June 03, 2016

குடும்பத்தை நடத்துவது எப்படி?

என் குறிப்பு:
இதே வலைத்தளத்தில் வலது பத்தியில் உள்ள சில விஷயங்களில் ஒன்று, 'எனக்குப் பிடித்த ஆங்கில எழுத்தாளர்கள்'  என்ற தலைப்பில் சில மேதைகளைக் குறிப்பிட்டு இருப்பது.. அதில் சிலர் சென்ற தலைமுறை எழுத்தாளர்கள்.  அபாரமாக எழுதியிருக்கிறார்கள். அவர்களுடைய புத்தகங்கள் எளிதில் கிடைக்காது. பழைய புத்தகக் கடையில் கிடைத்தாலும் கிடைக்கும்.
என் பட்டியலில் உள்ள எழுத்தாளர்களில் ஒருவர்  ELINOR GOULDING SMITH. அவருடைய நகைச்சுவை சரளமானது; எளிமையானது; குடும்பப் பாங்கானது.  இவர் குதிரையை வைத்து ஒரு 250 பக்க புத்தகம் எழுதி இருக்கிறார். பயங்கர நகைச்சுவை!

அவர் எழுதிய மற்றொரு புத்தகம்  THE COMPLETE BOOK OF ABSOLUTELY PERFECT HOUSEKEEPING. அதிலிருந்து ஒரு அத்தியாயத்தைத் தமிழ்ப்படுத்தித் தருகிறேன். புத்தகம் வெளியான ஆண்டு: 1956!
              +                       +
குடும்பத்தை நடத்துவது எப்படி?
(ஓடி, ஓடி, விடாமல் ஓடிக் கொண்டே!)

ஒரு வீட்டை நிர்வகிப்பது மிகவும் கடினமான வேலை என்று ஒரு குடும்பப்பெண் நினைப்பாள் என்று நினைக்கவே எனக்குப் பிடிக்காது. உண்மை அதுதான்;  இருந்தாலும் அதைப்பற்றி நினைக்கத்தான்  எனக்குப்  பிடிக்காது. உண்மை கசக்கும். ஆனால் இதில் உள்ள சிரமங்கள் நம் பணிக்கு ஊக்கமும் உற்சாகமும் சவாலும் தருவதுடன் அர்த்தமும் வித விதமானதாகவும் அமையும். அதே சமயம் சற்று அருவருப்பானதும் கூட.
ஒரு வீட்டை நிர்வகிப்பதற்கு பல்வேறு திறமைகள் தேவைப்படும். அமைதியான, மகிழ்ச்சியான மனப்பாங்கு, கொஞ்சம் பொது அறிவு, சாமர்த்தியமான செயல் திறன் மற்றும் பலம் வாய்ந்த முதுகெலும்பு!
இவைகளை யார் வேண்டுமானாலும், சிறிதளவு பயிற்சி மூலம் கற்றுக் கொள்ளலாம் – ஒரே சமயத்தில் ஆறு வேலைகளைச் செய்து கொண்டே, வாசல் காலிங் பெல் அடிப்பவர் யார் என்று பார்க்கவும் செய்யலாம்.
சற்று ஆராய்ந்தால் இது உண்மையில் சிரிக்கிற அளவு எளிமையானது. என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். தினமும் மூன்று வேளை உணவு சமைத்துப் பரிமாற வேண்டும். கொஞ்சம் கடை கண்ணிக்குப் போய்வர வேண்டும். துணிகளை வாஷிங் மெஷினில் போடவேண்டும். அவை உலர்ந்த பிறகு  அவற்றை  இஸ்திரி போட்டு எடுத்து வைக்க வேண்டும். கன்னா பின்னாவென்று கலைந்திருக்கும் படுக்கைகளைத் தட்டிப் போடவேண்டும்.  கொஞ்சம் தையல் வேலையும் செய்து, கிழிந்த இடங்களைப் பார்த்துத் தைக்க வேண்டும். சுவரில் கிழிந்துள்ள வால் பேப்பரை ஒட்டிவிட்டு, குழாய்க்கு ‘வாஷர்’ போட்டுவிட்டு, சரியாக மூடாத அலமாரிக் கதவை உளியால் லேசாகச் செதுக்கிவிட்டு, வீட்டு வரவு (?) செலவு (??) கணக்கை நோட்டுப் புத்தகத்தில் எழுதிவிட்டு, தோட்ட வேலையையும் மறக்காமல் செய்துவிட்டு நிம்மதியாக ஓய்வெடுக்க வேண்டும். ஒன்று மறக்கக்கூடாது, எல்லா சமயத்திலும் புன்முறுவலுடன் இருக்க வேண்டும்; தலை கலையாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்வதும் அவசியம். எவ்வளவு சுலபமான வேலை இது இல்லையா? வாருங்கள், எல்லாரும் சிறிது நேரம் உட்கார்ந்து சிரிக்கலாம்!

ஒரு வெற்றிகரமான குடும்பப் பெண்மணியாகத் திகழ்வதற்கு பல தடைகளைத் தாண்ட வேண்டும். அவற்றைப் பட்டியலிடலாம்-துணிச்சலாக! முதலாவது:   தும்பு-தூசு, வேண்டாத குப்பை, உடைசல்கள், விரிசல் விழுந்த பொருட்கள், ஒரு நாள் வைத்த இடத்தில ஒரு பொருள் மறுநாள் இல்லாமல் போவது, அது இருக்க வேண்டிய இடத்தில் வேறு ஒரு சம்பந்தமில்லாத பொருள் இருப்பது, மெஷின்கள் செய்யும் மக்கர், அழுக்கு,  சாக்ஸ் ஓட்டைகள், முணுக்கென்று வரும் கோபதாபங்கள், அலாரம் கடிகாரத்தின் தொல்லை, தோட்டத்தில் வளர்ந்திருக்கும் புதர்ச் செடிகள், அவ்வப்போது காலிங் பெல்லை அடிக்கும் சேல்ஸ்மேன்கள், எறும்பு, செல், கரையான் செய்யும் அட்டகாசம், எரியாத பல்ப், கணவன்மார்கள், சின்னக் குழந்தைகள், இப்படி எத்தனையோ ! 
எல்லாவற்றையும் உங்களுக்கு உரிய மனத்திடத்துடனும் நேரடியாகவும் நோக்கும்போது மனதில் லேசான உற்சாகம் ஏற்படுவதை உணர்ந்திருப்பீர்கள். ஒன்று சொல்ல விரும்புகிறேன். நிஜத்தை நேராகச் சந்தியுங்கள். அவை எவ்வளவு சோகமே உருவெடுத்து வந்தவை போலிருந்தாலும்!  பார்க்கப் போனால் சங்கடங்களின் பிரதிபிம்பங்களாகத்தான் அவை காட்சி தருகின்றன இல்லையா?

முதலில் பொதுவான சில விதிகளைக் கூறிவிட்டு, பிறகு தனித்தனிப் பிரச்னைகளை எடுத்துக் கொள்ளலாம். ஒரே நாளில் எல்லா வேலையையும் செய்ய நினைக்கக்கூடாது. இது முதலாவது விதி. தரையில் பேச்சு மூச்சில்லாமல் மயங்கி விழுந்திருந்தால் பரவாயில்லை, கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். படுதாக்களை அப்புறமாகக் கழற்றிவிட்டுத் தோய்க்கலாம்; ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது.
வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது ஓய்வு எடுத்துக் கொள்ள முடியும். அதற்கு ஒரு வழி இருக்கிறது. அதைக் கற்றுக் கொள்வது முக்கியம். உதாரணமாக சமையலறைக் கூரை அழுக்காகிவிட்டதால், புதிதாகப் பெயின்ட் அடிக்க முனைகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஏணி மேலே ஏறித்தான் அடிக்கமுடியும். முழுநாள் வேலை ஆகிவிடும். உடம்பு ஓய்ந்துபோய்விடும். பெயின்ட் அடித்ததுடன் ஓய்வு எடுக்க   ‘அப்பாடா’ என்று சொல்ல முடியாது. குழந்தைகளைக் குளிப்பாட்ட வேண்டும்.
 ராத்திரி ஆறு  பேரை டின்னருக்கு அழைத்திருக்கிறீர்கள். மனம் கலங்காதீர்கள். ஒரு செகண்ட் ஓய்வு எடுப்பது அவசியம். இதை எல்லாம் யோசித்துக்கொண்டே ஏணியிலிருந்து குனிந்து பெயின்ட் டப்பாவில் பிரஷ்ஷை லேசாக அமுக்கிப் பெயிண்டை எடுக்கும்போது இன்னொரு கையை தொங்கப் போடுங்கள்; நாக்கு தானாகத் தொங்கிவிடும். தலைமுடியும் முன் நெற்றியில் விழுந்து தொலைக்கும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் ‘அம்மாடி’ என்று சொல்லுங்கள். ஆஹா, என்ன சுகமான ஓய்வு அனுபவம் பெறுகிறீர்கள் என்பதை உணர்வீர்கள். உடலுக்குள் ஒரு சுறுசுறுப்பு பரவியதை உணர்வீர்கள். நிமிர்ந்து எழுந்து, ஏணியிலிருந்து இறங்கி, டிராயிங்  போன் செய்து, (அதாவது ஆம்புலன்சிற்கு!) போன் செய்ய பலமும் சுறுசுறுப்பும் வந்துவிட்டதை உணர முடியும் !
இன்னொரு விஷயம். ஒரே சமயத்தில் போன் மணியும் வாசல் காலிங் பெல்லும் அடித்தால்தான்  பிரச்னை. பொதுவாக அவை கீழ்க்கண்ட சமயங்களில் பிச்னை இரட்டையாக வரும். 1. நீங்கள் தலைமுடியை ஷாம்பூ செய்து கொண்டிருக்கும்போது 2. தீவிரமாகச் சமையல் செய்துகொண்டிருக்கும்போது 3. காருக்குள் ஏறும் சமயம் 4. பரண் மேலே ஏறி சுத்தம் செய்துகொண்டிருக்கும்போது.
ஒன்று சொல்ல விரும்புகிறேன். எந்தப் பிரச்னைக்கும் ஒரு சுலப தீர்வு இருக்கிறது. ஆகவே மனம் தளராதீர்கள். ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: யாரும் மற்றும் எதுவும் நிரந்தரமல்ல. உலகே மாயம்; வாழ்வே மாயம் என்று உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. பிரச்னைகளும் மாயம்!
 டெலிபோன் பிரச்னைக்கு ஒரு தீர்வு: எல்லா அறைகளிலும் டெலிபோன் எக்ஸ்டென்ஷன் வைத்துவிடுங்கள். இப்படி வைப்பது செலவுதான். அதனால் மளிகை சாமான்கள் வாங்க பணத்தட்டுப்பாடு சிறிது வரும். அவ்வப்போது ஏதாவது ரெஸ்டாரண்டிற்குப் போய் சமாளித்துக்கொள்ளுங்கள். அல்லது, உங்கள் குழந்தை சற்று வளர்ந்து, தானே டெலிபோனை எடுத்துப் பேசுகிற வயதை அடைகிறவரை பொறுமையாகக் காத்திருங்கள். இதில் ஒரு பிரச்னை என்னவென்றால் டெலிபோனில் பேசிவிட்டு உங்கள் பையன் (அல்லது பெண்) “மம்மி, ஜோ பேசினார். அப்புறம் உன்னைப் பேசச் சொன்னார்” என்கிறபோது, உங்களுக்குத் தெரிந்த 3௦ ‘ஜோ’க்களில் பேசியது யார் என்று தெரியாமல் மண்டை காய்வதைத் தவிர்க்க முடியாது.
தரைத் தளம், மாடி என்று இரண்டு தளமாக இல்லாமல் உங்களது வீடு ஒரே தள வீடாக இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி என்பேன். இருதள வீட்டில் இருப்பவர்களுக்கு,  மாடி ஏறி இறங்கியே ‘தாவு’ தீர்ந்துவிடும். மாடிப்படி ஏறி இறங்குவதிலும் ஒரு உத்தி இருக்கிறது. அதைக் கடைப்பிடித்தால் ஓய்ந்துபோக மாட்டீர்கள். உடலை எப்படி வைத்துக் கொண்டு மாடி ஏற வேண்டு, என்று நான் சொல்வதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். தலை நிமிர்ந்து, மோவாய் உயர்ந்து, முதுகு நேராக நிமிர்ந்து, கால் விரல்களை லேசாக வளைத்து, முஷ்டியை அழுத்தமாக வைத்துக்கொண்டு, பல்லைக் கடித்துக்கொண்டு ஏறுங்கள். மூச்சை நன்கு ஆழமாக இழுத்துவிடுங்கள், இரண்டு மூன்று தரம் ஏறி இறங்கியதும் மூச்சு இரைக்கும். பரவாயில்லை. கனமான பொருளைத் தூக்கிக்கொண்டு ஏறும்போது ஒரு பக்கமாகக் கனத்தை வைத்துக்கொள்ளாமல், தராசு மாதிரி இரண்டு பக்கமும் சரி சமமான கனமாகச் செய்துகொண்டு  படி ஏறுங்கள். உதாரணமாக தோய்த்த துணிகளை எடுத்துக்கொண்டு படியேறும்போது, அந்த ஈரத் துணி மூட்டையை இடது கையில் வைத்திருந்தால், வலது கையில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஏறுங்கள். மாடியில் குழந்தைக்கு வேலை எதுவும் இல்லை என்றாலும் அவன் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்க மாட்டான்.

ஒரு வெற்றியின் ரகசியமும் மகிழ்ச்சியும் செயல் திறனில் தான் இருக்கிறது. செயல்திறன் என்பதன் பொருள் சிறப்பாகத் திட்டமிடுவதாகும். நேரத்தையும் எடுக்கும் முயற்சியையும் செய்யும் பணியின் ஒவ்வொரு அம்சத்திற்கு ஏற்ப நன்கு சிந்திக்க வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு நிமிஷத்தையும், ஒவ்வொரு காரியத்தையும் சிறப்பாகத் திட்டமிட்டால் இரண்டு பேர் வேலை ஒருவரே செய்ய இயலும். இங்கிருந்து அங்கே போகும்போதோ அல்லது அங்கிருந்து இங்கேயோ வரும்போதோ வெறுங்கையுடன் போக அல்லது வரக்கூடாது.
வெறுங்கையோடு மாடி ஏறுவது முட்டாள்தனமான செயல். ஒரு குடும்பத்தில் ஒரு வீட்டில் ஒரு பொருள் வைத்த இடத்தில இருக்காது. எங்காவது கால் முளைத்துப் போய்விடும். மாடி ஏறிச் செல்கிறீர்களா,  மாடியில் இருக்க வேண்டிய நூறு பொருள்கள் தரைத்தளத்தில் இருக்கும் என்பது நிச்சயம். அதே சமயம்  தரைத்தளத்திற்கு வர வேண்டிய பல பொருள்கள் மாடியில் உட்கார்ந்து இருக்கும். உதாரணமாக, மாடியில் உங்கள் படுக்கை அறையிலிருந்து கீழே சமையலறைக்குப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நில்லுங்கள்; கொஞ்சம் யோசியுங்கள். சமையலறைக்கு ஏதாவது கம்பளி, போர்வையை எடுத்துப் போகவேண்டுமா? இல்லை. ஏதோ ஞாபகத்தில் ஐஸ்க்ரீம் டப்பாவை அலமாரியில் வைத்தீர்களா, அல்லது ஃப்ரிட்ஜில் வைத்தீர்களா? அப்படி எதுவும் சந்தேகம் இல்லையா! வெரி குட். இப்போது நீங்கள் வெறுங்கையுடன் கீழே இறங்கிப்போகலாம். அடுத்த தடவை இறங்கும்போது இன்னும் நல்ல செயல்திறனைக் கடைப்பிடிக்க இயலும் !
                 +                +               +
 இந்தப் புத்தகத்தில் உள்ள வேறு சில அத்தியாயங்கள்:

*உணவைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
*வாஷிங் மெஷினும், இஸ்திரி போடும்போது ஏற்படக்கூடிய அபாயங்களும்.
*வாக்குவம் க்ளீனரின் சாதக பாதகங்கள்,
*பீரோ டிராயரைப் பற்றி சில உண்மைகள்,
*குழந்தைகள் (1 வயது முதல் 40 வயது வரை உள்ளவை),
*வீட்டு அலங்காரம்,
*நீங்களே செய்யக்கூடிய சின்னச்சின்ன ரிப்பேர்கள்,
*தோட்ட வேலை,
*கணவனைத் தேர்ந்தெடுப்பது எப்படி !

முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி எஸ். ஷோபனா.  அவருக்கு என் நன்றி!

5 comments:

  1. Paavam kudumbath thalaivikaL! Inthanagaichuvai unarchi illaavittaal romba kashtam!

    ReplyDelete
  2. நகைச்சுவை உணர்வு இல்லாமல் இத்தகைய புத்தகங்கள் எழுத முடியாது. அது, ('நகைச்சுவை உணர்வு) கஷ்டங்களை வேறு விதமாகப் பார்த்து ஆறுதல் பட்டுக்கொள்பவர்களிடமோ அல்லது இயற்கையாகவே எல்லாவற்றிலும் நகைச்சுவையைப் பார்ப்பவர்களிடமோதான் இருக்கும்.

    ஆமாம்...உங்களிடம் (கடுகு) நகைச்சுவை உணர்வு வந்ததற்கு, மனைவி காரணமா அல்லது மச்சினன் காரணமா?

    ReplyDelete
  3. வள்ளுவர்தான் காரணம்: அவர்தானே இடுக்கண் வருங்கால் நகுக என்று சொன்னார்!!!:) - கடுகு

    ReplyDelete
  4. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    நகை இருக்கிறதோ இல்லையோ, நகைச்சுவை உணர்வு இருந்தால் குடும்ப நிர்வாகம் சுலபம்தான்.

    வீட்டுக்கு வீடு வாசப்படி என்று ஒரு திருப்தி, இந்தக் கட்டுரையைப் படித்ததும்.

    அன்புடன்

    சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete
  5. Great writers will be remembered for ever.
    Good posting.
    K.Ragavan.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!