December 29, 2014

கமலா கன்ஸ்ட்ரக் ஷன்ஸ்


ஒரு கணம் என் கண்களையே என்னால் நம்பமுடியவில்லை. கனவா, நிஜமா என்று புரியவில்லை. நிதர்சனமா, பிரமையா என்று தெரியவில்லை!

தொச்சு.. என் அருமை கமலாவின் அருமைத் தம்பி தொச்சு என் முன்னே கட்டுக்கட்டாய் ரூபாய் கட்டுகளை வைக்கிறான். "அத்திம்பேரே, இந்தாங்க பணம் என்கிறான்.

என்ன அதிசயம்? தொச்சு கை நீட்டி கொடுத்ததாக வரலாறே கிடையாது. வாங்கி வாங்கி சிவந்த கை அவனுடையது. அப்படிப்பட்டக் கறவை திலகம் எனக்கு - ஏமாந்த சோணகிரி சங்கத்தின் தலைவரான எனக்கு - பணத்தைக் கொடுக்கிறான்!

கமலா, பற்களுக்கு இடையில் முகமாகத் திகழ்கிறாள். கதவை ஒட்டி நின்று கொண்டிருந்த என் மாமியார்,  ஒலிம்பிக்கில்   தானே மெடல் வாங்கி வந்ததைப்போல் முகம் மலர்கிறார்!

`என்னப்பா இது' எங்கேயாவது லாட்டரி அடிச்சியா?'' என்று கேட்டேன்.

`காலத்துக்கும் தொச்சு உங்க கிட்டேயிருந்து பணம் வாங்கிக் கொண்டெ இருப்பான்னு நெனைச்சிங்களா!'' என்றான் உற்சாகமாக!

`அதில்லைடா... கொள்ளை அடிச்சுண்டு வந்தேயா, பிக்பாக்கெட் பண்ணிண்டு வந்தேயான்னு கேட்க மறந்துட்டார்.  ஒரு தத்துப் பித்து கதை எழுதி ரூபாய் சம்பாதிச்சா அது பெரிசு! மத்தவங்க நாயா அலைஞ்சு பேயா திரிஞ்சு சம்பாதிச்சா, அது கள்ள நோட்டு, பிக்பாக்கெட் பணம்!'' தொச்சுவின் உடன் பிறந்த சகோதரியின் பாகற்காய் + எட்டிக்காய் ஜூஸ்  வார்த்தைகள்!

"கமலா, நான் தொச்சுவைக் கேட்கறேன்; அவன் சொல்றான். நீ என்ன, நடுவில்?'' என்றேன்.

`பழங்காநத்தத்திலே நாம மனை வாங்கினோமே, ஞாபகமிருக்கா? அது பழங்காநத்தம் இல்லை. குப்பையெல்லாம் கொட்டிய பழங்கா நாத்தம்னு கூட நீங்களே சொல்வீங்களே!''

"அதுக்கு என்ன வந்தது?அதுல போட்ட பணத்திற்கு எப்போதோ எள்ளு போட்டாச்சே!''

"நீங்க போடுவீங்க,...ஆனால் அவனுக்கு மனசே சரியில்லை. நம்மால அத்திம்பேருக்கு நஷ்டமாயிடுத்தேன்னு வருத்தம்... வருத்தம்''.

"கமலா...சட்டுனு விஷயத்துக்கு வா. அந்த பிளாட்டை யார் தலையிலேயாவது கட்டிட்டானா?'' 

"கட்டறதா... பக்கத்திலே ஒரு இண்டஸ்ட்ரி வர்றது. அவங்களுக்குப் போகறதுக்கு வழி நம்ப பிளாட்தான். நல்ல விலை கொடுத்தான். நாம எப்பவோ பாதி பாதி பணத்தைப் போட்டு பத்தாயிரத்துக்கு வாங்கினோம். இப்போ எண்பதாயிரத்திற்குப் போயிருக்கு... உங்க பங்கு நாற்பதுதான் இது'' என்றான் தொச்சு.

"பரவாயில்லைப்பா...பிளாட் வாங்கி வித்தால் நல்ல லாபம் வரும்போல இருக்கே! ஆமாம்,.பாதி பாதி பணம் போட்டோம்னு சொன்னியே. உன் பங்கு 5000 ரூபாயை என் கிட்ட கடனாக வாங்கிண்டே இல்லயா? இதுவரை அந்த பணத்தைத் தரலையே?''

December 21, 2014

என் புத்தக முன்னுரைகள்

நான் எழுதிய “கமலா, கலியாணமே, வைபோகமே” புத்தகம் 1985-ம் ஆண்டு வெளியாயிற்று. புத்தகத்தின் முதல் பக்கத்தில் நான் சில குறும்புக் குறிப்புகளை எழுயிருந்தேன். அவற்றை இங்கு தருகிறேன்.       
முன்னணி நகைச்சுவையாளர்களின் பாராட்டுகள்

சோ:  உங்கள் நகைச்சுவை கதைகளைப் படித்து ரசித்தேன். உடனே எரிச்சலும் அடைந்தேன். இந்த மாதிரி அபாரமான நகைச்சுவை நமக்கு எழுத வரவில்லையே என்று என் தலைமுடியைப் பிய்த்துக் கொண்டேன். ஏதோ ஒப்புக்குச் சொல்லவில்லை. வேண்டுமானால் வந்து என் தலையைப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் மாதிரி நகைச்சுவை எழுத்தாளர்கள் எங்கேயோ இருக்க வேண்டும். உதாரணமாக, வட துருவம், சஹாரா பாலைவனம், இமய மலை உச்சி!

சாவி :  நீங்கள் பிரமாதமான நகைச்சுவை எழுத்தாளர் என்பதை மறுபடியும் நிரூபித்து விட்டீர். ஆமாம், எத்தனை தடவை நிரூபித்தாலும் யாரும் நம்பத் தயாராக இல்லையே! நீங்கள் தமிழில் எழுதுவதற்குப் பதில் புஷ்டு, ஸ்வாஹிலி போன்ற மொழிகளில் எழுதிப் பாருங்கள். அப்போதாவது நம்புகிறார்களா என்று பார்க்கலாம்....

பாக்கியம் ராமசாமி:  ஹைய்யோ... ஹைய்யோ... வயிறு புண்ணாய்ப் போய்விட்டது. ! உமக்கு கோவில் கட்டி அதில் உள்ளே விட்டு பூட்டுப் போட வேண்டும். (வயிறு புண்ணானதுக்குக் காரணம், ஒரு வாரம் ஆந்திர சாப்பாடு!)
             
ரா.கி. ரங்கராஜன்:  எவ்வளவு நாளைக்குத்தான் இப்படி உருக்கமான கதைகளை எழுதுவீர்கள்?  நகைச்சுவையாக எழுதினால் ஏன்ன?.... ஆமாம், விலை ரூ.18 என்று போட்டிருக்கிறீர்களே, கிலோ ரேட் தானே அது?

சுஜாதா:  உங்கள் புத்தகத்தை இத்துடன் 17 காபிகள் வாங்கி விட்டேன். அவைகளை என் எதிரிகளுக்கு அனுப்பியிருக்கிறேன். அதைப் படித்து அவர்கள் பாயைப் பிராண்டட்டும்.       

December 13, 2014

பாடாதே கமலா!

சுவாரசியமில்லாமல் டி.வி. யைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
அந்தச் சமயம் என் அருமை மனைவி கமலா, "கிளம்புங்க", என்றாள்.
"எங்கே கமலா?" என்று பயந்தபடியே கேட்டேன். கமலா என்னை எங்கேயாவது அழைத்துப் போகிறாள் என்றால், எனக்குச் செலவு நிச்சயம் என்பது அர்த்தம்!

"என்னவோ தூக்குமேடைக்குப் போறவன் மாதிரி பெதபெதன்னு நடுங்கறீங்களே... ஒண்ணும் பயப்பட வேண்டாம். உங்க பணத்திற்குச் செலவு வைக்கலை... சும்மா நம்ப பெசன்ட் நகர் பிள்ளையர் கோவில் வரைக்கும் போய்ட்டு வரலாம். வாங்கோ'' என்றாள்.
“கோவில்ல என்ன விசேஷம்?''
“ஸ்ரீராமநவமி கச்சேரி நடக்கிறது. இன்னிக்கு மைலாப்பூர் மகளிர் மன்றம் பஜன் நடத்தறாங்க. ரொம்ப நல்லா இருக்குமாம். போய்க் கேட்டுட்டு வரலாம்.''
“இல்லை கமலா...'' என்று இழுத்தேன்.
“இந்த டி. வி. யைத் தூக்கிக் கடாசிடப் போறேன். எப்பப் பார்த்தாலும் டி. வி. தானா...? அதுலேயும் இந்தச் சோப்பு விளம்பரமாப் போட்டு, எல்லாத்திலேயும் பொண்ணு குளிக்கிறதைக் காட்டறானா. அதை அலுக்காமல் பார்த்துண்டு இருங்கோ...''
“இல்லை கமலா...!''
“கொஞ்சாதீங்கோ... அந்த மன்றத் தலைவியின் வீட்டுக்காரர் தொச்சுவுக்குப் பெரிய கான்ட்ராக்ட் தரப் போறார். அதனால் தொச்சு உங்களையும் அழைச்சுகிட்டு வரச் சொன்னான். நாம் போனா அவனுக்குப் பெருமை. என் தம்பி தொச்சுவுக்கு ஏதாவது அனுகூலம் கிடைச்சால், உங்கள் கப்பல் கவிழ்ந்துடுமா?''
''தொச்சு கவிழ்க்க இனிமேல் என்னிடம் கப்பல் இல்லை'' என்னறு மனதுக்குள் சொல்லிக் கொண்டு டி. வி. யை அணைத்து விட்டுக் கமலாவுடன் கிளம்பினேன்.

December 05, 2014

வியப்பு.. மேலும் வியப்பு

 FASTFOOD சேவை
சிகாகோவில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்டமான மருத்துவர் மகாநாட்டில் என் பெண் கலந்து கொண்டாள். பிரம்மாண்டம் என்றால் சாதாரண பிரம்மாண்டம் இல்லை. 25,000 -க்கும் மேற்பட்ட புற்று நோய் மருத்துவர்கள் கலந்து கொள்ளும் நான்கு நாள் மகாநாடு. மிகப் பெரிய ஹோட்டலில், ஏராளமான அறைகளிலும், கூடங்களிலும் பல்வேறு  கூட்டங்கள்; ஆராய்ச்சி உரைகள், பெரிய பெரிய விளக்கப் போஸ்டர்கள்,  எலக்ட்ரானிக் அறிவிப்புப் பலகைகள், ஆங்காங்கே ஃபாஸ்ட் ஃபுட் வசதிகள்  என்று திருவிழா!

ஒரு நாள் சுமார் பகல் 12 மணி வாக்கில் என் பெண் கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கக் கூட்டம் நிறைவடைந்தது. அவள் 12.30 மணி நடை பெறும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தாள். அந்தக் கூட்டம்  சற்று தள்ளி 10  நிமிடம்  நடந்து போகும் தூரத்தில் இருந்தது.  “சரி.. வராந்தாவில் இருக்கும் ஃபாஸ்ட் ஃபுட் கவுன் டரில் அவசரமாகப்  பகலுணவுச் சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்று எண்ணி அங்கு போனாள்.,  ”மேடம்.. பில்லிங் மெஷின் வேலை செய்யவில்லை. சூபர்வைசர்  இதோ  வந்து விடுவார்” என்றார் ஒரு சர்வர் பெண்மணி.
“பரவாயில்லை.. பில் அப்புறம் வாங்கிக் கொள்கிறேன்.”
“ அப்படி வாங்கிக்கொள்ள முடியாது. அதை திறந்தால்தான் பாக்கி சில்லறை தரமுடியும்”
“ இந்தாருங்கள். இது, இது, இது -- இந்த மூன்றும் எடுத்துக் கொள்கிறேன். இந்தாருங்கள் 25 டாலர். மீதியை அடுத்த கூட்டம் முடிந்த பிறகு வந்து வாங்கிக்கொள்கிறேன்” என்றாள்.
” நீங்கள் இப்போது பணம் கொடுக்க வேண்டாம். அப்புறம் வந்து கொடுங்கள்” என்றாள் அந்தப் பெண்மணி.

November 24, 2014

பென்குரியனும் பில் கேட்ஸும்

 சில பதிவுகளுக்கு முன்பு இஸ்ரேலின் முதல் பிரதமராக இருந்த பென் குரியனைப் பற்றி எழுதி இருந்தேன். ( இங்கே சொடுக்கவும்: பென் குரியன் பதிவு
அதில் ஒரு சுவையான தகவலை எழுத விட்டு விட்டேன். அதை இங்கு தருகிறேன்.

இன்னிக்கு உங்கள் வேலை
David Ben-Gurion
 பென் குரியன் பிரதமராக இருந்த ஒரு சமயம் (செப்டம்பர் 1953 வாக்கில்) தன் வீட்டில் சில நண்பர்களுடன் டின்னர் சாப்பிட்டு விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது சமையலறையிலிருந்த அவருடைய மனைவி குரல் கொடுத்தாராம் ”பென் குரியன். இன்னிக்கு உங்க டியூட்டி” என்று,

“ எக்ஸ்கியூஸ் மீ.. ஒன் மினிட்” என்று நண்பர்களிடம் சொல்லிவிட்டு, சமையலறைக்குப் போய் பாத்திரங்களைத் தேய்த்து வைத்து விட்டு வந்தாராம். அன்று  அவர் பாத்திரம் தேய்க்க வேண்டிய முறை தினமாம்!

இப்போது இதை எழுதியதற்கு ஒரு காரணம் இருக்கிறது:

’மைக்ரோஸாஃப்ட்’ பில் கேட்ஸின் மனைவி   MELINDA GATES, ’டைம்ஸ்’ வார இதழின் பத்துக் கேள்விகள் என்ற பகுதியில் இந்த வாரம்   இடம் பெற்றிருக்கிறார்..
Melinda Gates
அதில் வந்த ஒரு கேள்வியும் பதிலும் இதோ.
டைம்ஸ் நிருபர்: உலகின் மிகப் பெரிய பணக்காரர் (பில் கேட்ஸ்) எப்போதாவது பாத்திரம் கழுவி எடுத்து வைப்பாரா?

MELINDA GATES:  உண்மையைச் சொல்லப் போனால் ‘இல்லை’  இரவு டின்னருக்குப் பிறகு, எல்லாரும் சேர்ந்து இந்த வேலையைச் செய்வோம்.
பாத்திரங்களைக் கழுவுகிற வேலை அவருக்குப் பிடிக்கும்.
அவருடைய வீட்டில் சகோதரியுடன் வளர்ந்தவர். சகோதரியும் அவரும் சேர்ந்து பாத்திரங்கள் கழுவுவது வழக்கம்.
பாத்திரங்களை டிஷ் வாஷரில்   ’லோட்’ செய்ய  அவருக்குப் பிடிக்கும். கழுவின பாத்திரங்களை எடுத்து வைக்கும் வேலை பிடிக்காது... அல்லது, இப்படி வைத்துக் கொள்ளுங்கள். எடுத்து வைக்கும் வேலையை அவர் செய்வதற்கு நாங்கள் விடுவதில்லை!

November 17, 2014

அன்புடையீர்,

வணக்கம்.

அடுத்த பதிவு தாமதமாக வரும்.

எனக்குச் சற்று ஓய்வு தேவைப்படுகிறது.

-கடுகு

# # # # # # # # # # # # 

November 03, 2014

ஐன்ஸ்டீன்- தெரிந்த பெயர்; தெரியாத தகவல்கள்


ஐன்ஸ்டீன்,  தனது UNIFIED CONCEPT THEORY என்ற கோட்பாட்டை அறிவித்து, அது உலகம்  முழுதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருந்த சமயம்  நடந்த நிகழ்ச்சி.
ஐன்ஸ்டீன் நியூயார்க்கில் தனது நண்பரின்  வீட்டில்2,3 நாட்கள் தங்கி இருந்தார். பிறகு அவர் தன் சொந்த ஊரான பிரின்ஸ்டனுக்குப் போனார். 
அவர் சென்றதும், அவர் தங்கி இருந்த அறையை வேலைக்காரப் பெண்மணி பெறுக்கப் போனார் . அறை சுவற்றைப் பார்த்தும் அதிர்ச்சி அடைந்தார். காரணம் சுவர் பூராவும் ஏதேதோ  எண்கள் எழுதப்பட்டிருந்தன. அத்துடன்  குறிப்புகளும் எழுதப்பட்டிருந்தன.  ஐன்ஸ்டீன் ஏதோ கிறுக்கித்தள்ளி இருந்தார்.
வேலைக்காரப் பெண்மணி தன் எஜமானரைக் கூப்பிட்டுக் காண்பித்தார். எல்லாம் கணித சூத்திரங்களாக இருந்தன.
ஐன்ஸ்டீனின் நண்பர்   உடனே இரண்டு பேருக்குப் போன் செய்தார். முதலில் ஐன்ஸ்டீனுக்குப் போன் பண்ணி, அந்த சுவரில் எழுதி இருப்பதைப் பற்றிக் கேட்டார். " ஓ, அவையெல்லாம் என் தியரி தொடர்பான சூத்திரங்கள்”‘என்றார்.

‘அப்படியா..சரி” என்று சொல்லிவிட்டு, போனை வைத்து விட்டார்அடுத்து,அவர்  பெரிய கண்ணாடி கடைக்குப் போன் பண்ணினார். ஐன்ஸ்டீன் ‘கிறுக்கிய’ கணித சூத்திரங்கள் பாதுகாப்பாக இருக்க, சுவர் அளவு கண்ணடி சட்டம் போட ஆர்டர் கொடுத்தார்!
*    *        *
ஒரு சமயம் ஐன்ஸ்டீனுக்கு ஒரு கடிதம் வந்தது. “ நீங்கள் மிகச் சிறந்த சிந்தனையாளர் . உங்களுடைய மிகச் சிறந்த ஆறு எண்ணங்களை, எங்கள் கமிட்டிக்குத் தெரியப்படுத்தினால் மிக்க மகிழ்ச்சி அடைவோம்” என்று கேட்டிருந்தார்கள்.
இதற்கு ஐன்ஸ்டீன் எழுதிய ஆறு வார்த்தைப் பதில்: கடவுள், தேசம், மனைவி, கணிதம், மனித சமுதாயம்,உலக அமைதி!”
*    *        *

October 23, 2014

புத்தக வேட்டை


ON BOOKS:
These are not books, lumps of lifeless paper, but minds alive on the shelves. From each of them goes out its own voice…and just as the touch of a button on our set will fill the room with music, so by taking down one of these volumes and opening it, one can call into range the voice of a man far distant in time and space, and hear him speaking to us, mind to mind, heart to heart.--Gilbert Highet
***************************
ஞாயிற்றுக் கிழமைகளில்  டில்லி செங்கோட்டை செல்லும்  தாரியாகஞ்சின் அரைமைல் நீள நடைபாதையில்  பழைய புத்தகங்கள் கொட்டிக் கிடக்கும். தாரியாகஞ்சின் வெகு அருகில் இருந்த மின்டோ ரோடில் என் வீடு இருந்ததால் அடிக்கடி போய் வருவேன்.

அறுபதுகளில், ஒரு சமயம் பியர் டேனினாஸ்  (PIEERE DANINOS 1913-2005 ) என்ற பிரஞ்சு எழுத்தாளர் எழுதிய  LIFE WITH SONIA  என்ற புத்தகம் (ஆங்கில மொழிபெயர்ப்பு) கிடைத்தது. நகைச்சுவைப் புத்தகம் என்று போடப்பட்டிருந்ததால், விலையைப்பற்றி  யோசிக்காமல் முழுதாக ஒரு ரூபாய் கொடுத்து வாங்கி விட்டேன்!

தன் மனைவியைக் கிண்டல் அடித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சூப்பர் புத்தகம். ( பின்னால் அவர் கட்டுரை ஒன்றைத் தமிழ்ப்படுத்திப் போடுகிறேன்!) அதன் பிறகு, மேஜர் தாம்ப்ஸன் என்ற கதாபாத்திரத்தை வைத்து அவர் எழுதிய மூன்று லட்டு புத்தகங்களைத் தேடிப் பிடித்து வாங்கினேன்.  இவரது புத்தகங்கள் 28 மொழிகளில்  வெளிவந்துள்ளன.

October 06, 2014

தொச்சு பகவான்



தொச்சுவை பார்த்தபோது எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. பல சமயம் -ஏன் ஒவ்வொரு சமயமும் என் மைத்துனன் தொச்சுவைப் பார்த்ததும் தூக்கிவாரிப் போடுவது சகஜம்தான். லேசான அதிர்ச்சி, கூடுதலான அதிர்ச்சி, அதிக அதிர்ச்சி என்று அதிர்ச்சியின் அளவில் மாறுதல் இருக்குமே தவிர, அதிர்ச்சி இல்லாமல் இருக்காது. ஆனால் இந்த சமயம் அவனைப் பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி சற்று அதிகமானது.

    தொச்சு காவி உடையில் இருந்தான்! காவி வேட்டி, கிட்டத் தட்ட கணுக்கால் வரை நீண்ட ஜிப்பா, ஆயிரம் தான் அங்கச்சியைத் திட்டிக்கொண்டே இருந்தாலும், துறவியாக மாறக்கூடியவன் அவன் அல்லவே!

அதிர்ச்சியிலிருந்து சுதாரித்துக்கொண்டு, “என்னப்பா இது புதிய கோலம்? உன்னை தொச்சுன்னு கூப்பிடவேண்டுமா அல்லது தொச்சு பகவான்னு கூப்பிட வேண்டுமா ....?  கமலா!  பார், யார் வந்திருக்கான்னு .... தொச்சு பகவான் வந்திருக்கிறார், பாத பூஜை பண்ணி உள்ளே “ஏள” பண்ணு என்றேன்.
    என் அருமை மாமியார் பின் தொடர, என் அருமை மனைவி கமலா, “தொச்சுவை பாதகன்னு சொல்லிக்கொண்டே இருப்பீங்க, திடீர்னு அவன் மேல் என்ன கரிசனம்? பகவான்னு சொல்றீங்க!'' என்று கேட்டுக் கொண்டே வந்தாள். தொச்சுவின் உடை அலங்காரத்தைப் பார்த்து, “என்னடா தொச்சு?.... இது என்ன வேஷம்? என்று கேட்டாள்.
    ”வேஷமும் இல்லே, கோஷமும் இல்லே. இது சும்மா ஒரு இது தான்.''
    ”என்னப்பா தொச்சு. டி வி. பேட்டியில் பதில் சொல்பவர்கள் போல், ஒரே இதுவா பேசறே?''
    ”உள்ளே வாடா, வந்தவனை வாசலிலேயே நிக்க வச்சுண்டு பேசற வழக்கத்தை எத்தனை வருஷமானாலும் விடமாட்டீங்களே!'' என்று கமலா தொச்சுவை வரவேற்றபடியே என்னையும் தூற்றினாள். சந்தடிசாக்கில் கந்தகப் பொடி வைப்பதில் கெட்டிக்காரி.
    ”அத்திம்பேர், இந்த டிரஸ்ஸைக் காவியாகப் பார்க்காதீங்க. இது கதர் துணி. சுதந்திரம் வந்து ஐம்பது வருஷம் ஆச்சு. காந்திஜி கதர் உடுத்தச் சொன்னார். ஆனால் நாம் காந்தியை மறந்து விட்டமாதிரி கதரையையும் மறக்க ஆரம்பிச்சுட்டோம் .... அதனாலே ....?''
    ”என்னப்பா, அதனால்'னு சொல்லி நிறுத்திட்டே? விளம்பர இடைவேளைக்குப் பிறகு தொடருமா'' என்று கேட்டேன். 

September 25, 2014

நெகிழ்ந்து போனேன் -2.

அவர்  என் உறவினர். ஆனால் அவர் ஓய்வு பெற்று சென்னைக்கு  வந்த சில வருடங்களுக்குப் பிறகுதான் அவரை முதல் முறையாகச் சந்தித்தேன்.அவர் கல கல ஆசாமி. என் எழுத்திற்கு ரசிகர். நகைச்சுவைப் பிரியர்.   அவ்வப்போது நீலாங்கரை வந்து  என்னை சந்தித்து அரட்டை அடிப்பார்.

அவர் பிள்ளை, பெண்கள் எல்லாம் வெளிநாட்டில் இருக்கின்றனர். அதனால் காடாறு மாதம்; நாடாறு மாதம் என்று இருந்தார்.

இப்படி இரண்டு, மூன்று வருஷங்கள் பழகி  இருப்போம்.

அவர் திடீரென்று நோய்வாய்ப் பட்டார். மருத்துவரைப் பார்க்க  அடையாறு வருவார். அப்போது சில சமயம் நீலாங்கரைக்கு வந்து  என்னுடன் அரட்டை அடித்து விட்டுப் போவார்.

“நோயினால் வலி ஏற்படும்போது உங்கள் புத்தகத்தை எடுத்துப் படிப்பேன். அந்த சமயத்தில் வலி தெரியாது”என்பார்.  என் மேல் உள்ள அன்பால் அப்படிச் சொல்கிறார் என்று  அதை எடுத்துக் கொள்வேன்.

இரண்டு வருஷங்களுக்கு முன்பு நான் அமெரிக்கா சென்றிருந்த சமயம், அவருடைய  நோய் உக்கிரம் அடைந்ததன் காரணமாக அவர் காலமானார்.

எனக்கு உடனே  செய்தி வந்தது.

இரண்டு தினங்களுக்குப் பிறகு என் ஆறுதலை தெரிவிப்பதற்கு அவருடைய மகனுக்குப் போன் செய்தேன், (வெளிநாட்டில் உலகப் பிரபல கம்பெனியில் உயர் பதவியில் இருப்பவன்.)

அவனிடம் “ உங்கப்பா காலமானது மிகவும் துயரத்தைக் கொடுத்தது. உனக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை....” என்று நான் சொல்லிக் கொண்டிருக்கும்போதே--
அவன் இடைமறித்து....
“ இல்லை....உங்கள் ஆறுதல் எங்கள் துயரத்தைச் சிறிதளவு குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை... நானே உங்களுக்குப் போன் செய்து ஒரு தகவலைச் சொல்ல நினைத்துக் கொண்டிருந்தேன். அப்பாவைத் தகனம் செய்த பிறகு சாம்பலை எங்கு கரைக்கலாம், அந்த இடமா, இந்த இடமா  என்று நாங்கள் யோசிக்கவே இல்லை. நீலாங்கரை பீச் என்று தீர்மானித்தோம். அப்பாவிற்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று உங்கள் வீட்டிற்குப் போய் உரையாடுவதுதான். ஆகவே உங்கள் வீடு இருக்கும் நீலாங்கரைக் கடலில் சாம்பலைக் கரைத்து விட்டு வந்தோம். உங்கள் வீட்டிற்கு வந்து விட்டுப் போன மாதிரி அவருடை ஆத்மாவிற்கு மன நிறைவு ஏற்படும் என்று நாங்கள் எண்ணினோம்” என்றான்.

அப்படி அவன்  துக்கத்துடன் சொன்னபோது அவன் அழவில்லை.
என் கண்கள் கலங்கின.
இப்போது இதை எழுதும்போதும்!


சிறு குறிப்பு-1: சென்ற பதிவில் போடுவதற்குத் திட்டமிட்டிருந்தேன். தனிப் பதிவாகப் போடுவதுதான்  அவருக்கு நான் செய்யக்கூடிய அஞ்சலி என்று கருதி, தனியாக வெளியிடுகிறேன்.
சிறு குறிப்பு-2: இந்தப் பதிவை அவரது மகனின் அனுமதியுடன் வெளியிடுகிறேன்.

September 17, 2014

நெகிழ்ந்து போனேன்;

 பல வருஷங்களுக்கு முன்பு அமெரிக்கா வந்தபோது நடந்த நிகழ்ச்சி.
அப்போது மிசூரி மாநிலத்தில் இருந்த  ST LOUIS  என்ற நகருக்குச் சென்று என் மைத்துனியின் பெண்ணுக்குக் கலியாணம் நடத்திக் கொடுக்கும் பொறுப்பை ஏற்று கொண்டிருந்தேன். கலியாணத்திற்கு முதல் நாள் பகல், NEWARK-கிலிருந்து   MEMPHIS போய், அங்கு விமானம் மாறி ST LOUIS போகவேண்டும்.பகல் இரண்டு மணிக்கு NEWARK விமான நிலையம் போனோம்.

சில நிமிடங்கள் கழித்து பயங்கர புயல் காற்று வீசத் தொடங்கியது. அதனால் விமானம் புறப்படத்  தாமதம் ஆகும் என்று அறிவித்தார்கள். “ முக்கால் மணிக்கு மேல் தாமதம் ஆகிவிட்டால் MEMPHIS விமானத்தைப் பிடிக்க முடியாது என்பதால்  பதைபதைப்புடன் காத்திருந்தோம். அரை மணிக்குப் பிறகு விமானம் புறப்பட்டது. MEMPHIS அடைந்ததும்  அவசரம் அவசரமாக இறங்கி வேகமாகப் போனோம்.  “ST LOUIS போகும் விமானத்தில் ஏற எந்த கேட்டிற்குப் போக வேண்டும்” என்று கேட்டோம். 32- மாதிரி ஒரு எண்ணைச் சொன்னார்கள். நாங்கள் இறங்கியது 4-ம் எண் கேட்.   அடப் பாவமே. அவ்வளவு தூரம் பெட்டியைத் தூக்கி கொண்டு பத்து நிமிஷத்தில் எப்படி   போகப் போகிறோம் என்ற திகிலுடன் வேகமாக நடந்தோம். ஒரு நிமிஷம் கூட நடந்திருக்க மாட்டோம்,  என் மனவிக்கும் எனக்கும் மூச்சு வாங்கியது. முதல் தடவை தனியாக அமெரிக்காவில் பயணம் செய்கிறோம். விமானத்தைத் தவறவிட்டால் அடுத்து எப்போது விமானம் என்றும் தெரியாது. ஒருக்கால் மறுநாள் காலையில் தான் விமானம் என்றால் என்ன செய்வது? ராத்திரி எங்கு தங்குவது? சாப்பிடுவது?” என்று கலவரம் தனி டிராக்கில் போய்க் கொண்டிருந்தது. 
அப்போது நாங்கள் வந்த விமானத்தில் வந்த ஒரு அமெரிக்கர் எங்களிடம் வந்து. “ உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணுகிறேன்.. பெட்டியை நான் எடுத்து வருகிறேன். உங்கள் மனைவி நிதானமாக வரட்டும். நாம் சற்று வேகமாகப் போய், அந்த கேட்டில் இருக்கும் பணியாளர்களிடம் “விமானத்தை சில நிமிடங்கள் காத்திருக்க வையுங்கள்” என்று கேட்டுக் கொள்ளலாம்” என்றார்.
 (அவருக்கு 40,45 வயது இருக்கலாம். ஒரு கம்பெனியின் உயர் அதிகாரி மாதிரி இருந்தார்.)
 நாங்கள் இருவரும் கேட்டிற்குப் போனோம். “ ஸாரி, விமானம் நகர்ந்து விட்டது, டேக்-ஆஃபிற்கு ” என்று சொல்லி விட்டார்கள்.

September 04, 2014

ஜில்லு விட்ட காற்றாடி


ஞாயிற்றுக்கிழமை. என் வீட்டு டி. வி. அறையில் 
மஹாபாரத குருக்ஷேத்திரம்  நடந்து கொண்டிருந்தது.
டி. வி. யில் இல்லை, டி. வி அறையில்!
தொச்சு, தன் பரிவாரங்களுடன் வந்திருந்தான். அவை வியூகம் அமைத்து சண்டை போட்டுக் கொண்டிருந்தன. (ஒவ்வொன்றும் உள்ளே தள்ளிய டஜன் இட்லிகள் பின் எப்படி ஜீரணமாகுமாம்?)
       தொச்சு வீட்டில் டி.வி. ரிப்பேராம். அதை சாக்காக வைத்துக் கொண்டு ஞாயிற்றுக் கிழமைகளில் என் வீட்டிற்கு வரத் துவங்கினான். டி.வி. யில் காலை 9 லிருந்து 10 வரை ஒளிப்பரப்புவதால், அரை மணி முன்னதாக வந்து ("லைட்டாக டிபன் இருந்தால் போதும், அக்கா''), அரை மணி நேரம் பின்னதாகப் போய் ("ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சாப்பிட மாட்டேன் என்றால் விடமாட்டேன் என்கிறாயே அக்கா!'') கொண்டிருந்தார்கள். 
இதனால் எனக்குப் பலரின் மீது கோபம் கோபமாக வந்தது. வியாஸரில் ஆரம்பித்து டெலிவிஷன் கண்டுபிடித்தவர், பி. ஆர். சோப்ரா என்று பலரை சபித்தேன். சீரியல் சீக்கிரமே முடிய வேண்டுமே என்று பல தெய்வங்களை வேண்டிக் கொண்டேன். அது மட்டுமல்ல ராமாயணம் முடிந்த பிறகு உத்தர ராமாயணம் வந்த மாதிரி, இதற்கும் ஒரு உத்தர பாரதம் வந்து விடக் கூடாது என்றும் வேண்டிக்கொண்டேன்.

"ஏண்டா.... சனியன்களே.... இப்படி கத்தறீங்க....! எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு ஒழிஞ்சு தொலையுங்கோ.... அத்திம்பேர் கதை எழுதறாரே.... இப்படி தொந்திரவு பண்ணினா கற்பனை எப்படி ஓடும்! ..அடியே, அங்கச்சி!  உன் பிள்ளைங்களை அடக்கேன்'' என்று தொச்சு கத்தினான். ''ஏன் உங்க பசங்க தானே? நீங்க  தான் அடக்குங்களேன்? என் மேலே  ஏன் பாயறீங்க....''
"நான் நாய்டி, அதனால தான் பாயறேன். வாயைப் பாரு........ உன்னை என் தலைல கட்டினாங்களே, அவங்களைத் தான் சொல்லணும். .பசங்களையா பெத்திருக்கே? பேய்.... பூதம்.... பிசாசு....என்று இருக்குதுங்க.''
மகாபாரத யுத்தத்தில் ஒரு கிளைக் கதைபோல் இந்த வாக்குவாத யுத்தம் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று அங்கச்சி "ஓ' என்று அழ ஆரம்பித்தாள். "இப்படித் தான் அவர் எப்பவும் திட்டித் தீர்க்கறார்'' என்று  கேவலுக்கிடையே சொல்ல --
என் மாமியார், "ஏண்டா தொச்சு அவளைத் திட்டறே....? அங்கச்சி நீ உள்ளே போம்மா.... ஏய். பசங்களா சத்தம் போடாமே சண்டை போடுங்கடா.... சேச்சே .... சண்டை, சத்தம் எதுவும் வேண்டாம், மொட்டை மாடிக்குப் போய் விளையாடுங்கடா.'' என்று சொல்லி அனுப்பினாள், அப்படி சொல்லிக் கொண்டே அவள், தொச்சுவின் பிரஜைகளுக்கு கைமுறுக்கோ, சீடையோ கொடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் அடுத்த கணம் பல்லாவரம் குவாரி மாதிரி கடகட கொடகொடவென்று வானரங்களின் வாய் மிக்ஸியாகி சீடையை அரைத்துக் கொண்டிருந்த சத்தம் கேட்டது.

August 27, 2014

நாலு விஷயம்...

கல்கி: அதிக விலை அரிசி 
கல்கி அவர்களின் பிறந்த தினம் 9 - 9- (18) 99. 

என்றும் என் நினைவில் உள்ள கல்கி  அவர்களைப் பற்றிய குட்டித்  துணுக்கு.
ஒரு சமயம் கல்கி அவர்களைச் சந்திக்க  அடையார் காந்திநகரில் இருந்த அவருடைய வீட்டிற்குச் சென்ற, செங்கற்பட்டு  சேவா சங்கத்தின் தலைவர்  திரு எம். ஈ. ரங்கசாமி அவர்கள் என்னையும் அவருடன் கூட வரச் சொன்னார். 

 நாங்கள் சென்ற சமயம் கல்கி அவர்கள் வெளியில் கிளம்புவதற்குத் தயார் செய்து கொண்டிருந்தார். “என்னுடைய வயலைப் போய்ப் பார்த்துவிட்டு வரப் போகிறேன். நீங்களும் வாங்களேன்” என்றார். நாங்கள் ஒட்டிக் கொண்டோம்.
மகாபலிபுரம் போகும் வழியில் உள்ள ஒரு கிராமத்தில் அவருடைய வயல் இருந்தது. அங்கு போனோம். பசுமையான வயல். நெற்கதிர்கள் காற்றில் லேசாக ஆடிக் கொண்டிருந்தன. (62 வருடம் ஆகிவிட்டது. இருந்தும் அந்தக் காட்சி அப்படியே படம் பிடித்த மாதிரி நினைவுத்  திரையில் தெரிகிறது!)
முண்டாசு கட்டிய விவசாயியுடன் சாகுபடி பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார். (விவரங்கள் மறந்து விட்டன.) அப்போது கல்கி ஏதோ சொன்னார். உடனே அந்த குடியானவர்   சிரித்துக் கொண்டே, “ சும்மா சொல்லிடுவீங்க.. உங்களுக்கு இன்னா தெரியும்?’ என்று கேட்டார்.  கல்கியும் சிரித்துக் கொண்டே
 “ எனக்குத் தெரியாததாலதான் வயலை உன் கிட்டே கொடுத்து இருக்கிறேன்..  இந்தா பணம்” என்று சொல்லி 50 ரூபாயோ, 100 ரூபாயோ கொடுத்தார். பிறகு சென்னை திரும்பினோம்.

காரில் வரும்போது கல்கி சொன்னார்: “இந்த வயலில் அறுவடை ஆகி, அரிசி என் வீட்டிற்கு வந்தால், உலகிலேயே அதிக விலை கொடுத்து வாங்கிய அரிசியாக அது இருக்கும். .. ஆமாம், ஒவ்வொரு தடைவை இங்கு வரும்போதும் ஏதாவது சொல்லி பணம் வாங்கி விடுகிறான் இந்த ஆள்” என்று சிரித்துக் கொண்டே சொன்னார்!

வேட்டி கட்டிய தமிழன்
வேட்டி கட்டிய தமிழனில் ஆரம்பித்து ’வேஷ்டிக்குத் தடையா?’ என்ற கேள்வி வரை வந்து, தமிழக சட்டசபையில் சட்டமாக வந்து ஓய்ந்துள்ள நிலையில், 1962-ல் நடந்த விஷயம் என்பதால், பிரச்னை எதுவும் எழுப்பாத வேஷ்டிப் பதிவாக இது இருக்கும். 

டில்லிக்கு மாற்றலாகி நான் போனபோது, எனக்கு முதலில் தோன்றிய பிரச்னை: டில்லி அலுவலகத்தில் வேஷ்டி கட்டிக் கொண்டு போகமுடியுமா?’ என்பதுதான்.  காரணம், எனக்குப் பேன்ட் போட்டுப் பழக்கமில்லை. டில்லியிலிருந்த என் நண்பர்களுக்குக் கடிதம் எழுதினேன்.

August 16, 2014

தெரிந்த பெயர்; தெரியாத தகவல்கள்: அணுகுண்டு


என்ன, திடீரென்று அணுகுண்டைக் கையில் எடுத்துக் கொண்டீர்கள் என்று யாராவது கேட்கும் முன் நானே கூறிவிடுகிறேன்.
அணுகுண்டு பற்றிய சில தகவல்கள் என் நினைவுக்கு வந்ததன் காரணம் சமீபத்திய மூன்று விஷயங்கள் . 
  1.         ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் முதலில் 1945-ல் ஹிரோஷிமாவில் போடப்பட்டது.
2.         ஆகஸ்ட் 9-ம் தேதி (1945)  இரண்டாவது அணுகுண்டு   நாகசாகியில் போடப்பட்டது
3.         நாகசாகியில் அணுகுண்டைப் போட்ட   விமானப்படை வீரர்களில்   ஒருவரான. THEODORE "DUTCH" VAN KIRK -NAVIGATOR  கடந்த மாதம் ஜுலை 28’ம் தேதி, தனது 93-வது வயதில் அமெரிக்காவில் காலமானார்.  (மற்றவர்கள் யாவரும் இவருக்கு முன்பே காலமாகி விட்டார்கள்.)

 
இனி அணுகுண்டு  பற்றி சில தகவல்கள்.
 1996’ ஆண்டு அமெரிக்கா செல்ல எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது. அப்போது, வாஷிங்டன் நகருக்குப் போய், சுற்றிப்  பார்த்தேன். பிரபல ஸ்மித்ஸோனியன் அருங்காட்சியகத்தில் ஒரு அரை நாள் செலவழித்தேன். அங்கு ஒரு கூடத்தில் ஒரு விமானத்தின் மூக்குப்பகுதி மட்டும் வைக்கப்பட்டிருந்தது.
அதுதான்  அணுகுண்டைப்  போட்ட, விமானத்தின் மூக்குப்பகுதி என்று ’போர்ட்’ வைத்திருந்தார்கள். அதன் பின்னால், சுவரில் 10, 12 அடி  அளவு பெரிய புகைப்படம் இருந்தது. அதில் 12 விமானப்படை வீரர்கள், ஒரு ராணுவ விமானத்தின் முன் நின்று கொண்டிருந்தார்கள்.
அணுகுண்டு LITTLE BOY

*அணுகுண்டு போட்ட விமானத்தின் பெயர்:  ENOLA GAY ( இந்த வித்தியாசமான பெயரின் பின்னே சுவையான விவரம் இருக்கிறது. அது பின்னால்!)

*1970 வருஷ வாக்கில் ஒரு TIME  இதழில்  ‘25 வருஷத்திற்குப் பிறகு’ என்கிற மாதிரி தலைப்பில் ஒரு குட்டிக் கட்டுரை வெளிவந்தது. அணுகுண்டு போட்ட விமானிகளைத் தேடிக் கண்டுபிடித்து, பேட்டி கண்டு  எழுதி இருந்தார்கள். அப்போது ஒரு சில வீரர்கள், தாங்கள் போட்ட  அணுகுண்டு  செய்த பயங்கர அழிவைப் பார்த்த நினைவால் மனப்பிரமை பிடித்தவர்கள் போல் ஆகிவிட்டார்கள்  என்கிற மாதிரி எழுதி இருந்தது. இந்தத் தகவலை தினமணி கதிரில் துணுக்காக எழுதி இருந்தேன். ( ஆனால் அப்படி எதுவும் இல்லை என்கின்றன  இப்போது சில வலைப் பதிவுகள்.)

August 05, 2014

தெரிந்த பெயர், தெரியாத தகவல்கள்: பென் குரியன்

ஒரு முன்குறிப்பு:
 சில வருஷங்களுக்கு முன்பு என் பெண் கூறிய ஒரு சுவையான அனுபவம். அவள் அப்போது AIIMS மருத்துவக் கல்லூரி மாணவி.ஒருநாள் கல்லூரி நூலகத்தில் ‘மூளை’யை ப்பற்றி ஒரு பெரிய புத்தகத்தில் படித்துக் கொண்டிருந்த போது  அதில் ஒரு இடத்தில் “ மேலும் விரிவான தகவல்களுக்கு  ’ A HANDBOOK OF  CLINICAL NEUROLOGY’ புத்தகத்தைப் பார்க்கவும்”   என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நூலகத்தில், அந்த புத்தகம் இருக்கிறதா  என்று கேட்டாள். “இல்லை” என்றார்கள்.
தொடர்ந்து படித்துக் கொண்டிருந்த போது பல இடங்களில் இந்த ’HANDBOOK-கை பார்க்கவும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு  தலையணை அளவுப் புத்தகத்தில் இருப்பதைவிட  அதிக தகவல்கள்   கையடக்கப் புத்தகத்தில் (HANDBOOK !) இருக்கும் என்றால், அது மிகவும்  சிறப்பானதாக இருக்க வேண்டும்; எப்படியாவது அதைத் தேடிப் பிடித்துப் படிக்க வேண்டும் என்று தீர்மானித்தாள்.  பல இடங்களில் வேட்டை ஆடினாள். டில்லியில்  NATIONAL MEDICAL LIBRARY என்ற நூலகம் இருக்கிறது. மிகப் பழமையான நூலகம்.( தூசு அகம் என்றும் சொல்லலாம்!) அங்கு போய்க் கேட்டாள்.
“ ஓ, இருக்கிறதே.. முதல் மாடியில் ஷெல்ஃப்கள் ’எம்’,  ‘என்’னில்  இருக்கிறது” என்றார்கள்.
‘ என்னது..நாம் ஹேண்ட்புக் தானே கேட்டோம். இரண்டு ஷெல்ஃப்கள் என்று சொல்கிறார்களே?” என்று யோசித்தபடியே மேலே சென்றாள்.  ஷெல்ஃப்களைப் பார்த்தபோது அவளுக்குத் தூக்கிவாரிப் போட்டது.காரணம், வரிசையாக 26 ஹேண்ட்புக் புத்தகங்கள் இருந்தன;  A முதல்  Z வரை 26 வால்யூம்கள்! ( இப்போது 123 வால்யூம்கள்!)

சரி, திடீரென்று இந்த விஷயம் இப்போது என் நினைவுக்கு வந்ததற்குக் காரணம், இஸ்ரேல் நாட்டின் முதல் பிரதம மந்திரியாக இருந்த DAVID BEN GURION-ஐப் பற்றி ஒரு சுவையான தகவலை ஒரு புத்தகத்தில் பார்த்ததுதான்!
========================
DAVID BEN GURION (1886 –1973) இஸ்ரேல் நாட்டு முதல் பிரதமர்.. பயங்கரப் புத்தகப்  பிரியர்.அவ்வப்போது அமெரிக்காவில் இருக்கும் ஒரு நண்பருக்குக் கடிதம் எழுதுவார். அதில் அவருக்குத்  தேவையான புத்தகங்கள் பட்டியல் இருக்கும். பட்டியல் சற்று நீளமாக இருக்கும். நண்பரும், நியூயார்க்கில் உள்ள ஒரு புத்தகக் கடைக்குச் சென்று புத்தகப் பட்டியலைக் கொடுப்பார். கடைக்காரர் பல இடங்களில்  புத்தகங்களைத் தேடிப்பிடித்து சப்ளை செய்வார்.
  ஒரு சமயம் (அக்டோபர் 1952) அந்த நண்பருக்கு பென் குரியனிடமிருந்து கடிதம் வந்தது. புத்தகப் பட்டியலில் ஏழே ஏழு புத்தகங்கள் தான் இருந்தன.
“பரவாயில்லை, ஏழு புத்தகங்கள்தான் ..அப்பாடி. அதிக அலைச்சல் இல்லை”என்று எண்ணியபடி, நியூயார்க் சென்று பட்டியலைப் புத்தகக் கடைக்காரரிடம் கொடுத்தார். அவர் ஐந்தே நிமிஷத்தில் 6 புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுத்தார். பட்டியலில் ஏழாவதாக இருந்தது: “ A COLLECTION OF CASTILLION LITERATURE.”
”ஏழாவது புத்தகத்தை எப்படி எடுத்துப் போவீங்க? காரில் பிடிக்காது.மொத்தம் 134 வால்யூம்கள்!” என்றார் கடைக்காரர்.
நண்பருக்குத் தலை சுற்றியது.
*       *       *
 இந்த சுவையான தகவலுடன்  BEN GURION-ஐப் பற்றிஇன்னும் சில தகவல்கள்
இருந்தன. அவைகளையும் இங்கு போடுவதில் தப்பில்லை.

July 24, 2014

தாத்தாவின் புகழ் பெற்ற சுருட்டு-ராஸ்டன்


அமெரிக்க எழுத்தாளர்  லியோ ராஸ்டன்  நகைச்சுவைப் பொன்மொழிகள், குட்டிக்கதைகள், நாவல்கள், வாழ்க்கை வரலாறுகள் தவிர நிறைய கட்டுரைகளும்  ஹாலிவுட்டில் 5, 6 திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு ’புக்-சேலி’ல்  இவர் எழுதிய Passion and Prejudices என்ற புத்தகத்தை வாங்கினேன். அந்த புத்தகத்தில் இருந்த ஒரு  கட்டுரையைத் தமிழில் தருகிறேன். அவர் கொடுத்திருந்த தலைப்பு: THE CIGAR: A FERVENT FOOTNOTE TO HISTORY
----------------------------------
கட்டுரையைப் படிக்க ஆரம்பிக்குமுன் ஒரு சுவையான துணுக்கு. இந்த புத்தகத்தை  நான் வாங்கிய விலை: 15 சென் ட்டுக்கும் குறைவு (ரூ.10). பிறகு ஒரு நாள், ராஸ்டனின் மற்ற புத்தகங்கள் ஏதாவது வாங்கலாமா என்று வலை வீசினேன்.  
1978–ல்  வெளியான  Passion and Prejudices புத்தகத்திற்கு  (புதுப் புத்தகம் -முதல் பதிப்பு)  ஒரு புக் ஸ்டோர் வைத்திருந்த  விலை:(படத்தைப் பார்க்கவும்!)  அதிர்ச்சி அடையாதீர்கள்: டாலர் 3272.97.  தபால் கட்டணம்  தனி!
-------------------------------------
இனி சுருட்டுக் கட்டுரைக்குப் போகலாம். சிகரெட் பிடிப்பவர்களின்  சிகரெட் மோகத்தை( அல்லது வெறியை)  புகை பிடிக்காதவர்களால் அறிந்து கொள்ள முடியாது. என் பதினாறாவது வயதிலிருந்து தினமும் ஒரு பாக்கெட் பிடித்து வந்தேன். இப்போது அந்த பழக்கத்தை உதறித் தள்ளி விட்டேன்.

  புகையிலையின்  மோகத்தை நான் நன்கு அறிவேன் அதன் பிடியில் அகப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் மீது எனக்கு உள்ள அனுதாபம் ஆழமானது.
    இரண்டாம் உலகப் போரின் போது- அதாவது 40 களில்-  நடந்த சம்பவம் சிகரெட் வெறி தொடர்பானது.
    ராபின் என்பவர் அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்டில் உயர் அதிகாரி. (இது அவருடைய உண்மையான பெயர் இல்லை. அவரது பேரன், பேத்தி எவராவது இந்தக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தால் மனவருத்தம் அடைவார்கள் என்பதால் பெயரை மாற்றி உள்ளேன்.
    ராபின், பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் படித்துத் தேறி ஸ்டேட்  டிபார்ட்மென்டில் வேலைக்குச் சேர்ந்தான். சாதாரண எழுத்தர் வேலைதான். இருந்தாலும் அதில் அவன் தன் செயல் திறமையையும், மொழித் திறமையையும் காட்டி மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்றான். 

July 18, 2014

ஒரு வேண்டுகோள்!

அன்புடையீர், 

வணக்கம். என் வலைப்பூவிற்கு தவறாது வருகை புரிந்து, நான் போடும் பதிவுகளைப் படிக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன், ” உங்களுக்கு அல்லவா நாங்கள்  THANKS   சொல்ல வேண்டும்?” என்று உங்களில் சிலர் கேட்கக் கூடும்.
நீங்கள் வலைப்பூவிற்கு வந்து என் பதிவுகளைப் படிக்கிறீர்கள் என்பதே என்னைச்  சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. உங்கள் பின்னூட்டங்கள் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, எனக்கு இரண்டுமே பாதிப்பை ஏற்படுத்தாது. 

சிலசமயம் FEEDJIT- ஐப் பார்ப்பேன்.  உலகின் எங்கெங்கோ உள்ளவர்கள் பதிவுகளைப் படிக்கிறார்கள் என்பதே எனக்கு உந்து சக்தியாக செயல் புரிகிறது. பல சமயம்  பெயரே கேள்விப்படாத ஊராக இருக்கிறது. அந்த ஊர்/ நாடு எங்கிருக்கிறது என்று கூகுள் மேப்பில் தேடிப் பார்க்க வேண்டி இருக்கிறது! தமிழ்ப் பதிவுகளைத் தேடிப் படிக்கும் அவரது ஆர்வத்தைக் கண்டு வியக்கிறேன். பிழைப்புக்காக  எங்கோ ’டிம்பக்டூ’விற்குப் போனாலும் அந் தமிழரின்  ஆர்வம், ரசனை, ஈர்ப்பு  எல்லாம்   தமிழ் நாட்டிலும், தமிழ் இலக்கியம், கலை ஆகியவைகளில் தான் உள்ளன. 
அவர்  ஒருவருக்காகவாவது   வலைப்பூவில் ஒழுங்காகப் பதிவுகளைப் போட போடவேண்டும் என்று என் மனம் அறிவுறுத்துகிறது! முக்கியமாக அவருக்கு ஒரு ஸ்பெஷல் ’தேங்க்ஸ்’ சொல்லுகிறேன். 

பதிவுகள் போட என் பழைய நோட்டுப் புத்தகங்களை எடுத்துப் படிக்கிறேன். புதிதாகப் பல (பழைய!) புத்தகங்களை வாங்கி இரவு பகலாகப் படிக்கிறேன். நோட்டுப் புத்தகம், நோட்டுப் புத்தகமாகக் குறிப்புகளை எழுதி வைத்துக் கொள்கிறேன்.
காலையில் கண் விழிக்கும்போது, ’இன்று எந்தெந்த புத்தகங்களைப் படிக்க வேண்டும், எவற்றைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும், மொழி பெயர்க்க வேண்டும்’ என்று உத்தேசமாக திட்டமிடச் செய்கிறது வலைப்பூ பணி. இந்த ‘நிர்ப்பந்தம்’ என்னைச்    சோம்பேறித்தனமின்றி  செயல்பட வைக்கிறது. இதன் காரணமாக அதிக பலன் அடைபவன் நான்தான்.
ஒரு பொன்மொழி நினைவுக்கு வருகிறது: ”யார் கஞ்சன்? தான் படித்தவற்றை, ரசித்தவற்றை, அறிந்துகொண்டவற்றைப் பிறருக்குச் சொல்லாமல், பிறருடன் பகிர்ந்து கொள்ளாமல் வைத்திருப்பவன்தான் மகா கஞ்சன்!”. நான் வள்ளலாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை; கஞ்சனாக இருக்க விரும்பவில்லை!
நான் எழுதும் பல  விஷயங்கள், தகவல்கள், என் வலைப்பூவில் போடும் பொன்மொழிகள் எல்லாம் புதியவை என்று கூறமுடியாது. உங்களில் பலர் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்; படித்திருப்பீர்கள். சிலருக்காவது உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

EMERSON-னின் ஒரு பொன்மொழியைத் தருகிறேன் : What I need is someone who will make me do what I can. அதைத்தான் நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள். அதற்காகத்தான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்!

நிற்க, உங்களிடம் ஒரு வேண்டுகோள். சமீபத்தில் எனக்கு வந்த மூன்று கடிதங்கள்தான் இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.  மூன்று பேர் எழுதியுள்ள கடிதங்களிலும் உள்ள முக்கிய வரிகள்: ”உங்கள் வலைப் பூவை இன்றுதான் தற்செயலாகப் பார்த்தேன்.”, மற்றும், “முதல் பதிவிலிருந்து மூச்சு விடாமல் படித்துக் கொண்டு இருக்கிறேன்...”.

இந்த வலைப்பூ உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர் ஒருவருக்குத் (ஒரே ஒருவருக்குத்) தெரிவியுங்கள். படிப்பதும் படிக்காததும் அவர் இஷ்டம். என் வாசகர் வட்டத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற காரணத்தால் (அல்லது ஆசையால்) நான் இதைக் கூறவில்லை.
இந்த வலைப்பூவிற்கு ஒரே  ஒரு வாசகர் இருந்தாலும் எனக்கு ஆர்வம் குறையாது.

அந்த ஒரே வாசகர் நானாக இருந்தாலும் கூட! வலைப்பூவில் எழுதுவது எனக்கு உற்சாகமூட்டும் பணி.
மீண்டும் நன்றி கூறுகிறேன்.
-கடுகு

பி.கு: அடுத்த பதிவை விரைவில் போடப் பார்க்கிறேன்.

July 10, 2014

குட்டிப் பதிவுகள் திரட்டு!

1.இரண்டு கொடுத்தீங்களே

More Random Acts of kindness என்ற புத்தகத்தில் படித்தது

"என் நண்பர் (பெயர் தாமஸ் என்று வைத்துக் கொள்ளலாம்.) டாமினிகன் குடியரசு நாட்டில் Habitat for humanity என்ற தொண்டு நிறுவனத்தில் சேவை செய்து கொண்டிருந்தார். அச்சமயத்தில் Etin என்ற சிறுவனுடன் நட்பு ஏற்பட்டது. எடின் மகா ஏழைக் குடும்பத்தைச்சேர்ந்தவன். ஒரு கிழிந்த அழுக்கான சட்டையைத்தான் அவன் எப்போதும் அணிந்திருப்பான்.

ஒரு நாள் தாமஸ் தன் அலுவலகத்தை ஒழுங்கு செய்த போது ஒரு பெரிய பெட்டியில் துணிமணிகள் இருந்ததைப் பார்த்தார்.  அதில் எடினின் அளவுக்கு ஏற்றபடி சட்டைகள் இருந்தன. ஒரே மாதிரி டி-ஷர்ட்கள். அவற்றிலிருந்து இரண்டு சட்டைகளை எடுத்து அந்தப் பையனுக்குக் கொடுத்தார்.
அந்த சட்டையை எடின் மகிழ்ச்சியுடன் போட்டுக்கொண்டான்.  அந்த சட்டையில்தான் அவன் எப்போதும் அவரைப் பார்க்க வருவான்.

ஒரு நாள் என் நண்பர் வெளியே சென்றபோது வழியில் ஒரு சிறுவனைப் பார்த்தார்.   எடினுக்கு இவர் கொடுத்த சட்டையை அந்தப் பையன் போட்டுக்கொண்டிருப்பதைக் கவனித்தார்.

சில நாள் கழித்து எடின் அவரைப் பார்க்க வந்த போது அவனிடம்  “ஷர்ட்டை உனக்குத்தானே கொடுத்தேன்? வேறு யாரோ ஒரு பையன் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தேனே” என்று கேட்டார்.

அவரைக் கேள்விக்குறியுடன் பார்த்தபடி, எடின் ”ஆமாம் சார்.... நீங்க எனக்கு ரெண்டு ஷர்ட்டு கொடுத்தீங்களே. மறந்துட்டீங்களா?” என்று கேட்டான்.

”அந்தக் கேள்வி என்னை உருக்கி விட்டது” என்று கண்கலங்கியபடி எங்களிடம் கூறினார் தாமஸ்."



2. பால் பாயின்ட் பேனாவிற்காக ஒரு சட்டம்.

 ரூஸ்வெல்ட் அதிபராக இருந்தபோதுஅமெரிக்க அரசு ஒரு விசித்திர சட்டம் 1958-ல் இயற்றியது,
 அரசு அலுவலகங்ளின் தேவைகளுக்கு, பார்வையற்றவர்களைக்கொண்ட அமைப்புகள் தயாரிக்கும் பொருட்களைத்தான்  வாங்க வேண்டும் என்ற சட்டம் இயற்றியது. அப்படி வாங்கவேண்டிய  பொருட்கள்  பட்டியலில் அவ்வப்போது மேலும் சில  பொருட்கள்  சேர்க்கப்படும்

1952ல்   சேர்க்கப்பட்ட ஒரு பொருள் பால் பாயின்ட் பேனா. ஸ்கில் க்ராப்ட் என்ற கம்பெனியின் தயரிப்பு. அந்த கம்பெனியில் பணிபுரிபவர்கள் 5500 பேர். அனைவரும் பார்வையற்றவர்கள்.  வருடத்தில் சுமார் 5 மிலியன் டாலர் மதிப்பு பால் பாயின்ட் பேனாக்கள் அந்த கம்பெனி சப்ளை செய்கிறது. ஒபாமா அலுவலகத்தில் கூட இந்த பேனா தான். (ஆதாரம்: ரீடர்ஸ் டைஜஸ்ட்)

June 29, 2014

அன்புடையீர்

அன்புடையீர்,

வணக்கம். தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த பதிவு சற்று தாமதமாக  வரும்.

பதிவுக்குக் கட்டுரைகள் நிறைய எழுதி வைத்துள்ளேன். தட்டச்சு செய்ய அவகாசம் தேவைப்படுகிறது.

-அன்புடன் கடுகு

June 20, 2014

கமலா ஸ்வீட்ஸ் அண்டு ஸ்நாக்ஸ்


 அரசு  செலவில், தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தின் தயவில், எழுத்தாளன் என்ற முறையில் கிடைத்தது பல சுற்றுலா இடங்களுக்கு அழைத்துக் கொண்டுபோய் காட்டினார்கள். ஒரு வார ஓசிப் பயணம். தமிழ்நாட்டுச்  செல்வங்களைக்  “கண்டுகளிக்க  வாருங்கள்'' என்று அவர்கள்  எழுதிய கடிதத்தை எங்களில்  பலர்  "உண்டு களிக்க வாருங்கள்' என்று படித்திருக்க வேண்டும். அரசாங்க உத்தரவாக அதை  எண்ணிசிலர்  பயணத்திற்குச்  சில  நாட்கள் முன்பிருந்தே  உண்ணாவிரதம் இருந்து  தங்களைத்  "தயார்' படுத்திக்  கொண்டு  வந்திருந்தார்கள்!

ஒரு வாரம் போனதே தெரியவில்லை. பயணத்தை முடித்துக் கொண்டு உற்சாகமாக வீடு திரும்பி காலிங்  பெல்லை அழுத்திய போது, சுற்றுலாவில் ஏற்பட்ட சந்தோஷம், உற்சாகம், நிம்மதி எல்லாம் ரேஷன் கடை பாமாயில் போல மாயமாய்ப் போய் விட்டன. காரணம், என் வீட்டு ஹாலில், என் அருமை மைத்துனன் தொச்சு...!

கஷ்டங்கள் தனியே வராது. தொச்சு வந்தாலும் அப்படித்தான். போனஸாக அவன் மனைவி கீச்சுக்குரல் அங்கச்சியையும் பசங்களில் ஒரு நாலைந்தையும் அள்ளிப் போட்டுக் கொண்டு வருவான். ஒவ்வொருவரும் ஒரு தனித் தன்மையுடன் தொல்லை தருவார்கள்! அதுதான் தொச்சு குடும்பத்தின் ஸ்பெஷாலிடி!

இது 3-டி படம். கலர் கண்ணாடி போட்டுப் பார்க்கவும்.
போதாததற்கு வீடு முழுவதும் மிளகாய் வறுத்த நெடி. மூக்கை உண்டு இல்லை என்று பண்ணியது. ஒரே எரிச்சல் ஏற்பட்டது.

கமலா தலை கலைந்து முகமெல்லாம் வியர்த்து ஹாலுக்கு வந்தாள். வலது கை விரல்களில் ஏதோ மாவு ஏகமாக ஒட்டிக் கொண்டிருந்தது. (பவுடரை முகத்தில்தான் அப்பிக் கொள்வாள். கையில் அப்பிக் கொள்ளமாட்டாளே...?)

வாங்கோ... எப்படியிருந்தது டூர்...? நாளைக்குத்தானே வரணும் நீங்க...'' என்றாள்

ஆமாம்.... இதென்ன கையெல்லாம்...? வீடு ஏதோ மிளகாய்ப் பொடி ஃபாக்டரி மாதிரி இருக்கிறது.. சமையலறையில் எண்ணெய் காயற வாசனை... கைமுறுக்கு பண்ணிண்டு இருக்கீங்களா?'' என்று கேட்டேன்.