October 12, 2011

வாழ்க பாரதியார்!

வாழ்க பாரதியார்!
 அன்றொரு நாள் நான் மகாகவி பாரதியின் பாடல்களை உரக்கப் படித்து ரசித்துக் கொண்டிருந்தேன். அந்தச் சமயம் என் நண்பரும் அரசியல்வாதியுமான திரு. அசமஞ்சம் என்னைப் பார்க்க வந்தார்.
      ""என்னய்யா படித்துக் கொண்டிருக்கிறீர்'' என்று கேட்டார்.
      ""மகா கவி பாரதியாரின் பாடல்களை இப்படிப் படிப்பது என் வழக்கம்.. இப்போது அவருடைய நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.''
      ""ஒரு பாட்டைப் படியேன்.''
      ""அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.  இச்சகத்துளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும் அச்சமில்லை...''
      ""பெர்மாதமா இருக்கே... இது போறும்பா.  இதை வச்சுக்கினு பாரதியார் புகழை நான் பரப்பிடுவேன்.  கூட்டத்துக்குக் கூட்டம் அவரைப் பத்திப் பேசறேன்'' என்று சொல்லிவிட்டுப் போனார் அசமஞ்சம்.  சொன்னபடியே அவர் எல்லாக் கூட்டங்களிலும் பாரதியாரைக் கொண்டு வந்தார்.
      அவர் கலந்துகொண்டு சில கூட்டங்களில் பேசிய உரைகளை இங்கு தருகிறேன்.

கோணி வியாபாரிகள் சங்கம்
      ''....எனக்கு முன்பு பேசியவர் "ஐயோ, பிளாஸ்டிக் பைகள் வந்து விட்டனவே... கோணி வியாபாரம் படுத்து விடுமா'' என்று கவலைப்பட்டார்.  பெட்ரோல்தான் பிளாஸ்டிக்குக்கு மூலப் பொருள்.  அதற்குப் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.  சணலோ ஆண்டவனால் தாராளமாகத் தரப்படும் செடி. 

புள்ளிகள்: குருஷ்சேவின் மனைவி


சரித்திரம் எப்படி மாறி இருக்கும்?

அமெரிக்க அதிபர் கென்னடி 1963-ல் சுடப்பட்டார். அ தற்குச் சில   வருஷங்களுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் கோர்பசேவிடம் ஒரு பத்திரிகை நிருபர் கேட்டார்: : "அதிபர் கென்னடிக்குப் பதிலாக குருஷ்சேவ் சுடப்பட்டிருந்தால் சரித்திரத்தில் என்னென்ன மாறுதல்கள் ஏற்பட்டிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” 

ஆழ்ந்த யோசனை செய்து பதில் கூறும் பாவனையுடன் கோர்பசேவ் சொன்னார்: ”எனக்கென்னாவோ குருஷ்சேவின் மனைவியை அரிஸ்டாட்டில் ஒனாசிஸ் திருமணம் செய்து கொண்டிருப்பார் என்று தோன்றவில்லை!"

புள்ளிகள்: ருடால்ஃப் விர்ச்சோ

டாக்டர் பிழைக்க வேண்டுமே!
ருடால்ஃப் விர்ச்சோ (1821-1902) என்ற புகழ் பெற்ற ஜெர்மன் டாக்டரிடம் ஒருத்தர் மிகவும் சீரியஸாகக் கேட்டார்:” டாக்டர்.. எனக்கு ஒரு சந்தேகம். இந்த அப்பெண்டிக்ஸ் இல்லாமல் எல்லா மனிதர்களாலும் உயிர் வாழ முடியும், இல்லையா?

“அதில் சந்தேகமில்லை. அப்பெண்டிக்ஸ் இல்லாமல் எல்லா மனிதர்களாலும் உயிர் வாழ முடியும், ஒரு சிலரைத் தவிர!” என்று ருடால்ஃப்  சொன்னார்.

“ஒரு சிலரைத் தவிர என்றால், யார் அவர்கள்?” என்று நண்பர் கேட்டார்.

“அப்பெண்டிக்ஸ் ஆபரேஷன் செய்து சம்பாதிக்கும் டாக்டர்களால் மட்டும் உயிர் வாழ முடியாது!”

October 07, 2011

புவியை ஈர்த்த ஆப்பிள்

ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத் தலைவர்   ஸ்டீவ் ஜாப்ஸ் (STEVE JOBS) அக்டோபர் 5’ம் தேதி இரவு காலமானார். மனித சமுதாயத்தின் வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்த பல  மின்னணு சாதனங்களை தோற்றுவித்தவர். ‘அமெரிக்கன் ஜீனியஸ்’ என்று டைம் பத்திரிகை இவரை வர்ணித்துள்ளது.
ஸ்டீவ் அக்டோபர் 5.ம் தேதி இரவு காலாமானார்.  7’ம் தேதி அன்று கடைகளுக்கும் தபால் மூலம் சந்தாதாரர்களின் வீடுகளுக்கும் வந்த டைம் பத்திரிகை இதழ் கிட்டதட்ட ஸ்டீவ் ஜாப்ஸ் சிறப்பிதழ் என்று சொல்லும் அளவிற்கு அவரைப் பற்றி கட்டுரைகளையும் படங்களையும் போட்டு அசத்தியுள்ளது .அட்டையில் ஸ்டீவ் ஜாப்ஸின் படம்  ( அடடா, என்ன சுறுசுறுப்பு!)
.
 டைம் இதழில் கிடைத்த சில சுவையான தகவல்கள்:
டைம் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வால்டர் ஐஸக்சன், சுமார் இரண்டு வருஷமாக ஸ்டீவ் ஜாப்ஸைப் பேட்டி கண்டு  ஜாப்ஸின் வாழ்க்கை வரலாறை இப்போது எழுதி முடித்திருக்கிறார், புத்தகமும் தயார். முன்னமேயே நிச்சயித்து இருந்தபடி அக்டோபர் 24’ம் தேதி புத்தகம் வெளியிடப்படுகிறது.

October 04, 2011

கோபி -- கேரக்டர்

புல்லாங்குழல் வித்வான் கோபாலன் என்னும் கோபிக்கு பெயர் பொருத்தம் அபாரம்! மனுஷனுக்கு எப்போது எதற்குத்தான் கோபம் வரும் என்பது தெரியாது. இவர் கோபமெல்லாம் தன் மனைவி, மக்களிடம் மட்டும் தான்! வீட்டை விட்டு வெளியே வந்தால் பரம சாந்த சொரூபி. மேடையில் உட்கார்ந்தால் இசை மன்னன் தான்!
கோபம் மட்டும் அவருடைய குறைபாடு அல்ல. தன் மனைவி, குழந்தை குட்டிகளின் நலனைப் புறக்கணிக்கும் அளவுக்கு, சொந்த சௌகரியம், சுகம் ஆகியவைகளுக்கு ரொம்பவே முக்கியத்துவம் அளிப்பார்.
"ஊரெல்லாம் என்ன நல்ல பேர் இருந்து என்ன பிரயோஜனம்? வீட்டில் காலை வைத்தால் நரசிம்ம மூர்த்தி தான். "தோடியில் ஒரு கோடி காட்டும் போதே ஓடிப் போய் பாராட்டலாம்.' என்று சுப்புடு எழுதுகிறார். நீங்கள் உச்சி குளிர்ந்து போகிறீர்கள். இந்த தடவை நானே சுப்புடுவைப் பார்த்து சொல்கிறேன், உங்கள் குணத்தைப் பற்றி. அந்த அழகையும்தான் அவர் பத்திரிகையில் எழுதட்டுமே'' என்பாள் மனைவி.
"போய்ச் சொல்லேன்..  இன்னும் குடிகாரன், ஸ்திரீ லோலன், கடன்காரன், அப்பனைக் கொன்றவன், அண்ணன் வீட்டில் திருடியவன், குழந்தையின் கழுத்தை முறிக்கிறவன், கள்ளச் சாராயம் காச்சறவன் என்றெல்லாம் போய்ச் சொல்லு...... மூணு மணி நேரம் கச்சேரி பண்ணிவிட்டு வீட்டுக்கு வந்தால் ஒரு கப் பால், காபி என்று ஒரு மண்ணும் கிடையாது.....