June 05, 2020

Last Post

Dear Readers,
It is with great grief that I wish to inform you all of the demise of Kadugu Sir.  He was unwell for 2 months, but seemed to be getting better.  In the last 2-3 weeks, he suffered pain and lack of appetite that debilitated him rapidly and considerably.  He left us on the night of June 2, 2020.  The end was serene and peaceful - just like his personality.  Although filled with grief, we are grateful beyond measure for having had the honor and privilege to share our lives with such a wonderful human.  He has attained the lotus feet of his beloved Lord Anjaneya at the age of 88. 
This blog will remain open for you all to write comments but will not have new material for Kadugu Thalippu.
In prayer,
Anandhi (daughter)

April 03, 2020

என் அருமை நேயர்களுக்கு,

என் அருமை நேயர்களுக்கு,
வணக்கம்., அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். 

நான் விலகி மட்டும் இல்லை; படுத்தபடியும் இருக்கிறேன். இடுப்புச் சதையில் பயங்கர வலி. வீட்டிலேயே பிஸியொ தெரபி செய்கிறேன், கடும் முயற்சியுடன்.... போதும்.... என் அழுகைப் பிரசங்கம். நான் சொல்ல வந்தது என்னவென்றால், அடுத்த பதிவு தாமதமாகும்.
-- கடுகு

March 01, 2020

ரஸ்ஸல் என்பவரின் வரலாறு


யார் இந்த  ரஸ்ஸல்?  கேள்விப்படாத பெயராக இருக்கிறதே, அவருடைய  வரலாற்றை எழுத வேண்டிய அவசியம் என்ன என்று நீங்கள் கேட்பதற்கு முன் கூறிவிடுகிறேன். 
சாதனை படைத்தவர்கள், நெகிழ்ச்சியூட்டும்  வரலாற்று நாயகர்கள், அசகாய சூரர்கள், ஏன் அட்டகாசமான தில்லுமுல்லு செய்தவர்களைப் பற்றிய விவரங்கள் போன்ற பதிவுகளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், ரஸ்ஸலின் வரலாற்றை இங்கு தருகிறேன்.
ரஸ்ஸல் ஒரு ஹாலிவுட் நடிகர் என்று ஒரு வரி அறிமுகத்துடன் கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.  ஹாலிவுட் வார்த்தைக்கு ஒரு காந்த சக்தி இருப்பதும் காரணம்.
ரஸ்ஸல் ஒரு ராணுவ வீரன். கனடா நாட்டில் 1914-ல் பிறந்தவர். இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியா மாநிலத்தில் இருந்த ராணுவ முகாமில் பாரசூட் வீரர்களுக்குப் பயிற்சி   கொடுத்துக் கொண்டிருந்தான்.
 அவன்   டி. என். டி.  எனும் பயங்கர குண்டுகளைக் கையில் வைத்துக் கொண்டு பாடம் சொல்லிக் கொண்டிருந்தான். அப்போது ஒரு டி.என். டி. குண்டு என்ன காரணத்தினாலோ  தானாக வெடித்துவிட்டது.  
 ஏதோ சின்ன தவறு நிகழ்ந்துவிட்டது   டி. என். டி. ஒரு பயங்கர குண்டு என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.   அடுத்த செகண்ட் நினைவிழந்தான்.  நினைவு திரும்பியபோது மருத்துவ மனையில் இருந்தான்.  மெதுவாக  சுதாரித்து சுற்றுமுற்றும் பார்த்தான். கைகள் இரண்டிலும் கட்டு போடப்பட்டிருந்தது.    இரண்டு கைகளிலும் மணிக்கட்டும் ஐந்து விரல்களும் போய் விட்டதை உணர்ந்தான். டி.என்.டி அவற்றை பலி வாங்கி இருந்தது.  
  முப்பதாவது வயதில் கைகளை இழந்த அவன், தன்னுடைய வாழ்க்கையே அதலபாதாளத்திற்குச் சென்று விட்டது போல் உணர்ந்தான்.   வாழ்க்கையே இருண்டுவிட்டது. வருத்தப்பட கூட அவனுக்குத்  திராணியில்லை. இனி உயிருடன் இருப்பதைவிட   செத்துப் போவதே மேல்  என்று எண்ணினான் ரஸ்ஸல்.

February 05, 2020

நீச்சலும் கூச்சலும்

 ஞாயிற்றுக்கிழமை. சிறிது சாவகாசமாகப் பொழுதைக் கழிக்கலாம் என்று நினைத்து, பேப்பரில் வந்திருந்த குறுக்கெழுத்துப் போட்டியில் இறங்கினேன்.  என் தலையெழுத்து வேறு மாதிரி இருந்திருக்க வேண்டும்.

வாயில் மணி அடித்தது. கதறியது என்று கூட சொல்லலாம். மனுநீதி சோழனின் மணியை, கன்றை இழந்த பசு அடித்தது போன்று இருந்தது. நான் சோழனும் இல்லை; எங்கள் பேட்டையில் மாடோ, கன்றோ எதுவும்  கிடையாது. என்னிடம் தேர் எதுவும் கிடையாது. இருந்தும் இந்த மணி ஓசை  ஒரு பழமொழியைத் தான்  லேசாக மாற்றி, நினைவுபடுத்தியது. 'யானை வரும் பின்னே; மணி ஓசை வரும் முன்னே!’ என்பதை லேசாக மாற்றி, 'மணி ஓசை வரும் முன்னே; தொல்லை வரும் பின்னே’ என்பது மாதிரி எனக்குத் தோன்றியது
மணியோசை கேட்டு சமையலறையிலிருந்து எதிரொலி மாதிரி என் அருமை மனைவி கமலா   ”காது கேட்கலயா? உங்களுக்கு இடி இடிச்சாக் கூட  காது கேட்காது. உங்களுக்கு இருக்கிறது காது இல்லை;   ‘கேட்-காது’ தான் இருக்கு” என்று சொல்லி, தன்னுடைய சொல் நயத்தைத் தானே ரசித்தபடி, தன் முதுகில் தானே ஒரு ஷொட்டு கொடுத்தபடியே வந்து  வாயிற் கதவைத் திறந்தாள் கமலா.

“வாடா.. .. வாம்மா.. வாடா குழந்தை”  என்று  அன்பு, கரிசனம், பாசம், பரிவு, வாத்ஸல்யம், கனிவு... இன்னும் எனக்குத் தெரியாத பல பாவங்களுடன் கமலாவரவேற்றாள். பூர்ண கும்பம், வாழை மரம், நாதஸ்வர இசை, வேத கோஷம் தான் இல்லை! ஆமாம், திடீரென்று தொச்சுவும் அவனுடைய  அருமை மனைவி அங்கச்சியும்,  அவர்களுடைடைய நண்டு ஒன்றுடன் வருவார்கள் என்று அவள் எதிர்பார்க்க வில்லை.
 “ சும்மா  காலார நடந்து வந்தோம்..அத்திம்பேரைப் பார்த்து ரொம்ப நாளாச்சே என்று வந்தோம்”  என்று தொச்சு சொல்லிக் கொண்டிருக்கும் போது, அங்கச்சி  குறுக்கிட்டு,  “அது மட்டும் இல்லை, அக்கா. எங்க  அபார்ட்மென்ட்   காலனியில் நீச்சல் குளம் கட்டி இருக்காங்க. சூப்பரா இருக்கு. பசங்க அதகளம் பண்ணறங்க. காலனியில் இருக்கிற நண்டும் சுண்டும்…..”  என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது, நான் இடைமறித்து  “அப்படியா? நம்ப நண்டுதான் லீடரா?” என்று கேட்டேன் 
 “பிரச்சினையே அதுதான், அத்திம்பேர். எதுக்கு இந்தப் பொடியன் வந்திருக்கான் தெரியுமா? அவனுக்கு நீச்சல் தெரியாது. தொளைச்சு எடுக்கிறான், 'நீச்சல் கத்து கொடு' என்று. அவனை  ‘நண்டு’ என்று நீங்க சொன்ன வேளை, அவனை நிஜமாகவே நண்டாக நீங்க ஆக்கி வைக்கணும்” என்றாள் அங்கச்சி.
   “அங்கச்சி..   ‘கெக்கே பிக்கே’ என்று ஏதாவது சொல்லிண்டே இருக்காதே. நான் விளக்கமா சொல்றேன், அத்திம்பேர்” என்றான்  தொச்சு.
ஏதோ நாடக வசனத்தை எழுதி, மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல தொச்சு, அங்கச்சி வசனங்கள் இருந்தன.

“உள்ளே வாடா, தொச்சு...வந்தவனை “வா” என்று சொல்லாமல், ஏதேதோ பேசிக் கொண்டே இருக்கிற வழக்கத்தை எப்பதான் விடுவீங்களோ!” என்றாள் கமலா. 
  “கமலா, முதலில் காபி கொண்டு வந்து கொடு” என்றேன். 
பொங்குகிற பாலில் சிறிது தண்ணீர் தெளித்தது போல்,  கமலாவின் கடுகடுப்பு ‘புஸ்’ என்று அடங்கிப்போயிற்று.  அது மட்டுமல்ல, உற்சாகம் ஊற்றாகப்  பெருக்கெடுத்தது.
 நான் சொல்லி முடிப்பதற்குள், எள் என்பதற்குள் எண்ணெயாக இருக்கும் என் மாமியார்  காப்பியுடன் வந்து விட்டாள்- வழக்கத்தை விட 50% அதிக பாசத்துடன்! 
 “தொச்சு! வாடா, அங்கச்சி வாம்மா. பப்ளி வாடா” என்று சொல்லியபடியே, மேஜையில் காப்பியை வைத்தாள்.
(பப்ளி? தொச்சுவின் பையனின் உண்மையான பெயர் என்ன என்று எனக்குத் தெரியாது. ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு பெயரில் அழைப்பார்கள். சில சமயம்  அது திட்டு மாதிரி கூட இருக்கும்;  உதாரணமாக, புளிமூட்டை, ரோடு ரோலர், பீம சேனா, ஃபுட்பால் தடியா, கரடிக் குட்டி, வெல்லக்கட்டி, பலூன் கண்ணா என்று பல பலப் பெயர்கள்.)
“தொச்சு.. நீ குழந்தையை ‘ பப்ளி’ன்னு கூப்பிடறயே, அது என்ன பப்ளி?” என்று கேட்டால், இந்த பெயர்களுக்கெல்லாம்  அர்த்தம், விளக்கம் எதுவும் கிடையாது. அத்திம்பேர்! என் பெயரை  ‘தொச்சு’ என்று வைச்ச மாதிரி, இதுவும் ஒரு பேர்... இந்த பப்ளி என்ற பெயர்  ‘பப்ளிமாஸ்’ என்ற பெயரின் சுருக்கம். அவ்வளவுதான்” என்பான்!)
காப்பியை நோக்கி பொடிநடையாக சென்றபடி “அத்திம்பேர்..  நாங்க இன்னிக்கு வந்ததே இந்த பப்ளிக்காகத்தான்…. எங்க காலனியிலே இப்போ சூப்பரா நீச்சல்குளம் கட்டி இருக்காங்க; போன வாரம் திறந்து வெச்சாட்டங்க. பசங்க பாடு கும்மாளம் தான். பாவம், பப்ளி  வெறுமனே வேடிக்கை பார்த்துண்டு  இருக்கான்” என்று தொச்சு சொன்னான்.
  அங்கச்சி,  “அவன்   நீச்சல் கற்றுக் கொள்ளத் துடியா துடிக்கிறான்” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போதே நான் “தொச்சு,   நீ சொல்லிக் கொடுக்க வேண்டியது தானே? என்று கேட் டேன்,

January 20, 2020

கைதியின் கடைசிக் கடிதம்

முதலில் கீழே தரப்பட்டுள்ள கடிதத்தை சற்று நிதானமாகப் படியுங்கள். இது  மரண தண்டனைப் பெற்ற ஒரு கைதி தன் மனைவிக்கு எழுதியது.


 

முதலில் கீழே தரப்பட்டுள்ள கடிதத்தை சற்று நிதானமாகப் படியுங்கள். இது  மரண தண்டனைப் பெற்ற ஒரு கைதி தன் மனைவிக்கு எழுதியது.

என் அன்புள்ள.....‘என் உள்ளத்திலிருந்து வரும் வார்த்தைகளைஅப்படியே இக்கடிதத்தில் எழுதுகிறேன். என் கைகளில் விலங்குகள் உள்ளன. இவ்விலங்குகள் என் கையில் இல்லாமல் என் எண்ணங்களுக்கு போடப்பட்டு இருந்தால் நன்றாக இருக்கும்.
எங்களைப் போன்றவர்களுக்கு உலகில் இரண்டே இரண்டு `சாய்ஸ்'தான் உள்ளன. மேலும் மேலும் மேன்மை பெறுவது; அல்லது பின்தங்கிப் போவது. இதற்கு இடைப்பட்ட நிலை கிடையாது. கடவுளை நெருங்குவதற்காக கடினமான பணிகளைச் செய்தவர்களுக்கும் இதுதான் நிலைமை. இடையில் பல தோல்விகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். எப்படி ஒரு ராணுவம் வெற்றிப் பாதையில் செல்லும் போது பல தோல்விகளைக் கடந்து தான் செல்ல வேண்டியிருக்கிறதோ அது போல்தான்! ஆகவே நம்பிக்கை இழந்து விட்டு, எடுத்த பணியை கைவிடக் கூடாது. மாறாக மேலும் நெஞ்சுரத்துடன் செயல்பட்டு நம் குறிக்கோளை நோக்கிச் செல்ல வேண்டும்.
நீ கடவுளை நேசி. உன் அண்டையில் உள்ளவர்களை நேசி. இந்த இரண்டு விதிகளில் எல்லாமே அடங்கியுள்ளன.
 நாட்டில் அநீதி தலை விரித்து ஆடினால்    நாமும்  அப்படியே அநீதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாகி விடும். ஆகவேதான் நான் உண்மையை அப்படியே கூற வேண்டும் என்று உறுதியாக உள்ளேன். இதன் விளைவாக என் உயிரையே இழக்க வேண்டியிருந்தாலும் கவலையில்லை. ஆட்சியாளர்கள், நிர்ப்பந்தப்படுத்தும் சத்தியப் பிரமாணத்தை நான் எடுத்துக் கொண்டு, அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு நடக்க என்னால் இயலாது.
அன்புள்ள மனைவியே, உன் துயரத்திற்கும் எரிச்சலுக்கும் காரணமான காரியங்களை நான் ஏதாவது செய்திருந்தால், என்னை மன்னிக்கவும். நம் ஊரில் உள்ள எவரையாவது புண்படுத்தியிருந்தாலோ எரிச்சலடையச் செய்திருந்தாலோ என்னை மன்னிக்கும்படி அவர்களிடம் சொல்லவும். என்னைப் பொறுத்த வரை நான் எல்லாவற்றையும் மன்னித்து விட்டேன்...''
*                          *                                *
இதுசிறையிலிருந்து , உயர்ந்த  கொள்கை பிடிப்புள்ள கைதி தன் மனைவிக்கு எழுதிய கடைசிக் கடிதம். .

1943’ம் ஆண்டு பெர்லின் சிறையிலிருந்து ஆஸ்திரியாவைச் சேர்ந்த சிறிய விவசாயி. ப்ரான்ஸ் ஜகர்ஸ்டேட்டர் தன் மனைவிக்கு, தான் இறப்பதற்கு சில மணி நேரம் இருந்த போது எழுதியது.  ஆம், அடுத்த சில மணியில் அவரது தலை துண்டிக்கப்படும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஜகர்ஸ்டேட்டர் அதிகம் படிக்காத எளிய மனிதன். மூன்று பெண் குழந்தைகளுக்குத் தகப்பன். கிராமத்து மாதாகோவிலின் கேர்-டேக்கர். இரண்டாவது உலகப் போர் நடந்த சமயம், ஹிட்லரின் ராணுவத்திற்கு நிறைய ஆட்கள் தேவைப்பட்டனர். இவரையும் ராணுவத்தில் சேரச்சொல்லி உத்தரவு வந்தது.  பலர் எவ்வளவோ அறிவுரை சொல்லியும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லைஹிட்லரின் உத்தரவிற்குக் கீழ்ப்படிய மறுத்து விட்டார். ”இந்தப் போர் நியாயமற்றது; கொடூரமானது” என்று உறுதியாக நம்பினார். `ராணுவ உத்தரவுகளை கீழ்ப்படிவேன்' என்ற சத்தியப் பிரமாணத்தை எடுத்துக் கொள்ள அவரது மனம் சம்மதிக்கவில்லை. ஆகவே `ராணுவத்தில் சேர முடியாது' என்பதை, விளைவுகளுக்கு அஞ்சாமல் அவர் நெஞ்சுரத்துடன் கூறிவிட்டார்.
இப்படி அவர் மறுத்ததற்கு மரண தண்டனைதான் கிடைக்கும் என்பது அவருக்குத் தெரியும்.  எதிபார்த்தபடி அவர் சிறைப்படுத்தப் பட்டார். பல மாதம் சிறையில் இருந்தார். 1943-ம் ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி அவர் பெர்லின் சிறையின் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரது தலை துண்டிக்கப்பட்டது. இந்தக் கடிதம் 8-ம் தேதி இரவு அவர் எழுதியது,
     இரண்டாவது உலகப் போரில் அழிந்து போனவைகளுக்கு கணக்கே இல்லை.   இருந்தும் வியப்புக்குரிய விஷயம் ஜகர்ஸ்டேட்டரின் கடைசிக் கடிதம் இவைகளில் எதிலும் சிக்காமல் பத்திரமாக அவருடைய மனைவியை அடைந்ததுதான்.
     உயிரைத் திரணமாக மதித்து, தான் நம்பியதை உறுதியாகக் கடைப்பிடித்து, நெஞ்சில் உரத்துடன், நேர்மைத் திறத்துடன் ராணுவ அதிகாரிகளிடம், ``முடியாது!'' என்று கூறிய அவர் ஒரு அசாதாரண மனிதர்.

செயின்ட் ரீடிட்கண்ட் என்ற சிறிய கிராமத்தின் சர்ச்சின் இடுகாட்டில் அவரது சமாதி உள்ளது.

போரில் உயிர் நீத்தவர்களுக்கான நினைவுச் சின்னத்தில், போரில் இறந்தவர்களின் பெயருடன் ஜகர்ஸ்டேட்டரின் பெயரையும், மாதாகோவிலின் பாதிரியார் அதில் சேர்த்துப் பொறிக்கச் செய்தார்.


       அன்றாடம் நம் வாழ்க்கையில் நமக்குப் பிடிக்காத பல `சத்தியப் பிரமாணங்கள்' எடுக்க வேண்டியிருக்கிறது. ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களிலாவது நாம் ஜகர்ஸ்டேட்டராக துணிவுடன் இருப்போமே!
(Franz Jägerstätter பற்றிய விவரங்கள் விக்கி பீடியாவில் வந்துள்ளது.)

இது ஒரு மீள் பதிவு. புதிதாக வந்திருக்கும் நேயர்களுக்காக!  

December 21, 2019

மெய் சிலிர்த்திடும் என்பது மெய்!

இந்த பதிவிற்கு இரண்டு முன்னோட்டங்கள் தேவைப்படுகின்ன.
பதிவில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். முதலில் இரண்டு பேரை பற்றி சுருக்கமான குறிப்பைத் தருகிறேன்


1. ஹாரி எமர்சன் ஃபாஸ்டிக் (1878-1969) [ HARRY EMERSON FOSDICK ] என்ற
பாதிரியார். இவர் சாதாரண பாதிரியார் அல்ல; அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தேவாலயத்தை நிறுவியவர். சுமார் 50 புத்தகங்களை எழுதியவர்.
இவரது தந்தை, அமெரிக்காவின் மிகப் பெரிய செல்வந்தரான ராக்பெல்லர் நிறுனத்தில் பணியாற்றியவர்- அதுவும் நன்கொடை அளிக்கும் இலாகாவில்!
ஃபாஸ்டிக் எழுதியுள்ளஎழுதியுள்ள புத்தகங்களில் ஒன்று: ON BEING FIT TO LIVE WITH. அதில் கிடைத்த ஒரு தகவல் மெய் சிலிர்க்கச் செய்தது. அந்தத் தகவலைப் பதிவாக அளிக்கிறேன்.

2. நியூட்டன் பேக்கர் (1871-1937) [NEWTON BAKER] : இவர் ஒரு பிரபல வழக்கறிஞர், அரசியல்வாதி, சிறந்த பேச்சாளர். அன்றைய கால கட்டத்தில் அமெரிக்க அதிபராக இருந்த வுட்ரோ வில்சன் [Woodrow Wilson] இவரை தனது யுத்த இலாகா செயலராக (1916 -1921) நியமித்திருந்தார். மேலும், இவர் பிரபல ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் ஒரு அறங்காவலாரகவும் இருந்தார். இவர் பின்னால் அமெரிக்க அதிபர் பதவி தேர்தலில் நின்றவர்.

( இவர்களின் படங்களை மேலே MAST HEAD-ல் பாருங்கள். இருவரும்
TIME பத்திரிகையின் அட்டையில் இடம் பெற்ற பிரமுகர்கள்.)

நியூட்டன் பேகர், தன்னிடம் கூறிய ஒரு தகவலைப் பாதிரியார் ஃபாஸ்டி க் தன்னுடைய புத்தகத்தில் எழுதியுள்ளார். அந்தத் தகவலைப் பார்க்கலாம்
* *
யுத்த இலாகா செயலர் என்ற முறையில், நியூட்டன் பேகர் பல ராணுவ மருத்துவமனைகளுக்குச் சென்று, போரில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களைச் சந்தித்து நலம் விசாரிப்பது மற்றும் ஆறுதல் கூறுவது வழக்கம். அப்படி ஒரு சமயம் மருத்துவமனைக்குச் சென்ற சமயம் அங்கு சிகிச்சை பெற்றுவரும் ஒரு ராணுவ வீரரைப் பார்த்த போது, அவருடைய ரத்தமே உறைந்து போய்விட்டது! (மனதைத் திடப்படுத்திக் கொண்டு படியுங்கள்.)
அந்த ராணுவ வீரர் ஒரு இளைஞன். அந்த வீரனை மருத்துவமனையை ஒட்டி இருந்த புல்தரைக்கு சக்கர நாற்காலியில் ரு நர்ஸ் கொண்டு வருவதைப் பார்த்தார்; அப்படியே இரத்தம் உறைந்தது போல் உணர்ந்தார். காரணம் அந்த இளைஞனுக்கு இரண்டு கால்களும் இல்லை; ஒரு கையையும் இழந்திருந்தான்; இரண்டு கண்களும் பறி போயிருந்தன. போதாக்குறைக்கு போரில் ஏற்பட்ட காயங்களால் அவன் முகம் கன்னாபின்னாவென்று குரூரமாகக் காட்சியளித்தது.
அந்த ராணுவ வீரன் மிகவும் சகஜமாகப் பேசிக் கொண்டிருப்பதையும் கவனித்தார். வாழ்க்கையே அதலபாதாளத்திற்கு சென்று விட்ட நிலையில் இப்படி ஒரு ஆள் இருக்கமுடியுமா என்று வியந்தார்.
அந்த மருத்துவமனையைச் சுற்றிவிட்டுத் திரும்பி விட்டார்.

December 05, 2019

பத்து ஆண்டு நிறைவு


கடுகு தாளிப்புவிற்கு   பத்து  ஆண்டு நிறைந்துள்ளது.

 2009’ம் ஆண்டு டிசம்பர் மாதம், கல்கி அவர்களின் நினைவு நாளில் இந்த வலைப்பூவைத்  துவக்கினேன்.
   தனியாளாக நம்மால் எத்தனை பதிவுகள் எழுதி, தட்டச்சு செய்து, பதிவாகப் போட முடியும் என்று ஒரு கணம்கூட யோசிக்கவில்லை; தயங்கவும் இல்லை.  காரணம், “தம்பி, நீ எழுது என்று, கிட்டத்தட்ட 65 வருடங்களுக்கு முன்பு   சொன்ன (அல்லது ஆசீர்வதித்த) கல்கி அவர்கள் என்னை வழிநடத்திச் செல்வார் என்ற நம்பிக்கை என்னிடமிருந்து தான்!  ஏன், இன்றும், பத்து ஆண்டுகள் பதிவுகள் எழுதிய பிறகும், அவர் மீது உள்ள நம்பிக்கை ஒரு சத விகிதம் கூட குறையவில்லைஅவர் என் குருநாதர் என்று நான் கூறிக் கொண்டால்  எனக்குப் பெருமை ஏற்படலாம்.  ஆனால்அவருடைய சீடன் நான் என்பதால் அவருடைய திறமைக்கும், புகழுக்கும் எவ்வித ஏற்றமும் இல்லை. 

 கிட்டத்தட்ட
 
630 பதிவுகள் போட்டுள்ளேன். இது பெரிது அல்ல. இந்த சமயத்தில் ஒரு தகவலைச் சொல்ல மனம் விழைகிறது. என் வலைப்பூவின் தலைப்பு  ஓவியங்கள் (Masthead) எல்லாவற்றையும்  நானே வடிவமைத்துள்ளேன். வலைப்பூ இல்லாவிட்டால் இவ்வளவு படங்களை (சுமாராக) உருவாக்கவும்,  பதிவு எழுதுவதற்காகப் பல புத்தகங்களைப் படித்திருக்கவும் மாட்டேன். வலைப்பூ  என்னுடைய உந்து சக்தியாக விளங்கி வருகிறது.
     இவை எல்லாவற்றையும் விட என் வலைப்பூவைப் படிக்கும் உங்களில் பலர் எழுதிய பாராட்டுகளும்  ‘சபாஷ்களும்  வைட்டமின் மாத்திரைகளாகச் செயல் பட்டுள்ளன. இதை எல்லாம் எண்ணிப் பார்க்கும் போது என் மனதில் மகிழ்ச்சியை விட அதிகமாக நெகிழ்ச்சிதான் ஏற்படுகிறதுவார்த்தை ஜாலத்திற்காக இப்படி எழுதவில்லை. அப்படி எழுதினால் அது என்னை நானே ஏமாற்றிக் கொள்வதாகும்.
 அனைவருக்கும் நன்றி. முக்கியமாய்  எழுத்தாளர் சுஜாதா தேசிகன் அவர்களுக்கு  ஸ்பெஷல் நன்றி. அவர் தான் பதிவுகள் எழுதும்படி முதன் முதலில் (அன்புக்) கட்டளை இட்டார்.
       அனைவருக்கும் வணக்கம்.      -- கடுகு 

November 30, 2019

புள்ளிகள்:துணுக்குகள்!

30 செகண்ட் ட்யூன், சம்பாதித்தது....அம்மாடி!
JEOPARDY,அமெரிக்காவின் மிகப் பிரபலமான வினாடி வினா நிகழ்ச்சி . இதில் கேள்விகளுக்கு சரியாக பதில் அளிப்பவர்களுக்கு ஆயிரம், இரண்டாயிரம் டாலர்கள் என்று பரிசாக அளிக்கப்படுகிறது,  இந்த அரைமணி நேர நிகழ்ச்சியில் ஒரு லட்சம் டாலர்களை  வென்றவர்கள் பலர் உண்டு. 
    இந்த நிகழ்ச்சியின் கடைசி கேள்விக்கு விடை அளிப்பதற்கு முன்   30 வினாடி ட்யூன் ஒன்று போடப்படுகிறது .1964’ல்   இருந்து நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு அந்த டியூன் முக்கியமான அங்கமாக விளங்குகிறது. இந்த ட்யூனைப் போட்ட கிரிஃப்ஃபின் எனும் இசை அமைப்பாளருக்கு   ராயல்டியாக  70 லட்சம் டாலர் கிடைத்ததாக சில வருஷங்களுக்கு முன்பு அவரே சொல்லி இருக்கிறர். இன்றும் அந்த நிகழ்ச்சியில் இந்த  ட்யூனுக்கக  ராயல்டி தொகை அவருடைய பேரனுக்கு(?) போகக்கூடும்! 
ரூஸ்வெல்ட்டிற்கு ஓட்டு போடாததன் காரணம்!
அமெரிக்க அதிபராக இருந்த ரூஸ்வெல்ட் 'டெமாக்ரடிக்' கட்சியை சேர்ந்தவர் முதல் முதலாக   1933’ல் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார். அடுத்து 1937’ல் இரண்டாவது தடவையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1941’ம் வருஷம் மூன்றாவது முறை தேர்தலில் போட்டியிட்ட அவர், தனது நெருங்கிய நண்பரான தனது பேட்டைவாசி முதியவரைச் சந்தித்து, தனக்கு வாக்கு அளிக்குமாறு கேட்டார்.
அவரிடம்  “அதிபர் தேர்தல் வருகிறது. நீங்கள் யாருக்கு ஓட்டு போடப் போகிறீர்கள்” என்று கேட்டார் ரூஸ்வெல்ட். அந்த முதியவர்  “வழக்கம்போல் நான் ’ரிபப்ளிகன்’   கட்சிக்குத் தான் போட்டு போட போகிறேன்” என்றார். ரூஸ்வெல்ட்டிற்குக் கொஞ்சம் ஷாக். அவரிடம்  “சரி,  மூன்றாவது தடவை நான் நிற்பதால் நீங்கள் அப்படி தீர்மானித்து இருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

November 12, 2019

ஒரு சீன தோட்டத்தில் - பாகம் 3

ஷார்ட்டியின் மனமாற்றம்


  அடுத்த மூன்று மாதத்தை எப்படி,எங்கு கழிப்பது என்பதை மேலெழுந்த வாரியாகத் திட்டமிட்டு விட்டு, தன் நண்பரான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஷார்ட்டிக்கு டாக்டர்  லூமிஸ் போன் செய்தார்; தன்னை வந்து சந்திக்குமாறு கேட்டுக் கொண்டார். அவரும் வந்தார்.
    அவரிடம் லூமிஸ் “வீட்டிற்குப் போய், துணிமணிகளைப் பெட்டியில் எடுத்து வைத்துக்கொண்டு வா. நாம் தென் அமெரிக்காவிற்குச் சுற்றுப்பயணமாகப் போகப் போகிறோம்” என்றார்.

    இதைக் கேட்ட ஷார்ட்டி சற்று தயங்கியபடி சொன்னார் “சுற்றுப்பயணம் வர எனக்கு ஆசைதான். ஆனால் ஒரு முக்கிய வேலையை முடிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். அடுத்த சில மாதங்களில் எனக்கு நிறைய வேலை இருக்கிறது. ஒரு வாரம் கூட நான் இங்கு இல்லாமல் இருக்க முடியாது” என்றார்
  அவரிடம் டாக்டர் லூமிஸ் தனக்கு வந்த கடிதத்தைப் படித்துக் காண்பித்தா.ர் அதை பொறுமையாகக் கேட்ட ஷார்ட்டி “என்னால் உங்களுடன் வருவதற்கு இயலாது. கடந்த சில வாரங்களாக ஒரு முக்கிய வியாபார ஒப்பந்தத்தை நிறைவு செய்ய முயன்று கொண்டிருக்கிறேன். வெண்ணை திரண்டு வந்து கொண்டிருக்கும் சமயத்தில் ஊரை விட்டு போக முடியாது. நான் இங்கு இருந்தாக வேண்டும். வேறு சமயம். நாம் இரண்டு பேரும் சுற்றுப்பயணம் போனால் போகிறது” என்றார். அதே மூச்சில், “ஆமாம், அந்த பெண்மணி என்ன எழுதினார்? திரும்பப் படியுங்கள்” என்றார். “மழ்ச்சியை அனுபவியுங்கள். நீங்கள் நினைப்பதைவிட அதிக காலம் கடந்துவிட்டது.. அப்படியா?” என்று கேட்டார்.
   சில கணங்கள் அவர் அமைதியாக இருந்தார். டாக்டர் லூமிஸும் எதுவும் பேசவில்லை. ஷார்ட்டி அந்தப் பொன்மொழியை மனதில் அலசிக் கொண்டிருந்தார்.
    அவருக்கு ஏதோ ஒரு விழிப்பை அந்தப் பொன்மொழி ஏற்படுத்தி இருக்க வேண்டும். பிறகு ஷார்ட்டி சொன்னார்: “இவர்கள் முடிவு எடுப்பதற்காக நான் மூன்று மாதங்கள் காத்து இருந்தேன்; அவர்கள் இன்னும் முடிவெடுக்க வில்லை. இனிமேலும் காத்திருப்பதற்கு நான் என்ன பைத்தியக்காரனா? எனக்காக அவர்கள் காத்திருக்கட்டும். சரி, டாக்டர் எப்போது போகலாம் என்கிறீர்கள்?” என்று கேட்டார்!.
                                *                                 *                             *
உருகிப்போன  ஸ்டீல்!
      லூமிஸும் ஷார்ட்டியும் உல்லாசக் கப்பலில் தென் அமெரிக்காவுக்குப் புறப்பட்டார்கள்  ஒவ்வொரு நாளும் அவர்கள் மனதில் இருந்த பல பிரச்சினைகளின் கனமும், அழுத்தமும் கடல் பயணத்தில் மெல்ல மெல்ல ஆவியாகிப் போனதாக இருவரும் உணர்ந்தார்கள்.

November 07, 2019

ஒரு சீன தோட்டத்தில் - பாகம் 2

டாக்டர் லூமிஸ் (1877–1949)  தனது இந்த அனுபவம் பற்றி ஒரு விவரமான கட்டுரையைப் பின்னால் எழுதினார். அதன் தலைப்பு “ஒரு சீன தோட்டத்தில்!” அதிலிருந்து சில வரிகளைப் பார்க்கலாம்.

டாக்டர் லூமிஸின் கட்டுரை:
 “ஒரு கடிதத்தின் கதையைப் பல தடவை பலரிடம் நான் சொல்லி இருக்கிறேன். அந்த ஒரு கடிதம் நிகழ்த்திய மாற்றம் அளவிட முடியாதது. முதலில், கடிதத்தைத் தருகிறேன். அது சைனாவில் இருந்து வந்தது.
    அன்புள்ள டாக்டர்,
        இந்த கடிதத்தை பார்த்து வியப்படையாதீர்கள். என் முழுப் பெயரை இங்கு நான் எழுதவில்லை. என் பெயரும் உங்கள் பெயர் தான் என்பதை மட்டும் மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
       என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்காது. இரண்டு வருடங்களுக்கு முன்பு உங்கள் மருத்துவமனையில் நான் இருந்தேன். வேறு ஒரு டாக்டர் என்னைக் கவனித்துக் கொண்டிருந்தார். எனக்குக் குழந்தை பிறந்தது; அன்றே அது இறந்து விட்டது.
               என்னை கவனித்து வந்த டாக்டர் ஒரு நாள் என்னிடம், ”உங்களுக்கு ஒரு சின்னத் தகவல். உங்கள் பெயரையே உடைய ஒரு டாக்டர் இங்கே இருக்கிறார். இங்கு அட்மிட் ஆனவர்களின் பெயர்கள் எழுதியுள்ள நோட்டீஸ் போர்டில் உங்கள் பெயரைப் பார்த்த அவர் உங்களைப் பற்றி என்னிடம் விசாரித்தார்; உங்களைப் பார்க்கவும் விரும்பினார்.... குழந்தையை இழந்த நீங்கள் யாரையும் சந்திக்க விரும்புவது சந்தேகம் என்று அவரிடம் சொன்னேன்” என்றார்.
      “அதனால் என்ன? அவரைப் பார்க்க எனக்குத் தயக்கம் இல்லை” என்று நான் கூறினேன்.

                  சிறிது நேரம் கழித்து நீங்கள் என் அறைக்கு வந்தீர்கள். என் படுக்கைக்கு அருகில் உட்கார்ந்து கொண்டீர்கள். எனக்கு ஆறுதல் கூறினீர்கள். மற்றபடி என்னிடம் அதிகம் எதுவும் பேசவில்லை. உங்கள் முகபாவமும், குரலில் இருந்த கனிவும் என் கவனத்தை ஈர்த்தன. அது மட்டுமல்ல, உங்கள் நெற்றியில் கவலையின் அறிகுறியாக பல ஆழமான கோடுகள் இருந்ததையும் பார்த்தேன். உங்கள் பரிவான ஆறுதல் வார்த்தைகளாலோ என்னவோ வெகு விரைவிலேயே என் உடல் நலமடைந்துவிட்டதைப் போல் உணர்ந்தேன்.
       அதன் பிறகு உங்களை நான் சந்திக்கவில்லை. ஆனால் தாங்கள்  இரவு பகல் என்று பாராது மருத்துவ மனையிலேயே இருப்பதாகச் சொன்னார்கள்.

.
       இன்று பகல் சைனாவில் பீஜிங் நகரில் ஒரு அழகான வீட்டிற்கு விருந்தினராக வந்துள்ளேன். வீட்டின் தோட்டத்தைச் சுற்றி உயரமான மதில் சுவர்கள் இருந்தன. அதன் ஒரு பகுதியில், அழகிய சிவப்பு, வெள்ளை மலர்ச் செடிகள் காட்சியளித்தன. அங்கு சுவரில் சுமார்  இரண்டு அடி நீளமுள்ள ஒரு பித்தளைத் தகடு   பதிக்கப்பட்- டிருப்பதைப் பார்த்தேன். அதில் சீன மொழியில் ஏதோ பொறிக்கப் பட்டிருந்தது. அதைப் படித்து மொழிபெயர்த்துச் சொல்ல ஒருவரைக் கேட்டுக் கொண்டேன். அவர் படித்துச் சொன்னார்:
     “மகிழ்ச்சியை அனுபவியுங்கள், நீங்கள் நினைப்பதைவிட அதிக காலம் கடந்து விட்டது!” என்பதே அந்த வாசகம்.

அந்த வாசகத்தை பற்றி விடாது மனதில் அசை போட்டேன். எனக்கு இன்னொரு குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் இல்லை. இறந்துபோன குழந்தையை எண்ணி இன்னும் வருந்திக் கொண்டிருக்கிறேன். ஆனால் அந்தக் கணம் என் மனதில் ஒரு திடீர் முடிவு தோன்றியது.  ‘இனியும் நான் காலம் தாழ்த்தக் கூடாது. நான் ஏற்கனவே தாமதம் செய்து விட்டேன்’ என்று என் உள்ளுணர்வு எனக்குத் தெரிவித்தது. ‘இறந்துபோன குழந்தையைப் பற்றிய எண்ணி விசனத்திலேயே மூழ்கி இருக்கிறாயே’ என்று என் உள் மனது கேட்டது.
    குழந்தையை பற்றி எண்ணம் வந்ததும், மருத்துவமனையில் நீங்கள் என்னை வந்து பார்த்தது நினைவுக்கு வந்தது. அது மட்டுமல்ல, ஓய்ச்சலே இல்லாமல் உழைப்பதன் அடையாளமாக உங்கள் நெற்றியில் விழுந்திருந்த கோடுகளும் நினைவுக்கு வந்தன. எனக்குத் தேவைப்பட்ட அனுதாபத்தைக் கனிவுடன் நீங்கள் அளித்தீர்கள்.
     உங்களுக்கு என்ன வயது  என்பது எனக்குத் தெரியாது. ஆனால் உங்களை என் தந்தை ஸ்தானத்தில் நான் வைக்கக்கூடிய அளவு வயதானவர் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. எனக்காக நீங்கள் அன்று செலவழித்த சில நிமிடங்கள் உங்களைப் பொருத்தவரை ஒன்றும் பெரிய விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒரு குழந்தையை இழந்த, அதுவும் அது பிறந்த தினத்தன்றே பறிகொடுத்த ஒரு பெண்ணுக்கு அது மிக மிகப் பெரிய விஷயம்.
   பதிலுக்கு நான் உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று அவ்வப்போது எண்ணுவது வழக்கம். அது அறிவீனம் என்று எனக்குத் தெரியும்.
   இந்தக் கடிதம் உங்களுக்குக் கிடைத்த தினம், நீங்கள் தனியாக ஒரு இடத்தில் அமைதியாக உட்கார்ந்து, சீன தோட்டத்துப் பொன்மொழியை தீர்க்கமாகச் சிந்தியுங்கள்!
    மகிழ்ச்சியை அனுபவியுங்கள், நீங்கள் நினைப்பதைவிட அதிக காலம் கடந்து விட்டது!     
                                                                                  ---  மார்க்கெரட்
       

November 01, 2019

ஒரு சீன தோட்டத்தில் - பாகம் 1



முதலில் சில வார்த்தைகள்.
சில வாரங்களுக்கு முன்பு, ‘நான்கு யோக முறைகள்’ என்ற தலைப்பில் ஒரு பெரிய விடுதியில் மூன்று நாட்கள் ஒரு பயிலரங்கம் நடந்தது.  காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை விடுதியிலேயே நடந்தது. விடுதியில் தங்கும் வசதி இருந்தது இடைவேளை உணவுக்குப் பிறகு, ஓய்வின் போது அந்த விடுதியின் வரவேற்பு கூடத்தில் இருந்த நாலைந்து ஷெல்ஃப்களில்  நிறைய புத்தகங்கள் இருந்தன. அவற்றைப் பார்த்தேன். அதனருகில் வசதியான சோபாக்கள் இருந்தனப் அந்த புத்தகங்களில் பல புதையல்களைக் கண்டுபிடித்தேன். எல்லாவற்றிற்கும் சிகரமாக எனக்குக் கிடைத்தது, சுமார் எழுபது வருடங்களுக்கு முன்பு வெளியான ஒரு புத்தகம். அதில் பல அற்புதமான கட்டுரைகள் இருந்தன. பத்து தலைப்பில் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இருந்தன. மகிழ்ச்சி, நம்பிக்கை, துணிவு, மனோதிடம், சுய ஒழுங்கு, மன அமைதி, பாசம், மனநிறைவு, எதிர்காலத்தின் மீது நம்பிக்கை என்று வகுக்கப்பட்டிருந்தன. எல்லாம் தத்துவ தலைப்புகள் என்று  உதட்டைப் பிதுக்கி அலட்சியப்படுத்தாதீர்கள். மனதைத் தொடும் நிகழ்வுகள், பல புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்ட கட்டுரைகளின் பகுதிகள், உணர்ச்சிகரமான   சம்பவங்கள், வாழ்க்கை வரலாறுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள், பொன்மொழிகள் என்று பிரமாதமாகத் தொகுக்கப்பட்ட கட்டுரைகள்! ஒவ்வொரு கட்டுரைக்கும் முன்னுரையாக புத்தகத்தைத் தொகுத்தவர் விளக்கங்களை மிக மிக சுவைபட எழுதி மேலும் சிறப்பு சேர்த்திருந்தார்!.


விடுதியில் தங்கியிருந்த மூன்று நாட்களுக்குள் மொத்த புத்தகத்தையும் படிக்க முடியவில்லை. ஆகவே வலை போட்டுத் தேடி, புத்தகத்தை வாங்கினேன். அந்த புத்தகத்தில் இருக்கும் எல்லா கட்டுரை களையும் தமிழ்ப் படுத்திப் போட மனம் விழைகிறது. பதிப்புரிமை, போன்ற பிரச்சினைகள் வரக் கூடும் என்பதால் ஒரு கட்டுரையைத் தழுவி, என் சொந்த சரக்கையும் சேர்த்து  ‘படித்தேன், ரசித்தேன்’ என்கிற மாதிரி ஒரு கட்டுரை எழுதி உள்ளேன். இது சற்று நீண்ட பதிவாக இருக்கும். இரண்டு அல்லது மூன்று பாகங்களாகப் போடுகிறேன். பதிவுகளுக்கு இடையே அதிக இடைவெளி இருக்காது.

  “அது சரி, புத்தகத்தின் தலைப்பு போன்ற விவரங்களைச் சொல்லுங்கள்” என்று நீங்கள் கேட்பதற்கு முன், நானே தந்து விடுகிறேன்: LIGHT FROM MANY LAMPS. Edited with commentaries by LILLIAN EICHLER WATSON..

 இனி புத்தகத்திற்குப் போகலாம்.
******

October 21, 2019

வியக்கத் தெரிந்த மனமே!


கௌரவம்  அளிக்கப்பட  வேண்டிய  முறை இதுதான்!

        பம்பாய் பல்கலைக்கழகத்தில் 2015’ம் வருஷம் ’சமஸ்கிருத தினம்’ என்று ஒரு நாள் கொண்டாடினார்கள். விழாவில் சமஸ்கிருத வளர்ச்சிக்கு   நிறைய பணிகள் புரிந்து வரும் டாக்டர் கௌரி என்ற ஒரு சமஸ்கிருத அறிஞர்  கௌரவிக்கப்பட இருந்தார். 

அவருக்குக் கௌரவம் அளிக்க  மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அழைக்கப்பட்டிருந்தார்.

                   விழா மேடையில் டாக்டர் கௌரி, விழா நிர்வாகிகள், 
மற்றும் பல்கலைக்கழக  உயர் அதிகாரிகள் அனைவரும் 
அமர்ந்திருந்தார்கள்.  முதல்வருக்காக காத்திருந்தார்கள்.  குறித்த 
நேரத்திற்கு முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் வந்தார்.   

        மேடையேறிய  முதல்வர் தனக்கு ஒதுக்கப் பட்டிருந்த நாற்காலியில் அமரச் செல்லவில்லை. மாறாக அந்த சமஸ்கிருத விருது பெறவிருக்கும் பெண்மணி உட்கார்ந்து இருந்த இடத்திற்குச் சென்று, பவியத்துடன் குனிந்து, அவர் காலைத் தொட்டு நமஸ்கரித்து விட்டு, மைக்கின் முன் சென்று உரை நிகழ்த்த ஆரம்பித்தார்."There are very few people left on this earth, in this era who really deserve this gesture and Dr. Gauri is one of them".        
ஃபட்னாவிஸின் பணிவையும், காலைத் தொட்டு நமஸ்கரித்ததையும்
பார்த்து அனைவரும் அப்படியே வியப்பில் உறைந்து போனார்கள்.


              தற்போது டாக்டர் கௌரி கேரளாவிலுள்ள சின்மயானந்தா 
பல்கலைக்  கழகத்தில் டீன் பதவியில் உள்ளார்.

(இத்தகவலைத் தந்தவர்: குறிப்பிட்ட விழாவிற்குச் சென்றிருந்த  திருமதி வீணா அமோலிக் அவர்கள். அவருக்கு என் நன்றி.)

இன்னொரு வியப்புத் தகவல்.

பலே விற்பனை

சமீபத்தில் Lillian Eichler Watson  என்ற எழுத்தாளர் 70 வருஷத்திற்கு முன்பு தொகுத்த ஒரு புத்தகம் லாட்டிரி பரிசு மாதிரி எனக்குக் கிடைத்து. எல்லா கட்டுரைகளும் அபாரமான கட்டுரைகள் மட்டுமல்ல, நெகிழ்ச்சியூட்டும் கட்டுரைகள். அதில் படித்த ஒரு கட்டுரைக்கு,  தமிழ் உடையான வேட்டியைக் கட்டி, அடுத்த பதிவாக விரைவில் போடுகிறேன். சற்று நீண்ட பதிவாக இருக்கும். இரண்டு மூன்று பாகங்களாகப் போட வேண்டியிருக்கும் எனக் கருதுகிறேன்.
 லில்லியன் 1922 -ல்   A BOOK OF ETIQUETTE  (ஒழுங்கு நடைமுறைகள் (?)) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார். அது இரண்டு  வருஷத்தில் இருபது  லட்சம் காபிகள் விற்றன. லாபம் மட்டும் இரண்டரை லட்சம் டாலராம்  (இன்றைய கணக்கில் 30 லட்சம் டாலர் இருக்கும்!)

JEOPARDY கேள்விகள்
அமெரிக்க டி.வி.யில் முப்பத்தைந்து வருஷமாக நடந்து வரும் வினாடி வினா நிகழ்ச்சியான JEOPARDY-யில் இதுவரை கேட்கப்பட்ட கேள்விகளின் எண்ணிக்கை எழுபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமாம்.

மின்னல் வேகம்
பிரபல ஜெர்மன் கார் நிறுவனம்:  BUGATTI (புகாட்டி).  கார் பந்தயத்திற்கு உகந்த காரை அவர்கள் தயாரித்து வெள்ளோட்டம் விட்டார்கள். மணிக்கு  304 மைல் வேகத்தில் பறந்ததாம்.

October 02, 2019

நானும் ஒரு ஷேக்ஸ்பியர்- ஒரு ஜகஜ்ஜாலப் புரட்டு



கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களில் இடையிடையே ஒரு சில   சொந்தப்  பாடல்களைப் பல புலவர்கள் புகுத்தி வைத்துள்ளது  அனைவரும் அறிந்ததே.
கம்பன் பெயரோடு தாங்களும் சேர்ந்து பெருமைப்படலாம் என்ற எண்ணத்துடன் இந்த இடைச்செருகல் பாடல்களை உருவாக்கி வந்துள்ளார்கள்!
  அவற்றைக் கண்டுபிடித்து நீக்குவதற்கு மிகுந்த திறமையும் புலமையும் வேண்டும்;  டி.கே.சி போன்று ஆழ்ந்த சிந்தனை உடையவர்கள்  விழிப்புடன் ஈடுபட்டால் இந்த கலப்பட பாடல்களை கண்டுபிடிக்க முடியும்.
  இந்த  பித்து உலகெங்கும் பலரைப் பிடித்து ஆட்டும் அல்ப ஆசை! ஆனால் இங்கிலாந்தில் ஒரு இருபது வயது பையன் செய்த தில்லுமுல்லுவுக்கு ஈடு எதுவும் கிடையாது.  சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. அதாவது ஷேக்ஸ்பியர்  காலமான பிறகு, நூறு ஆண்டுகள் கழிந்த பிறகு நடந்த தில்லு முல்லு!

       வில்லியம் ஹென்றி அயர்லாந்து என்ற இளைஞன் என்ன செய்தான் தெரியுமா?  அவன் லண்டனில் ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் ஏதோ பழைய பத்திரங்களைத் தேடியபோது, ஒரு பத்திரத்தில் ஷேக்ஸ்பியரின் சாட்சிக் கையெழுத்து இருப்பதை பார்த்தான்.  

அவன் உடலில் மின்சாரம் பாய்ந்தது.

 ஷேக்ஸ்பியர் எழுதிய சில நாடகங்களைப் படித்து இருந்ததால், அவருடைய கையெழுத்தைப் பார்த்ததும் அவனை ஒரு வெறி பிடித்துக் கொண்டது.  ஷேக்ஸ்பியரின்  நாடகங்களை ஆழ்ந்து படிக்க ஆரம்பித்தான். 

   அத்துடன் நிற்கவில்லை. சுமார் ஒன்றரை வருஷம்  பத்திரத்தில் இருந்த ஷேக்ஸ்பியரின் கையெழுத்தைப் பார்த்து,  அப்படியே  எழுதப் பழகினான்.  
இத்தனைக்கும் அவரது நாடகங்களின் ஒரிஜினல் கையெழுத்து பிரதிகள் யாவும் மறைந்து போயிருந்தன. 
இளைஞன் அயர்லாந்திற்ககு மேடை நாடகங்களில் மிகவும் ஆர்வம் உண்டு அவனே நடிகனாக வேண்டும் என்று விரும்பினான். அத்துடன் கவிதைகள் எழுதுவதிலும் அவனுக்கு விருப்பம் உண்டு .
படிப்பில்  அவன் படு சூனியம். அவனுடைய பள்ளிக்கூட தலைமையாசிரியர் ஒரு சமயம் கூறியது  “ உன்னால் பள்ளிக்கூடமே அவமானம் அடைகிறது.” .
அவனுடைய பெற்றோர்களும் அவனை ’வடிகட்டி’ என்றுதான் சொல்வார்கள்