிறது.
டில்லி கணேஷ் என் பெருமதிப்பிற்குரிய நண்பர்!

பி.கு: 1-இந்த பகுதிக்கு “அன்புள்ள டில்லி கணேஷ். என்று தலைப்பு வைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும்!
பி.கு: 2- இங்குள்ள சில படங்கள் கணேஷ் நடித்த ஹிந்தி பட ஸ்டில்கள்.
பி,கு-3: இந்த போஸ்டிங்கைப் படித்து விட்டு டில்லி கணேஷின் மகள் எழுதி இருக்கும் பின்னூட்டத்தையும் தயவு செய்து பார்க்கவும்

         (இந்தத் தொடர் அடுத்த பகுதியுடன் நிறைவு பெறுகிறது.  யாரும்  ‘அப்பாடி” என்று சொல்ல வேண்டாம்!)

23 comments:

  1. Hello Sir,

    Yes.. He is very talented. Recently I saw his program in Vijay TV. He teased Swarnamalya in decent manner and got her views in nice way...

    Regards
    Rangarajan

    ReplyDelete
  2. ராஜ சுப்ரமணியன்April 1, 2010 at 9:51 AM

    டில்லி கணேஷ் உண்மையிலேயே மிகச் சிறந்த, பண்பட்ட நடிகர்; எனக்குப் பிடித்தமான நடிகர்களில் முதல் ஸ்தானத்தில் இருப்பவர். அவரைப்பற்றி எழுதியதற்கு நன்றி.

    ஆமாம், அது என்ன “டிண்டா”? சென்னையில் கிடைக்குமா? தமிழில் அதன் பெயர் என்ன?

    ReplyDelete
  3. அடடா இப்படி ஒரு காமெடி நடிகரையா தமிழ் சினிமா வீணடித்து விட்டது .....

    ReplyDelete
  4. யதிராஜ சம்பத் குமார்April 1, 2010 at 11:18 AM

    மிகவும் அருமை. ஆனால் வெகு சீக்கிரம் முடியப் போகிறதே என்ற ஏக்கம் மேலிடுகிறது. இன்னும் கொஞ்சம் தில்லி நினைவுகளை அசை போட்டு அட்லீஸ்ட் 50 பாகமாவது கொண்டு வர வேணும் என்று விண்ணப்பித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  5. <<<< ராஜ சுப்ரமணியன் said...ஆமாம், அது என்ன “டிண்டா”? சென்னையில் கிடைக்குமா? தமிழில் அதன் பெயர் என்ன?>>>>
    பார்ப்பதற்கு அது தக்காளிக்காய் மாதிரி இருக்கும்.ஆனால் சற்று கடினமாக் இருக்கும். சுவையான காய்தான்!

    ReplyDelete
  6. <<>> நன்றி. தனித்தனி கட்டுரைகளாக எழுத முடியுமா என்று யோசிக்கலாமா என்று எண்ணிக்கொண்டு இருக்கிறேன்!:)

    ReplyDelete
  7. Delhi Ganesh is one of the rare artists who can excel in any type of characterisation. He is a scene stealer. Do convey my regards and appreciations to him when you meet next.

    As Tinda is for Delhi Ganesh, Kovakkaai (Tondli) is for me. For a long time I thought it is not edible - as we had seen them grow in bulk on our way to school and used them only to clean the slates - till I went to Bombay (now Mumbai). There is no Udipi hotel who will miss this vegetable. Finally, one day some one prepared Kovakkaai vadhakkal -almost deep fried - and I relished it!

    /என் வீட்டில் அவருக்குச் வெங்காய சாம்பார், உருளைக் கிழங்கு கறி என்று சாப்பாடு போட்டது. அதே நடிப்புத் திறமை இப்போது../ You left 'Tinda'!

    Delhi experiences-i ivvalavu naLa pagirnthu kondatharku, yeppadi nandri solvathu yendrae theriya... oops, theriyum, theriyum! Nandri!! - R. Jagannathan

    ReplyDelete
  8. Viraivil 'Naanum Sanjuvum'ethir paarkkiraen! (Photo iruppathaal)

    /இந்தத் தொடர் அடுத்த பகுதியுடன் நிறைவு பெறுகிறது. / Ha..Ha..! Yenakku mattum theriyum idhu thodarum yendru! Padhivu Thaethiyai yaarum paarkkavillai! (April First)! - R. Jagannathan

    ReplyDelete
  9. <<<< Jagannathan said... /இந்தத் தொடர் அடுத்த பகுதியுடன் நிறைவு பெறுகிறது. / Ha..Ha..! Yenakku mattum theriyum idhu thodarum yendru! Padhivu Thaethiyai yaarum paarkkavillai! (April First)! - R. Jagannathan>>>>

    No it is not April 1st fun. With the 18th instalment,Anbulla Delhi will be concluded.

    ReplyDelete
  10. <<<< யதிராஜ சம்பத் குமார் said... இன்னும் கொஞ்சம் தில்லி நினைவுகளை அசை போட்டு அட்லீஸ்ட் 50 பாகமாவது கொண்டு வர வேணும் >>>>
    பாராட்டுக்கு நன்றி..என் டில்லி அனுபவ்ங்கள் எல்லாம் உங்களுக்கும் சுவையாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்க முடியாது. இருந்தாலும் தனித்தனி கட்டுரைகளாக போடப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  11. போனா போவுது... அன்புள்ள டில்லிய முடிச்சுக்கங்க... ஆனா "அன்புள்ள சென்னை"
    "அன்புள்ள செங்கல்பட்டு" அப்படின்னு ஏதாவது வரணும் சொல்லிப்புட்டேன்....

    அன்புடன்
    அறிவிலி

    ReplyDelete
  12. Sir,
    Don't woory, give me your address...will send a suitable present. ( What food mamai will serve if i visit your home)

    Kothamalli

    ReplyDelete
  13. அன்புள்ள கொத்தமல்லி, உங்கள் கடிதமே எனக்கு பிரசண்ட் மாதிரி.
    வீட்டுக்கு வந்தால் கத்திரிக்காய் கூட்டு கிடைக்கும்.

    ReplyDelete
  14. <<< அறிவிலி said..... ஆனா "அன்புள்ள சென்னை""அன்புள்ள செங்கல்பட்டு" அப்படின்னு ஏதாவது வரணும் சொல்லிப்புட்டேன்....>>>
    நல்ல யோசனை. பார்க்கிறேன்

    ReplyDelete
  15. ROMBA ROMBA THANKS. DELHI GANESH

    ReplyDelete
  16. Dear Kadugu,

    I know Mr.Delhi Ganesh as a good father. I also know him as a good husband to my mom, grandfather to my son and my sisters kids, and a good father-in-law to my husband. I also knew he was a fantastic actor but knowing it from others is a fantabulous experience. I simply loved your narration. Thanks for showing my dad once again in a beautiful angle.
    Thanks
    Pichulakshmi Balasubramanian

    ReplyDelete
  17. டில்லி கணேஷ் ஒரு மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர். இப்போது விஜய் டிவி- யில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவருடன் உங்கள் அனுபவங்கள் மிகச் சுவையாக இருந்தது.
    பகிர்ந்து கொண்டதற்கு மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  18. <<<< Pichulakshmi Balasubramanian:.....I simply loved your narration. Thanks for showing my dad once again in a beautiful angle....>>>
    No daughter is ever satisfied with what her parents have done for her partialy because they may not be aware of the many things includng the sacrifces they made for their kids' future adn well being. Iam gld you like dmy write up.
    I wrote what I sincerely felt. The article is a genuine expression of my admiration of your dad. I have no axe to grind.

    If he ever plans to produce a film, I am sure he will not offer me a role. And again the chances of my producing a film and asking him to take a role is also next to nil.
    Please let me have your email ID

    ReplyDelete
  19. "they may not be aware of the many things including the sacrifices they made for their kids"
    இதற்குமேல் பெற்றோரின் அன்பை எப்படி விள்க்குவது?
    மதி

    ReplyDelete
  20. அன்புள்ள கடுகு சார்,

    உங்கள் பதிவுகள் அனைத்தையும் தொடர்ந்து படித்து வருகிறேன். (பரீட்சை வச்சால் கட்டாயம் பாஸ் ஆவேன்) . அன்புள்ள டெல்லிகணேஷ் பதிவு அருமை.
    டெல்லிகணேஷ் ஒரு அற்புதமான கலைஞர். குணசித்திர வேடம் ஆகட்டும், இல்லை நகைச்சுவை வேடம் ஆகட்டும் கலக்கிவிடுவார். அவர் சமீபத்தில் அபுதாபி வந்த பொழுது, அவர் லவ் லெட்டர் எழுதிய கதையை சொன்னார். சிறிது மாளவில்லை. எந்த வித பந்தா,பெருமை இல்லாமல் down to earth மனிதர் அவர்.
    திரு.டெல்லிகணேஷ் பற்றி எழுதிய உங்களுக்கு நன்றி.

    மேலும், தாங்கள் நம்ம ஊர் ஆட்கள் டெல்லி வந்த பொழுது, யாருக்கேனும் டெல்லியை சுற்றி காண்பித்து, அதில் ஏற்பட்ட சுவையான சம்பவங்கள் இருந்தால் அதை பதிவாக போடவும். (நிச்சயம் 200 % நகைச்சுவை இருக்கும் என்று நம்புகிறேன்)



    என்றும் அன்புடன்,
    குருமுர்த்தி.

    ReplyDelete
  21. I had a chance to meet Delhi Ganesh when he performed Upanayanam for his son .I happened to see him from close quarters. For his status and stature I can not forget the way in which he conducted himself and performed.(not before the audience or camera.Such a simple and humble gentleman ! I will for ever remember the role he is palying in Cho's Engey Bhrammanan in Jaya TV.
    He does not know me personally;but you have given me an opportunity to share my good thoughts about him. Thank you Kadugu Sir .

    ReplyDelete
  22. Known personality... unknown facts and figures... vazhakkam pola asathiteenga sir !!!

    -Sri

    ReplyDelete
  23. டெல்லி ஓர் அற்புதமான நடிகர் என்பதில் சந்தேகமில்லை..நாகேஷ் அளவிற்கு நடிக்க அவரால் முடியும்..தற்போது டெல்லியை வைத்து வேலை வாங்க யாராலும் முடியாது...யானைப் பசிக்கு யாரால் தீனி போட முடியும்..!நாகேஷ்..பூர்ணம் விஸ்வநாதன்..மொளளி.. இந்த வரிசையில் நம் டெல்லி கணேஷ் அவர்களும் உண்டு..

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!