March 30, 2011

அர்ச்சனை - 7 சிக்கனமும் தலைக்கனமும்!

சமையலறை வேலைகளை முடித்து விட்டு, விளக்குகளை அணைத்து விட்டு, மாடி பெட்ரூமுக்குள் நுழைந்த அம்புஜம், தன் கையிலிருந்த மின்சார பில்லை படுக்கையில் படுத்துக் கொண்டு மர்ம நாவலைப் படித்துக் கொண்டிருந்த பஞ்சுவின் பக்கமாகத் தூக்கிப் போட்டாள்.
``கொஞ்சம் கடைக்கண்ணை இப்படித் திருப்பி, ’என்னடா ஏதோ பேப்பர் போட்டாளே’ என்று பார்த்தால் குடி முழுகிப் போய் விடாது. அந்த இலக்கியப் புத்தகத்தை கீழே வெச்சால் தெய்வக் குற்றம் இல்லை. போகிறதே புத்தி, பத்து ரூபாய் கொடுத்து `பல்லாவரம் பங்களா மர்மம்' நாவலை வாங்கிப் படிக்கா விட்டால் தப்பில்லை. நாளைக்கு உங்க ஆபீஸ் மானேஜர் உங்க தலையை வாங்க மாட்டார்.
தெருக்கோடி பழைய பேப்பர்க்காரன்  இந்த மாதிரி குப்பை நாவல்களை கடையில் அடுக்கி வெச்சிருக்கான். பத்து பைசா பெறாத புஸ்தகத்திற்கு பத்து ரூபாய்! அட்டையில் அழகி படம் போட்டிருந்தால் வாங்கிடுவீங்க. மதுரையில் ஒரு கள்ளழகர். இங்கே ஒரு ஜொள்ளழகர்!
போகட்டும்... அது என்ன பேப்பர் என்று பார்த்தீங்களா? ஆமாம்... மின்சார பில். எடுத்துப் பாருங்க... ஷாக் அடிக்காது.
என்ன, என்ன சொன்னீங்க... மின்சார பில், சம்சார பில் இரண்டும் ஷாக் அடிக்கும்னுதானே... வீடு என்றால் செலவு இருக்கத்தான் செய்யும். உமாவுக்கு டெர்மினல் பரீட்சை. குழந்தை ராத்திரி ஒரு மணி, இரண்டு மணின்னு படிக்கிறாள். அதனால் மின்சார பில் கொஞ்சம் அதிகமாகத்தான் ஆயிடறது. அதுதான் உங்க கண்ணை உறுத்தறது. சனிக்கிழமை தவறாமல் உங்க ஃப்ரெண்ட்ஸ் பட்டாளத்தை வரவழைச்சு ரம்மி ஆடறதுக்கு நாலு லைட், இரண்டு ஃபேன் தேவைப்படறது.போதாக் குறைக்கு முறுகலா மலபார் அடையும், சட்னியும் சப்ளை செய்தாகிறது. மின்சார பில், சம்சார பில் இரண்டும் ஏறத்தான் ஏறும்.
”என்னது, மேலத் தெரு லட்சுமி ஸ்டோரில் சாமானை வாங்கினால் மாதம் 50, 100 மிச்சமாகும்னுதானே செல்றீங்க... ஒத்துக்கறேன். தெருக்கோடி கோபால் கடையில வெலை ஜாஸ்திதான். நானும் கஷ்டத்தைப் பார்க்காமல்  கிட்டத்தட்ட இரண்டு மைல் தூரம் நடந்து போய்தான் லட்சுமி ஸ்டோர்ஸிலிருந்துதான்  வாங்கிண்டு வர்றேன்.
”என்ன அம்புஜம் வீட்டு சாமான்களையெல்லாம் மலிவாகவே வாங்கி மாடியில் இன்னொரு போர்ஷன் கட்டி வாடகைக்கு விட்டு விடுவாய் போலிருக்கே என்று கேட்கிறார். யாரா? அவள்தான். நீங்க பல்லை இளிப்பீங்களே, பக்கத்து வீட்டு ரம்பை.
”வேலைக்காரியை நிறுத்திடப் போகிறேன். வீட்டுத் துணியை நானே தோய்ச்சுக்கறேன். மாசம் நானூறு ரூபாய் மிச்சம். சரிதான். வாஷிங் மெஷின் வாங்கிடலாமாவா? அடப்பாவமே, பெண்டாட்டி மேல என்ன கரிசனம்! நான் பழைய அம்புஜம் இல்லை. எனக்கு உங்க ஜகஜ்ஜால வித்தை எல்லாம் நன்னா தெரியும். உங்களுக்குப் பக்கத்து வீட்டு தளுக்குக்காரி பொண்டாட்டியா வந்திருக்கணும். கர்சீப்பைக் கூட லாண்டரியில் போடறாள். நானும் துணி, மணி, பெட்ஷீட், தலைகாணி எல்லாம் அழுக்காய், எண்ணெய் சிக்காய் வெச்சுக்கறேன். சரியா?
என்ன நமுட்டுச் சிரிப்பு? நாள் பூரா துணி தோய்ச்சிண்டு இருப்பே, சாப்பாடு கூப்பாடுதான்னு தானே சொல்ல வர்றீங்க... உங்க மனசிலே நெனைக்கிறது நாலு ஊருக்குக் கேட்கும். என்னமோ இன்னிக்கு வெறும் கூட்டு மட்டும் பண்ணிட்டேன். உங்களுக்கு கண்ணுக்கு அம்புஜம் ஒரு சமையல் காரி, வேலைக்காரி, சலவைக்காரி எல்லாம். அவ பொண்டாட்டி என்பதை நீங்க மறந்து எத்தனையோ வருஷம் ஆயிட்டுது.
உங்க பசங்களுக்கு நீங்க நல்ல அதாவது கெட்ட உதாரண புருஷர். உங்க கிட்டே இருந்து பசங்க ஒரு நல்ல பாடத்தையும் கத்துக்க முடியாது. உங்க கிட்ட ஏதாவது இருந்தால்தானே...
என்னது, மென்னு முழுங்கறீங்க? மன்ஷாளை வாயில் போட்டு முழுங்கற மாதிரி வார்த்தைகளையும் போட்டு முழுங்கறீங்க.
என்னது... ஆபீஸ் கேன்டீன்லேயே ராத்திரி சாப்பிட்டு விட்டு வந்துடறீங்களா? ஏன், ஆபீஸ்லேயும் எனக்கு ”நல்ல” பெயரை வாங்கித் தரப் போறீங்களா? அந்த நடமாடும் ஒலிபெருக்கி சங்கரசுப்பு ஊரெல்லாம் பரப்பி என் மானத்தைக் கப்பல் ஏத்திடுவாரு. பொண்டாட்டி மானம் போனால் உங்களுக்குக் குலாப் ஜாமூன் சாப்பிட்ட மாதிரி.
நான்  கத்தறேனா? `போதும், போதும்!' என்று கத்தி காதில் கை பொத்திக் கொள்றதுக்குக் காரணம். உங்க கத்தலை. உங்களாலேயே சகிச்சுக்க முடியலை என்பதுதான்!
இப்போ இன்னொண்ணும் சொல்லப் போகிறேன். அதுக்கும் சேர்த்துக் கத்திடுங்கோ. நான் கைமுறுக்கு பண்ணி சப்ளை பண்ணப் போறேன். ஒரு முறுக்குக்கு 50 பைசா நிக்கும்.
”தெரியும், நெனைச்சேன் ஏதாவது சொல்வீங்கன்னு. ஆமாம், வீடு முழுதும் எண்ணெய் வாசனை நிச்சயமா வரும். வரட்டுமே... மாசம் 2000 ரூபாய்க்கு மேலே நிக்கும். நாளைக்கே உமாவுக்குக் கல்யாணம் பண்ணனும்னா நாலு காசு வேண்டாமா? என்ன அப்படிப் பாக்கறீங்க... உமா யாருன்னு தெரியலையா? ....நம்ப பொண்ணு!
இப்படி குருவி சேர்க்கற மாதிரி சேர்த்தால்தான் உமாவுக்கு காதிலே, கழுத்திலேன்னு ஏதாவது போட்டு அனுப்ப முடியும்.
சொல்றேனே, உங்களுக்கு சிக்கனமான பொண்டாட்டி வந்திருக்கக் கூடாது. தலைக்கனம் பிடிச்சவ வந்திருக்கணும்.
பின்பக்கம் வராந்தாவில் அடுப்பை வச்சிண்டு முறுக்கு பண்றேன். உங்க வீட்டுக்குள்ள எண்ணெய் வாசனையே வராது.
பக்கத்து வீட்டு சித்ராங்கி பாத்துடுவாளா? பார்க்கட்டுமே... ஊர் பூரா சொல்லட்டுமே. என்னைப் பத்தித்தானே சொல்லப் போகிறாள். உங்களை இல்லையே? நீங்க பல்லை இளிச்சால் அவள் பதிலுக்கு இளிக்க மாட்டாளேன்னு பயப்பட வேண்டாம்!.....
அடடா... என்ன மனுஷன்... குறட்டை விடறாரே...ஊம்... சித்ராங்கின்னு சொன்னதும், அவளோட கனவில டூயட் பாட தூங்க ஆரம்பிச்சுட்டார்.''

அம்புஜம் அலுத்துக் கொண்டே விளக்கை அணைத்தாள். பஞ்சுவும் உண்மையிலேயே தூங்க ஆரம்பித்தார்.

(அடுத்து பதிவில் பின் குறிப்புடன் முற்றும்!)

5 comments:

  1. அந்த மலபார் அடையின் ரெசிபி கொஞ்ஜம் கேட்டு எழுத முடியுமா?! புலம்பினாலும் அம்புஜம் மாமி பாவம் தான்! - ஜெ.

    ReplyDelete
  2. விட்டால், அம்புஜம் மாமி ரசிகர் மன்றம் ஆரம்பித்து விடுவீர்கள் போலிருக்கிறதே!

    ReplyDelete
  3. நான் யாருக்கு என்று ரசிகர் மன்றம் ஆரம்பிப்பேன்? கடுகு அவர்களுக்கா? கமலா மாமிக்கா? அம்புஜம் மாமிக்கா? யாராவது தேர்தலில் நின்றாலோ, சினிமாவில் நடித்தாலோ பார்க்கலாம்! - ஜெ.

    ReplyDelete
  4. உங்கள் எழுத்துக்கு பின்னால் உள்ள ரசிகர் பட்டாளம் மிகவும் இருக்கும் ஆர் சுரெஷ்

    ReplyDelete
  5. உங்களுக்கு சிக்கனமான பொண்டாட்டி வந்திருக்கக் கூடாது. தலைக்கனம் பிடிச்சவ வந்திருக்கணும்.
    அப்படியே வார்த்தைகளை அலாக்காக ஞாபகப் பகுதியில் வைத்து எழுத்தில் கொண்டு வருகிற சாமர்த்தியம் உங்களுக்கு மட்டுமே..

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!