May 29, 2010

மந்திரிக்கு மசியாத அதிகாரி - கடுகு


சமீபத்தில் வீடியோயில் `யெஸ் பிரைம் மினிஸ்டர் தொடரைப் பார்த்துக் கொண்டிருந்த போது சில வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. மத்திய மந்திரிக்கே ஒரு அதிகாரி `பேப்பே' சொன்ன கதை அது.
  என் நண்பர் ஒருவருக்குப் பதவி உயர்வு அளித்து திடீரென்று டில்லியிலிருந்து கொச்சிக்கு மாற்றி விட்டார்கள். குழந்தைகள் படிப்பு பாதிக்கப்படும் என்றும், வேறு சில காரணங்களையும் சொல்லி, டில்லியிலேயே தன்னை `போஸ்ட்' செய்யும்படி கேட்டுக் கொண்டார். `முடியாது' என்று சொல்லி விட்டார்கள்.
இவர் சிறந்த சமூகநலத் தொண்டர். ஆகவே பலர் இவர் டில்லியிலேயே இருக்க வேண்டும் என்று விரும்பி, பலவித சிபாரிசுகளைக் கொண்டு வந்தார்கள். பலனில்லை. மாறாக, உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டிய அதிகாரியின் பிடிவாதம் அதிகரித்தது. ஒருநாள் திடீர் உத்தரவு போட்டார். ``இன்று மாலையிலிருந்து உங்கள் பெயர் எங்கள் அலுவலகத்திலிருந்து நீக்கப்பட்டது.''
அதாவது அவர் புதிய இடத்தில் போய் பொறுப்பை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
 இந்தச் சமயத்தில் எனக்குத் தெரிந்த  ஒரு  பாராளுமன்ற உறுப்பினரை  அணுகி, உதவி கோரினேன்.
அவர் என்னை அழைத்துக் கொண்டு (நான் அவர் பி.ஏ.வாம்!) மந்திரியைப் பார்த்தார். மொழிப் பிரச்னையாதலால் நான்தான் `மொழி பெயர்த்தேன்' -இதுதான் சாக்கு என்று என் நண்பரைப் பற்றி மிகவும் உயர்வாகப் பேசி, அவர் கட்டாயம் டில்லியிலேயே இருந்தால்தான் நான் (அதாவது எம்.பி.) அடுத்த தடவை தேர்தலில் ஜெயிக்க முடியும் என்கிற ரீதியில் வலுவாகச் சிபாரிசு செய்தேன்.
மந்திரி எங்கள் மனுவின் மீது, ``இந்த ஆபீசரை டில்லியில் போஸ்ட் செய்துவிட்டு எனக்குத் தெரிவிக்க வேண்டும். இது என் உத்தரவு'' என்று எழுதினார். இப்படி ஒரு  உத்தரவு  அமைச்சரால் போடப்பட்டால் அதை நிறைவேற்றியாக வேண்டும் என்பது விதி.  அமைச்சரின் அந்த உத்தரவு டைரக்டர் ஜெனரலுக்கு வந்து, பிறகு உத்தரவுகள் பிறப்பிக்க, குறிப்பிட்ட ஆபீசருக்கு வந்தது. அவர் ஆறுமாதம் வரை ஃபைலை அப்படியே வைத்திருந்தார். இத்தனைக்கும் மாதாமாதம் ஒரு ஸ்டேட்மெண்ட் மந்திரிக்கு அனுப்பப்பட வேண்டும்- மந்திரி அனுப்பிய உத்தரவுகள் எவை எவை, எவ்வளவு தூரம் நிறைவேற்றப்பட்டன என்று.
பிறகு ஒரு நீண்ட குறிப்பு அனுப்பினார், ஏழெட்டுப் பக்கங்களுக்கு. ஏன் இவரை டில்லியிலேயே போஸ்ட் செய்ய முடியாது என்பதற்கு. எத்தனை பேர் டில்லிக்கு மாற்றல் கேட்டுக் காத்திருக்கிறார்கள் என்றும் வேறு பல சம்பந்தமில்லாத பாயிண்ட்டுகளையும் எழுதியிருந்தார். அதில் சுமார் பத்து வருஷத்துக்கு முன் வேண்டுகோள் கொடுத்து, தமக்கு டில்லி போஸ்டிங் வராது என்று தெரிந்து வேறு ஊருக்குப் போய் விட்டவர்கள் பெயரெல்லாம் இருந்தது. ``என்ன, பத்து வருஷமாகவா ஒருவரின் வேண்டுகோளை ஏற்காமல் அரசு இருக்கிறது?'' என்று அமைச்சர் கேட்க மாட்டாரா என்று கூட நினைக்கவில்லை.
கடைசியில் ஒரு நாள் அமைச்சர் ஆபரேஷன் செய்து கொண்டு ஆஸ்பத்திரியில் படுத்துக் கொண்டிருந்த போது சுமார் இருபது பைல்களை எடுத்துக் கொண்டு அந்த ஆபீசர் போனார். அதில் என் நண்பர் சம்பந்தபட்ட குறிப்பிட்ட பைலும் இருந்தது. அமைச்சரிடம் பொதுவாகப் பேசியபடியே தனக்கு உகந்தபடி உத்தரவுகளை வாங்கி விட்டார். உத்தரவு என்றால் அமைச்சரின் வெறும் கையெழுத்துதான். (இவர்தான் தக்கபடி மேலே வளவள என்று எழுதியிருந்தாரே)
இந்தச் செய்தி உடனே எங்களுக்குத் தெரிந்து விட்டது. ( மந்திரியின் பி.ஏ. எங்களுக்கு வேண்டியவர்.) எங்களில் ஒருவருக்கு, பிரதம மந்திரியின் அலுவலகத்தில் மிக முக்கிய அதிகாரியைத் தெரியும். அவரிடம் சென்று விவரமாகக் கூறி உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். கோரிக்கையில் நியாயம் இருப்பதை அறிந்த அவர், ``சரி, பத்து மணிக்கு குறிப்பிட்ட ஆபீசருக்கு போன் செய்கிறேன்'' என்றார்.
        நம்புங்கள். சரியாகப் பத்து ஐந்துக்கு உத்தரவைப் போட்ட ஆபீசர் என் நண்பரைக் கூப்பிட்டு அனுப்பினார்.
``என்ன உங்களுக்குப் பிரச்னை? ஏன் கொச்சிக்குப் போக மாட்டேன் என்கிறீர்கள்? என்னை வந்து பார்த்தால் நான் உதவி செய்ய மாட்டேனா?'' என்று தேனொழுகக் கேட்டார். நண்பர் தன் பிரச்னைகளை விளக்கினார்.
``பாருங்கள், டில்லியில் வேகன்ஸி இல்லை. வேற எந்த ஊராவது சொல்லுங்கள். அங்கு போஸ்ட் செய்கிறேன்.''
``அப்படியானால் சென்னைக்குப் போகிறேன்.''
``சரி, ஒரு சின்ன மனு எழுதிக் கொடுங்கள் சென்னைக்குப் போகச் சம்மதம் என்று.''
நண்பர் தன் இலாகாவிற்கு வந்து மனுவை எழுதிக் கொடுத்தார்.
அந்த மனுவை நான்தான் அவருக்கு டைப் செய்து  கொடுத்தேன்.(மணி 10.15) சரியாக 10.20க்கு சென்னைக்கு மாற்றப்பட்டதாக உத்தரவு `சைக்ளோஸ்டைல்' செய்யப்பட்டு வந்தது. ஐந்து நிமிஷத்தில் பிரச்சினை முடிந்து விட்டது
        நண்பர் ஆபீசரிடம் போய், ``ரொம்ப நன்றி'' என்றார். அவர் மிகவும் பவ்யமாக. ``நன்றி சொன்னால் மட்டும் போதாது. இனிமேல் பிரைம் மினிஸ்டர்  ஆபீசுக்கு  போய் ‘நீங்கள் பிரஷர்’  கொண்டு வரக் கூடாது'' என்றார்
      மந்திரியின் உத்தரவுக்கு ஆறு மாதம் மசியாத அந்த அதிகாரி, பிரதம மந்திரியின் அலுவலகத்தில் இருந்த அதிகாரியின் `வேண்டுகோளை' (பயந்து கொண்டே!)  அரை மணியில் நிறைவேற்றி விட்டார்.
       இந்த நிகழ்ச்சி ஒரு சோறு பதம்தான்!

15 comments:

  1. Yes Prime Minister சம்பந்தமாக நான் எனது ஒரு பதிவில் எழுதிய சில வரிகள்:

    "Yes Minister" "Yes Prime Minister" ஆகிய ஆங்கில சீரியல்களை பதிவர்களில் பலர் பார்த்திருப்பார்கள். அதில் மந்திரிகளுக்கும் சிவில் சர்வீசஸுக்கும் இடையில் நடக்கும் கயிறு இழுக்கும் போட்டி சுவையாகக் காட்டப்பட்டிருக்கும். உதாரணத்துக்கு மந்திரி ஒரு முற்போக்கு திட்டத்தை பிரேரேபித்தால் சிவில் சர்வீஸ் கொடுக்கும் பின்னூட்டங்கள் அவற்றின் உள்ளர்த்ததோடு:

    "It is quite a novel idea, Mr. Minister" (ஏன் சார் இது மத்தவங்களுக்கும் தோணியிருக்காதா, அது சாத்தியம் இல்லைன்னுதானே உங்களுக்கு முன்னால் இருந்தவங்க விட்டு வச்சிருக்காங்க!)

    "It is quite a courageous step, Mr. Minister" (உங்கள் கட்சிக்கு இதனால் குறைந்தபட்சமாக ஆயிரம் ஓட்டு இழப்புகள், அதிலும் உங்கள் தொகுதியில் நிச்சயம் டோமரு!)

    "That was really brave of you Mr. Minister" (உனக்கு சங்குதாண்டி. ராஜினாமா கடிதம்தான் எழுத வேண்டியிருக்கும், அதற்கான வரைவை எழுத டோண்டு ராகவனை வேணும்னா கேக்கட்டுமா?)

    அதுவும் சர். ஹென்றி இவற்றில் ஒவ்வொன்றாகக் கூற மந்திரி/பிரதம மந்திரியாக நடித்த பால் எட்டிங்டனின் முகபாவங்கள் இப்போதும் குபீர் சிரிப்பை விளைவிப்பவை.

    பார்க்க: http://dondu.blogspot.com/2008/07/blog-post_07.html

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  2. Sir,
    What are all the things you have done in delhi and in delhi politics???? ( You too Mr.Kadugu!!!!)

    Hope you have done everything except your postal dept work...

    Kothamalli

    ReplyDelete
  3. கொத்தமல்லி கேட்ட கேள்விக்கு ஒரு புத்தகமே பதிலாக எழுதலாம்.(புத்தகமாக இல்லாவிட்டாலும்
    அவ்வப்போது எழுதுவேன்.)

    ReplyDelete
  4. I have realized in the last few days that the day does not start well if i do not read something from your blog. Your writing style is amazing! Thank you very much for your work! I feel guilty that I am getting so much from your work and not giving you anything back!

    ReplyDelete
  5. மதிப்பிற்குரிய திரு. அகஸ்தியன்,

    இன்னிக்குதான் இந்த பிளாக் கண்ணில் பட்டது. ரொம்ப சந்தோஷமாக இருக்கு. நான் உங்கள் எழுத்துக்களை நிறைய படிச்சு இருக்கேன்.
    ஒரு வேண்டுகோள் - திருமதி பஞ்சுவும் திரு பஞ்சுவும் மீண்டும் வருவார்களா?

    இனி தினமும் இந்த பிளாக் படித்து விடுவேன்.

    ReplyDelete
  6. மிக்க மகிழ்ச்சி. பஞ்சு சில மாதங்கள் கழித்து வரக்கூடும்.

    ஐந்து மாதங்களாக எங்கே இருந்தீர்கள்?

    ReplyDelete
  7. <<< Ravi said... I feel guilty.. >>>

    Never mind. If you are doing something like vsiting my block you will feel guilty for sometime. Then you get over it!

    ReplyDelete
  8. தொடர்ந்து உங்கள் பதிவுகளை வாசித்து வருகிறேன். அருமையிலும் அருமை.

    ReplyDelete
  9. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    முதலில் உங்களை சார் சேர்க்காமல் பெயர் மட்டும் எழுதியதற்கு மன்னியுங்கள் ப்ளீஸ். நேற்று உங்கள் ப்ளாக் பார்த்த சந்தோஷத்தில் உடனே பின்னூட்டம் கொடுக்க நினைத்து, அவசரத்தில் பெயரை மட்டும் குறிப்பிட்டு விட்டேன். (ரொம்ப நேரம் கப்யூட்டரில் உட்கார்ந்திருந்ததில், ப்ரீவ்யூ பார்க்காமல் போஸ்ட் செய்து விட்டேன்.)இன்றைக்குத் திரும்பப் பார்க்கும்பொழுது ரொம்ப சங்கடமாக இருக்கிறது.தயவு செய்து மன்னியுங்கள்.


    தினமணி கதிரில் நீங்கள் எழுதியவற்றைப் படித்து இருக்கிறேன். சமீபத்தில் ஐயோ பாவம் சுண்டு நாவல் படித்தேன். பல முறை கூகிளில் உங்கள் பெயரைப் போட்டுத் தேடிப் பார்த்து இருக்கிறேன்(6-7 மாதங்கள் முன்னால் வரை). கடுகு, அகஸ்தியன், பி.எஸ்.ரங்கனாதன் என்று எல்லாப் பெயரையும் அடித்துத் தேடியிருக்கிறேன். அப்படித்தான் அப்புசாமி.காம் படிக்கக் கிடைத்தது.
    லைப்ரரியில் அகஸ்தியன் நாவல்கள் வேண்டும் என்று கேட்டால், ஒருத்தர் சொல்கிறார் - அகஸ்தியர் அருள் வாக்கு எல்லாம் ஜோதிடப் பகுதியில் கிடைக்கும் என்று! என்னத்தை சொல்ல!! அப்புறம் கமலா, தொச்சு, அங்கச்சி என்று ரெஃபரன்ஸ் வார்த்தைகள் கொடுத்து விட்டு வந்தேன். நேற்று மறுபடியும் கூகிள் ஆண்டவர் துணையுடன் தேடினால் ... இந்த பிளாக் கிடைத்தது ! நேற்றிலிருந்து மாங்கு மாங்கு என்று ஐந்து மாதப் பதிவுகளையும் படித்துக் கொண்டு இருக்கிறேன். இப்போதுதான் டிசம்பர், ஜனவரி மாத பதிவுகளைப் படித்து முடித்தேன். சார், நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான். எவ்வளவு பெரியவர்களுடன் எல்லாம் பழகியிருக்கிறீர்கள்!. நாங்களும் கொஞ்சம் லக்கிதான். அதனால்தான் உங்கள் எழுத்துக்களைப் படிக்க முடிகிறது. திரு கல்கி, திரு சுஜாதா பற்றி நீங்கள் எழுதியிருந்ததைப் படித்த போது, ரொம்பவும் நெகிழ்ச்சியாக இருந்தது. உண்மையில் நான் எப்படி உணர்ந்தேன் என்று எனக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை. இன்றைக்கு அந்த மாபெரும் எழுத்தாளர்களைப் பற்றி இணையத்தில் சிலர் போகிற போக்கில் கமெண்ட் அடிப்பது எனக்கு வருத்தமாக இருக்கும். அவர்கள் எழுத்தாளர்கள் மட்டும் அல்ல, மனித நேயம் மிகுந்த மாமனிதர்கள் என்பதை அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

    சுஜாதாவின் கதைகள் தினமணி கதிரில் வெளி வந்ததில் உங்கள் பங்கு மிக அதிகம் என்பதை அறியும்போது(இதை நீங்கள் ரொம்ப இயல்பாக, சாதாரணமாக சொல்லி இருக்கிறீர்கள்) உங்கள் உயர்ந்த பண்பு வெளிப் படுகிறது சார். காரணம் ஒரே துறையில் இருக்கும்போது(எழுத்துத் துறையில்) பொறாமை என்பது சிறிதும் இல்லாமல் இருந்திருக்கிறீர்களே! கிரேட்!!!.


    தொடர்ந்து எழுதுங்கள், எங்களைப் போன்ற வாசகர்கள், உங்கள் எழுத்துக்களைப் படிக்க வேண்டும் என்ற தீராத தாகத்துடன் இருக்கிறோம்.

    அன்புடன்


    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete
  10. மந்திரி மட்டும் இல்லை எப்பேர்பட்ட வி ஐ பி யை தெரிந்திருந்தாலும்...அவர்கள் பி.ஏ மனசு வைத்தால் தான் காரியம் நடக்கும்.. அவர்களை விட அவர்கள் பி. ஏ க்கு தான் இன்ப்ளுஎன்ஸ் அதிகம் எல்லா இடத்திலேயும்

    ReplyDelete
  11. why you are not adding "vote" links to indli or any other websites in your posts?

    ReplyDelete
  12. <<< Altruist said...

    why you are not adding "vote" links to indli or any other websites in your posts? >>>

    அதெல்லாம் எப்படி செய்வது என்று எனக்குத் தெரியாதே..அதானால் உங்களுக்கு/எனக்கு என்ன லாபம் என்பதும் தெரியாது. கொஞ்சம் சொல்லிக் கொடுங்களேன்...

    ReplyDelete
  13. லாபம்னு பெருசா ஒண்ணுமில்ல உங்க ப்ளாக்/போஸ்ட் பிரபலமாகும்.....எதுவும் எழுத தெரியாத சில பெறலாம் (ப்ளாக் உலகில் - நிஜ உலகில் நீங்கள் பிரபலம் தான்) பிரபலம் ஆகும்போது உங்க போஸ்டும் பிரபலம் ஆகலாமேன்னு சொன்னேன்..

    ReplyDelete
  14. The following links will guide you on sharing your posts:

    In indli website:
    http://ta.indli.com/static/indli-voting-widget-tamil

    In tamil10 website: http://www.tamil10.com/submit/

    In namkural website: http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-23-35-07/2009-05-01-00-42-19/6137-how-to-add-vote-button

    ReplyDelete
  15. Altruist அவர்களுக்கு..
    நன்றி

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!