January 28, 2017

கமலாவோடு ‘டூ’!

ஒரு முன்னுரை
கோபம் இருக்கும்  இடத்தில்தான் குணம் இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் வேண்டுமென்றால், நான் ஊர் மொத்தம் அலையத் தேவையில்ல. கமலா இருக்கக் கவலை எதற்கு?

நேற்று கமலாவிற்குக் கோபம் வந்தது. தும்மல் மாதிரி, 

சட்டென்று முன்கோபம வரும். வந்த சுவடே தெரியாமல் போய்விடும். சில சமயம், லேசான சேதாரம் ஏற்படுத்தி விட்டுப் போகும் என்றாலும், சுவடே வெளியே தெரியாது.

நேற்று அவளுக்குக் கோபம் வந்தது. என்ன காரணம் என்று கேட்காதீர்கள்.. அது அவளுக்கே தெரியாது. ”உங்களுடன் இனிமேல் எந்தப் பேச்சையும் வைத்துக் கொள்ளப் போவதில்லை” என்றாள்  தீர்மானமாக.  



இது முன்கதைச் சுருக்கம்.  சரி,  முதல் அத்தியாயத்திற்குப் போகலாம்.

அத்தியாயம் 1: இன்று

மிகவும் சுவாரசியமாய்ப் பேப்பர் படித்துக் கொண்டிருந்த சமயம், "சட்"டென்று என் மேல் ஒரு கவர் வந்து விழுந்தது. அது அம்பாக இருந்திருந்தால் ராம பாணத்தைப் போல் என்னையே துளைத்துக் கொண்டு போயிருக்கும்! நல்ல காலம் அது என் அருமை மனைவி கமலா எழுதிய கடிதம். கமலா சமையற்கட்டிலிருந்தபடியே ஹாலில் இருந்த என் மேல் அந்தக் கவரை வீசியிருந்தாள். பிரித்துப் படித்தேன்.
 
      என் உயிருக்குயிரான பிரியமான அன்புக் கணவருக்கு அடியாள் கமலா எழுதிக் கொண்டது. உங்களுக்கே இது நன்றாக இருக்கிறதா? நாலு தரம் கேட்டேன், பக்கத்து வீட்டு மாமி "சந்திரமுகி"க்கு வரச் சொல்கிறாள். நான் போகட்டுமா என்று கேட்டேன். ஒன்றும் பதில் சொல்லாமல் பாட்டுக் கச்சேரிக்குப் போய்விட்டீர்கள். 
நான் சினிமா போய்விட்டு வந்தால் ஏன் இப்படிக் கோபப்படுகிறீர்கள்? இப்படிக் கொடுமைப்படுத்துகிறீர்களே, சரியா?
                                                            இப்படிக்கு, கமலா.

      உடனே நான் ஒரு கடிதம் எழுதினேன்.
      என் காதல் கிளியே, அன்பே, தேனே, மானே: உனக்குக் கொழுப்பு அதிகமாகி  ............................ .  பக்கத்து வீட்டு மாமி கூப்பிட்டால் போய்விடுவதா? நான் ரஜினியியின் விசிறி இல்லை என்று தெரிந்திருந்தும் சந்திரமுகி படம் பார்க்கப் போனது என் கன்னத்தில் மூன்று அறை தந்ததற்குச் சமானம். உன்னைக் கல்யாணம் பண்ணிக் கொண்ட பாவத்துக்காக அனுபவிக்கிறேன்.

                                                      இப்படிக்கு அன்புக் கணவன்

      "ஏன்னா... கைவேலையாக இருக்கிறேன். இந்த லெட்டரை வாங்கிண்டு போங்கோ' என்று கமலா குரல் கொடுக்கவே சமையல் அறைக்குப் போய்க் கவரை வாங்கிக் கொண்டு வந்தேன். 
அதில் எழுதியிருந்தாள் : ""என் பிரிய நேசா, கண்கண்ட தெய்வமே! பி.ஏ.வில் கோட் அடித்த உங்களுக்குக் கையில் சுளையாக மூவாயிரம் ரூபாய் கொடுத்தார் என் அப்பா. என்னைக் கல்யாணம் பண்ணிக் கொண்டதற்கு அனுபவிக்கிறீர்களாமே! சபாஷ்!  ஸ்ரீதேவிக்காக பதினாறு வயதினிலே ஏழு தடவை பார்த்தீர்கள். இப்போது அவர் வேண்டாதவர் ஆகிவிட்டாரா? சினிமா சாக்காக வைத்துக் கொண்டு என் மேல் எரிந்து விழுகிறீர்களே. உண்மையில் வேறு ஏதோ காரணம் இருக்கிறது. நான் பிறந்தகம் போகிறேன். என்னை நீங்கள் வந்து பார்க்காவிட்டால் பரவாயில்லை. நான் தினமும் உங்களைப் பார்க்க வருவேன். முதலில் உங்களுக்கு நான் மனைவி. அப்புறம்தான் விரோதி.
என்றும் உங்கள் கமலா.

      நான் மட்டும் சும்மா இருப்பேனா? தக்க பதில் எழுதிக் கொடுத்தேன்.
      
"ஏன்னா... பேப்பர், பேனாவுடன் இங்கே வாங்கோ... அடுப்பில் வெங்காய பஜ்ஜி போட்டுக் கொண்டு இருக்கேன்... சீக்கிரம் வாங்கோ!'' என்று (கூக்)குரல் கொடுக்க, நான் போனேன்.
      "லெட்டர் எழுதக் கை ஒழியவில்லை. நான் டிக்டேட் பண்றேன். எழுதுங்கோ... உம்... ”இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவன் எனப்படும் என் அருமைக் கணவருக்கு... போதும்.  நிறுத்துங்கோ.. .இனி மேல் கடிதம் எழுதப் போவதில்லை. வாயார நாலு திட்டுத் திட்டுவதில் உள்ள  சுகம், எழுதுவதில் இல்லை'' என்று கூறிவிட்டு, கமலா "ஆமா... நான் கேக்கறேன். ஒரு சினிமா போய்விட்டால் என்ன கொலை பாதகமா? உங்க பரம்பரையிலே... 
(அவள் மேலே கூறிய வார்த்தைகளை வெளியிடுவது என் கௌரவத்துக்கு உகந்ததல்ல!)

அத்தியாயம் 2:

வெங்காய பஜ்ஜி என்னும் சகல ரோக நிவாரணியால் பூசல் தீர்ந்தது!

7 comments:

  1. கமலாவோட தம்பி தொச்சு, தொச்சுவோட மனைவி எல்லோரும் எங்கே? எல்லோரும் சேர்ந்து தானே இருந்தாங்க, கடைசியாப் பார்க்கிறப்போ!!!! :)

    ReplyDelete
  2. மிக்க நன்றி.
    ரொம்ப நாளைக்கு அப்புறம் வலையைப் பார்க்கிறீர்களோ.
    -கடுகு

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் இல்லை. தினம் தினம் வந்தாலும் பலருடைய பதிவுகளுக்கும் போக முடியறதில்லை! :) ஆனால் உங்கள் பதிவுகளை அவ்வப்போது படிப்பேன். கருத்துச் சொல்ல முடியலை! :)

      Delete
  3. கடித்த் தூது நல்லா இருந்தது. இருந்தாலும், கடித்த்தில் உங்ங அக்காவை ரெண்டு நொள்ளை சொல்லிட்டு அப்புறம்தானே பரம்பரையை இழுப்பார்கள். அதுபோல தொச்சுவை நொந்துகொள்வதுபோல் பாராட்டவும் செய்வார்களே (உங்களுக்குள்ள வஞ்சகம் தெரியாமல் அவனானா அத்திம்பேர் அத்திம்பேர்னு உருகறான்..) இதெல்லாம் miss ஆகிவிட்டதே.. ஆனாலும் எப்போதும்போல் நல்லாயிருந்தது.

    ReplyDelete
  4. ஆஹா.... மீண்டும் கமலா...

    நேரடியா திட்டுவதில்/திட்டு வாங்குவதில் உள்ள சுகம் கடிதத்தில் இருப்பதில்லை... :)

    ReplyDelete
  5. Aahaa indhai yenn wife parththal padiththal yenakku monthly paper?? bill jasthi ayidumme!!!

    ReplyDelete
  6. idhai yenn wife parthtal padithall yennudaiyya monthly paper?? bill jasthi ayidumme.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!