May 23, 2013

கமலாவின் கணக்கு வழக்கு -கடுகு

கமலாவின் கணக்கு வழக்கு
அமெரிக்காவில் அலபாமா மாநிலத்தில் மொபைல் என்ற நகரின் PRESS-REGISTER  என்ற  பத்திரிகையில்   S L VARNADO என்பவர் எழுதி இருந்த ஒரு கட்டுரை என்  கண்ணில் பட்டது. நல்ல நகைச்சுவையுடன் இருந்தது. அந்த பத்திரிகையில் அதற்கு முன்பு அவர் எழுதி இருந்த வேறு சில கட்டுரைகளையும்  படித்தேன், எல்லாம் எளிமையான நகைச்சுவை. எனக்குப் பிடித்த டைப்!
அதில் வந்த ஒரு கட்டுரை”  MY WIFE'S MEASUREMENT SYSTEM. ( 'என் மனைவியின் கணக்கு முறைகள்!” என்று  சுமாராக மொழிபெயர்க்கலாம்.)
அந்தக் கட்டுரையைக் கொஞ்சம் தழுவி,  சொந்த  மசாலாவை  நிறையத் தூவி  இங்கு தமிழில் தருகிறேன்.                                       ------------------------------
கமலாவின் கணக்கு வழக்கு
கமலாவை நான் கலியாணம் பண்ணிக் கொண்டு  ஐம்பது வருஷம் ஆகிவிட்டது. ( யாரங்கே பெருமூச்சு விடுவது? விடவேண்டியவன் நானே கஷ்டப்பட்டு பெருமூச்சு விடாமல் இருக்கிறேன்!)

இந்த ஐம்பது வருஷங்களில் கமலாவிடம் நான் கற்றுக் கொண்ட பாடங்கள் ஏராளம், அதில் முக்கியமானது ஒன்று..... கமலாவின் சில நடவடிக்கைகளுக்கு ஏன், எதற்கு என்று விளக்கம் கேட்கக்கூடாது!  கணவன் என்பவன் நாயகனாக இருக்கலாம்;  கேள்வியின் நாயகனாக இருக்கக்கூடாது!
உதாராணத்திற்கு, எ ன் அருமை மனைவி பின்பற்றும் அளவு முறைகளைப் பற்றிச் சொல்கிறேன்.
ஒரு நாள் ஆபீசிலிருந்து வீடு திரும்புகிறேன். வீட்டுக்குள் நுழைகிறேன். கமலா டைனிங் மேஜையின் கீழ் பூனைக்குட்டி மாதிரி போய்க் கொண்டிருக்கிறாள்.

தவழ்ந்து போய்க் கொண்டிருந்தாள் என்று கூட சொல்லலாம். அவளுக்குக் குழந்தை மனசு என்று என் மாமியார் அடிக்கடி கூறுவாள். சில சமயம் “ ஏண்டி குழந்தை!” என்றும் அழைப்பாள். அதனால்  தவழ்கிறாளோ என்று ஒரு கணம் எண்ணினேன்.
” கமலா.. மேஜையின் கீழே என்ன செய்து கொண்டிருக்கிறாய்  என்று  என்னிடம் சொல்லலாமா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்டேன்.
“மேஜையை அளக்கிறேன், இந்த மேஜைக்கு புதுசாக டேபிள்-கிளாத் வாங்கப் போறேன். அதுக்காகத்தான்.” என்றாள்.
“ சரி. அதுக்கு எதுக்கு  முழம் போட்டுகொண்டு , ஏதோ பண்ணிக் கொண்டு இருக்கியே... இன்ச் டேப் எடுத்து அளக்க வேண்டியதுதானே?” என்று கேட்டேன்.

“ மேஜையின் நீள அகலத்தைமுதலில் எடுத்துக் கொண்டு தானே அதுக்கு ஏத்த மாதிரி டேபிள்- கிளாத்  வாங்க வேண்டும். இதோ  பாருங்கோ.” என்று சொல்லி ஒரு துண்டு பேப்பரைக் கொடுத்தாள்.
அதை வாங்கிப் பார்த்தேன்.” சர்க்கரை இரண்டு கிலோ, து. பருப்பு 1 கிலோ, உ. பருப்பு 1 கிலோ, பாமாயில்... என்றெல்லாம் எழுதி இருக்கிறது. ரேஷன் கடை பில்லுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?” என்று ஆரம்பித்தேன்.
“ அசடு.. அசடு.. சரியான அசமஞ்சமாக இருக்கீங்களே...அது  ரேஷன் கடை பில்தான்..  பின்னால் திருப்பிப் பாருங்கோ..” என்றாள், லேசாகத் தன் தலையில் அடித்துக் கொண்டே!
அதைத் திருப்பிப் பார்த்தேன். மூணு முழம், இரண்டு ஜாண், நாலு விரற்கடை என்றும் அதன் கீழ்  இரண்டு முழம், இரண்டு ஜாண், மூணு விரற்கடை என்றும் எழுதி இருந்தது.
“ என்ன கமலா..   ஜாண், முழம்  என்று...?” என்று கேட்டேன்.
“சொல்றேன்.. ரொம்ப நாளைக்கு முன்னே எதையோ ... எது என்பது மறந்து விட்டது... அளக்க வேண்டி இருந்தது. இன்ச் டேப்பைக் கணோம். நீங்கதான் அதை எங்கேயோ வெச்சிருக்கணும். சுலபமாக அகப்படவில்லை. அதுக்காக அளக்காமல் இருந்து விட முடியுமா? நான் என்ன கையால் ஆகாதவளா? அதனால் என்  கையால் முழம், ஜாண் என்று அளந்தேன். தீர்ந்தது பிரச்னை! அன்னியிலேருந்து எனக்கு  என் கையே இன்ச்-டேப்!
’அப்படியா வெரிகுட்’ என்கிற மாதிரி தலையை ஆட்டினேன். புருவத்தை உயர்த்தினேன். கையை லேசாகத் தட்டினேன். வாயை?.  ஊஹும்,.. திறக்கவில்லை.

சில நாட்கள் கழித்து கமலா வரவேற்பு அறையில் ஒரு நாற்காலியை அணைத்துக் கொண்டு ஏதோ போட்டோவிற்குப் போஸ் கொடுப்பது போல் நின்று கொண்டிருந்தாள்.  புதுமணத் தம்பதிகள் கூட அவ்வளவு நெருக்கமாக அணைத்துக் கொண்டு நிற்க மாட்டார்கள்!
“என்ன கமலா..” என்று மெதுவாக இழுத்தேன்.
“ இந்த நாற்காலியின் உயரத்தை அளக்கிறேன். புதுசாக ஒரு புக்-ஷெல்ஃப் வாங்கப் போறேன். அதன் உயரம் எனக்குத் தெரியணும்” என்றாள்.
“ அதன் என்றால் எதன்?  நாற்காலி உயரமா, புக்-ஷெல்ஃப் உயரமா”?
“  புக்-ஷெல்ஃபின் உயரம்தான்.”
“ அதுக்கு நாற்காலி உயரத்தை எதுக்கு அளக்கிறே? இது ஏதாவது புதுக்கணக்கா?”
” கணக்குமில்லை.. பிணக்குமில்லை..    நாற்காலி உயரத்தைவிட ஒன்றரை மடங்கு உயரம் புக்-ஷெல்ஃப் இருக்கணும்...நாற்காலியின் உயரத்தை இதோ என் புடவையில் லேசாக சாக்பீஸால் குறித்துக் கொண்டேன்... கடைக்குப் போய் ஷெல்ஃபின் பக்கத்தில் நின்று பார்ப்பேன்.  புடைவையில்குறித்துக் கொண்ட உயரத்தைவிட குத்து  மதிப்பாக  ஒன்றரை மடங்கு உயரம் இருந்தால் அதை வாங்கி விடுவேன்”
“ அதென்ன கமலா, போன மாசம் மேஜையைக் கையால் அளந்தாய்..  இப்போது உடம்பால் அளக்கிறாய். எதை எதை அளப்பதற்கு எந்த உடல் பாகத்தை உபயோகிக்க வேண்டும்  என்று ஏதாவது கணிதத்திலோ அல்லது  ’வேதிக்’ கணிதப் புத்தகத்திலோ சொல்லப்பட்டிருக்கிறதா?” என்றூ சீரியஸாகக் கேட்டேன். ( கேலியாகக் கேட்டால் எனக்கு சீரியஸாக ஏதாவது ஆகும் என்பது எனக்குத் தெரியும்!)
“ அதெல்லாம் ஒண்ணுமில்லை.. சில சமயம் பாதத்தால் அளக்கணும்.”
“ பாதமா? அது எப்படி?”
“உதாரணமாக, நம் வீட்டுக் கூடத்திற்கு ஒரு கார்ப்பெட் வாங்கணும்னு நினைச்சபோது, அடி மேல் அடி எடுத்து வெச்சு அளந்தேன். 27 அடி இருந்தது. அதாவது 27 பாத அளவு நீளம், 13 அடி அகலம்..
“ சரி.. கடையில் போய் என்ன சொன்னே?  பாதத்தைக்  கழட்டிக் கொடுத்தியா,
கார்ப்பெட்டை அளந்து பார்க்க..?”
“ ஏன் கோபமூட்டறீங்க.. கடையில் கார்பெட்டை விரிச்சுப் போடச் சொன்னேன். அதன்மேல் அடி அடியா எடுத்து  வெச்சேன்...”
“இதென்ன பைத்தியக்காரத்தனம் என்று கடைக்காரன் சிரிக்கலையா?”
“ ஏன் சிரிக்கப்போறான்? அவனுக்கு வேண்டியது வியாபாரம். ஒரு கார்ப்பெட் விற்றால் கசக்குமா என்ன?” என்று கேட்டாள்.
”கமலா.. உன் கணக்கு வழக்கு, அளக்கிற முறையெல்லாம் ரொம்பப் பிரமாதம்.. ஆனால் கொஞ்சம் கொனஷ்டையாக இருக்கு.” என்றேன்.
“ என்ன கொனஷ்டையைக் கண்டீங்க?”
“சரி.. நீயே ஒரு ஆர்க்கிடெக்டாக இருந்தே அல்லது ராக்கெட்  விஞ்ஞானியாக இருந்தே என்று  வெச்சுக்கோ. அப்போ எப்படி அளப்பே?”
“ உங்க நாக்குதான் இருக்கே..மைல் நீளம்....அதை வேணா வெச்சு அளக்கலாம்.. இதோ பாருங்கோ. நான் விஞ்ஞானியோ அஞ்ஞானியோ இல்லை. ஒரு குடும்பப் பெண்மணி.. எனக்கு மேஜை, நாற்காலி.சோபா, கதவு, கிச்சன்  எல்லாம் தான் என் உலகம். நான்  ராக்கெட்டைக் கண்டேனா,  அடுக்குமாடி வீட்டைக் கண்டேனா? என் வேலைக்கு என் ‘மெதட்’ சரியாக இருக்கிறது, விடுங்கள்.” என்றாள் தீர்மானமாக.

இதுவே ஐம்பது வருஷத்திற்கு முன்பு நடந்திருந்தால் கமலாவை உண்டு இல்லை என்று கலாட்டா பண்ணி இருப்பேன்.

ஏதோ ஒரு பொன்மொழி இருக்கிறது, “வாழ்க்கையில் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன!”

4 comments:

  1. பொன்மொழியாய் மின்னும் கதை ..!

    ReplyDelete
  2. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதைப் போல கமலா மாமிக்கு கையும் ஆயுதம்! இன்ச் டேப்பை நீங்கதானே எங்கேயோ மறந்து வைத்துவிட்டீர்கள். எல்லா தப்பும் நீங்க செய்துவிட்டு மாமியின் மெதட்-ஐ குறை சொல்லலாமா நீங்கள்?

    ReplyDelete
  3. ஹா.. .ஹா... ஹா... அவர்கள் உபயோகித்த அளவைகள் எல்லாமே அருமைகள்! ஆழாக்கு, மரக்கால், தோலா இப்படி இன்னும் பல அளவைகள் கேள்விப்பட்டிருக்கேனே... இதெல்லாம் தெரியாதோ அவங்களுக்கு?

    ReplyDelete
  4. தன் கையே தனக்குதவி என்பது கமலா மாமியின் பாலிஸி போலிருக்கு :-))

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!