November 02, 2013

கதம்பம்

 கலியாணங்கள்
கலியாணங்கள் பல விதத்தில் மாறிப் போய் விட்டன. திருமணத்திற்கு முதல் தினமே ரிசப்ஷன் என்று வந்து விட்டது.  முதல் தினம் அரை நாள், முகூர்த்தம் அரை நாள் என்று கல்யாணங்களைச் சுருக்கி விட்டார்கள். .(பழைய காலத்தில்  5 நாள் கலியாணம்  நடந்தது என்று சிலர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.) ஒர் விதத்தில் இப்படி ஒரே நாளில் நடத்துவது   நல்லது தான், பெண் வீட்டாருக்குச் செலவு குறைகிறது.
ஆனால் சில புது வழக்கங்கள் வந்து  விட்டன. தரையில் அமர்வது போயே போய்விட்டது. எல்லாருக்கும் நாற்காலிதான்.  பொதுக் கூட்டங்களுக்கே நாற்காலி என்று ஆகி விட்டது என்னும்போது கலியாணங்களில் வராமல் இருக்குமா?
வரவேற்பு மேஜையில் பூ, பன்னீர், சர்க்கரை அல்லது கற்கண்டு இருக்கும். சமீப காலங்களில் அவற்றுடன்  வேறொன்றும் சேர்ந்துவிட்டது, அது ஒரு ’கவர்கள் பண்டில்’. அதில் டிசைன்களுடன், “வாழ்த்துகளுடன்” என்றும் அச்சடிக்கப்பட்டு இருக்கும்.  தவறாமல் மொய் எழுதுவதற்கு மறைமுக நினைவூட்டல்!

இன்னொரு புது வழக்கம்  வந்துவிட்டது. தாலி கட்டப்பட்டதும் எல்லாரும் அரக்கப் பரக்க,மேடைஏறி, மணமகன், மணமகள். அவர்களது பெற்றோர்கள் ஆகியவர்களுக்குக் கை கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். ஒரே களேபரம்.  புரோகிதரோ,  “இன்னும் சப்தபதி எல்லாம் இருக்கு.. அதுவரைக்கும்  பொண்ணு  கையை மாப்பிள்ளை  பிடிச்சுண்டே இருக்கணும். அதுதான் சாஸ்திரம்” என்று சொன்னாலும் யாரும் காதில் வாங்கிக் கொள்வதில்லை. மேடையில் இருக்கும் பூ, பழங்களை  மிதித்துகொண்டே போய், கைகுலுக்குவதோடு, கவரையும் திணித்துவிட்டு ”ஆபீஸில் மீட்டிங்”, “இன்ஸ் பெக் ஷன்” என்று (பொய்) சொல்லிவிட்டு, நேரே டைனிங் ஹாலுக்குப் போகிறார்கள்! இந்த சமயத்தை நழுவவிட்டால், அன்பளிப்பு கொடுக்க பின்னால் அரை மணி அல்லது ஒரு மணி நேரம்  கியூவில் நிற்க வேண்டி இருக்கும் என்பது ஒரு ரகசிய காரணம்!!
ஒன்றிரண்டு திருமணங்களில் புரோகிதர்,  சப்தபதியின் முக்கியத்துவம் என்ன, எப்போது கை கொடுக்கலாம் என்று ஒரு சின்ன உபன்யாசமே செய்கிறார். ஆனால் யார் கேட்கிறார்கள்? இனிமேல் அழைப்பிதழ்களில் ”சப்தபதி முடியும்வரைக் கைகுலுக்குவதைத்  தவிர்க்கவும்” என்று  அச்சடிப்பார்கள் என்று நினக்கிறேன்!
(கலியாணங்களில் செருப்பு திருடு போகும் ( அறுவை) ஜோக்குக்கள்  இப்போது பத்திரிகைகளில் வருவது இல்லை. காரணம் யாரும் செருப்பைக் கழட்டுவதில்லை -டைனிங் ஹாலில் கூட!)

 மாறிப் போன டயலாக்குகள்.
  OVER THE YEARS சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கேட்டவை.
1960  களில்
“ குழந்தை.. டில்லி போனதும் ‘பத்திரமாய்ப் போய் சேர்ந்தேன்னு ஒரு கார்டு போட்டுடு.”
“ சரிப்பா. அப்படியே செய்றேன்.”
*          *            *
1970  களில்:
”குப்பு.. டில்லி போனதும் தந்தி கொடுத்துடு.”
“ஓ,கே, அப்பா.”
1980 களில்
”சுரேஷ்.. டில்லி போனதும் எகஸ்பிரஸ் தந்தி கொடுத்துடு”
“ஓ,கே, டாடி.”
1990 களில்
“நீல்.. டில்லி  போனதும் ஒரு டிரங்கால் பண்ணி சொல்லிடு.”
“ யா.. டாட், ஐ வில்!”
2000 களில் .
“அக்‌ஷய்..டில்லி  போனதும் ஒரு எஸ்.எம்.எஸ் கொடுத்துடு.”
 ”DONE....Bye.."
2010 களில்
” ஷிவ்..டில்லி  போனதும்  எனக்கு மிஸ்டு கால் கொடு. நான் கூப்பிடறேன்!:”
“எந்த போனுக்கு? லேண்ட் லைனுக்கா? ஐஃபோனுக்கா?  பிளாக் பெர்ரிக்கா?
ஐ-பேடுக்கா?
2020 களில்
“இத பாரு.. பேஸின் ப்ரிட்ஜ் போனதும் போன் பண்ணு. அப்புறம் விஜயவாடா, நாக்பூர், இடார்ஸி, ஆக்ராவில் பண்ணு. டில்லியிலே ரயிலை விட்டு இறங்கறதுக்கு முன்னே பண்ணு.,  மொத்தம் ஆறு பையையும்  எடுத்துண்டுட்டியான்னு சொல்லு.”
“சரி..சரி..ச்ர்ர்ர்ர்ர்ரி... அடுத்த தடவையிலிருந்து ஏர்ல தான்.”

5 comments:

  1. இனியதான கதம்பம்.....


    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. டயலாக்குகளை மிக ரசித்தேன். உண்மையில் காலம் மாற மாற பழக்கவழக்கங்கள் எல்லாம் மாறித்தான் வருகின்றன! தினம் ஒரு பா...? அவசியம் பாக்கணும்பா! உங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தீபஒளித் திருநாள் நல்வாழ்த்துகள் ஸார்!

    ReplyDelete
  3. மணமேடையில் கூட யாரும் செருப்பைக் கழட்டுவது இல்லை.

    ReplyDelete
  4. Even without dad asking his son's safe travel upto destination, now the son uploads his status every 5 minutes in the FB / twitter for the whole world to know - for what purpose! - R. J.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!