October 09, 2017

வாராய் எந்தன் மகனே!

                                                                  
     இஸ்ரேல் எழுத்தாளர் EPHRAIM KISHON எழுதிய A CHIP OF THE OLD BLOCK என்ற நகைச்சுவை கட்டுரையை தமிழ்ப்படுத்தி கொஞ்சம் தாளித்துக் கொட்டி-இங்கு தருகிறேன்.

      ஒரு திரைப்படத்தைபிரிவியூ’ காட்சியில் போட்டுப் பார்ப்பது  ஒரு உற்சாகமான அனுபவம். ஆனால் எந்த ஒரு விஷயத்தையும் முதன் முதலாகப் பார்ப்பது ஒரு உற்சாகமான விஷயம். உதாரணமாக, திரைப்பட பிரிவியூவை  எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆனால், உலகில் எல்லா பிரிவியூக்களை மிஞ்சும் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் தருவது, குழந்தை பிறந்ததும், அதை முதன் முதலில் பார்க்கும் போது ஏற்படும் உணர்ச்சிமிக்க மகிழ்ச்சிக்கு ஈடு ஒன்றும் கிடையாது.
     என்னுடைய மனைவி, என் மகன் RAFI-யை அர்த்தராத்திரியில் தான் உலகிற்கு அறிமுகம் செய்தாள். இருந்தாலும் குழந்தையின் அப்பாவான நான் RAFI-யை பார்க்க பொழுது விடியும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. மருத்துவமனையிலிருந்து தகவல் சொன்ன டாக்டர் குழந்தையை முதன்முதலில் பார்க்க வரும்போது என்னை தனியாக வரும்படி சொன்னார். ஆகவே நான் தனியாகச் சென்றேன். தனி என்றால் என் அம்மா (அம்மா வேறு நான் வேறு இல்லை), என் மாமனார், மாமியார் (இவர்கள் புதிதாக தாத்தா, பாட்டி ஆனவர்கள் என்பதுடன் அவர்களுடய குழந்தைக்குத்தான் குழந்தை பிறந்திருக்கிறது ) . அப்புறம், மாமி  ILKA- வை விட்டுவிட்டு நான் போக முடியாது. அப்படி போனால்  என்னை மன்னிக்கமாட்டார்கள்
சித்தப்பா ZEIGLER-ஐயும் சித்தியையும் அழைத்துப் போகாமல் இருக்க முடியாது.  காரணம், அவர்கள் குழந்தைக்குக் கொடுக்க, அழகான டிரஸ், வெள்ளைப் பூப்போன்ற பூட்ஸ்கள், மெத்தென்று இருக்கும் குல்லாய், கண்ணைப் பறிக்கும் நீலக் கலர்  வெல்வெட் நிஜார் ஆகியவைகளை வாங்கி வந்திருந்தார்கள். .
     *இதில் ஆச்சரியம் என்னவென்றால், பின்னால் RAFI-க்கு JACK அதே மாதிரி செட் டிரஸ்ஸைக் கொடுத்தார். என் நண்பர்கள் நான்கு பேரும் கூட அதே மாதிரி செட்). இது ஒரு அற்புதமான விஷயமாக எடுத்துக் கொள்ளலாம். அல்லது ஏதோ ஒரு ஸ்டோரில் விலை போகாத செட்களை பாதி விலைக்கு தள்ளுபடியில் கொடுத்திருப்பார்கள்.)
     இத்தனை செட் டிரஸ்கள் என் குழந்தைக்கு கிடைத்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டாலும், வேறு சின்ன விஷயம் மனதில் தோன்றியது. RAFI சீக்கிரம் வளராமல் இருந்தால், இந்த டிரஸ்களை இரண்டு, மூன்று வருஷங்களாவது போட்டுக் கொள்ளலாம். பிறந்த குழந்தைக்கு இதெல்லாம் தெரியுமா? இதோ மளமளவென்று வளர்ந்து, தவழ்ந்து, எழுந்து, நின்று ஓடப் போகிறான். கிடைத்த அன்பளிப்பையும்  முழுவதுமாக அனுபவிக்க முடியாது போகும்!... ஒன்று மட்டும் நிச்சயம். என் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ அடுத்த சில மாதங்களுக்குள் ஆண் குழந்தை பிறந்தால், அவர்களுக்கு ஒரு அபாரமான அன்பளிப்பு கிடைக்கும். அது கண்ணைப் பறிக்கும் நீலக்கலர் வெல்வெட்  நிஜாரும் இன்ன பிறவும் நிச்சயம் கிடைக்கும்!
      என் பங்கிற்கு நானும் சில அன்பளிப்புகளை என் மனைவிக்கும் சேர்த்து வாங்கி வைத்திருந்தேன். அவள் கர்ப்பம் ஆனதும், வாக்குறுதியைக் கொடுத்தேன்., “உனக்கு ஒரு MINK கோட்டு தருகிறேன்.’ என்று. அது குளிர் காலம். ஆனால் குழந்தை பிறந்திருக்கிறது வெய்யில் கொளுத்தும் கோடையில் . இப்போது கம்பளிக் கோட்டு கொடுத்தால் எல்லோரும் கேலி செய்ய மாட்டார்களா? அதனால்கோட்டு வாங்கவில்லை. ஆனால் ஒரு வைர நகை வாங்கலாம் என்று கடைக்குப் போனேன். மிகவும் அழகாகவும், கவர்ச்சிகரமான டிசைனில் இருந்த நெக்லஸை எடுத்தேன். பிரமாதமாக இருந்தது. அத்துடன் மாட்டப்பட்டிருந்த விலை அட்டையைப் பார்த்ததும், ஷாக் அடித்தது. இதை வாங்குவதற்கு நான், என்ன, ராக்கஃபெல்லரா என்று கேட்டுக் கொண்டேன். ஊர் உலகத்தில் எந்தப் பெண்ணும் செய்யாத காரியத்தை இவள் என்ன செய்துவிட்டாள்?  மற்ற பெண்களுக்கெல்லாம் வைர நெக்லஸா அன்பளிப்பாக கிடைத்தது?  கடைசியில் ஒரு பூச்செண்டை வாங்கிக் கொண்டேன்.
என் மகிழ்ச்சியைக் காட்ட, புது, ‘சூட்’ டைப் போட்டுக் கொண்டு, ஒரு விலை உயர்ந்த சில்க் டையைக் கட்டிக் கொண்டேன்.
     இப்படி தயார் பண்ணிக் கொண்டு, மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு, ’தனியாக மருத்துவமனைக்குப் புறப்பட்டேன்.
     போகும்போது என் அம்மா எனக்கு ஒரு அறிவுரை (அதைச் சொற்பொழிவு என்று சொன்னாலும் தப்பில்லை) சொன்னாள்; “குழந்தையிடமிருந்து இரண்டு கஜம் தள்ளியே எல்லோரும் இருக்க வேண்டும். நீ குழந்தையை எடுத்துக் கட்டிப்பிடித்து, முத்தம் கித்தம் என்று ஆரம்பித்துவிடாதே. நம் உடம்பிலெல்லாம் ஆயிரமாயிரம் நோய்க் கிருமிகள் ஊர்ந்துக் கொண்டிருக்கின்றன. என்றாள்.
ILKA அத்தை பக்கபலமாகச் சொன்னாள். “முதலில் இந்த போதனைகளை பாட்டிகளுக்குத் தான் சொல்ல வேண்டும்… RAFI பாட்டி எல்லாம் தெரிந்திருப்பார் என்று சொன்னார். ஏதோ உள் அர்த்தத்துடனதான் சொல்கிறாள் என்று என் அம்மா நினைத்தாள். அதனால், அம்மா முகம்உர்ரென்று ஆகிவிட்டது. அத்தை முகம் டபுள்உர்ஆகிவிட்டது. இப்படி மிகவும் சந்தோஷமான மன நிலையுடன் மருத்துவமனைக்குள் நுழைந்தேன்.
     பிரசவ களைப்பினாலும், ராத்திரி சரியாகத் தூங்காததாலும் என் மனைவி தூங்கிக் கொண்டிருப்பாள் என்று நினைத்து, அறைக் கதவை லேசாகத் தட்டினோம். பிறகு மெதுவாகக் கதவைத் திறந்தோம். படுக்கையில் என் மனைவி இல்லை.
     JAKE மாமா,   ‘பார்மகாலஜி’      பரீட்சையில் இரண்டு தடவை ஃபெயில் ஆன அனுபவத்தால், ”நான்தான்  சொன்னேனே , ’குழந்தை டெலிவரி ஆனபிறகு தாயின் உடல் நிலையை சோதிக்க வேண்டும்’என்று வீட்டிலிருந்து கிளம்பும்போதும் சொன்னேன்; ஆஸ்பத்திரியில் நுழைகிற போதும் சொன்னேனே’” என்றார். (எல்லாம் இரண்டு தடவை என்பது அவருடைய தனித்தன்மைபரீட்சைகளில்கோட் அடிப்பது உட்பட!)
    ‘என்னடா, என் பிரிய மனைவியைக் காணோம்; என் இளவரசனையும் காணோம் என்று மனதில் குழம்பிக் கொண்டிருந்தபோது ILKA  அத்தை, “இதோ., இங்கே இருக்கிறான்என்று இரண்டு தடவை சொன்னாள் (ஹும், அவருக்கும் இரண்டு தடவை தொற்றுநோய். உண்டோ என்னவோ!)
     பரபரப்புடன் ஓடினோம். வராந்தாவில், ஒரு டிராலியில் மெத்மெத்தென்றக் குட்டிப் படுக்கையில் போர்வையால்பொட்டலம் போல் கட்டி, முகம் மட்டும் வெளியே தெரியும்படி  சுருட்டிக்கட்டி வைத்திருந்த என் செல்லம் தூங்கிக் கொண்டிருந்தது.
     “ஐயோ…. என்ன கொள்ளை அழகு!” என்று என் மாமியார் கிளுகிளுப்புடன் சொன்னாள்.
    “முகம் கூட சரியாகத் தெரியலையே…. இப்படியா மூட்டைமாதிரி கட்டி வைப்பார்கள்?”
     ILKA  அத்தை, பெட்ஷீட்டை   எடுத்துத்    தளர்த்தி  லேசாக   விக்கினாள். சோப்புக்கட்டி மாதிரி ரோஸ் கலரில், மழமழவென்று இருந்த கன்னம், கழுத்து, எல்லாம் ஒரே கொள்ளை அழகாக  இருந்தது.
     ”! என் கண்ணே! என் RAFI-யே”  என்று மெலிதான குரலில் சொல்லியபடியே குழந்தையின் கன்னத்தை லேசாக வருடிவிட்டேன். ILKA அத்தை என்னைப் பார்த்து, “JAKE மாமா மாதிரி சாயல். மூக்கு அப்படியே ஜெராக்ஸ் எடுத்த மாதிரியே இல்ல?”.என்று கேட்டாள்.
     JAKE  மாமா, “இருஇரு..காதைப் பார். பாட்டியின் காதேதான்., நீ என்ன சொல்றே?” என்று கேட்டார். என் அம்மா குழந்தையாக இருந்தபோது அவருடைய காதை நான் பார்த்ததில்லையே? இருந்தாலும்ஆமாம்., ஆமாம் “ என்று (இரண்டு தடவை!) சொல்லியபடியே அசடு வழிந்தேன்.
     “மோவாய் எவ்வளவு செதுக்கி வைத்த மாதிரி இருக்கிறது. நல்ல அறிவாளியாக இருப்பான் என்பது நிச்சயம். ILKA  கொஞ்சம் உங்க அக்கா சாயல் இல்லைஎன்று கேட்டார்ஆமாம்., ஆமாம்என்றார் அத்தை. .
      “அறிவாளியாகவும் இருப்பான்”, ”அத்தை மாதிரி இருக்கிறான் என்று இரண்டு வர்ணனைகள்  எப்படி ஒன்றாக வரும்? ஒன்று வடக்கு என்றால் இன்னொன்று தெற்கு என்று மனதிற்குள் தோன்றிய கேள்வியை அப்படியே அடக்கி வைத்தேன்.
    அதற்குள் அத்தை “கண்ணைப் பார்.  முக்கியமா அந்த இமைகளைப் பார்., முழித்திருக்கும்போது, உன் மனைவி செய்வது போல் இருக்கிறது ஹண்ட்ரட் பர்சன் ட்என்றாள்.
     நான் ஒன்றும் பேசவில்லை. இந்த ஒற்றுமைகள் எல்லாம் எனக்கு தெரியவில்லை என் குழந்தை ராஜா மாதிரி இருக்கிறான். அது போது எனக்கு. அவனைப் பார்த்ததும் என் தலையில் மணி அடித்த மாதிரி தோன்றியது. “டேய் .. மனுஷா.. பாருடா உன் குழந்தை மூக்கும் முழியுமா, வெண்ணெயில் பண்ண பொம்மை மாதிரி இருக்கிறான்.’ என்று சொல்வது போல் தோன்றியது. (நல்ல காலம், குழந்தையின் வழுக்கைத்தலை, அப்படியே என் தலை சாயலில் இருக்கிறது என்று யாரும் சொல்லாததற்கு சந்தோஷப்பட்டேன்!)
     திடீரென்று அவன் கண் விழித்து, ‘வென்று அழ ஆரம்பித்தான்.
     “ஏய் பொக்கை வாயா. பெரிய தாத்தாடா நீஎன்று அத்தை கொஞ்சினாள்.

   அவன் யாரைப்போல் இருக்கிறான் என்பது முக்கியமில்லை. அந்தக் குட்டி உடம்பில் எத்தனை மூதாதையர்களின் உடல் அமைப்பையும், குண விசேஷங்களையும் அவன் வைத்துக் கொள்ள முடியும்? இது ஒரு விவரிக்க முடியாத அதிசயம்.. இறைவன் செய்த அற்புதம்!
      அந்த சமயம் பின்னாலிருந்து “ எக்ஸ்க்யூஸ் மீ” என்ற குரல் கேட்டது. நான் சிந்தனையிலிருந்து விடுபட்டு, பூமிக்கு வந்தேன். திரும்பிப் பார்த்தேன். நர்ஸ்!
     “மேடம்! மிஸஸ் KISHON எங்கே இருக்கிறாள் என்று தெரியுமாஅவருடைய கணவன் நான்என்றேன்.
    “மிஸஸ் கிஷோன்?என்று கேள்வியாகக் கேட்டாள்/
     “யெஸ்.. இது அவருடய குழந்தைதானே?” என்று கேட்டேன்.
     “இந்தக் குழந்தையா? இல்லையே! இந்தக் குழந்தை மிஸஸ் மார்சுரு மிஸ்ரஷியின் குழந்தை.  இந்தக் குழந்தை பெண் குழந்தை. மிஸஸ் கிஷோனுக்கு பிறந்தது ஆண் குழந்தைஎன்று சொல்லியபடியே, டிராலியைத் தள்ளிக் கொண்டு போனாள்.
அடப்பாவமே!

மருத்துவமனைகளில் நிலவும் குழப்பங்களை விரட்டி அடிக்க யாராவது தகுந்த  நடவடிக்கை எடுக்க வேண்டும்!

முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி  திருமதி சுமதி ராஜா.  அவருக்கு என் நன்றி

11 comments:

  1. கடைசிப் பஞ்ச் விவிசி, விவிசி. ஹெஹெஹெ, இப்போ ம.கு. தாங்கலை. மிஸஸ் கிஷோனும் அவர் குழந்தையும் எங்கே?

    ReplyDelete
  2. தாளிப்பின் மணம் ஊரைத்தூக்கிற்றா, உடனே வந்துட்டேன். :)

    ReplyDelete
  3. நல்ல நடை. ஆனால், இவர்கள் எல்லோரும் குழந்தையைப் பற்றி விவரிக்கும்போதே (கண் அவ மாதிரி என்றெல்லாம்), தவறான குழந்தையை விவரிக்கிறார்களோ என்று தோன்றிவிட்டது. (ஏனென்றால் இந்த ட்விஸ்ட் போட்டுத்தானே எல்லோரும் கதை எழுதுகிறார்கள், விவரிக்கிறார்கள்)

    பெயரைத் தவிர, மற்றபடி எழுத்து நடை, தமிழ்க் கதைகளைப் படிப்பதுபோல் இருந்தது. மொழிமாற்றம் நன்றாகச் செய்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
  4. <>>>
    நீங்களும் ILKA அத்தை ஆகிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். எல்லாம் இரண்டு தடவை!(விவிசி, விவிசி.)
    ம.கு என்றல் என்ன? கூகுளுக்கும் தெரியவில்லை. இந்த ம(க்)கு வுக்கும் தெரியவில்ல! -கடுகு, கடுகு

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, உங்களுக்கே தெரியலையா? ம.கு.=மண்டைக் குடைச்சல்! ம.ம.= மர மண்டை! விவிசிக்குப் புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். இன்னும் அ.வ.சி. இருக்கு. கு.வி.மீ.ம.ஒ. இருக்கு. நிறைய வைச்சிருக்கேன். அவ்வப்போது வரும்! :)

      Delete
    2. வேணும்னு தான் இரண்டு தடவை போட்டேன் விவிசியை! :)

      Delete
    3. அவ்வப்போது வரும்! :) >>
      இது தகவலா அல்லது எச்சரிக்கையா? - தெரியவில்லை!

      Delete
    4. ரெண்டும், போத்! ரெண்டும், போத்! :)

      Delete

  5. மொழிமாற்றம் நன்றாகச் செய்திருக்கிறீர்கள். அது போல பெயரையும் தமிழுக்கு தகுந்தபடி மாற்றி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்



    விவிசி என்றால் விழுந்து விழ்ந்து சிரிப்பது இப்படி கீதா மாமியை நிறைய தடவை இப்படி விழ வைச்சுடீங்களே நியாமா இது

    ReplyDelete
  6. அருமையான நகைச்சுவை. சிரித்து மாளவில்லை. குறிப்பாக, அந்த "(நல்ல காலம், குழந்தையின் வழுக்கைத்தலை, அப்படியே என் தலை சாயலில் இருக்கிறது என்று யாரும் சொல்லாததற்கு சந்தோஷப்பட்டேன்!)", மற்றும் "(அந்தக் குட்டி உடம்பில் எத்தனை மூதாதையர்களின் உடல் அமைப்பையும், குண விசேஷங்களையும் அவன் வைத்துக் கொள்ள முடியும்? இது ஒரு விவரிக்க முடியாத அதிசயம்)" பஞ்ச்கள் அருமை .

    ReplyDelete
  7. மிக்க நன்றி. -கடுகு

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!