January 13, 2014

என் முன்னுரைகள்-1


1. சேட்டைக்காரன் எழுதிய மொட்டைத்தலையும் முழங்காலும்.
       இது சேட்டைக்காரனின் புத்தகத்திற்கு நான் எழுதும் முன்னுரை. பொதுவாக முன்னுரை என்பது பாராட்டு உரையாகத்தான் இருக்கும். அதுவும் படிக்காமலேயே பல முன்னுரைகள் எழுதப்படுவதும் உண்டு. நானும் சேட்டையின் கதைகளைப் படிக்காமல் இருந்திருக்க வேண்டும். அப்போது அட்டகாசமான பாராட்டுரை எழுதி இருப்பேன். இன்டர்நெட்டில் எதையோ வேட்டையாடிக் கொண்டிருந்தபோது சேட்டையின் வலையில் அகப்பட்டுக் கொண்டேன்.
அவரது கதை/கட்டுரைகளைப் படித்தேன். படிக்கப் படிக்க சிரிப்புத் தாங்க முடியவில்லை. வயிற்றெரிச்சலையும் தவிர்க்க முடியவில்லை. பொறாமைதான் காரணம். அவரது சரளமான நடையும், வரிக்கு வரி வரும் நகைச்சுவை வெடிகளும் என்னை அசத்திவிட்டன. பல சமயம் சட்டென்று வாய்விட்டுச் சிரித்து விட்டேன்.
அதுவும் அவர் அள்ளித் தெளித்திருக்கும் ஏராளமான உபமானங்கள் எல்லாம் சூப்பர். கீழ்ப்பாக்கத்தில் ஐம்பது வருஷம் சர்வீஸ் போட்ட ஆசாமி மாதிரி சிரித்தேன்.
   சேட்டைக்காரனுக்கு சிலேடையும் அனாயாசமாக வருகிறது. தன்னைத்தானே எள்ளி நகையாடுவதும் பிரமாதமாக இருக்கிறது.
அவர் கட்டுரைகளைப் படித்தபோது எனக்குத் தோன்றியது: இந்த ஆசாமி வலைப்பூவில் எழுதக் கூடாது; பொதுஜனப் பத்திரிகைகளில் எழுத வேண்டும் என்பது என் கருத்து, அவா, விருப்பம், யோசனை, அறிவுரை, வேண்டுகோள், கட்டளை.
   அவர் கட்டுரைகளிலிருந்து ஒருசில வரிகளை இங்கு தரலாம் என்று பார்த்தபோது அது முடியாத காரியம் என்று உணர்ந்தேன். எல்லா வரிகளும் நகைச்சுவை மணிகள். படித்தேன் என்பதற்குச் சாட்சியாக இருக்கட்டும் என்று ஒன்றிரண்டு கொடுக்கிறேன்.

* வெரிகுட்! இவ்வளவு கோட்டை விட்டும் எங்க ஒட்டகப் பண்ணையிலே முதலீடு பண்ணனும்னு உங்களுக்கு எப்படித் தோணிச்சு?”
 “பணத்தை விட்ட இடத்துலேதானே சார் பிடிக்கணும்? சரவணபவனிலே சாப்பிட்டுட்டு வசந்தபவனிலே போயா வாய் கொப்பளிக்க முடியும்?"
*நாளைக்கு வரச்சொல்லும்மா! டயர்டா இருக்கு, நான் கொஞ்ச நேரம் பல்லு விளக்கப்போறேன்!”
*அதாவது, ரெண்டு பேருக்கும் ஆளுக்கு ஒவ்வொரு சம்சாரம்னு சொல்ல வந்தேன். என் சம்சாரம் பேரு கோதை, உங்க சம்சாரம் பேரு ராதை!”
* பீர்க்கங்கரணைத் தண்ணித்தொட்டிக்கு பீட்டர் இங்கிலாண்டு சட்டை போட்டுவிட்டது போல, ஆல்ப்ஸ் மலையிலிருந்து உருண்டுவந்த ஐஸ்பாறை போன்று உருண்டையாக ஒருவர் என்னை நெருங்கினார்.
* ”என் வாழ்க்கையிலேயே இப்பத்தான் முதமுதலா டம்ளர்லே உப்புமா சாப்பிட்டிருக்கேன்,”  என்று மனைவியை மனமுவந்து பாராட்டியவன்.
*அதை ஆஞ்சநேயர் சாப்பிடுவாரு; என்னை மாதிரி நோஞ்ச நேயர் எப்படி சாப்பிடறது?
* எனது நாக்கு அடைமழை பெய்த ஆதம்பாக்கம் சாலைபோல ஊறத்தொடங்கியது.

    முன்னுரையை எழுத ஆரம்பிக்கும்போது சேட்டையை அதிகம் புகழக் கூடாது என்று தீர்மானத்துடன்தான் துவங்கினேன். அவரது நகைச்சுவை என் தீர்மானத்தைத் தவிடுபொடியாக்கி விட்டது.
  சேட்டைக்காரனை நான் சந்தித்தது இல்லை; அவருடன் பேசியதும் இல்லை! சேட்டையின் எளிமையான, சரளமான, யாரையும் புண்படுத்தாத, எப்போது படித்தாலும் சிரிப்பு வரவழைக்கக் கூடிய கதை, கட்டுரைகளை நான் எழுதிய கட்டுரைகளைவிட அதிகம் ரசித்துப் படித்தேன்; ரசிகனானேன்
மேலும் பல உயரங்களைத் தொட்டு, கொடிகட்டிப் பறப்பார் சேட்டை என்பதில் எனக்குக் கடுகளவும் சந்தேகமில்லை.
--கடுகு
========================
2.. சுஜாதா தேசிகன் எழுதிய "என் பேர் ஆண்டாள்”
 
முகவுரை  எழுதுவதைப்போல் கஷ்டமான காரியம் எதுவுமில்லை.( அதைப் படிப்பது அதை விடக் கஷ்டமான காரியம் என்பது வேறு விஷயம்!)

புத்தகம் எழுதுபவர்களுக்குபுத்தகம் எழுதி முடித்த பிறகு பொதுவாக ஏற்படும் இரண்டு பிரச்சினைகள்: முதலாவதுபுத்தகத்திற்கு என்ன பெயர் வைப்பது? அடுத்தது: யாரிடம் முகவுரை எழுதி வாங்கிப் போடுவது? முதல் பிரச்சினையை அவரே  முட்டி மோதி (மனைவியுடன்?) ஒரு மாதிரிபிரமாதமானத் தலைப்பைத்  தேர்ந்தெடுத்துவிடுவார்.

முகவுரையை அப்படிச் சுலபமாகச் செய்ய முடியாது. முகவுரை எழுதுபவர் நண்பராக இருந்தால் நல்லது. எழுதி கொடுத்த பிறகும் தொடர்ந்து நண்பராக இருக்க வேண்டும் என்ற காரணத்தால் (அல்லது அச்சத்தால்!) ஓஹோ என்று பாராட்டி எழுதி விடுவார். புத்தகம் வெளியான பிறகு யாரும் அவரைக் கேள்வி கேட்டு, குதறி எடுக்கமாட்டார்கள் என்று அவருக்குத் தெரியும்!

என் நண்பர் சுஜாதா தேசிகன், தன் புத்தகத்திற்கு நான்தான் முகவுரை எழுத வேண்டும் என்று கண்டிப்புடனும் அன்புடனும்  கேட்டுக் கொண்டார். உண்மையிலேயே  அவருடைய கதைகளை, வலைப்பூவில் வந்த போது படித்துப்  பாராட்டிக்  கடிதம் எழுதியிருப்பதாலும் முகவுரை எழுதுவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே.

வெவ்வேறு தளங்களில் கடந்த பல மாதங்களில் கதைகளைப் படித்து இருந்தாலும் எல்லாம் எனக்கு நினைவில் இல்லை, இப்போது தொகுப்பாகப் படிக்கும்போது, அதுவும் முன்னுரை எழுத வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு படிக்கும்போது, புதிதாகப் பல சிறப்புகள், வித்தியாசமான பதப்பிரயோகங்கள், அதிரடியான திருப்பங்கள், மின்னல் போன்ற வர்ணனைகள் கண்ணில் பட்டன; ரசிக்கவும் முடிந்தன!
*        *            *
தமிழ் மொழி எத்தனையோ வகைப்படும். கோவைத் தமிழ், திருநெல்வேலித் தமிழ், மதுரைத் தமிழ், புகழ் பெற்ற மெட்ராஸ் தமிழ் (ஒரு காலத்தில் டிவியால் வளர்க்கப்பட்ட) ஜுனூன் தமிழ் என்று பல தமிழ்களுடன், பேச்சுத் தமிழ், இலக்கியத் தமிழ், (அரசியல் மேடைகளில் முழங்கும்) வசைத் தமிழ் என்று பலப் பல! சமீபகாலங்களில் கணினித்துறையில் உள்ள இளைஞர்கள் கதை எழுதுகிறர்கள். ஆன்மீகம் அலசுகிறார்கள்; நாலாயிரம் ரசிகர்களாக இருக்கிறார்கள். நல்ல விஷயம்தான். அவர்கள் எழுதும் (கணினித்?) தமிழ் வித்தியாசமான நடையில் இருப்பது மட்டுமல்ல, ஒரு வித ஈர்ப்புடனும் இருக்கிறது.

சுஜாதா தேசிகன் ஒரு கணிப் பொறியாளர். அவர் சொல்லிக் கொள்ளாவிட்டாலும் அவருடைய தமிழ் நடை அதைத் தெளிவாகக் காட்டிக் கொடுத்து விடுகிறது. பலர் இந்த நடையில் எழுதுகிறார்கள் என்றாலும், அதில் ஒரு சிலர் தான் பிசிறு இல்லாமல் எழுதுகிறார்கள். அவர்களில் ஒருவர் சுஜாதா தேசிகன்.

சின்னச் சின்ன சம்பவங்களிலும் ஒரு சுவாரசியமான கதை அம்சம் இருப்பதை இவருடைய கட்டுரைகள் காட்டுகின்றன. ஓட்டத்தைத் தடைபடுத்தாத, திடீரென்று ப்ரேக்கை அழுத்தி விடுவதைப் போன்று சில சொடக்குகள். அது வார்த்தையாக இருக்கலாம். நையாண்டி அடைமொழியாக இருக்கலாம். வர்ணனையாக இருக்கலாம். ஏன் முழு வாக்கியமாகவும் இருக்கலாம் அது கதைக்கு நேர்த்தியைச் சேர்த்து விடுகிறது. இது என் அனுபவம்.

இந்த தொகுதியில் உள்ள கதை, கட்டுரைகளைத்  தனித் தனியாகக் குறிப்பிட்டு விமர்சனம் செய்யப் போவதில்லை. அவைகளைச் சிபாரிசு செய்கிறேன்.

சுஜாதா தேசிகனுக்கு வைஷ்ணவத்தில் ஈடுபாடு இருப்புது பல  இடங்களில் தெரிகிறது. அவர் பிறந்த ஸ்ரீரங்கத்தின் மண்ணின் மணமும், காவிரித் தண்ணீரின் சுவையும் அவர் எழுத்தில் பிரதிபலிக்கின்றது

நல்ல கதை, கட்டுரைகளைப் பார்த்தால் ஆசிரியர் சாவிஎன்னமா கல கல என்று இருக்கிறது!” என்று பாராட்டிச் சொல்லுவார். நானும் அதையே சொல்லுகிறேன்.

சில கட்டுரைகள் டெக்னிகலாக உள்ளன. என்னைப் போன்ற அப்பாவிகளை மிரட்டுகின்றன! இந்த முகவுரையை பார்த்த பிறகு அந்தக் கட்டுரைகளை நீக்கிவிட்டிருந்தாலும் நீக்கி இருப்பார்!

மொத்தத்தில் சுஜாதா தேசிகன் ஒருயூசர் ஃப்ரெண்ட்லிபுத்தகத்தைத் தந்துள்ளார். அவருக்கு என் பாராட்டுகள்!
--கடுகு
 ---

1 comment:

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!