டாகடர் ஜலகண்டபுரம் ராமசாமி கிருஷ்ணமூர்த்திக்கு ( ஜே,ஆர்.கே) பத்மஸ்ரீ விருது கிடைத்தது பற்றி எழுதி இருந்தேன். வழக்கமாகப் பாராட்டு விழா நடத்தி
தங்கள் படத்தைப் பேப்பபரில் போட்டுகொள்ளும் “பண்பாட்டுக் காவலர்கள்' கூட அவரைக் கண்டு கொள்ளவில்லை.
அவருடைய தம்பி பாக்கியம் ராமசாமி அவர்களும், டாக்டரின் பிள்ளைகளும் சேர்ந்து ஒரு குடும்பப் பாராட்டு ப்ளஸ் சாப்பாட்டு விழா நடத்தினார்கள். ரா.கி. ரங்கராஜன், கிரேசி மோகன், எஸ், வி, சேகர், நகைச்சுவை எழுத்தாளர் ஜே. எஸ். ராகவன், ராணி மைந்தன். ’கல்கி’ சாருகேசி, ஹிந்து நடராஜன், அறந்தை மணியன், கல்கி சந்திரமௌலி, பூர்ணம் தியேட்டர்ஸ் எம். பி. மூர்த்தி, எழுத்தாளர் காந்தலக்ஷ்மி, புகைப்பட நிபுணர் கிளிக் ரவி, நகுபோலியன் மற்றும் பல எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள்.
இரண்டு மணி நேரம் நடந்த இந்த விழாவில் பேசியவர்கள் உண்மையாகப் பேசினார்கள்; உண்மையாகப் பாராட்டினார்கள்.
முப்பது வருடம் கழித்து ஒரு இந்திய மருத்துவ முறை டாக்டர் ஒருவருக்கு விருது கிடைத்திருக்கிறது. இதற்கு முன் விருது பெற்றவர் கூட டாகடர் கிருஷ்ணமூர்த்தியின் நெருங்கிய நண்பர்.
இந்த விழாவின் ஹைலைட் : எண்பதைக் கடந்த இந்த டாக்டரின் பிள்ளைகள், மாப்பிள்ளை, நாட்டுப்பெண், தம்பி பிள்ளைகள் ஆகியவர்கள் பேசியவைதான். எல்லாரும் இருதய டாக்டர்கள், எம். பி. ஏ. பட்டம் பெற்றவர்கள், குழந்தை மருத்துவர்கள் மற்;றும் உயந்த பதவியில் இருக்கும் எளிமையானவர்கள். ( டாக்டரிடமிருந்து எளிமை ’தொற்றி’ கொண்டிருக்க வேண்டும்!)
அவருடைய பிள்ளைகள் கூறியது: எங்கள் அப்பாதான் எங்களுக்கு ரோல் மாடல். அடுத்த ஜன்மத்திலும் அவருக்குப் பிள்ளையாகப் பிறக்க வேண்டும் எனபதே. எங்கள் பிரார்த்தனை. மாப்பிள்ளையும் ”அவர்தான் ரோல் மாடல்” என்று சொன்னார். மருமகள் கவிதை படித்தார். “ மாமாவால்தான் என் பிள்ளகளையும் நான் முன்னுக்கு கொண்டு வர முடிந்தது” என்று ஒரு மருமான்(60+) பேசினார்.
இந்த குடும்பம் ஒரு நிகரில்லாப் பல்கலைக் கழகம் ( கவனிக்கவும்: நிகர்நிலைப் பல்கலைக் கழகம்’ என்று நான் மறந்துபோய்கூட சொல்லாததை!)
பின் குறிப்பு: படத்தில் நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி அவர்கள் இல்லை. படம் அவர்தான் எனக்கு அனுப்பினார். பாருங்கள், தான் இல்லாத படங்களைப் பொறுக்கி எடுத்து அனுப்பி இருக்கிறார். எளிமை என்பது இதுதான்!