August 26, 2010

இறவா வரம் பெற்ற பாடல் -- கடுகு

எனக்குப் பிடித்த ஆங்கில எழுத்தாளர்களில் ஒருவர்: ராபர்ட் ஃபுல்ஜும். (ROBERT FULGHUM). தன் பெயரை  இப்படி  உச்சரிப்பதுதான் சரி என்று ஒரு புத்தகத்தில் இவர் எழுதி இருக்கிறார்,
சின்னச் சின்ன கட்டுரைகள்; லேசான நகைச்சுவை. அழகான ஆங்கில நடை. எல்லாவற்றிற்கும் மேலாக அலட்டல் இல்லாமல் உண்மையான தகவல்கள். இவை இவருடைய கட்டுரைகளின் சிறப்பு. இவர் எழுதிய பல புத்தகங்கள் என் புத்தக அலமாரியையும் என் உள்lளத்தையும் நிறைத்துள்ளன.
இட் வாஸ் ஆன் ஃபயர் வென் ஐ லே டவுன் ஆன் இட்: (IT WAS ON  FIRE WHEN I LAY DOWN ON IT) . என்ற புத்தகத்திலிருந்து ஒரு சுவையான கட்டுரையை மொழிமாற்றித் தருகிறேன்.
+    *          *                 *               *
ஜான் பியர் பாண்ட் வழ்க்கையில் எதிலும் ஜெயிக்க முடியவில்லை. தோல்வியாளனாகவே இறந்து போனார். வாஷிங்டனில் ஒரு சாதாரண குமாஸ்தாவாகப் பணியாற்றிய இவர், எண்பத்தோராவது வயதில், மனதை தளரச் செய்யும் பல தோல்விகளைச் சந்தித்த, பரிதாபத்திற்குரிய மனிதனாக 1866 -ல் காலமானார்.
அவருடைய வாழ்க்கை என்னவோ நல்லபடியாகத்தான் துவங்கியது. அவரது பாட்டனார் துவக்கிய யேல் பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றார். ஆர்வத்துடன் ஆசிரியர் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்,
பள்ளி ஆசிரியராக அவரால் வெற்றி பெற முடியவில்லை. மாணவர்களிடம் கண்டிப்பாக நடந்துகொள்ளத் தெரியாதே காரணம். ஆகவே பியர்பான்ட் வக்கீல் தொழிலுக்குப் போக விரும்பினார்.
பாவம்.  அங்கேயும் அவர் தோல்வியைத்தான் தழுவினார், வக்கீலாக அவரால் சிறப்பாகச் செயல்படமுடியவில்லை. கட்சிக்காரர்களீடம் மென்மையாகவும் நிறையவிட்டுக் கொடுத்தும் பழகியது மட்டுமல்ல. தன்னிடம் வரும் கேஸ்கள் நீதிக்குப் புறம்பானவையா என்றெல்லாம் அலசிப் பார்த்துவிட்டுதான் ஏற்றுக்கொண்டது காரணம்.. அதிக வருவாய் வரக்கூடிய கேஸ்களையும் இப்படி சோதிப்பார்.
அடுத்ததாக வியாபாரம் செய்ய ஆரம்பித்தார். அதிலும் தோல்வியைத்தான் சந்தித்தார். லாபம் தரக்கூடிய விலையில் பொருட்களின் விலையை வைக்காமல் நியாயமான விலையில் விற்றார். அது தவிர, நிறைய பேருக்குக் கடனில் சாமான்களை விற்றார்.

அவருக்கு கவிதைகள் எழுதும் திறமை இருந்ததால் அவ்வப்போது கவிதைகளை எழுதிப் பத்திரிகைகளுக்கு அனுப்பினார். அவை பிரசுரமாயின என்றாலும் அதிக அளவில் வருவாய் இல்லை. குறைவான சன்மானம் பெற்றுக் கொண்டே எழுதித் தந்தார். வாழ்க்கையை ஓட்டும் அளவுக்குகூட அதில் பணம் ஈட்ட முடியவில்லை..  

பாதிரியராகப் போக முடிவெடுத்தார். பாஸ்டன் நகரில் உள்ள  தேவாலயத்தில் பாதிரியாகப் பொறுப்பேற்றார், மது ஒழிப்பு, அடிமை ஒழிப்பு ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டிருந்த அவருக்கும், அந்த சர்ச் கமிட்டியில் இருந்த பலருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட்து. அவரை ராஜினாமா  செய்யும்படி சொன்னது கமிட்டி. பாதிரியாராகவும் அவரால் வெற்றி பெற முடியவில்லை.

அரசியலில் நுழைந்தால் உருப்படியாக ஏதாவது செய்து மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்று தீர்மானித்தார், மாசசூசட்ஸ் மாநிலத்தின் கவர்னர் பதவிக்கு மது விலக்குக் கட்சி அவரை வேட்பாளராக நிறுத்தியது. தேர்தலில் தோல்வியுற்றார்.
தோல்வியைக் கண்டு அவர் துவளவில்லை. செனட்டர் பதவிக்கு சுதந்திர பூமிக் கட்சியின் சார்பில் தேர்தலில் நின்றார். அதிலும் தோல்விதான். அவரால் அரசியல்வாதியாகவும் வெற்றி பெறமுடியவில்லை.

இந்த சமயத்தில் உள்நாட்டுப் போர் துவங்கியது. 22-வது ரெஜிமென்டின் பாதிரியாராகப் பதவி ஏற்றார். இரண்டு வாரங்களில் அந்த வேலையை  உதறிவிட்டார். பணிச்சுமை அவர் உடல் நலத்திற்கு ஒத்துவரவில்லை. அப்போது அவருக்கு 76 வயதாகி விட்டிருந்தது.
அவர்மேல் பரிதாபப்பட்டு ஒருவர் அவருக்கு வாஷிங்டனில் கருவூலத்துறையில் குமாஸ்தா வேலையை வாங்கித் தந்தார். அடுத்த ஐந்து வருஷம் அந்த வேலையில் கழித்தார்.  அந்த வேலையின் மீது அதிக ஈடுபாடு இல்லாததால் அதிலும் அவரால் சிறப்பாகப் பணியாற்ற முடியவில்லை
இப்படி தோல்வி மேல் தோல்வி  அடைந்தவராக ஜான் பியர்பான்ட் காலமானர். தான் செய்யவேண்டும் என்று எண்ணிய எதையும் அவரால் சாதிக்க முடியவில்லை. மாசசூஸட்ஸில் உள்ள மவுன்ட் ஆபர்ன் கல்லறைப் பகுதியில் அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தில்  கல்லினால் ஆன ஒரு நினைவுப் பலகை வைக்கப்பட்டிருக்கிறது. அதில் பொறிக்கப்பட்டிருக்கிற வாசகங்கள்: கவிஞர், பிரசாரகர், தத்துவ ஞானி, கொடைவள்ளல்!

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு அவரது வாழ்க்கையைப் பார்க்கும்போது அவர் தோல்வியாளர் அல்ல என்று நாம் நிச்சயமாகச் சொல்லலாம். சமுதாய  நீதியின் மீது அவர் கொண்டிருந்த தீவிர ஈடுபாடு, மனித நேயத்துடன் வாழ்ந்த தீவிரம், மனிதனின் மூளைத்திறன் மீது அவர் வைத்திருந்த அதீத நம்பிக்கை, அன்றைய காலகட்டத்திலிருந்த பிரச்னைகளின் மீது  கொண்டிருந்த அக்கறை ஆகிய பல விஷயங்கள் இன்று வெற்றி பெற்றுள்ளன. அவரது அன்றைய தோல்விகள் இன்று  வெற்றி பெற்றுள்ளன. கல்வி முறையில் பல முன்னேற்றங்கள் வந்து விட்டன. சட்ட சயல்முறைகள் மேம்பாடு அடைந்துள்ளன. கடன் வசதி திட்டங்கள் மாறுதல் அடைந்து விட்டன. எல்லாவற்றையும் விட  முக்கியமானது, அடிமை முறை  (SLAVERY) முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது!.

இவைகளை எல்லாம் எதற்கு உங்களிடம் கூறுகிறேன்? பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பல சீர் திருத்தவாதிகள் ஏறக்குறைய பியர்பான்ட் மாதிரிதான் வாழ்ந்திருக்கிறார்கள். அவர் மாதிரியே தோல்விகளையும் வெற்றிகளையும் சந்தித்திருக்கிறார்கள்.
ஒரு முக்கியமான  விஷயத்தைப் பார்க்கும்போது ஜான் பியர்பான்டை ஒரு தோல்வியாளர் என்று சொல்லமுடியாது. காரணம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் அவரது வெற்றியை நாம் கொண்டாடுகிறோம். நமது ஒவ்வொரு நெஞ்சங்களிலும் அவருக்கு வாழ்நாள் சின்னம் அமைத்திருக்கிறோம்..
அது ஒரு சின்ன அழகான ஆங்கிலப் பாடல்.
அது ஏசு கிருஸ்துவை பற்றியோ, தேவதைகளைப் பற்றியோ, சான்டா கிளாஸ் பற்றியோ அல்ல. அது மிக மிக எளிமையான துள்ளல் பாடல். ஒற்றைக் குதிரைப் பூட்டப்பட்ட பனிச்சறுக்கு வண்டியில் குளிர் மண்டிய இரவில் விர்ரென்று செல்லும்போது ஏற்படும் மகிழ்ச்சியை  வெளிப்படுத்தும் பாடல். நண்பர்களுடன் சேர்ந்து உல்லாசமாகப் பாடி மகிழும் பாடல்.

அது: ஜிங்கிள் பெல்ஸ்!  ஆம் அது JINGLE BELLS
மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மிக மிக எளிமையான பாடலை அவர் எழுதியதும், அதை  உலகம் முழுதும் 300,400 மில்லியன் மக்கள் அறிந்திருப்பதும், அவர்கள் அனுபவித்தறியாத ஆனால் மனதில் கற்பனை செய்து அனுபவித்து அறியக்கூடிய குதூகலத்தைப் பெருகச் செய்வதும் சாதாரண சாதனையா?
பியானோவின் ஒரு கட்டையை அழுத்தியதும் உடனே  நம் மனதில் எதிரொலித்து மகிழ்ச்சியைப் பொங்கச் செய்யும் பாடலை எழுதியிருப்பதைத் தோல்வி என்று சொல்ல முடியுமா?
        பனிபொழிந்து கொண்டிருந்த ஒரு குளிர்கால இரவில் இந்தப் பாடலை தன் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தேவாலயத்திற்கு வருபவர்களுக்கும் பரிசுப் பொருளக இந்தப் பாடலை எழுதினார். இதை கிருஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு நிரந்தரமான பரிசாக - ஒப்பற்ற அன்பளிப்பாக தந்துவிட்டார்.  கிருஸ்துமஸ் மரத்தின் கீழ் வைக்கப்படும் பரிசுப் பொருள்களைப் போல் அல்ல.
கண்களுக்குப் புலப்படாத பரிசு.  எதையும் வெல்லும்  மகிழ்ச்சியைத் தரும் ஒரு பாடலைப் பரிசாகத் தந்து விட்டார் ஜான் பிய்ர்பான்ட்!
பாடலிலிருந்து சில வரிகள் இதோ
JINGLE BELLS --by: John Pierpont (1785-1866)    
Dashing through the snow
In a one horse open sleigh
O'er the fields we go
Laughing all the way
Bells on bob tails ring
Making spirits bright
What fun it is to laugh and sing
A sleighing song tonight

Oh, jingle bells, jingle bells
Jingle all the way
Oh, what fun it is to ride
In a one horse open sleigh
Jingle bells, jingle bells
Jingle all the way
Oh, what fun it is to ride
In a one horse open sleigh”

12 comments:

  1. உளுந்துAugust 27, 2010 at 11:22 AM

    இத்தனை வருடங்களாக இப்பாடலை கேட்டுக்கொண்டிருக்கிருந்தாலும், இதை எழுதியவர் பற்றியோ அவரது பின்னணி பற்றியோ தெரியாமல் இருந்தது. அருமையான கட்டுரை. நன்றி.

    ReplyDelete
  2. இவ்வுலகில் யாருடைய வாழ்க்கையும் தோல்வியில்லை.
    ஒவ்வொருவரும் தங்களின் நிலையில்
    ஏதொ ஒன்றை சாதித்துவிட்டுத்தான் போகிறார்கள் ஆனால் நாம்தான் அவற்றை பார்க்க இயலாமல் இருக்கிறோம். மிக அருமையான கட்டுரை.
    மதி

    ReplyDelete
  3. ஆங்கிலத்தில் பெயரைப் படித்ததும் மனதில் எழுந்த சந்தேகத்திற்கு அடுத்த வரியிலேயே நீங்கள் அதைப் போக்கியது ஆச்சர்யம். மனதைப் படிப்பது உங்களுக்கு கை வந்த கலை என்று அறிகிறேன்.

    பாடலின் இரண்டாவது stanzaவின் முதல் வரி மட்டுமே தெரிந்த என்னைப்போன்றவர்களுக்கு, முழுப் பாடலும் தெரிவித்ததற்கு நன்றி.

    அன்றும், இன்று போலவே நல்லவர்களுக்கு காலம் இல்லை போலிருக்கிறது! - ஜெ.

    ReplyDelete
  4. hello sir,

    i have heared this song for a very long time and till now i dnt know the author. thanks for this

    ReplyDelete
  5. http://en.wikipedia.org/wiki/John_Pierpont

    John Pierpont did not write the song "Jingle Bells" as erroneously claimed by Robert Fulghum in his collection of essays It Was on Fire When I Lay Down on It (1989). "Jingle Bells" was composed by his son James Lord Pierpont, who lived in Savannah, Georgia, and who was a Confederate soldier during the Civil War, composing songs for the Confederate States of America, including "Our Battle Flag", "Strike for the South", and "We Conquer or Die".

    ReplyDelete
  6. Sir,
    Arintha(paadalum}thum,Ariyatha(vishayam)thum.
    Intha thalaippil neengal innum pathivugal poda vendugiren. I really enjoy u'r postings. Keep it up.

    ReplyDelete
  7. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வாழ்க்கையில் எதையும் சாதிக்கத் தெரியவில்லையே, எப்போதுமே HALF THE WAY ஆகவே DROP OUT ஆகி விடுகிறோமே என்று அடிக்கடி ஒரு வெறுமை தோன்றும். நீங்கள் தந்திருக்கும் பதிவைப் படித்ததும், நாம் என்ன சாதித்தோம் என்பதைப் பற்றி மற்றவர்கள்தான் சொல்ல வேண்டும், ஆனால் அதிர்ஷ்டம் இருந்தால் நம் வாழ்நாளிலேயே அது நம் காதில் விழும், இல்லையென்றால் எதிர்கால சந்ததியினர் சொல்வார்கள் என்று தோன்றியது.

    ஜான் பியர் பாண்ட் பற்றி படித்ததும், மகா கவி பாரதியாரின் நினைவும் வருகிறது. அவர் உயிருடன் இருந்த போது அவரை முழுமையாகப் புரிந்து கொண்டு, போற்றியவர்கள் எத்தனை பேர் இருந்திருப்பார்கள் என்ற எண்ணம் எழுகிறது.

    அன்புடன்

    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete
  8. மிக நல்ல பதிவு..

    ReplyDelete
  9. // John Pierpont did not write the song..."Jingle Bells" was composed by his son James Lord Pierpont // ஆஹா, கடுகு அவர்களுக்கும் ஒரு நக்கீரரா? இந்த விக்கீபீடியாவிற்கு ஏதாவது மறுப்பு வந்ததா?! - ஜெ.

    ReplyDelete
  10. இந்த விக்கீபீடியாவிற்கு ஏதாவது மறுப்பு வந்ததா?! - ஜெ.

    தெரியவில்லை. நான் ஃபுல்ஜும் எழுதியக் கட்டுரையை மொழிபெயர்த்து கொடுத்து இருக்கிறேன்.

    ReplyDelete
  11. http://en.wikipedia.org/wiki/Jingle_Bells

    Kadugu sir.. James Lord Pierpont is john pierpoint's son.. In Wikipedia they have stated that the quotation is wrong in the book IT WAS ON FIRE WHEN I LAY DOWN ON IT..
    Sangeetha Srilanka

    ReplyDelete
  12. Thank you. I simply translated Fulghum's article.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!