February 05, 2013

ஈரமுள்ள நெஞ்சு

1. போதும்..போதும்.. உதவி போதும்..

பல வருடங்களுக்கு முன்பு கல்கி இதழில் தொடர்ந்து கேள்வி-பதில் எழுதி வந்தேன். அப்போது ஒரு மருத்துவக் கல்லூரி மாணவி ஒரு கேள்வி அனுப்பி இருந்தாள்.  அந்தக் கேள்வியையும் அதற்கு நான் எழுதிய பதிலையும் முதலில் படியுங்கள்.

கேள்வி:  நான் மருத்துவக் கல்லூரி மாணவி. மூன்றாவது  வருஷப் படிப்பிற்குத் தேவையான புத்தகங்கள்  வாங்க, பண உதவி செய்யக்கூடிய அமைப்புகள், நிறுவனங்கள்  இருக்கின்றனவா?

பதில்: அப்படி பண உதவி செய்யக்கூடிய அமைப்புகள் இருக்கின்றனவா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ஈரமுள்ள நெஞ்சங்கள் உலகெங்கும் உள்ளன என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

இந்த கேள்வி-பதில் வெளிவந்த  அடுத்த வாரம் எனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
 கல்கி இதழில் தலையங்கத்தில், இந்த கேள்வி-பதிலைப் பற்றியும் அதன் பின்விளைவைப் பற்றியும் எழுதப்பட்டிருந்தது. தலையங்கத்தின் சுருக்கம்: கடுகு பதில்களில்  வந்த  கேள்வி-பதிலைப் படித்த நம் வாசகர்கள் பலர், அந்த மருத்துவ மாணவிக்கு நிதி உதவியை வெள்ளமாக அளித்து வருகிறார்கள். அந்த மாணவி நமக்கு எழுதியுள்ள கடிதத்தில், “என் தேவைக்கும் மிக அதிகமாக நிதி சேர்ந்து விட்டது. இனி யாரும் எனக்குப் பணம் அனுப்ப வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று எழுதியிருந்தார்.
மறுவாரமே தலையங்கத்தில் இது வந்தது என்றால், முந்தைய வார இதழ் வந்த ஒன்றிரண்டு நாட்களலேயே  நிதி சேர்ந்திருக்க வேண்டும் ( அந்த காலகட்டத்தில் ஆஃப்செட் இல்லை. எல்லாம் கையால் அச்சு கோத்துதான்  பத்திரிகை ரெடி பண்ண வேண்டும். ஆகவே  ஒரு வாரம் முன்னதாகவே 95 பங்கு இதழ்கள் தயாராகிவிடும்.)
அரைப்பக்க விளம்பரம் இல்லை, டிவி, ரேடியோ விளம்பரங்கள் இல்லை, ரேடியோ இல்லை. சினிமா நடிகர், நடிகைகளின் வேண்டுகோள்கள் இல்லை. கல்கியில் கேள்வி-பதில் பகுதியில் இரண்டு வரி பதில் புரிந்த சாதனை.
நாக்கில் ஈரம் வறண்டாலும் நல்ல உள்ளங்களின் நெஞ்சில் ஈரம் என்றும் வறண்டு போகாது. 

2.  விளம்பரமில்லாமல் செய்த உதவி 

 ’நாலாயிரமும் நானும்’ பதிவிற்கு ஒரு பிற்சேர்க்கை போட்டிருந்தேன். அதைப் படிக்காதவர்கள் முதலில் அந்த பதிவைப் படித்து விட்டுத் தொடருங்கள்.
அதில் ஒரு சின்ன ஊரில் ஞாயிற்றுக்கிழமைகளில் நூறு பேருக்குமேல் நாலாயிர பிரபந்தத்தை படிப்பது பற்றி எழுதி இருந்தேன். அவர்களது எளிமையைப் பற்றியும், பக்தி சிரத்தையைப் பற்றியும் எழுதி இருந்தேன். அதைப் படித்த ஒரு ஈர நெஞ்சு அன்பர் அவர்களுக்குச் சிறிது நிதி உதவி செய்ய விரும்புவதாக எனக்கு எழுதினார். தன்னைப் பற்றி எந்த விவரமும் சொல்லக்கூடாது என்றும் எழுதி இருந்தார்.

  அந்த பிரபந்த அன்பர்களிடம் தொடர்பு கொண்டேன் .” அவர் எவ்வளவு தொகைக்கு உதவுவார் என்று தெரியாது. உங்களுக்கு எவ்வளவு தேவைப்படும் என்று சொல்லுங்கள். அதை அவருக்குத்தெரிவித்து விடுகிறேன்” என்றேன். அவர்கள் சொன்னார்கள் ” ஐயா பணம் தேவையில்லை. பிரபந்த புத்தககங்கள் வாங்கிக் கொடுத்தால் மிக்க  நன்றி உடையவர்களாக இருப்போம் ” என்றார்கள்.. 
“ சரி,  அதிக பட்சமாக எவ்வளவு காபிகள் கொடுத்தால் சந்தோஷம்?”
“ நூறு காபி கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம்” என்றார்கள்.
இந்த விவரங்களை சம்பந்தப்பட்ட அன்பரிடம் சொன்னேன்
“ அப்படியே செஞ்சுட்டாப் போச்சு.. பணத்தை அனுப்பிடறேன்.புத்தகத்தை அவங்களுக்கு அனுப்பிடுங்கோ.. என் பேர் எதுவும் யாருக்கும் சொல்லாதீங்கோ.. தயவுசெய்து” என்றார். 
சில நாட்களுக்குப் பிறகு 20,000 ரூபாய் பணம் வந்தது. நானும் 100 காபிகள் திவ்வியப் பிரபந்த அன்பர்களுக்கு அனுப்பி வைத்தேன்.

3.  ஈரமும் பரிவும் கொண்ட மனம்

சமீபத்தில் நான் அமெரிக்கா சென்றிருந்தேன். அங்கு ஒரு நாள் என் வீட்டிற்கு வந்த ஒரு பெண்மணி  கூறியதை அப்படியே எழுதுகிறேன்.

“ சென்ற வாரம் நான் அட்லாண்டா போகவேண்டி இருந்தது.  ஏர்போர்ட் லௌஞ்சில் காத்திருந்தேன்.சிறிது நேரம் கழித்து அறிவிப்பு வந்தது. “அட்லாண்டா போகும் பயணிகள் விமானம் தயாராக உள்ளது. முதலில், இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வைத்திருப்பவர்கள், முதல் வகுப்புப் பயணிகள், சக்கர நாற்காலிப் பயணிகள் மற்றும் நம் நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் அமெரிக்க ராணுவ வீரர்கள்  (OUR NATION'S PROUD  ARMY MEN ) உள்ளே போகலாம்.” என்று அறிவித்தார்கள்.

எனக்கு முதல் வகுப்பு டிக்கட் இருந்ததால் நான் எழுந்து போனேன். கியூவில் எனக்கு முன்னே இரண்டு பேர் இருந்தார்கள். சக்கர நாற்காலிக்காரர் ஒருவர், ஒரு இளைஞர், மூன்றாவதாக  நான்.

அந்த இளைஞரிடம் முதல் வகுப்பு டிக்கட் இல்லை. ராணுவ உடையிலும்  இல்லை. தன் எகானமி வகுப்பு போர்டிங் கார்டைக் கொடுத்தார். அதை, அந்த விமான நிலையப் பெண்மணி  வாங்கி, செக் பண்ணிவிட்டு முத்திரை குத்தி அவரை உள்ளே அனுமதித்தார்.
முகத்தில் கேள்விக்குறியுடன், என் போர்டிங் கார்டைக் கொடுத்தேன். அதை வாங்கிக்கொண்ட அந்த பெண்மணி ‘ ஒன் மினிட்’ என்று என்னிடம் கூறியபடியே, எனக்கு முன்னே சென்ற அந்த இளஞரின் பின்னால்  சென்று, “ ”சார், உங்கள் போர்டிங் கார்டைக் கொடுங்கள்” என்று கேட்டு வாங்கிக் கொண்டார். “ ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க’  என்றாள், மிகுந்த மரியாதை கலந்த  குரலில்.
“ அந்த எகானமி போர்டிங் கார்டைக் கிழித்து விட்டு, புதிதாக மற்றொரு போர்டிங் கார்டை அச்சடித்து அவரிடம் ”Have a nice journey, Sir" என்று சொல்லியபடி கொடுத்தாள்.
அது  முதல் வகுப்பு பயணிகளுக்கான போர்டிங் கார்ட்!   எனக்கு லேசான குழப்பம்?  ‘இப்படி இலவசமாக முதல் வகுப்பு டிக்கட்டைக் கொடுக்க அவளுக்கு நிச்சயமாக அதிகாரம் இருக்காதே!’ என்று யோசித்தபடியே, இரண்டடி முன்னே வைத்தேன். என் முன்னே சென்று கொண்டிருந்த அந்த இளைஞனின் கால்கள் என் பார்வையில் பட்டது.

எனக்கு ஷாக்! அவனுடைய இரண்டு கால்களும் செயற்கைக் கால்கள்!
எந்த போர்க்களத்தில் எந்த  LANDMINE  பறித்து கொண்டதோ! அடாடா!
 என்னால் பரிதாபப் படத்தான் முடிந்தது..
 அந்த ராணுவ  வீரன் சற்று வசதியுடன் பயணிக்க உதவுவதுதான் தன்னால் இயன்ற சேவை என்று எண்ணி, அந்த விமான நிலையப் பெண்மணி   போர்டிங் கார்டை மாற்றி,  முதல் வகுப்பில் சீட் கொடுத்திருக்கவேண்டும்.

அவளது ஈர நெஞ்சம். என் கண்களை  ஈரமாக்கின.

அந்தப் பெண் சகாரா பாலைவனத்திற்குப் போனாலும் அவள் நெஞ்சு வறண்டு போகாது என்பது நிச்சயம்!” என்று கூறி முடித்தார்.

இதைக் கேட்டு நான் “நீங்கள் சொன்னது சரி தான்” என்றேன் - என் கண்களைத் துடைத்துக் கொண்டே!

11 comments:

  1. மூன்று நிகழ்வுகள்.... மூன்றுமே மனதைத் தொட்டன.....

    ReplyDelete
  2. டமாஸ் எழுதும் பதிவை விட இந்த பதிவு கனமாக உள்ளது. கடுகார் வாழ்க

    -பாண்டியன் புதுகை

    ReplyDelete
  3. ஆம்... மனிதர் இதயங்களில் ஈரம் உலர்ந்து விடவில்லை என்பதை நானும் பல முறைகள் அனுபவத்தில் உணர்ந்ததுண்டு. மூன்று விஷயங்களும் மனதை நெகிழ வைத்தன.

    ReplyDelete
  4. //பல வருடங்களுக்கு முன்பு கல்கி இதழில் தொடர்ந்து கேள்வி-பதில் எழுதி வந்தேன். ..//

    கேள்வி, பதில் ரெண்டுமே எழுதினீங்களா?

    ReplyDelete
  5. இல்லை.
    முதலில் பதில் எழுதி விடுவேன். பிறகு அதற்குத் தகுந்த மாதிரி கேள்வி எழுதுவேன்.
    -கடுகு

    ReplyDelete
  6. ஆஹா..அருமை..அந்த மூன்றாவது நிகழ்வு சற்று கலக்கித் தான் விட்டது ஆளை!

    ReplyDelete
  7. நெகிழ்ச்சியான பதிவு. 3 சம்பவங்களும் ஒரு சந்தோஷத்தையும், கண்ணோரத்தில் ஒரு நீர்த்துளியையும் கொடுத்தன. முதல் விஷயத்தில், அந்த மாணவி, தனக்குத் தேவைக்கு மேல் சேர்ந்துவிட்டது, இனி யாரும் அனுப்ப வேண்டாம்’ என்று எழுதியது உண்மையிலேயே பெரிய விஷயம். அப்படியும் மனிதர்கள் இருந்திருக்கிறார்கள்! - ஜெ.

    ReplyDelete
  8. இப்போது விகடனில் உண்மையிலேயே, ‘கேள்வி - பதில்’ ஒருவரே எழுதலாம்! (’கேள்வியும் நானே, பதிலும் நானே’ - பகுதி!)

    சரி, கடுகு சாருக்கு, இப்போது வரும் பத்திரிகைகளில் கேள்வி - பதில் பகுதியில் நல்ல பதில் அளிப்பாளர் யார் என்று சொல்ல முடியுமா? (எனக்கு கல்கி தராசுவும், தினமலர் அந்துமணியும் பிடிக்கும்.)

    -ஜெ.

    ReplyDelete
  9. FedEx-ல் அம்புக்குறி! முடியவில்லை. அப்புறம் கூகுளாண்டவனிடம் சரணாகதி. இப்போ பார்த்துவிட்டேன்! ஒரு ஸ்பூனும், ஒரு முட்டையும் இருப்பதை நான், நானே கண்டுபிடித்தேன்!! - ஜெ.

    ReplyDelete
  10. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    உங்களுடைய நாலாயிர திவ்ய பிரபந்தம் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்த பிறகு, எங்களுக்கு பல பல நல்ல விஷயங்கள் நடக்கத் தொடங்கியிருக்கிறது. அதை இங்கே குறிப்பிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    கல்கியில் வெளி வந்த கேள்வி பதில்களை இங்கே வெளியிட்டால் படித்து மகிழலாம். முழுவதும் முடியாவிட்டாலும் சிலவற்றையாவது படிக்க முடியுமா?

    ஃபெடெக்ஸ் விளம்பரத்தில் E X இரண்டும் சேரும் இடத்தில், அம்புக் குறியை கண்டு பிடித்து விட்டேன்!!

    அன்புடன்

    திருமதி சுப்ரமணியம்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!