February 14, 2010

அல்லா பக் ஷ்

முப்பது  வருஷமாக அதே "பீட்'டில் தபால் வினியோகம் செய்து வரும் தபால்காரர் அல்லா பக் ஷ்.. அந்தப் பகுதி மக்களின் ஒரு பிரியமான நபர்; நண்பர். எல்லாக் குடும்பங்களின் நல்லவைக் கெட்டவைகளைத் தெரிந்து  வைத்துக் கொண்டு, தேவையான (பல சமயம் தேவையற்ற) இலோசனைகளையும் தருவார்.அவருக்கு வினியோக நேரம் என்கிற ஒழுங்கெல்லாம் கிடையாது. அவர் கொண்டு வந்து கொடுக்கிற நேரம் தான் டெலிவரி டைம் என்று நாம் வைத்துக்  கொள்ள வேண்டும்.
         வயதுக்கு மீறிய வயோதிகத் தனம். கவனிப்பாரற்ற தோட்டத்தில் வளரும் புல் மாதிரி வளர்ந் திருக்கும் தாடி, மீசை. காக்கி நிற யூனிபாரம். தலையில் குல்லாய். பளபளக்கும் பேட்ஜ். தோளில் பை. காதில் பென்ஸில். நடையில் ஒரு விந்தல்.தெருக்கோடிக்கு வரும் போதே சிலர் "என்ன போஸ்ட் மேன், லெட்டர் இருக்குதா?'' என்று அவரை அணுகிக் கேட்பார்கள்.
அருகில் உள்ள வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்தால் அரை மணிக்கு நகர மாட்டார். அங்கேயே போகிறவர்கள் வருகிறவர்களைக் கூப்பிட்டு வினியோகம் பண்ணிவிடுவார்!
"எலே... ஜிப்பிரமணி... இப்படி வா... இந்தக் கடிதாசியை உங்க வூட்டு மாடியிலே இருக்கிறவங்ககிட்ட கொடுத்துடு... போவச்சே டீக்கடைக்காரரை இங்கே வரச் சொல்லு... அட சொல்லுடான்னா... மணியார்டர் வந்திருக்குதுன்னு சொல்லு, உய்ந்து அடிச்சிக்கினு ஓடி வருவான்... இங்கே வந்தாதானே தெரியும் வக்கீல் நோட்டீஸ்னு... யாரு... ஜானகி அம்மாவா... கோவிலுக்கு போயிட்டுப் போவறியா... இப்படி அந்த வாழைப்பழத்தைக் கொடுத்துட்டுப் போ... லெட்டரா?... நேத்துதானே கொடுத்தேன். மருமவளுக்கு மூணு மாசம்னு சம்பத்து எழுதியிருந்ததே. இன்னிக்கு என்ன நாலு மாசம்னு கடிதாசி வருமா..?.''
"அடப்பாவி. எல்லா லெட்டரையும் படிச்சுட்டுத்தான் கொடுக்கறையா?.. உன் பேரில் கம்பளைண்ட் கொடுக்கணுமடா...''
"கொடேன்... போஸ்டல் சூப்ரண்ட் நான் பார்த்து வளர்ந்த புள்ளை.
அவருக்கு. அப்பாயின்ட்மென்ட் ஆர்டரே நான்தானே டெலிவரி பண்ணேன் அரை நிஜார் போட்ட புள்ளாண்டானா அந்த வூட்லே இருக்கறப்ப புடிச்சியே தெரியுமே... கம்பளைண்ட் கொடுக்கிறாங்களாமில்லை...என்ன வக்கீல் ஜகன்னாதன் சார்... இப்படி வாங்க... ஏழு ரிஜிஸ்தர் லெட்டர் இருக்குது. நீங்க கட்சிக்காரன் செலவிலே நோட்டீஸ் விடறீங்க... அல்லாம் ’ரிஃப்யூஸ்ட்' போட்டு திரும்ப வரது... நான்தானே டெலிவரி பண்ண வேண்டியிருக்குது... உங்க வூட்டு மாடி ஏறி வர்றதுக்குள்ளேயே உசிர் போய் உசிர் வர்றது... எனக்குத்தான் கால், சாய்காலாச்சே. ஆமாம் சார்... உங்களை நானே கேக்கணும்னு இருந்தேன்... எனக்காக ஒரு நோட்டீஸ் கொடுக்கணும். நம்ப திம்மாவரம் நிலத்திலே வேலி போட்டிருந்தேன். பக்கத்து நிலத்துக்காரன்......''
           "அல்லா பக் ஷ், நீங்க கோர்ட்டுலே வந்து பாருங்க... இப்படி நடு ரோடுலே, அதுவும் நீங்க டூட்டி பார்த்துக் கொண்டிருக்கறப்போ நோட்டீஸ் விவகாரம் எல்லாம் எதுக்கு?''
            வக்கீல் போனதும், "அல்லா பக் ஷ்  பீஸ் கொடுக்கமாட்டானோன்னு நழுவிப் போவறார் வக்கீல்... யோவ்... யோவ்... சைக்கிள்ளே போற சபாபதி... இப்படி வா... இந்த பார்சலை கோடியிலே இருக்கிற புஸ்தக் கடையிலேலே இறக்கிட்டுப்போ... நான் அப்பாலே போய் கையெழுத்து வாங்கிக்கிடறேன்... சைக்கிள்தானே தூக்கிப்போவுது. கெடந்து அளுவறயே... இல்லாக்காட்டி நான்தான் சுமக்கணும்'' என்று கூறி நாலு கனமான பார்சலை அனுப்பி வைப்பார்.
"யாரு அத்தையம்மாவா?... ஒரே வெய்யில்... ஜில்லுன்னு தூத்தம் கொடுங்கோ... ஆத்திலே என்ன விசேஷம்... அமாவாசை கூட இல்லையே... ஆமாம், காஞ்சீவரம் போய் அத்திவரதரை சேவிச்சுட்டு வந்தேளா?   திவ்யமாய்ப் பெருமாளைச் சேவிக்காமல் தளிகை உள்ளிலேயே இருக்கறீங்களே?'' - சுத்தமாகப் பிராமண பரிபாஷையில் அல்லா பக்‌ஷ்  பேசுவார்.
           "அல்லா பக்ஷு... ஒனக்கு என்னமாடா இவ்வளவு நன்னா எங்க பாஷை வந்துடுத்து!  இரு, மோர் கொடுக்கறேன்'' என்பாள் ஒருவிதப் பரிவுடன்.
            சிலர் வீட்டில் கவரைக் கொடுத்துவிட்டு அங்கே நின்று கொண்டிருப்பார். கவரைப் பிரித்து அவர்கள் கடிதத்தைப் படித்த பிறகு, "என்ன சேதி' என்று கேட்டறிந்து கொண்டுதான் போவார். "எப்போ வருது பார்த்தசாரதி அமெரிக்காவிலிருந்து? ஆச்சே, போய் மூணு வருஷம் ஆவலை?'' என்பார்.
தீபாவளி, பொங்கல் என்றால் அல்லா பக் ஷ் யார் வீட்டிலும் போய் இனாம் என்று கேட்க மாட்டார். அவர்களாகவே ஐந்து, பத்து என்று கொடுத்துவிடுவார்கள். இல்லாவிட்டால் அவர்களுக்குப் பண்டிகை பூர்த்தியான திருப்தியே இருக்காது!

11 comments:

  1. As usual I can visulaize the character with your narrations. Due to the invasion of emails ans SMSs such characters are extinct and can be found only in your writings.Thanks..

    ReplyDelete
  2. Fabulous characterisation. I have come across such postmen in the past - pre_Courier_Era! Such postmen, vegetable vendors(keeraikkaari), and family doctors formed, in that era, our family. I mean to say they were "members of our family".

    Thanks for a true characterisation.

    ReplyDelete
  3. I also join the chorus in appreciating your pen sketch and thanking you for the post - as usual! Ivvalavukku appuramum ungalukku jaladhosham varaama paarthukkongo! - R. Jagannathan

    ReplyDelete
  4. ஜலதோஷம் வராது. எல்லாம் அவன் அளிக்கும் பிச்சை என்பது எனக்குத் தெரியும்.
    உங்கள் பாராட்டுகளைப் படித்து கர்வப்பட்டால், கல்கியின் பக்தன் என்று சொல்லிக்கொள்ள எனக்கு தகுதியே கிடையாது.

    ReplyDelete
  5. இவ்வளவு சரக்கு எங்க தலைவா கிடைக்குது. ரொம்ப நல்லா இருக்குது

    ReplyDelete
  6. அல்லா பக் ஷ் கூடவே நானும் அமர்ந்து இருந்த பீலிங் படிக்கும்போது கிடைக்கிறது.

    ReplyDelete
  7. பிரமாதம்! ஆஹா! எழுத்தே வரம்தான்! அதிலும் எல்லோரையும் சந்தோஷப்பட வைக்கற எழுத்துக்கள்!

    ReplyDelete
  8. கேரக்டர் அல்லா பஷ் நல்லா இருக்கு

    ReplyDelete
  9. பாராட்டுகளுக்கு நன்றி.

    ReplyDelete
  10. ஒரு கிராமத்து தபால்காரரின் உருவத்தை எழுத்தில் சிறப்பாகச் செதுக்கியிருக்கிறீர்கள்.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!