July 10, 2010

கோளறு பதிகம்,-4: நஞ்சணி கண்டன்

பாடல்-4
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
      விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்து, என்
      உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
      மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல
      அடியார் அவர்க்கு மிகவே.

நஞ்சணி கண்டன் - தேவர்களும் அசுரர்களும் இழந்த செல்வங்களை மீண்டும் அடைவதற்காக பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து எழுந்த ஆலகால நஞ்சை இந்த உலகங்களின் மீதுள்ள கருணையினால் தான் விழுங்கி அது தொண்டையில் தங்கியதால் அதுவே தொண்டைக்கு ஒரு அணிகலனாக அழகுடன் அமையப் பெற்ற நீலகண்டனாகிய

எந்தை - என் தந்தை

மடவாள் தனோடும் விடையேறும் நங்கள் பரமன் - அன்பும் அருளும் மிக்க அன்னை உமையவளோடு,   எருதின் மேல் ஏறி வரும் எங்கள் பரமனாகிய சிவபெருமான்

துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேலணிந்து - அனைவரும் ஆழ்ந்து உறங்கும் நடு இரவு நேரத்தின் இருட்டினைப் போன்ற நிறம் கொண்ட வன்னி மலரையும், கொன்றை மலரையும் தனது திருமுடி மேல் அணிந்து கொண்டு

என் உளமே புகுந்த அதனால் - அவனது அளவில்லா அருளினாலே என் உள்ளத்தில் புகுந்து அங்கேயே நிலை பெற்றதனால்

வெஞ்சின அவுணரோடும் - வெப்பமும் கோபமும் மிகுந்த அவுணரும்

உருமிடியும் மின்னும் - உருமும் இடியும் மின்னலும்

மிகையான பூதமவையும் - மிக்க சக்தி வாய்ந்த ஐம்பூதங்களும் (நிலம், நீர், காற்று, தீ, விண்)

அஞ்சிடும் - இறைவனது பெருமையையும் அவனடியார்களது பெருமையும் எண்ணி அஞ்சிடும்

நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே - அதனால் அவை அடியார்களுக்கு மிக்கவே நல்லவைகளாக இருக்கும். 

  .

5 comments:

  1. மடவாள்=அன்பும் அருளும் மிக்க அன்னை உமையவள், இது உங்கள் பொழிப்புரை இல்லாமல் எனக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை.

    அவுணர்: எனக்கு அர்த்தம் இன்னும் விளங்கவில்லை. (மர மண்டை).
    -ஜெ.

    ReplyDelete
  2. <<< Jagannathan said... >>>> அவுணர் என்றால் அசுரர், இராக்கதர் என்று பொருள்.

    ReplyDelete
  3. மடவாள்=அன்பும் அருளும் மிக்க அன்னை உமையவள் ...
    கூடல் பதிவிற்கு நன்றி சொல்லவேண்டும்.
    மடம் என்பது Innocence, கள்ளம் கபடமற்ற என்று பொருள் கொள்ளலாம் கருதுகிறேன்.

    ReplyDelete
  4. மிக்க நன்றி! - ஜெ.

    ReplyDelete
  5. Sir,
    Thanks to you & Mr.Jaganathan for clarifying and raising the doubts i had.

    Kothamalli

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!