January 21, 2010

கமலாவும் ஓசியும் --கடுகு

என் அருமை மனைவி கமலாவிற்கு ஓசி என்றால் உயிர். எல்லாருக்கும் ஓசி மோகம் உண்டு என்றாலும் கமலாவின் அளவிற்கு "ஓசிப்பிரியா' யாரும் இருக்க முடியாது.
    காய்கறி கடைக்குப் போனால், பல சமயம் அவள் விலை கொடுத்து வாங்கும் காய்கறியை விட ஓசியில் வாங்கும் கறிவேப்பிலை, கொத்துமல்லி, பச்சைமிளகாய் அதிகமாக இருக்கும்.இது எப்படி சாத்தியம் என்று உதட்டைப் பிதுக்காதீர்கள்!
  
கமலா ஒரே கடையில் எல்லா காய்கறிகளையும் வாங்கிவிட மாட்டாள். ஒரே காய்கறியையும் மொத்தமாக ஒரே கடையில் வாங்கிவிட மாட்டாள். உதாரணமாக, ஒரு கிலோ கத்தரிக்காய் வாங்க வேண்டுமென்றால் இரண்டு அரை கிலோவாக இரண்டு கடைகளில் வாங்குவாள். இரண்டு இடத்திலும் ஓசிக் கருவேப்பிலை!
 அப்புறம், ஒரே கடையில் இரண்டு காய்கறிகளையும் வாங்க மாட்டாள். கத்தரிக்காய் கடையில் வெண்டைக்காயும் இருக்கும். அதை வாங்க

வேண்டுமென்றால் என்னைப் போய் வாங்கி வரச் சொல்வாள்.
அங்கே நான் வெண்டைக்காயுடன் ஓசியில் கறிவேப்பிலயும் வாங்க வேண்டும்!
   இதன் காரணமாக காய்கறி மார்க்கெட்டுக்கு நாங்கள் போகும் போது, அறிமுகமில்லாத இரண்டு பேர் போல் போவோம். தனியாக பை. தனியாகப் பணம்!  (சில சமயம் தற்செயலாக ஒரே கடையில் நாங்கள் சந்திக்க நேர்ந்தால், என்னை பார்த்து “ என்ன சௌக்கியமா? பாத்து நாளச்சு.” என்பாள் கூலாக!. ஒரு சமயம் “மாமி எப்படி இருக்கா?”என்று கேட்டாளே பார்க்கலாம்!.)     இதில் எனக்கு என்ன வருத்தம் என்றால், ஓசி கறிவேப்பிலை கொடுக்கும் கடையில் வெண்டைக்காய் முற்றிப் போய் ஆணி மாதிரி இருக்கும். அல்லது மற்ற கடையை விட ஒரு ஐம்பது பைசா அதிகமாக இருக்கும். எப்படி இருந்தாலும் அங்குதான் வாங்க வேண்டும் என்பாள் !     
"சோப்பு வாங்கினால் சீப்பு இனாம்' என்பது போன்ற விளம்பரங்களைப் பேப்பரில் பார்த்தால் எனக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். ஏதோ அதை வாங்காவிட்டால் தெய்வக் குற்றம் என்பது போல் பாவித்து, கர்மசிரத்தையாக வாங்கி வருவாள். சில சமயம் ஸ்பூன் இலவசமாகக் கிடைக்கும் என்பதற்காக ஒரு பொருளை --அது முழுக்க முழுக்க நமக்குத் தேவை இல்லாத பொருளாக இருந்தாலும்-- வாங்கச் சொல்வாள்.
    "கமலா..இப்படி வெவ்வேறு சாமான் வாங்கும் போது வெவ்வேறு விதமான ஸ்பூன் கிடைக்கிறதே... உனக்கு ஸ்பூன் வேண்டுமென்றால் மொத்தமாக பத்தோ இருபதோ ஒரே மாதிரியாக வாங்கிக் கொள்ளேன்'' என்பேன்.
    "என்னது... என்னது... என்ன சொன்னீங்க... என்ன சொன்னீங்க?'' என்று கேட்பாள். அவள் கேட்ட பாணியே என்னை நிராயுதபாணியாக ஆக்கிவிடும்.
    "என்ன, மென்று முழுங்கறீங்க? இலவசமாக ஒரு சாமான் கிடைக்கிறதுபோது காசு கொடுத்து வாங்கறதா? போகிறதே உங்க புத்தி. ஆமாம், மொத்தமாக வாங்கற வம்சமாச்சே உங்களோட வம்சம்.. அதனால் தான் உங்க வீட்டில் இருக்கற ஏழு பிளேட் எட்டு சைஸ். நாலு நாற்காலி அஞ்சு வித மாடல்'' என்பாள். சிறிது மூச்சு வாங்கிவிட்டு, "போகட்டும்... ஒரே மாதிரி ஸ்பூன்தானே இருக்க வேண்டும் என்கிறீர்கள். போய் அந்த சோப்பை (அல்லது குழந்தை உணவை அல்லது பிளாஸ்டிக் பக்கெட்டை அல்லது டூத் பாக்கெட்டை) ஒரு் டஜன் வாங்கிக் கொண்டு வந்து விடுங்கள்'' என்பாள்.
    நான் ஒரு நுணல். அதனால் இப்படி பல சமயம் வாயால் கெட்டிருக்கிறேன்
*                         *                       *
 ஏதோ ஒரு சிப்ஸ் கம்பெனி, ’பத்து காலி கவரைக் கொடுத்தால் ஒரு பாக்கெட் சிப்ஸ் இலவசம்' என்று விளம்பரம் கொடுத்திருந்தது. அந்த சிப்ஸ் நாங்கள் வாங்குவதும் கிடையாது. சாப்பிடுவதும் கிடையாது. ஆகவே வீட்டில் காலி கவர் எதுவும் இல்லை.
    "வேற வேலை இல்லை. இந்த சிப்ஸ் படு தண்டம். ஒரு பாக்கெட் கிடைக்கும் என்பதற்காகப் பத்து பாக்கெட் வாங்கணுமா?'' என்றேன். அந்த சமயம், விதி என்னைப் பார்த்து சிரித்திருக்க வேண்டும்.
    பக்கத்து ஃப்ளாட் பங்கஜம் அப்போது தான் மாடி ஏறி எங்கள் வீட்டு வழியாகப் போய்க் கொண்டிருந்தாள். அவள் கையில்...ஆமாம்... அந்த சிப்ஸ் பாக்கெட்தான் இருந்தது.
    கமலா, "என்ன பங்கஜம் மாமி, சிப்ஸ் என்ன விலை?'' என்று கேட்டாள்.
    ஜம்பத்தின் திருவுருவான பங்கஜம் "விலையா?... எதுக்கு விலை கொடுக்கணும்? பத்து காலி கவரை வீசி எறிஞ்சேன். ஃப்ரீயா ஒண்ணு கொடுத்தான். இது மாதிரி ஏதாவது கிடைக்கும் என்று தான், எந்த சாமான் வாங்கினாலும் கவரையோ டப்பாவையோ தூக்கிப் போடமாட்டேன்!'' என்றாள்.
    "அப்ப்ப்ப்ப்....படியா?'' என்று கமலா சொன்ன போதே அவள் மனதில் ஒரு தீர்மானம் உருவாகி குறைந்த அழுத்த தாழ்வுப் பகுதியாக  ஸ்திரமடைந்து விட்டது என்று என் உள் உணர்வுக்குத் தெரிந்தது.
    அன்றிலிருந்து வீட்டில் பல கவர்கள், புட்டிகள், அட்டைப் பெட்டிகள் நீக்கமற நிறைய ஆரம்பித்தன. நான் ஒன்றும் பேசவில்லை. நான் பேசினால் பதிலுக்கு பேச்சு வாங்க வேண்டியிருக்கும்!
    ஒரு நாள் யானை மார்க்கோ பூனை மார்க்கோ ஏதோ ஒரு டீ.கம்பனி, எட்டு காலி பாக்கெட்டைக் கொடுத்தால் நாலு தையல் மெஷின்ஊசி இலவசம் என்று டி.வி.யில் விளம்பரம் செய்தது.
    அவ்வளவுதான் வீடு மேல் கீழாக ஆயிற்று. அந்த டீயை எப்போதோ சில நாட்கள் சாப்பிட்டிருந்தோம். ஆகவே, காலி பாக்கெட்களை கமலா தேட ஆரம்பித்தாள். பல அட்டைப் பெட்டிகளைக் கவிழ்த்தாள். சில பல கரப்பான் பூச்சிகள் இங்கும் அங்கும் ஓடியதைப் பார்த்து கமலா பயந்து கத்தினாள்..தேவையான எண்ணிக்கை அளவு கவர் கிடைக்கவில்லை.
”போகட்டும் கமலா... தையல் மெஷின் ஊசி கிடைக்காவிட்டால் பரவாயில்லை. நம் வீட்டில்தான் மெஷினே இல்லையே'' என்று சொன்னேன்.
    "இலவசமாகக் கிடைக்கும்போது ஊசி வாங்கி வெச்சால் என்ன? கெட்டுப் போகிற வஸ்துவா?'' என்றாள் சற்று கோபமாக.
    "கெட்டுப் போகாதே....  ஊசி ஒன்றும் ஊசிப் போகாது...!' என்றேன்.
    "ஆஹா... பெரிய சிலேடை!'' என்று நறநறத்தபடியே வேறு அறைக்குப் போய் விட்டாள்.
*                *                 *

    "ஆண்டவா  இந்த இலவசத் தொல்லைகளிலிருந்து என்னைக் காப்பாற்றிக்கொள்ள வழியைக் காட்டு.. நீ  இலவசமாகக் காட்ட வேண்டாம். உன் உண்டியலில் பணம் போடுகிறேன் என்று வேண்டிக் கொள்கிறேனே, காதில் விழவில்லையா? உன்னிடம் செல்ஃபோன், பேஜர் எதுவும் இல்லையா? என் முறையீடு உன் காதில் விழ என்னதான் வழி?''

18 comments:

  1. //ஒரு சமயம் “மாமி எப்படி இருக்கா?”என்று கேட்டாளே பார்க்கலாம்!. // Chiriththu vayiru puNNaagi vittadhu! Inru en kaattil mazhai! Ungalin 3 puthiya posts padiththaen. Thank you - R. Jagannathan

    ReplyDelete
  2. ந்லல கதை சார்.. பீரியா கொடுத்தா பீனாயில கூட குடிப்பியான்னு எதோ ஒரு படத்துல டயலாக் கேட்டதா நியாபகம்..

    ReplyDelete
  3. மாமி எப்படி இருக்கா?”என்று கேட்டாளே பார்க்கலாம்!....
    This is too much sir....
    Regards

    Nagappan

    ReplyDelete
  4. நல்ல பதிவு கடுகு சார்!

    அதெல்லாம் சரி, இந்தப் பதிவைப் படிச்சதுக்கு இலவசமா என்னோட பதிவை எல்லோரும் படிக்கலாம் என்று இதன்மூலம் அறிவித்துக் கொள்கிறேன்
    http://ulagamahauthamar.blogspot.com/

    ReplyDelete
  5. உங்கள் பின்னூட்டத்தை பார்த்தேன். மிக்க நன்றி. உஙள் வலைப்பூவில் அலெக்சாண்டர் பற்றிய செய்தியை படித்தேன்.
    மனிதனை உயர்த்தும் விஷயங்களை தொடர்ந்து போடுங்கள்.-- கடுகு

    ReplyDelete
  6. யதிராஜ சம்பத் குமார்January 21, 2010 at 7:16 PM

    கடுகு சார்....உங்க மனைவிக்கு நீங்க இதுமாதிரி இங்க எழுதற விஷயம் தெரியுமோ??

    ReplyDelete
  7. அடப் பாவமே.. என் மனைவி எழுதிய கட்டுரை தான் இது. அதில் ’என் கணவர்’ என்று வரும் இடங்களில் எல்லாம் ’என் மனைவி’ என்றும், ’மனைவி’ வரும் இடங்களில் எல்லாம் ’கணவர்’ என்றும் மாற்றி விட்டேன்!! ஹி ஹி...

    ReplyDelete
  8. நேற்றைக்கு பிளாஸ்டிக் வாளிக்காக 2.5கிலோ சோப்புத்தூள் வாங்க இருந்தேன்.. நல்லவேளை என் மனைவிக்கே அது கொஞ்சம் ஜாஸ்தியாய் பட்டதால் விட்டுவிட்டார்..

    நல்ல நகைச்சுவைப் பதிவு..

    ReplyDelete
  9. ஆஹா வெகு நாட்கள் ஆகின்றன - இந்த மாதிரிக் கட்டுரைகள் படித்து, சிரித்து.
    கடுகு வயதானாலும் நகையுணர்வு குறையவில்லை.

    ReplyDelete
  10. கடுகு சார் - கருத்துரை எழுதினால் கேட்கப்படும் வோர்ட் வெரிபிகேஷனை - எடுத்துடுங்களேன் - ஒரே இம்சையாக இருக்கு. எங்கள் பிளாகில் உடனுக்குடன் கருத்துரை வழங்க முடியும். இட்லி வடையில் கூட வோர்ட் வெரிபிகேஷன் கிடையாது - ஆனால் கமென்ட் மாடரேஷன் உண்டு (என்று நினைக்கிறேன்) - இந்த வோர்ட் வெரிபிகேஷன் பலருக்கு உற்சாகத்தைத் தடுக்கும் தடைக்கல்.

    ReplyDelete
  11. அன்புள்ள KGG. அது என்ன WORD MODIFICATION?
    என்னைப் பெரிய கம்ப்யூட்டர் ஜீனியஸ் என்று நினத்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மனதைப் புண்படுத்த இஷ்டமில்லாததால் ஜீனியஸ் என்பதை ஒப்புக்கோள்கிறேன்!!! ஆனால் நான் கம்ப்யூட்டர் ஜீனியஸ் என்பதை.. ஸாரி ஏற்க முடியாது...
    போகட்டும். வோர்ட் வெரிபிகேஷனை எப்படி எடுப்பது என்று சொல்லிக் கொடுங்களேன். ”KGG நிகர்(இல்லா)நிலைப் பல்கலைக் கழகம்” என்ற் அந்தஸ்தை உஙளுக்கு வழங்கச் செய்கிறேன்! -- கடுகு

    ReplyDelete
  12. ஓசியில் கிடைக்கிறது என்றால் போன வருஷ காலண்டரை கூட வாங்கி கொள்ள பலர் தயாராக இருக்கிறர்கள்.. நீங்கள் பாவம் கமலாவை இவ்வளவு பரிகாசம் பண்ணக் கூடாது.--ரசகுண்டு

    ReplyDelete
  13. very humorous writings... as usual

    Its only few people like you sir who have this
    talent to convert anything into humor...

    Keep up the good work and thanks for sharing

    ReplyDelete
  14. தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை. நான் தங்களின் எழுத்துகளை அந்தகாலத்திலேயே படித்துள்ளேன்.
    மீண்டும் மீண்டும் என்னை அந்தக்காலத்திற்கு
    உங்கள் கட்டுரைகள் அழைத்துச்செல்கிறது.
    ந்ன்றி
    மதி

    ReplyDelete
  15. மதி அவர்களுக்கு, தினமணியில் கார்ட்டூன் போடும் மதி தாங்களா?

    ReplyDelete
  16. மாமி கருவேப்பிலை எல்லாம் யூஸ் பண்ணிருந்தா கடுகு வேற மாறி இருந்திருப்பாரோ ?

    ReplyDelete
  17. // இதன் காரணமாக காய்கறி மார்க்கெட்டுக்கு நாங்கள் போகும் போது, அறிமுகமில்லாத இரண்டு பேர் போல் போவோம்.//

    really humorous

    ReplyDelete
  18. ALTRUIST-க்கு: Thanks. ஆமாம்.. ஜனவரியில் போட்ட பதிவிற்கு ஆகஸ்டில் பின்னூட்டம்.. ஆக நம்ம பதிவு ஊசிப் போகாத பதிவு.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!