October 12, 2011

வாழ்க பாரதியார்!

வாழ்க பாரதியார்!
 அன்றொரு நாள் நான் மகாகவி பாரதியின் பாடல்களை உரக்கப் படித்து ரசித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயம் என் நண்பரும் அரசியல்வாதியுமான திரு. அசமஞ்சம் என்னைப் பார்க்க வந்தார்.
      ""என்னய்யா படித்துக் கொண்டிருக்கிறீர்'' என்று கேட்டார்.
      ""மகா கவி பாரதியாரின் பாடல்களை இப்படிப் படிப்பது என் வழக்கம்.. இப்போது அவருடைய நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.''
      ""ஒரு பாட்டைப் படியேன்.''
      ""அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.  இச்சகத்துளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும் அச்சமில்லை...''
      ""பெர்மாதமா இருக்கே... இது போறும்பா.  இதை வச்சுக்கினு பாரதியார் புகழை நான் பரப்பிடுவேன்.  கூட்டத்துக்குக் கூட்டம் அவரைப் பத்திப் பேசறேன்'' என்று சொல்லிவிட்டுப் போனார் அசமஞ்சம்.  சொன்னபடியே அவர் எல்லாக் கூட்டங்களிலும் பாரதியாரைக் கொண்டு வந்தார்.
      அவர் கலந்துகொண்டு சில கூட்டங்களில் பேசிய உரைகளை இங்கு தருகிறேன்.

கோணி வியாபாரிகள் சங்கம்
      ''....எனக்கு முன்பு பேசியவர் "ஐயோ, பிளாஸ்டிக் பைகள் வந்து விட்டனவே... கோணி வியாபாரம் படுத்து விடுமா'' என்று கவலைப்பட்டார்.  பெட்ரோல்தான் பிளாஸ்டிக்குக்கு மூலப் பொருள்.  அதற்குப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.  சணலோ ஆண்டவனால் தாராளமாகத் தரப்படும் செடி. 

ஆகவே கோணிக்கு என்றும் நலிவு ஏற்படாது.  பாரதியார் சொன்ன மாதிரி அச்சமில்லை அச்சமில்லை, அச்சமென்பதில்லையே.''

பஸ் டிரைவர்கள் மகாநாடு
      "நீங்கள் பஸ்ஸை ஓட்டிக் கொண்டு போகும்போது எதிரே யாராவது வந்து மாட்டிக் கொண்டு விடப் போகிறார்களே என்று பயந்து கொண்டே ஒட்டாதீர்கள்.  பாரதியார் சொன்ன மாதிரி இச்சகத்துளோரெலாம் எதிர்த்து வந்தாலும் அச்சமில்லை, அச்சமில்லை, காலில் பிரேக் இருக்கக் கவலை ஏன்பாரதியார் மகா கவி என்று சும்மாவா சொன்னார்கள்.

சென்ஸார் அலுவலக விழா
      "இப்போ முத்தக் காட்சி சினிமாவிலே இருந்தா என்னான்னு கேக்கறாங்க. சென்ஸôர் ஏன் வெட்டிடறாங்கன்னு சில பேர் காரசாரமா உங்களைப் பேசறங்க.  அதைப் பத்திக் கவலைப்படாதீங்க.  நம்ப பண்பாட்டை நாம காப்பாத்தணும்.  பாரதியார் கூட இதை மனசில் வெச்சிக்கிட்டுத்தான் சொன்னாரு "இச்' சகத்திலுளோர் எலாம், அதாவது முத்தம் என்ற காம உலகில் இருப்போர்கள் எல்லாம் எதிர்த்து நின்றபோதிலும் அச்சமில்லை... அச்சமில்லை...''

விண்வெளி விஞ்ஞானிகள் அரங்கு
      மகா கவி பாரதி பெரிய ஞானி.  அன்று அவன் சொன்னதை இன்று நீங்கள் ஆராய்ச்சியின் மூலம் நிரூபித்து வருகிறீர்கள்.  இந்தப் பரந்த பிரபஞ்சத்தில் எத்தனையோ கோள்கள் உள்ளன.  பூமியைப் போல் அங்கும் வாழ முடியும் என்பதை நிச்யம் விஞ்ஞானிகள் கண்டு பிடிக்கப் போகிறீர்கள்.  அதனால்தான் பாரதி பாடினான்.  "இச் சகத்துளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்று.  "இந்தப் பூமியில் எல்லாரும் எதிரியாகிவிட்டால் எங்கே போவது என்று பயப்படாதீர்கள்.  சந்திரனில் அல்லது வேறு கிரகத்தில் போய் வாழலாம்.  பிசாத்து உலகத்தினர் எதிர்ப்புக்கு அஞ்சாதீர்கள்'' என்ற கருத்தில்தான் அவன் பாடியிருக்கிறான்.

5 comments:

  1. :-)) வாயுள்ள புள்ளை பிழைக்கும் என்பது இதுதானோ?

    ReplyDelete
  2. அசமஞ்ஜமா? அசாத்திய சூரர் அல்லவா அவர்! ஒரு வரி பாரதியை வைத்துக்கொண்டு விளையாடிவிட்டாரே! - ஜெ.

    ReplyDelete
  3. பசுக்கதை தெரியுமா? இதோ.
    தேர்வில் பசுவை பற்றி கட்டுரை வரும் என்று ஆசிரியரின் மகன் (வகுப்பு நண்பன்) சொன்னதின் பேரில் பசுவை பற்றி மட்டும் தயாரித்து கொண்டு இரு முறை ஏமாந்தான். முழு தேர்வில் கட்டாயமாக கேட்பார்கள் என்று உறுதி அளித்தான். ஏமாற்றம். சுதந்திர தினத்தை பற்றி கேட்டார்கள். தெரிந்ததோ பசு. சற்று சிந்தனைக்கு பிறகு, எழுத ஆரம்பித்தான்.

    சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை கம்பத்தில் ஏற்றுவார்கள். அந்த கம்பத்தில் ஒரு பசுவை கட்டி இருந்தார்கள். பசுவிற்கு நான்கு கால்கள், ஒரு வால், இரண்டு கொம்புகள் உண்டு. பசு பால் தரும்......
    பசுவிற்கு நழுவி, தனக்கு தெரிந்தததை எழுதி முடித்தான்.
    இந்த அசமஞ்சமும் பசுக்கத்தைத்தான்!!!!
    விஜயன்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!