December 05, 2014

வியப்பு.. மேலும் வியப்பு

 FASTFOOD சேவை
சிகாகோவில் நடைபெற்ற ஒரு பிரம்மாண்டமான மருத்துவர் மகாநாட்டில் என் பெண் கலந்து கொண்டாள். பிரம்மாண்டம் என்றால் சாதாரண பிரம்மாண்டம் இல்லை. 25,000 -க்கும் மேற்பட்ட புற்று நோய் மருத்துவர்கள் கலந்து கொள்ளும் நான்கு நாள் மகாநாடு. மிகப் பெரிய ஹோட்டலில், ஏராளமான அறைகளிலும், கூடங்களிலும் பல்வேறு  கூட்டங்கள்; ஆராய்ச்சி உரைகள், பெரிய பெரிய விளக்கப் போஸ்டர்கள்,  எலக்ட்ரானிக் அறிவிப்புப் பலகைகள், ஆங்காங்கே ஃபாஸ்ட் ஃபுட் வசதிகள்  என்று திருவிழா!

ஒரு நாள் சுமார் பகல் 12 மணி வாக்கில் என் பெண் கலந்து கொண்ட ஒரு கருத்தரங்கக் கூட்டம் நிறைவடைந்தது. அவள் 12.30 மணி நடை பெறும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தாள். அந்தக் கூட்டம்  சற்று தள்ளி 10  நிமிடம்  நடந்து போகும் தூரத்தில் இருந்தது.  “சரி.. வராந்தாவில் இருக்கும் ஃபாஸ்ட் ஃபுட் கவுன் டரில் அவசரமாகப்  பகலுணவுச் சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்று எண்ணி அங்கு போனாள்.,  ”மேடம்.. பில்லிங் மெஷின் வேலை செய்யவில்லை. சூபர்வைசர்  இதோ  வந்து விடுவார்” என்றார் ஒரு சர்வர் பெண்மணி.
“பரவாயில்லை.. பில் அப்புறம் வாங்கிக் கொள்கிறேன்.”
“ அப்படி வாங்கிக்கொள்ள முடியாது. அதை திறந்தால்தான் பாக்கி சில்லறை தரமுடியும்”
“ இந்தாருங்கள். இது, இது, இது -- இந்த மூன்றும் எடுத்துக் கொள்கிறேன். இந்தாருங்கள் 25 டாலர். மீதியை அடுத்த கூட்டம் முடிந்த பிறகு வந்து வாங்கிக்கொள்கிறேன்” என்றாள்.
” நீங்கள் இப்போது பணம் கொடுக்க வேண்டாம். அப்புறம் வந்து கொடுங்கள்” என்றாள் அந்தப் பெண்மணி.
என் பெண்,  தனக்கு வேண்டியதைச் சாப்பிட்டு விட்டு,  கூட்டத்திற்குப் போய் விட்டாள். அந்த கூட்டம் முடிந்ததும் பணம் கொடுக்க,  ஃபாஸ்ட் ஃபுட் கவுன்டருக்கு வந்தாள். அங்கு பெரிய கியூ இருந்தது. அதில் நின்றாள். அடுத்த கூட்டத்திற்குப் போக அவளுக்கு நேரமாகிக் கொண்டே இருந்தது.   சர்வர் பெண்மணி பில் போடும் மும்முரத்தில் இருந்தாள். ஒரு செகண்ட் தலையைத் தூக்கிப் பார்த்தாள். என் பெண்ணைப் பார்த்ததும் “ஏதாவது சாப்பிடப் போகிறீர்களா?” என்று கேட்டாள்.
 “ இல்லை.. பணம் கொடுக்க வந்தேன்” என்றாள்.
 “மேடம்.. பில் மெஷினைப் பூட்டிவிட்டுப் போனது சூபர்வைசர் தவறு. உங்கள் மாதிரி வேறு பலருக்கும் உணவு கொடுத்தேன். யார் வந்து பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள வேண்டாம் என்று மேனேஜர் சொல்லி விட்டார். இந்தாருங்கள் பில்,  ஹேவ் எ நைஸ் டே”  என்று புன்னகையுடன்  சொல்லி, பில்லைக் கொடுத்தாளாம்.
‘அட’ என்று அவளுக்கு வியப்பு ஏற்பட்டதாம்

வங்கி சேவை
சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில்  டாலர் தொகையில் வரைவோலை வாங்கச் சென்றேன். அங்கு அன்னியச் செலாவணி  செக்‌ஷன் மாடியில் இருந்தது. அங்கு சென்றேன். சில படிவங்களைக் கொடுத்தார் ஒரு அலுவலர். அதைப் பூர்த்தி செய்து கொடுத்தேன். டாலர் தொகைக்கு ஈடான  ரூபாய்க்கு என் கணக்கிலிருந்து ஒரு செக் கொடுத்தேன். அலுவலர் மள மள என்று கணினியில் டைப் செய்தார். சட்டென்று என்னிடம், “சார், இது ஜாயின்ட் அக்கவுண்ட். இதில் உங்கள் மனைவியும் கையெழுத்துப் போடவேண்டுமே” என்றார்.’
“அப்படியா? இப்பவே வாங்கிக்கொண்டு வருகிறேன். வெளியே காரில் இருக்கிறாள்” என்று சொல்லி, படிவங்களை வாங்கிக் கொண்டு, கீழே வந்து, தெருவைக் கடந்து, காரில் உட்கார்ந்திருந்திருந்த என் மனைவியிடம் கையெழுத்து வாங்கிவிட்டுத் திரும்பிப் பார்க்கிறேன்.... எதிரே வங்கி அலுவலர்!
“ என்ன சார்?” என்று கேட்டேன்.
"ஒன்றுமில்லை. இந்தாருங்கள், உங்கள் டாலர் டிராஃப்ட். அந்த படிவங்களை என்னிடம் கொடுத்து விடுங்கள்... நீங்கள் திரும்பவும் மாடிப்படி ஏறி வரவேண்டாம் என்று நான் கொண்டு வந்து விட்டேன்” என்றார்.
‘அட’ என்று எனக்கு வியப்பு ஏற்பட்டது!
I WAS TOUCHED!

வியப்புத் தகவல்கள்.

* அகதா கிறிஸ்டி  எழுதிய  MOUSE TRAP  என்ற நாடகம் லண்டனில் தொடர்ந்து 60 வருடமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 25 ஆயிரம் தடவையைக் கடந்து விட்டதாம். ராயல்டி தொகையாக மட்டும் அகதாவின் பேரன்அகதாவை விட அதிக சம்பாதித்துவிட்டானாம்!
* நியு யார்க் நகரில் பிராட்வே வீதி நாடக அரங்குகல் நிறைந்த தெரு. PHANTOM OF THE OPERA  என்ற இசை நாடகம்1988-ல் முதலில் அரங்கேறியது.  25 வருஷமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 25 ஆயிரத்தை எப்போதோ தாண்டிவிட்டதாம். இப்போது அடுத்த ஆறு மாதத்திற்கு டிக்கட் முன் பதிவு செய்கிறார்கள்!
* நம் நாட்டிலும் ஒருவர் அதிக நாடகங்களை நடத்தி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார். 1965-ல் துவங்கி 2001 வரை பப்பன் கான் என்பவர் (ஹைதராபாத்) 10,000 தடவைக்கு மேல் ‘அத்ரக் கே பஞ்ஜே’ என்ற நையாண்டி நாடகத்தை நடத்தி இருக்கிறார். 
(Mr Crazy! Are you listening?)
* பழைய புத்தகங்கள் பஜாரில் சமீபத்தில்  SYDNEY HARRIS என்பவர்  எழுதிய PIECES OF EIGHT (செய்தித்தாளில் அவர் எழுதிய சில கட்டுரைகளின் தொகுப்பு) புத்தகம்  வாங்கினேன். வாரத்தில் 5 நாட்கள் வீதம் 1940-லிருந்து 1980 வரை வருஷம் எழுதியவர் அவர். கட்டுரைகள் எல்லாம் எட்டு  பாராக்கள் தான்.
அவரது மற்றொரு புத்தகம்  WINNERS AND LOSERS - 1973-ல் பிரசுரமானது- இப்போதும் வருஷத்தில் 500 காபிகள் விற்பனை ஆகிறதாம்.
*  F. SCOTT FITZGERALD  எழுதிய THE GREAT GATSBY, 1925-ல் பிரசுரமாயிற்று. 42 உலக மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கிறது. இப்போதும் வருஷத்திற்கு 5 லட்சம் காபிகள் விற்பனை ஆகிறதாம். சென்ற ஆண்டு ’ஈ-புக்’காக மட்டும்1,85,000 காபிகள் விற்பனை ஆயிற்றாம். (1925-ல் பிரசுரமான முதல் பதிப்புப் புத்தகத்தின் ஒரு காபியை வைத்திருக்கும்  ஒரு புக்-ஷாப், அதன் விலை 85 ஆயிரம் டாலர் என்று தன் விலைப் பட்டியலில் போட்டிருக்கிறது!) 


இதயத் துடிப்பு  

நமது இதயம் நிமிஷத்திற்கு  80 தடவை துடிக்கிறது என்பது எல்லாருக்கும் தெரியும்.  சரி, யானையின் இதயத்துடிப்பு எத்தனை இருக்கும் என்று ஊகிக்க முடியுமா? 25!
டால்ஃபின்
-12, guinea pig-250, கோழிக்குஞ்சு-250. எல்லாவற்றையும் தூக்கி அடிப்பது  ஹம்மிங் பேர்ட் (Hummingbird) நிமிஷத்திற்கு 1250 தடவைக்கும் அதிகம்.
இவை மாதிரி ஏராளமான தகவல்களையும் காட்சிப் பொருள்களையும் ஃபிலெடெல்ஃபியாவில் உள்ள பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் மியூசியத்தில் வைத்திருக்கிறார்கள்  - இரண்டு மாடி உயரத்திற்கு மனித இருதய மாடல் உட்பட. அந்த இருதயத்தின் ரத்தக்குழாய் வழியே நாம் உள்ளே சென்று வெளியே வரலாம். மியூசியத்தை முழுதுமாகப் பார்க்க மூன்று நாட்கள் தேவைப்படும். பார்க்கப் பார்க்க வியப்பில் திக்குமுக்காடிப் போவோம்.

7 comments:

  1. வியப்புத் தகவல்களில் மனிதம் தழைத்து வாழும் என்ற நம்பிக்கை பிறக்கிறது

    ReplyDelete
  2. உங்கள் அனுபவங்கள் ,பெண்ணின் அனுபவம் எல்லாம் அற்புதம் .தங்களின் நடை,நகைச்சுவை கலந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக யானையின் இதய துடிப்பு அருமை. ஒவ்வொரு பதிவிலும் பல வியப்பான தகவல்களை அள்ளி விசுகிற உங்கள் திறமையை
    மனமார பரட்டுகிரியன்..
    கே.ராகவன்
    பெங்களுரு

    ReplyDelete
  3. சென்னையிலும் மனித 'நேயம் இன்னும் இருக்கிறது என்று பதிவு செய்ததற்கு நன்றி. மற்றவரையும் இது தூண்டிவிடும்.

    ReplyDelete
  4. You are a treasure house of information and experiences! Astonishing memory and efforts & enthusiasm to note and share! My salutations to you! - R. J.

    ReplyDelete
  5. Thank you.Thank you.My astonishing memory may forget many things but certainly not your nice comments.
    -'Kadugu'
    -

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!