May 29, 2010

நோபல் பரிசு - மொத்த வகுப்பிற்கும்! - கடுகு

உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி டாக்டர் சந்திரசேகரைப் பற்றிய விரிவான  ஒரு புத்தகத்தின் தலைப்பு :  உண்மை மற்றும் எளிமை  (TRUTH AND SIMPLICITY). அவரது வாழ்க்கை எவ்வளவ எளிமையானது மற்றும் உண்மையானது என்பதை விளக்க  ஒரு சிறிய தகவலைத் தருகிறேன். ( இந்த தகவல் இருந்த பக்கங்களை போட்டோகாபி பண்ணி வைத்திருந்தேன், அதை தேடி எடுத்துப் போட முடியவில்லை.)

     1940களில் டாக்டர் சந்திரசேகர் (அமெரிக்காவில் அவரைச் சந்திரா என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.) சிகாகோ சர்வகலாசாலையில் பகுதி நேரப் பணி ஆற்றி வந்தார். அவர் `வில்லியம்ஸ் பே' என்று ஊரில் இருந்த வான் ஆராய்ச்சி மையமான பெர்க்கிஸ் ஆப்சர்வடேரியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். இருப்பினும் சுமார் 100 மைல் தள்ளியிருந்த சர்வகலாசாலைக்கும் சென்று ஒரு குறிப்பிட்ட வகுப்புக்குப் பாடங்களைப் போதித்து வந்தார். ஒரே ஒரு வகுப்பிற்காக நூறு மைல் காரில் வந்து பாடம் சொல்லித் தருவதை தவிர்க்கக் கூடிய வேலையாக அவர் கருதவில்லை. இதற்காக செலவழியும் நேரம், சக்தி ஆகியவை பற்றிக் கவலைப்படாமல்
சர்வகலாசாலைக்குப் போய் வந்தார்.
   அவரது அக்கறை மற்றும் ஈடுபாடு காரணமாக 1957ல் ஒரு வியப்புக்குரிய விஷயம் நடந்தது. அவரது வகுப்பில் இருந்த எல்லாருக்கும் பௌதிகத்திற்கு நோபல் பரிசு கிடைத்தது! பரிசு பெற்றவர்கள் லீ மற்றும் சென்ஜிங் யாங்  (  T.D.LEE, C.N.YANG)! ஆமாம். அவர் வகுப்பில் இரண்டே மாணவர்கள்தான். இருந்தார்கள். இந்த இரண்டு பேருக்காக நூறு மைல் காரில் வந்து பாடங்களைச் சொல்லிக் கொடுத்தார் சந்திரா. தனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை என்றாலும் தனது இரண்டு மாணவர்கள் பரிசு பெற்றது பற்றி அவருக்கு அளவில்லாத மகிழ்ச்சி.
ஸீங் டா யீ மற்றும் சென் ஜிங் யாங் ஆகியவர்களுக்கு 1957ல் நோபல் பரிசு கிடைத்தது என்றால், அவர்களுடைய ஆசிரியரான சந்திராவிற்கு 26 வருடம் கழித்து 1983ல் நோபல் பரிசு கிடைத்தது!
ஆக, அந்த மொத்த கிளாஸுக்கும் ஆசிரியர், மாணவர் உட்பட எல்லாருக்கும் நோபல் பரிசு கிடைத்து விட்டது. சமீபத்தில் `நாசா' ஒரு சாட்டிலைட்டை விண்வெளிக்கு அனுப்பிய போது அதன் ராக்கெட்டிற்கு `சந்திரா' என்று பெயர் வைத்தது.
 ( இவரது அம்மாவின் சகோதரர்தான் சி.வி. ராமன்!)

சந்திராவைப் பற்றி இந்தத்  தகவலைப் படித்ததும் நோபல் பரிசுகள் பற்றி இன்டர்நெட்டில் துழாவிய போது மேலும் சில சுவையான விஷயங்கள் தட்டுப்பட்டன.

ஒன்று சாமுவேல் பெக்கட் என்னும் நாடகாசிரியரைப் பற்றியது. அவரது புகழ் பெற்ற நாடகம் `வெயிட்டிங் ஃபார் கோடா(ட்)' 1969ம் ஆண்டு இவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தரப்பட்டது.
ஆனால் பரிசை வாங்கிக் கொள்ள பெக்கெட் ஸ்வீடன் போகவில்லை! இவருக்கு மேடையில் பேசுவதற்கு மிகவும் பயமாம். மேலும் பலர் முன்னிலையில் மேடையில் நிற்கவே இவருக்குப் பிடிக்காதாம். பரிசை பெற்றுக் கொண்டாரே தவிர, நேரில் போய் பெற்றுக் கொள்ளவில்லை.
    இதே மாதிரி இங்கிலாந்து பிரதம மந்திரியாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சிலும், 1953ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அளிக்கப்பட்ட போது நேரில் போகவில்லை. தன் மனைவியை அனுப்பிப் பரிசைப் பெற்றுக் கொண்டார். பரிசைப் பெறுபவர் ஏற்புரை நிகழ்த்த வேண்டும். சர்ச்சிலின் ஏற்புரையிலிருந்து சில பகுதிகள்:
...  உங்கள் அபிமானத்தையும், அனைவரின் மதிப்பையும் பெற்ற தங்கள் மன்னரிடமிருந்து நேரில் பரிசைப் பெற இயலாமைக்கு வருந்துகிறேன். எனக்கு இங்குள்ள கடமைகள் காரணமாக வர இயலவில்லை. ஸ்வீடிஷ் அகாடமியின் நோபல் பரிசுகள் நடுநிலையுடனும் ஆழ்ந்த அக்கறையுடனும் செய்யும் தேர்வுகள் என்று உலகமே ஒப்புக் கொண்டுள்ளது. என்னைத் தேர்ந்தெடுத்திருப்பது எனக்குப் பெருமையை மட்டுமல்ல, மிக்க வியப்பையும் அளித்துள்ளது. உங்கள் தேர்வு சரியான தேர்வாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தப் பரிசுக்கு நான் தகுதி உடையவன் அல்ல என்று நான் கருதுகிறேன். இதுபற்றி உங்களுக்கு எவ்வித ஐயப்பாடும் இல்லை என்றால் எனக்கும் இல்லை!''
* * *
ஒரு நோபல் பரிசு வாங்குவதே மகா கஷ்டமான விஷயம். கணவன், மனைவி, மகள், மாப்பிள்ளை ஆகிய நான்கு பேரும் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள் என்றால் அந்தக் குடும்பத்திற்கு ஈடாக வேறொரு குடும்பம் இருக்க முடியுமா?
பியர் க்யூரி 1903ம் ஆண்டு பௌதிகத்திற்கு, அவரது மனைவி மேரி க்யூரியுடன் சேர்ந்து பெற்றார். 1911ம் ஆண்டு மேரி க்யூரி ரசாயனத்திற்கான நோபல் பரிசு பெற்றார். (இரண்டு தடவை வெவ்வேறு துறையில் நோபல் பரிசு பெற்றவர் இவரைத் தவிர வேறு யாரும் கிடையாது.) மேரியின் மகள் ஐரினும், அவரது கணவர் ஃப்ரெடெரிக் ஜோலியட்டும் 1935ம் ஆண்டு ரசாயனத் துறையில் நோபல் பரிசு பெற்றனர்.
க்யூரியின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்களுக்குக் கட்டாயப் பாடமாக வைக்க வேண்டும்.

3 comments:

  1. சர்ச்சிலின் சார்பில் அவர் மனைவி க்ளெமெண்டைன் சென்றிருந்தார். அரச குடும்பத்தினருடன் அவரும் மேடையில் அமர்ந்திருக்கிறார். அது பற்றி ரீடர்ஸ் டைஜஸ்டில் வந்த கட்டுரையிலிருந்து சிலவரிகள் (தமிழாக்கம் எனது நினைவிலிருந்து):

    பார்வையாளர்களுக்காக நடன/பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. திடீரென ஒரு பாடல் ஆங்கிலத்தில் எழுந்தது:

    Oh my darling, Oh my darling Clementine.

    அப்பாடலைக் கேட்டதுமே க்ளெமெண்டைன் நெகிழ்ச்சியோடு தன்னையறியாமலே எழுந்து நிற்க, எங்கும் கரகோஷம் எழுந்தது.

    நோபல் பரிசு அவள் கணவருக்கு, ஆனால் இப்பாடல் அக்கணவரின் மனைவிக்கு.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. Sir,
    You have given a new news about Mr.Chandra.....great to know that both the teacher and students got nobel!!!!!!

    (Is NAANUM CHANDRAVUM in your pipe line...You may post one...mat become true!!!!)
    Kothamalli

    ReplyDelete
  3. //இரண்டு தடவை வெவ்வேறு துறையில் நோபல் பரிசு பெற்றவர் இவரைத் தவிர வேறு யாரும் கிடையாது//

    லைனஸ் பாலிங் (Linus Pauling). முதலில் வேதியியல் பரிசு. பின்னர் சமாதானத்திற்கான நோபல் (அவர் ஒரு அணு ஆயுத எதிர்ப்பு பிரசாரகர்)

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!