July 30, 2011

கலியுக வேதம் பிரிட்டானிகா


என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவை  கலியுக வேதம் என்று ஒரு காலத்தில் சொல்வதுண்டு . அந்தக் கலைக்களஞ்சியத்தைக் கண்ணால் பார்த்தது நான் டில்லி சென்ற பிறகுதான். அதிர்ஷ்டவசமாக  என் அலுவலகத்திற்கு நாலு கட்டடம் தள்ளி பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம் இருந்தது. அங்கு போய் படிப்பேன். எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் அங்கு  சுவையான தகவல்கள் இருக்கும்மொத்த பிரிட்டனிகாவையும் படிக்கலாம் என்று ஒரு சமயம் யோசித்தேன்எழுத்துப் பணி, புத்தகம் படிக்கும் ஆர்வம்,, மொழிபெயர்ப்பு வேலை, டில்லி அமெச்சூர் நாடகங்களில் பங்கு என்று பலவற்றிற்கு நேரம் போதாமல் இருந்ததால் இந்த எண்ணத்தைக் கைவிட்டேன். மேலும் அப்படி படித்திருந்தாலும்  90 பங்கு விஷயங்கள் என் மூளைக்கு எட்டியிருக்காது. ஆகவே. படிக்கவில்லை. .

(சமீப காலத்தில்,பிரிட்டனிகாவை  இரண்டு செட்களாகப் பிரசுரிக்கிறார்கள் :  1. மைக்ரோ செட்,2. மேக்ரோ செட். மைக்ரோ செட்டில் கட்டுரைகள் சுருக்கமாக இருக்கும். விவரமான கட்டுரைகளைப் படிக்க விரும்பினால் மேக்ரோ செட்டிற்குப் போகவேண்டும்.)

சமீபத்தில் ஒரு புத்தகத்தைப் படித்தேன். என்சைக்ளோபீடியா பிரிட்டனிகாவை முழுதுமாகப் படித்தவர் எழுதியது. படித்து  கொண்டிருக்கும் போதே. அவ்வப்போது  தன் கருத்துகளுடன் சேர்த்து   எழுதியது. புத்தகம்:  THE KNOW IT ALL--by  A J JACOBS.  இவர் ESQUIRE  பத்திரிகையின் ஆசிரியர்மொத்தம் 33000 பக்கங்களைப் படித்திருக்கிறார் (ராம்!). (புத்தகம் சுமார்தான்!)

அதிலிருந்து திரட்டிய ஒரு சில தகவல்களைத் தருகிறேன்.

* உலகிலேயே மிகப் பெரிய கலைக்களஞ்சியம்: சைனாவின் யூ- ஹை தான். 1738-ல் தயாரிக்கப்பட்ட இது 240 வால்யூம்களைக் கொண்டது.

* பிரான்சில் 1245-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட  கலைக்களஞ்சிய கட்டுரைகள் எல்லாம் கவிதைகளாக எழுதப்பட்டிருக்கிறதாம்!

*பிரிட்டானிகாவின் முதல் பதிப்பு 1768-ம் ஆண்டு பிரசுரமாயிற்று. மொத்தம் மூன்றே வால்யூம்கள்! முதல் பதிப்பில் நாடகங்கள் பற்றிய கட்டுரைக்கு ஏழே வரிகள்தான்.கவிதைகள் பற்றிய கட்டுரைக்கு  500 வார்த்தைகள்தான். அதே சமயம் குதிரை நோய்களைப் பற்றிய கட்டுரை 39 பக்கங்களுக்கு எழுதப்பட்டிருந்தது!

* முதல் வால்யூமில்   A மற்றும் B எழுத்தில் துவங்கும் விஷயங்களைப் பற்றிய கட்டுரைகள் இருந்தன. C முதல் Z வரை உள்ள எல்லா எழுத்துகளுக்கும்: மற்ற இரண்டு வால்யூம்கள்! அவ்வளவுதான்! (ஆதாரம்:  HERMAN KOGAN எழுதிய  THE GREAT EB)

*1768-ம் ஆண்டு வெளியான முதல் பதிப்பு இப்போது விலைக்குக் கிடைக்கிறது 135 டாலர்! முதல் பதிப்பைப் போலவே அச்சு, காகிதம், படங்கள், பைண்டிங். எல்லா அச்சு அசலாக உருவாக்கி இருக்கிறார்கள்.

* புகழ் பெற்ற பார்னம் பெய்லி சர்க்கஸை உருவாக்கிய பி டி பார்னம் 81-வது வயதில் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தபோது, அவரது வேண்டுகோளுக்கு இணங்கி அவரைப் பற்றிய இரங்கல் செய்தியை ஒரு பத்திரிகை முன்னதாகவே  வெளியிட்டது.

* உலகின் மிகப்புகழ் பெற்ற உரைகளுள் ஒன்று: ஆபிரகாம் லிங்கன்  1863 நவம்பர் 19-ம் தேதி கெட்டிஸ்பர்க் போர்க்களத்தில் நிகழ்த்திய உணர்ச்சிபூர்வமான சொற்பொழிவு.  Four score and seven years ago our fathers brought forth on this continent, a new nation, conceived in Liberty, and dedicated to the proposition that all men are created equal.... .என்று துவங்கும் உரைஅதை நிகழ்த்த லிங்கன் எடுத்துக் கொண்ட நேரம் 5 நிமிடங்கள்.

லிங்கன் பேசுவதற்கு முன்பு  பேசியவர் EDWARD EVERETTE  என்ற பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஹார்வார்ட்  பல்கலைக்கழகத்தின் தலைவர். இவர் பெயர் பெற்ற சொற்பொழிவாளர். இவர் இரண்டு மணி நேரம் பேசினாராம்.

ஆனால் லிங்கனின் ஐந்து நிமிஷ உரை எவரெட்டின் உரையைத் தூக்கிச் சாப்பிட்டு விட்டது! லிங்கனின் உரைஆங்கில மொழி உள்ளவரை இருக்கும்.
பாவம் எவரெட்!

(தேவை இல்லாத பின்குறிப்பு: இரண்டு வருஷங்களுக்கு முன்பு, கெட்டிஸ்பர்க்   போர்க்களத்தில் லிங்கன் உரை நிகழ்த்திய  இடத்தைப் போய்ப் பார்த்தேன். அந்த அற்புத உரையை அங்கு நின்று நிதானமாகப் படித்து  விட்டு வந்தேன்!)

2 comments:

  1. Of the people, by the people, for the people என்ற வார்த்தைகள் லிங்கன் சொன்னவை என்பது வரைதான் தெரிந்திருந்தது. ஆனால் இந்த அற்புதமான உரைக்குள் அடங்கியிருந்தது என்பது உங்கள் மூலமாகத் தெரியவந்ததில் (முழு உரையையும் தேடிப்படித்துவிட்டேன்)இரட்டிப்பு மகிழ்ச்சி

    ReplyDelete
  2. நல்ல பதிவு.
    அரிய, புதிய விஷயங்கள்.
    நன்றி ஐயா.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!