November 12, 2019

ஒரு சீன தோட்டத்தில் - பாகம் 3

ஷார்ட்டியின் மனமாற்றம்


  அடுத்த மூன்று மாதத்தை எப்படி,எங்கு கழிப்பது என்பதை மேலெழுந்த வாரியாகத் திட்டமிட்டு விட்டு, தன் நண்பரான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஷார்ட்டிக்கு டாக்டர்  லூமிஸ் போன் செய்தார்; தன்னை வந்து சந்திக்குமாறு கேட்டுக் கொண்டார். அவரும் வந்தார்.
    அவரிடம் லூமிஸ் “வீட்டிற்குப் போய், துணிமணிகளைப் பெட்டியில் எடுத்து வைத்துக்கொண்டு வா. நாம் தென் அமெரிக்காவிற்குச் சுற்றுப்பயணமாகப் போகப் போகிறோம்” என்றார்.

    இதைக் கேட்ட ஷார்ட்டி சற்று தயங்கியபடி சொன்னார் “சுற்றுப்பயணம் வர எனக்கு ஆசைதான். ஆனால் ஒரு முக்கிய வேலையை முடிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். அடுத்த சில மாதங்களில் எனக்கு நிறைய வேலை இருக்கிறது. ஒரு வாரம் கூட நான் இங்கு இல்லாமல் இருக்க முடியாது” என்றார்
  அவரிடம் டாக்டர் லூமிஸ் தனக்கு வந்த கடிதத்தைப் படித்துக் காண்பித்தா.ர் அதை பொறுமையாகக் கேட்ட ஷார்ட்டி “என்னால் உங்களுடன் வருவதற்கு இயலாது. கடந்த சில வாரங்களாக ஒரு முக்கிய வியாபார ஒப்பந்தத்தை நிறைவு செய்ய முயன்று கொண்டிருக்கிறேன். வெண்ணை திரண்டு வந்து கொண்டிருக்கும் சமயத்தில் ஊரை விட்டு போக முடியாது. நான் இங்கு இருந்தாக வேண்டும். வேறு சமயம். நாம் இரண்டு பேரும் சுற்றுப்பயணம் போனால் போகிறது” என்றார். அதே மூச்சில், “ஆமாம், அந்த பெண்மணி என்ன எழுதினார்? திரும்பப் படியுங்கள்” என்றார். “மழ்ச்சியை அனுபவியுங்கள். நீங்கள் நினைப்பதைவிட அதிக காலம் கடந்துவிட்டது.. அப்படியா?” என்று கேட்டார்.
   சில கணங்கள் அவர் அமைதியாக இருந்தார். டாக்டர் லூமிஸும் எதுவும் பேசவில்லை. ஷார்ட்டி அந்தப் பொன்மொழியை மனதில் அலசிக் கொண்டிருந்தார்.
    அவருக்கு ஏதோ ஒரு விழிப்பை அந்தப் பொன்மொழி ஏற்படுத்தி இருக்க வேண்டும். பிறகு ஷார்ட்டி சொன்னார்: “இவர்கள் முடிவு எடுப்பதற்காக நான் மூன்று மாதங்கள் காத்து இருந்தேன்; அவர்கள் இன்னும் முடிவெடுக்க வில்லை. இனிமேலும் காத்திருப்பதற்கு நான் என்ன பைத்தியக்காரனா? எனக்காக அவர்கள் காத்திருக்கட்டும். சரி, டாக்டர் எப்போது போகலாம் என்கிறீர்கள்?” என்று கேட்டார்!.
                                *                                 *                             *
உருகிப்போன  ஸ்டீல்!
      லூமிஸும் ஷார்ட்டியும் உல்லாசக் கப்பலில் தென் அமெரிக்காவுக்குப் புறப்பட்டார்கள்  ஒவ்வொரு நாளும் அவர்கள் மனதில் இருந்த பல பிரச்சினைகளின் கனமும், அழுத்தமும் கடல் பயணத்தில் மெல்ல மெல்ல ஆவியாகிப் போனதாக இருவரும் உணர்ந்தார்கள்.


     தென் அமெரிக்காவில் ஒரு பெரிய நகரை அடைந்தார்கள். அங்கு ஒரு பெரிய தொழிலதிபரின் விருந்தினராகத் தங்குவதற்கு வாய்ப்பு கிடைத்தது. பெரிய  - பெரிய என்பதை விட பிரமாண்டமான தொழிலதிபர் என்று சொல்வதே சரியாக இருக்கும். மிகப் பெரிய   ஸ்டீல் தொழிற்சாலையை நடத்தி வருபவர் அவர். அதுவும் நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் தொழிற்சாலை அது!
      டாக்டரும் ஷார்ட்டியும் அவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, ஷார்ட்டி அவரிடம்: “ நீங்கள் கால்ஃப் விளயாடுவீர்களா?” என்று தொழிலதிபரைக் கேட்டார் .அதற்கு அந்தத் தொழிலதிபர்  "ஏதோ கொஞ்சம்  விளயாடுவேன்….  என் மனைவியும் குழந்தைகளும் இப்போது அமெரிக்கா சென்றுள்ளனர். அவர்களுடன் இருக்க நான் விரும்புகிறேன்.. என்னிடம் மிக அழகான குதிரைகள் உள்ளன. அவற்றின் மீது சவாரி செய்ய ஆசை.  ஆனால் எதுவுமே என்னால் செய்ய முடியவில்லை. காரணம் தொழிற்சாலை வேலை! மூச்சு  விடக்கூட நேரமில்லை.....எனக்கு 55 வயது ஆகிறது. இன்னும் ஐந்து வருடங்கள்தான். அதன் பிறகு எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு ஹாய்யாக இருப்பேன்... உம்... இப்படித்தான் ஐந்து வருடத்திற்கு முன் சொன்னேன். ஆனால் என் தொழிற்சாலை இப்படி வளர்ந்து போகும் என்று எனக்குத் தெரியாது.... என்றாவது ஒரு நாள் மாலை நேரம் கால்ஃப் விளையாட போவதும் இயலாததாகிவிட்டது. … என் ஆபீஸ் பையனுக்கு என்னைவிட அதிக ஓய்வு கிடைக்கிறது” என்று சொன்னார்.. அவர் குரலில் சிறிது ஏமாற்றம் இருந்தது.
          ஷார்ட்டி அவரிடம், “ சரி, நாங்கள் எதற்கு இங்கு வந்திருக்கிறோம் என்று தெரியுமா?” என்று கேட்டார்
 அதற்கு அந்தத் தொழிலதிபர்  “உங்களுக்கு அதிக வேலை நெருக்கடி இருக்காது. பணமும், நேரமும் நிறைய இருக்கக் கூடும்....” என்றார்
    டாக்டர் லூமிஸ் “இல்லை, சார். எனக்கு நேரமே கிடையாது. செலவழிக்கப் பணமும் கிடையாது” என்று சொல்லிவிட்டு, அந்தப் பெண்மணி எழுதிய ’சீன தோட்டத்துப் பொன்மொழி’யைப் பற்றி விவரமாகக் கூறினார்
   அதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்த தொழிலதிபர், அந்தப் பொன்மொழியை மறுபடியும் சொல்லச் சொன்னார்.
    “நீங்கள் நினைப்பதை விட காலம் கடந்து விட்டது”
 அதன் பிறகு அந்த தொழிலதிபர் எதுவும் பேசவில்லை. பிற்பகல் அலுவலக வேலையாகச் சென்றுவிட்டார். 
மறுநாள் காலை அவர் டாக்டர் லூமிஸை ஹோட்டல் வராந்தாவில் சந்தித்தார்.. தான் இரவு சரியாகத் தூங்கவில்லை என்றும், கடிதத்தின் விவரங்களும், பொன்மொழியும் தன் சிந்தனையிலேயே இருந்தது என்றும் சொன்னார். அது தன்னுடைய மனதையும் எண்ணங்களையும் புரட்டிப்போட்டு, எங்கேயோ எடுத்துச் சென்றுவிட்டது என்றும் சொன்னார்
      தொடர்ந்து அவர் சொன்னதுதான் ஆச்சரியத்தை விளைவிக்கக்கூடியது. “என் மனைவிக்கு நான் தந்தி கொடுத்து இருக்கிறேன். நான் அங்கு புறப்பட்டு வருவதாக” என்று தெரிவித்தார்.
     ஒரு கடிதத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு வரி செய்த மாயாஜாலம் இது!
                 *                      *               *

      சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு டாக்டரும் ஷார்ட்டியும் ஊர் திரும்பினார்கள்.
 சிறிது காலம் கழிந்தது. மூப்பு கரணமாக  ஷார்ட்டியின் உடல் நலம் குன்றியது. அவரைப் பார்க்க டாக்டர் சென்றார்.  டாக்டரிடம்  ஷார்ட்டி, தாங்கள் இருவரும் தென்  அமெரிக்க பயணம் சென்றதை நினைவுபடுத்தி,  அந்தப் பொன் மொழியின் அறிவுரையின்படி காலம் தாழ்த்தாது சுற்றுலா போனதைக் குறிப்பிட்டார். அப்போது அவர் முகத்தில் மகிழ்ச்சி பளிச்சிட்டது!
                                           *                         *                                 *
          டாக்டர் லூமிஸ் பின்னால் இந்த அனுபவங்களை ’ஒரு சீன தோட்டத்தில்’ என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரையாக எழுதினார். அது பிரசுரமாயிற்று. அந்தக் கட்டுரைக்குக் கிடைத்த வரவேற்பு சொல்லி முடியாது. டாக்டரே எதிர்பார்க்காத அளவு வரவேற்பும் பாராட்டும் குவிந்தன. பல அமைப்புகளும் சங்கங்களும், தங்கள் சங்கத்தில் ”சீன தோட்டத்தில்’ என்ற தலைப்பில் பேசுவதற்கு அவரை அழைத்தன.
அவருக்கு வந்த ஏராளமான கடிதங்களில் பலர், அந்த கட்டுரையை படித்த பிறகு மன அழுத்தங்களையும் கவலைகளையும் எப்படி நீக்க முடிந்தது என்பதைத் தெரிவித்திருந்தார்கள். எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு தாங்கள் விடுப்பு எடுத்துச் சென்று அனுபவித்ததாகப் பலர் கூறியிருந்தார்கள். அந்த ஒற்றை வரி அறிவுரை தங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய நல்ல திருப்பத்தைத் தந்ததாக எழுதி இருந்தார்கள்.
.ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகை, இவர் எழுதிய கட்டுரையைப் பிரசுரித்தது.

  டாக்டர் லூயிஸ் மாதிரி வேறு பலரும் இதே கருத்தைக் கூறி இருந்தாலும் இவருடைய கட்டுரை உண்டாக்கிய தாக்கத்திற்கு ஈடு எதுவும் இல்லை. ஒரு எளிய, மனிதாபிமான அனுபவக் கட்டுரை பலருடைய மனப்பாங்கையே மாற்றியதுடன், தங்கள் வாழ்க்கையை அவர்கள் ஒரு புதிய கோணத்தில் நோக்கச் செய்தது. அத்துடன், தங்கள் கவலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அனுபவிக்க வேண்டியவற்றை அதிக காலம்  தள்ளிப் போடாமல் அனுபவிப்பதற்கும், மனப்பாரத்திற்கு விடைகொடுக்கவும் உதவியது.  

(டாக்டர் லூமிஸ் எழுதிய THE BOND BETWEEN US என்ற புத்தகத்தில் ‘IN THE CHINESE GARDEN’ கட்டுரை முழுதுமாக உள்ளது.)

பின் குறிப்பு:
 சரி, இந்தப் பதிவை படித்த உங்களில் பலருக்கும் இது உபயோகமான பதிவாகவும், உங்கள் பிரச்சினைகளுக்கு லேசான பரிகாரமாகவும், எல்லாவற்றையும் விட, “இப்போது என்ன அவசரம்? கொஞ்ச காலம் போகட்டும்” என்று பல விஷயங்களைத் தள்ளிப் போட நினைப்பதைத் தவிர்க்கவும் உதவும் என நம்புகிறேன்..

12 comments:

  1. லூமிஸின் அனுபவங்களும், அந்த "நீங்கள் நினைப்பதை விடக் காலம் கடந்து விட்டது!" என்னும் வரியும் மறக்க முடியாதவை. இதன் மூலம் பலர் அடைந்த பலனுள்ள அனுபவங்களைப் போல நமக்கும் நடக்கலாம்.

    ReplyDelete
  2. கட்டுரையில் சொல்லியிருக்கும் செய்தி, மற்றவர்கள் அனுபவம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. அந்த 'ஒரு வரி'ல அர்த்தம் இருக்கு.

    ஆனா பாருங்க...அவங்கள்லாம் மேனாட்டவர்கள். அவங்க அரசாங்கம், அவர்களது ஓய்வுகாலத்தை மகிழ்ச்சியா வச்சிருக்க உதவுது. இந்தியாவுல, நம்மை நாமதான் கடைசிவரைல பார்த்துக்கணும். அதுனால, இந்தச் செலவுக்கு இப்போ என்ன அவசரம் என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியாது.

    ஆனாலும் எந்த நல்ல செயலையும் ஒத்திப்போட்டால், அது செய்வதற்குரிய காலமே வராது போய்விடும் என்பது உண்மைதான்.

    ReplyDelete
  3. மிகவும் அருமையான பதிவு ஐயா. நம் கண் முன்னே நம் குழந்தைகள் வளர்ந்து விடுகிறார்கள். எனது பெரிய பையன், நான் அலுவலகத்திலிருந்து திரும்பும் போது, தவழ்ந்து வந்து காலைக் கட்டிக் கொள்வான். இப்போது அவனுக்கு ஏழு வயதாகிறது. இப்போது அதே வேலையை எனது சிறிய மகன் செய்கிறான். பெரிய மகன் இப்போது புத்தகங்களில் மூழ்கியுள்ளான். அவனும் இப்போது தவழ்ந்து வந்து காலைக் கட்டிப் பிடிக்கச் சொன்னால் பிடிக்க மாட்டான். காலங்கள் ஓடுகின்றன. அந்தந்த காலத்தில் அந்தந்த மகிழ்ச்சிகளை அவ்வப்போது அனுபவித்துக் கொள்ள வேண்டும். அருமையான பதிவு ஐயா.

    ReplyDelete
  4. எனக்கும் இது உதவ வேண்டும் என்று மிகவும் விரும்புகிறேன்.  நமக்கு ஏற்கெனவே தெரிந்ததுதான்.  ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு தூண்டுகோல் தேவையாய் இருக்கிறது.

    "கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு...   காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு" பாடலின் இந்த இரண்டு வரிகள் மட்டும் நினைவுக்கு வருகின்றன!

    ReplyDelete
  5. Actually your writing makes this more interesting than the original version in english. Thanks a ton Sir !

    - Rajmohan, Hyderabad

    ReplyDelete
  6. Thank you Mr Rajmohan.. I am happy to note that you had access the original English text. - Kadugu

    ReplyDelete
    Replies
    1. yes sir. I bought this in amazon after reading your introduction about the book in your first part (unable to handle the suspense is another reason too). Definitely reading yours is more interesting (as always).
      Thanks again Sir - Rajmohan

      Delete
  7. Thank You. I am really happy to find that my blog is read by readers like you. - Kadugu

    ReplyDelete
  8. பின்னூட்டம் போட்டவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்- கடுகு

    ReplyDelete
  9. இது மறுபடி இன்று எங்கள் ப்ளாகின் சைட் பாரில் தெரிகிறது. ஆனால் கல்கி அவர்களின் படத்தோடு வந்திருக்கு. அநேகமாக அந்தப் பதிவு வெளியாகவில்லைனு நினைக்கிறேன்.

    ReplyDelete
  10. ஆம், அடுத்த பதிவில் வரும் -கடுகு

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!