October 30, 2018

துணுக்குப் பேரணி


  அம்மாடி, கேட்லாக்
           எழுபதுகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் டில்லி தாரியாகஞ்ச்                       நடைபாதை கடைகளுக்கு படையெடுப்பது என் வழக்கம். அங்கு பல, அற்புதமான, அரிய ஆங்கில புத்தகங்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன.
     
புத்தகம் மட்டுமல்ல, அயல்நாட்டு ஃபேஷன் பத்திரிகைகள், அமெரிக்கSEARS  கேட்லாக் போன்றவைகளும் (அயல் நாட்டு தூதரகங்கள் பழைய பேப்பர் கடையில் போட்டவை!)  இங்கு கிடைக்கும். அதை வாங்கி நம் உள்ளூர் தையல்காரர்கள் புதுவிதமான டிரஸ்களைத் தைப்பார்கள். பர்னிச்சர் தயாரிப்பாளர்கள் பல்வேறு விதமான மேஜை, நாற்காலி என்று தயாரிப்பதற்கு ஐடியா கிடைக்கும்.
    கேட்லாக்  பயங்கரக் கனமாக இருக்கும். (1975-ம் வருஷ SEARS  கேட்லாக் 1491 பக்கங்கள்!). (பழைய  கேட்லாக்குகள் இப்போதும் கிடைக்கின்றன. E-book - 1969- ம் வருஷ SEARS  விளையாட்டு பொம்மைகள் கேட்லாக் விலை 150 டாலர்!

இரட்டையர்கள், ஆனால் விரோதிகள்.
     உலகின் மிகப் பிரபல இரட்டையர்கள் பல வருஷங்களுக்கு முன்பு சையாம்  நாட்டில் ( இன்றைய தாய்லாந்தில்)   1811-ம் ஆண்டு பிறந்த இரட்டையர்கள். 
அவர்கள் தனித்தனியாக, இரண்டு பேராக பிறக்கவில்லை. விலாப்பகுதி சதை அவர்களை ஒட்ட வைத்து இருந்தது. CHANG-ENG ஒட்டிய உடலுடன் வளர்ந்தார்கள்.  1829 -ம் ஆண்டு அவர்கள் அமெரிக்காவிற்குக் குடி பெயர்ந்தார்கள். பல கண்காட்சிகளில் கலந்து கொண்டு நிறைய பணம் சம்பாதித்தார்கள்.
1874’ம் ஆண்டு, ஒரு மணி  நேர இடைவெளியில் இரண்டு பேரும் காலமானார்கள்! 
பி.கு: காலமாவதற்கு சில வருஷங்களுக்கு முன்பு அவர்களுக்குள்
கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், விரோதிகளாக ஆகிவிட்டார்களாம்!

மூடுக்கு ஏற்ற கலர்
     பிரபல எழுத்தாளர் ஆஸ்கார் ஒயில்ட்டிற்கு ஒரு விசித்திர வழக்கம் இருந்தது. அவருக்கு பிடித்த எழுத்தாளரான DORIAN GRAY  எழுதிய புத்தகத்தை ஒன்பது காபிகள் வாங்கி, ஒவ்வொரு புத்தகத்தையயும் ஒவ்வொரு வித கலரில் பைண்ட் செய்து வைத்துக் கொண்டார். 
“எதற்கு ஒரே புத்தகம் ஒன்பது காபிகள். அவற்றை ஒன்பது கலரில் வைத்திருக்கிறீர்களே?என்று கேட்பவர்களுக்கு “ஆமாம்.. என் மூடுக்கு தகுந்த கலர் அட்டை போட்ட காபியை எடுத்துப் படிக்க விரும்புவதே காரணம் என்பார்.

   பிரிட்டீஷ் மியுசியமில் உள்ள புத்தகங்கள் எல்லாம் கலர் அட்டை போட்ட புத்தகங்களாக இருக்கும் என்கிறது ஒரு தகவல். சரித்திரம் சம்பந்தமான புத்தகங்கள்-சிவப்பு, Theological  புத்தகங்கள் – நீலம் கவிதைகள் – மஞ்சள், Natural History  பச்சை என்று வைத்திருக்கிறார்களாம்.

ஆசிரியர் சாவி சொன்னது
     சாவி சொல்வார். “சிறுகதை போட்டியில் எனக்கு நம்பிக்கையில்லை. ஐம்பதாயிரம் லட்சம் என்று பரிசுத் தொகை வைத்தால், சிறப்பான கதை எழுதுவார்கள் என்று கருதுவது தவறு. 


அதுமட்டுமல்ல, இந்த போட்டிகளில்  எந்த ஒரு பிரபல எழுத்தாளruம்

  கலந்து கொள்ள மாட்டார்கள். ஏன் தெரியுமா? அவர்களுக்குப் பரிசு விழாவிட்டால், ”ஹூம்… கதைகளைப் படித்துத் தேர்ந்தெடுத்தவர்கள் சரியான முட்டாள்கள்” என்று சொல்லித் தங்களைத் தாங்களே சமாதானப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் அவர்கள் போட்டியில் கலந்து கொண்டு பரிசு எடுக்கவில்லை என்பது, அந்த பத்திரிகை ஆசிரியருக்கும் நடுவர் குழுவுக்கும் தெரிந்து விடும். அதனால் தன் மதிப்பு, கௌரவம், அந்தஸ்து  எல்லாம் அதலபாதாளத்திற்குப் போய்விட்டதாகக் கருதுவார்கள். “எழுதினால் தானே இந்த தொல்லை எல்லாம் . எழுதாமல் இருந்து விடுவதே  சிறந்தது” என்று எண்ணி, போட்டியின் பக்கமே வரமாட்டார்கள்!
              நூற்றுக்கு நூறு  உண்மை!

ஸ்டாலினும் ராதாகிருஷ்ணனும்
     டாக்டர் ராதாகிருஷ்ணன், ரஷ்யாவிற்கு இந்தியாவின் தூதராக 1949-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.

      சர்வாதிகாரி ஸ்டாலின், இவருக்கு முன் தூதராக இருந்வரை ஒரு முறை கூட சந்திக்க அனுமதிக்கவில்லை. ஆனால், ராதாகிருஷ்ணனைப் பற்றி கேள்விப்பட்ட ஸ்டாலின் அவரைச் சந்தித்தார்.
 கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் இருவரும் உரையாடினார்கள்.
 இடையே ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும் போது, நட்புடன் ஸ்டாலின் தலைமுடியை  ராதாகிருஷ்ணன்வருடிவிட்டாராம்.

பிக்காஸோவின் குறும்பு
     பிரபல ஓவியர் பிக்காஸோ சரியான குறும்புக்காரர்.
      ஒரு சமயம் அக்வருடைய நண்பர் அவரைப் பார்க்க வந்தார். அப்போது ஒரு ஓவியத்தை வரைந்து முடித்திருந்தார். அது ஒரு பெண்மணியின் ஓவியம்.

     நண்பர் கேட்டார். “யார் இந்த பெண்மணி?அதற்கு பிக்காஸோ,இவரைத் தெரியவில்லையா? என்று கேட்டுவிட்டு, அந்தப் பெண்மணி ஊரின் முக்கிய வி.ஐ.பி. களில் ஒருவர் என்று சொல்லி அவர் பெயரையும் சொன்னார்.அந்த லேடியா? படம் கொஞ்சம் கூட அவர் மாதிரி இல்லையே! என்று நண்பர் சொன்னார்.
      அதற்கு பிக்காஸோ, ஒன்றும் கவலைப்படாதே, எப்போது அவரை நான் வரைந்து விட்டேனோ அதற்குப் பிறகு அவர், இந்த ஓவியம் மாதிரி தானாக தன்னை மாற்றிக் கொள்வார்!என்றேன்!
   இன்னொரு பிக்காஸோ துணுக்கு.
     ஒரு பிரபல பெண்மணி, பிக்காஸோவிற்கு ஒரு கடிதம் எழுதினார். என்னைநீங்கள் ஓவியம் வரைய வேண்டும் என்பது என் ஆசை. தங்களை சந்திக்க தேதி கொடுங்கள்என்று எழுதினார். அதற்கு பிக்காஸோ எழுதிய பதில்,, “மேடம் உங்களைப் படம் வரைந்து தருகிறேன். நீங்கள் உங்கள் தலைமுடியின் ஒரு சின்ன சுருளையும், உங்கள் கழுத்தில் உள்ள நெக்லசையும் அனுப்பினால் போதும்!
     
ஆயிரம் வார்த்தைக் கட்டுரை!
விஞ்ஞானக் கதைகளை எழுதிப் புகழ் பெற்றவர் ஆர்தர் கிளார்க். “2001-ல் A Space Odiyssey ’ எழுதி பெரும் புகழ் பெற்றவர்.
     அவருக்கு ஒ0ரு நாள், ஒரு பத்திரிகை ஆசிரியரிடமிருந்து கடிதம் வந்தது. “செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் உள்ளனவா?” – ஆயிரம் வார்த்தைகளில் ஒரு கட்டுரையை அனுப்பவும்என்று கிட்டத்தட்ட உத்தரவு போல் எழுதியிருந்தார்.
     ஆர்தர் கிளார்க் சுருக்கமாகத் தந்தி அனுப்பினார். தந்தியின் வாசகம் இதுதான்; 
"யாருக்கும் தெரியாது. இதை 500 தடவை எழுதி விடுங்கள்” – ஆர்தர் கிளார்க்!

ஒரு கதையும் ஒரு குறிப்பும்
     தொண்ணூறுகளில் மர்ம நாவல்களைச் சகட்டு மேனிக்கு எழுதிப் புகழ் பெற்றவர் ERLE STANLEY GARDNER.  அவர் PERRY MASON கதைகளை எழுதி பிரபலமடைவதற்கு முன்பு, ஒரு கதையை எழுதி, ஒரு  பத்திரிகைக்கு அனுப்பினார். கதையுடன் ஒரு சிறிய குறிப்பையும் எழுதி வைத்தார்.   
      அன்புடையீர், ‘விடிகாலை’ 3 மணி ‘ என்ற தலைப்பில், அபாரமான கதையை இத்துடன் அனுப்புகிறேன். கதையைப் பற்றி ஏதாவது கருத்துத் தெரிவிக்க வேண்டுமானால் எனக்கு அனுப்பும். ‘செக்கின் பின்னால் எழுதி அனுப்பவும்!. இப்படிக்கு, ERLE STANLEY GARDENER !

     அற்புதமான வரிகள்!
     நாற்பத்தி மூன்றாவது வயதில் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கென்னடி, 1960-ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி அதிபராக பதவி ஏற்றதும் நிகழ்த்திய உரையின் கடைசி சில வரிகள் அற்புதமானவை.
   

  “….என் அருமை சக அமெரிக்கர்களே உங்கள் நாடு உங்களுக்கு என்ன செய்யக்கூடும் என்று கேட்காதீர்கள்; நம் நாட்டிற்கு நீங்கள் என்ன செய்ய முடியும் என்று கேளுங்கள்.
     ”என் சக உலகப்  பிரஜைகளே, அமெரிக்கா உங்களுக்கு என்ன செய்யும் என்று கேட்காதீங்க. ஆனால், நாம் இணைந்து, மனிதக குலத்தின் சுதந்திரத்திற்கு என்ன செய்ய முடியும் என்று கேட்போம்.
     ”நீங்கள் அமெரிக்க குடிமக்களாக இருந்தாலும் சரி, அல்லது உலகக் குடிமக்களாக இருந்தாலும் சரி, உங்கள் பணிவையும், தியாக உணர்வையும் எந்த சிறிய அளவு கேட்கிறேனோ, அதே அளவு எங்களிடம் கேளுங்கள். தூய மனசாட்சி நாம் நிச்சயம் பெறக்கூடிய வெகுமதி நம் பணி.  இறுதித் தீர்ப்பு சரித்திரத்தின் கையில் உள்ளது.  ….. நாம் நேசிக்கும் இந்த தேசத்தினை முன்னோக்கி நடத்தித் செல்வோம்-. அவனின் (இறைவன்) ஆசிகளையும், உதவியையும் கேட்கும் அதே சமயம், இந்த பூமியில் கடவுளின் பணி. உண்மையில் நாம் செயலாற்ற வேண்டிய பணி என்பதை நாம் அறிந்து பணி புரிவோம்!”

 ஒரே ஒரு கூரை போட்ட கட்டடம் 
லண்டனில் கூரைப் போட்ட கட்டடங்களைக் கட்ட அனுமதி கிடையாது. ஆனால் ஒரே ஒரு கட்டடத்தில் மட்டும் அனுமதி தரப்பட்டுள்ளது.. அது GLORE  தியேட்டர் என்ற பழம்பெரும் நாடக அரங்கு.  ஷேக்ஸ்பியர் காலத்துக்  கூரை போட்ட கட்டடம்.    அது தீ விபத்தில் எரிந்துவிட்டது. பிறகு அதைப் புதுப்பித்துக் கட்டும்போது, பழையபடியே  கூரையுடன் கட்ட அனுமதித்தார்கள். அது மிகவும் பாரம்பரியம் மிக்க அரங்கு!!  ஷேக்ஸ்பியர் அங்கு நடகங்கள் போட்டிருக்கிறார் என்ற பெருமை பெற்ற அரங்கம் என்பதால் விதிவிலக்கு அளித்துவிட்டார்கள்!!

தெருப் பெயர் சட்டம்
     லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் ஒரு சட்டம் வைத்திருக்கிறார்கள். உயிருடன் இருப்பவர்களின் பெயரை தெருவிற்கு வைக்கக் கூடாது. 

ஆனால் அமெரிக்க நகைச்சுவை நடிகர் GEORGE BURNS -க்கு தொண்ணூறு வயது நிரம்பிய போது இந்த சட்டத்திற்கு விதி விலக்கு அளித்து  ஒரு தெருவிற்குஅவர் பெயரை வைத்தார்கள். 
அவர் நூறாவது வயதில் காலெடுத்து வைத்த சமயத்தில், (1995) மற்றொரு தெருவிற்கு, GARCIE ALLEN DRIVE   என்று அவர் மனைவியின் பெயரை  வைத்துk  கௌரவப்படுத்தினார்கள். 

திருவா? திருமதியா?
1967-ம் ஆண்டு தி,மு.க. ஆட்சி அமைந்த போது திரு. மதியழகன் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அகில இந்திய ரேடியோவின் ஆங்கில செய்தி அறிக்கையில் அவர் பெயரை எப்படி உச்சரித்தார்கள் தெரியுமா? ‘திருமதி அழகன்என்று!

அகதாவின் சாதனை
மர்ம நாவல் மேதை அகதா கிருஸ்டி 95 புத்தகங்கள் எழுதியுள்ளார். அவை 105 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அவரது புத்தகங்கள் இரண்டு பில்லியன் காபிகள் விற்றுள்ளன (2 பில்லியன் =2,000,000,000!)

நோபல் ஐஸ்கிரீம்
    ஸ்வீடன் நாட்டில்  ஸ்டாக்ஹோம் நகரில் உள்ள நோபல் மியூசியத்தை  சமீபத்தில்சுற்றிப் பார்த்த ஒருவர் என்னிடம் கூறிய துணுக்கு.
     நோபல் மியூசியத்தை ஒட்டி CAFÉ BISTRO என்ற கான்டீன் உள்ளது. அங்குள்ள ஐஸ்க்ரீமின் பெயர்: நோபல் ஐஸ்கிரீம். நோபல் பரிசு பெற்றவர்கள்,  பரரிசளிப்பு விழா முடிந்ததும், அங்கு வந்து உட்கார்ந்து ஐஸ்கிரீமை ரசிப்பார்கள். அதன்  பிறகு, அவர்கள் செய்ய வேண்டிய வேலை ஒன்று உள்ளது.  அவர்கள் உட்கார்ந்த  நாற்காலியை எடுத்துக் கவிழ்த்துப் போட்டு (அதன் பின்புறத்தில்) ’மார்க்கர்’ பேனாவால் கையெழுத்துப் போடும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்கள். அவர்களும் மகிழ்ச்சியுடன் கையெழுத்திடுவார்கள்.
ஆகவே, சுற்றுலா செல்பவர்கள் அந்த கான்டீனுக்குப் போய் நாற்காலிகளை ஒவ்வொன்றாகத் திருப்பிப் போட்டு, யார் கையெழுத்து போட்டிருக்கிறார்கள் என்று பார்ப்பார்கள்.
எனக்குத் தகவல் சொன்னவர், கவிழ்த்துப் பார்த்த நாற்காலிகளில் இருந்த கையெழுத்துகள்: மாலாலா, ஒபாமா.

11 comments:

  1. சயாம் இரட்டையர்கள் தவிர்த்து மற்றவை புதிய துணுக்குகள். சேகரம் வழக்கம் போல் அருமை! எல்லாமே ரசித்தேன்.

    ReplyDelete
  2. துணுக்குத் தோரணம் மிகவும் ரசிக்கும்படி இருந்தது.

    அசோகமித்திரன் அவர்கள் (அவர்தானே?) கல்கியின் சிறுகதைப் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றபோது சிலர் விமர்சனம் செய்திருந்தார்கள். எஸ்டாபிளிஷ் ஆகிவிட்டது என்றால், அவர்களுக்குப் பரிசு கொடுத்தாலும் விமர்சனம் எழுவதைத் தவிர்க்க முடியாது. அவரின் வேறொரு படைப்பைக் கம்பேர் செய்து, அதுபோல் இது இல்லை, இரண்டாவது பரிசு பெற்ற கதை இன்னும் நன்றாக இருந்தது என்றெல்லாம் விமர்சனம் வரும்.

    அதுனால, நகைச்சுவைக் கதைகளுக்கு போட்டி வைக்கும்போது, நானும் எழுதலாம்னு இருக்கேன். நீங்க அதுக்கு கதை எழுதி என்னை இரண்டாவது பரிசுதான் வாங்கும்படிச் செய்துடாதீங்க (ஓவியப் போட்டிக்கும் அதேதான்.. இப்போ நீங்க மும்மரமா ஓவியங்கள் வரைவதைப் பார்த்துச் சொல்கிறேன்)

    ReplyDelete
    Replies
    1. சித்தப்பா (அசோகமித்திரன்) மட்டும் விதிவிலக்கா என்ன? எனக்கும் தான் பல போட்டிகளில் முதல் பரிசு பெற்றதை விட இரண்டாம், மூன்றாம் பரிசு பெற்ற கதைகள், நாவல்கள் நன்றாய் இருப்பதாய்த் தோன்றி இருக்கிறது. உதாரணமாகக் கல்கி வெள்ளி விழா பரிசுப் போட்டியில் உமாசந்திரனின் முள்ளும் மலரும் நாவலை விட கல்லுக்குள் ஈரம் நன்றாக இருந்தது. மூன்றாம் பரிசு பெற்ற பிவிஆரின் மணக்கோலங்களும் அருமை! கல்லுக்குள் ஈரத்திற்கு முதல் பரிசு கொடுத்திருக்க வேண்டும் என்பது அப்போதே (அப்போப் பள்ளி மாணவி) தோணும். சித்தப்பாவிடம் கூட இதைப் பற்றி விவாதிப்பேன்.

      Delete
    2. நெ.த அவர்களுக்கு: KINDLE கதைப் போட்டி அறிவித்து இருக்கிறார்கள். பரிசு: 5 லட்சம்.
      -கடுகு

      Delete
  3. சயாமீஸ் இரட்டையர்கள் - அவர்கள் வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும். அது ஒரு பெரிய தண்டனைதான்.

    ReplyDelete
    Replies
    1. நெ.த அவர்களுக்கு: சயாமீஸ் இரட்டையர்கள் வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்? என்று எழுதியுள்ளீர்கள். இல்லை. அவர்கள், ஏராளமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பல வித்தைகளைக் காட்டி, நிறைய பனம் சம்பாதித்து இருக்கிறார்களாம்.

      Delete
    2. கடுகு சார்... நான் அவங்களோட பொருள் வாழ்க்கையைச் சொல்லலை. நீங்களே அவங்க சம்பாதித்தார்கள் என்று குறிப்பிட்டிருக்கீங்க. எல்லாச் செயலுக்கும் கூட ஒருத்தன் வரணும், நிம்மதியாத் தூங்கும்போதும் அடுத்தவனுக்காக தூக்கத்தை விட்டுக்கொடுக்கணும், பெர்சனல் வாழ்க்கை என்று ஒன்று இருக்காது. ஓருடல் ஈருயிர்னும் சொல்லமுடியாது ஈருடல் ஓருயிர்னும் சொல்லமுடியாது.

      1600ம் வருடம். அப்போதுதான் அரியணை ஏறியிருக்கிறான் அரசனாக. அப்பா தனக்குச் சொல்லிக்கொடுத்த, இறக்கும்போதும் வாங்கிக்கொண்ட சத்தியம், "சகோதரர்களிடம் எப்போதும் அன்பு காட்டு, எந்தக் காரணத்தை முன்னிட்டும் அவர்களிடம் சண்டைபோடாதே, தண்டனை கொடுத்துவிடாதே" அவன் மனத்தில் எப்போதும் இருக்கிறது. அவன் சகோதரனோ கொஞ்சம் ஜாலியானவன். ஆனால் அரசன் என்ற ஹோதாவில், தன் சகோதரன், அரச குடும்பம் என்பதால் அவனுடைய சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடு வைக்கிறான். இது பிடிக்காமல் சகோதரன், அரசனுக்கு எதிராக சிறிய சிறிய பிரச்சனைகளை உண்டாக்கிக்கொண்டே இருக்கிறான், அரசனுக்கு எதிர் மனநிலையில் இருப்பவருடன் உறவாடுகிறான். இவனைக் கண்காணிப்பதே அரசனுக்கு பெரிய வேலையாகவும் பிரச்சனையாகவும் இருக்கிறது....

      கடைசியில், 'அடுத்த பிறப்பு என்று ஒன்று இருந்தால் அவன் என் சகோதரனாகத்தான் பிறக்கவேண்டும், ஆனால் என் கண்ணில் படாமல், எனக்குத் தெரியாமல் அவன் எதுவுமே செய்யமுடியாமல் இருக்கவேண்டும்' என்ற கடுமையான பிரார்த்தனையோடு கடைசியில் அரசன் மறைகிறான்.

      அடுத்த ஜென்மத்தில் சயாமீஸ் இரட்டையர்களாக அவர்கள் பிறக்கிறார்கள்.

      கதை ஐடியா மட்டும்தான் தெரியும். உங்களைப்போல் எழுதும் திறமை இல்லையே கடுகு சார்....

      Delete
    3. நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.. கடைசி வரிதான் சரியில்லை. அதை நீக்குவது எப்படி என்று தெரியவில்லை.

      Delete
  4. ஸ்டாலின், டாக்டர் இராதாகிருஷ்ணன் பற்றிய சம்பவம் - எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் அவர்களுக்குள்ளும் குழந்தை மனம் இருக்கும் என்பதை உணர்த்தியது.

    டாக்டர் இராதாகிருஷ்ணனை சினிமா சம்பந்தப்பட்டவர்கள் சென்று பார்த்தபோது (சந்திரபாபுவும் அதில் அடக்கம்), சந்திரபாபு செய்த நகைச்சுவையை மிகவும் ரசித்தாராம். அதைப் பார்த்து சந்திரபாபு ஜனாதிபடி மடி மீது அமர்ந்து தலையைத் தடவி, நீங்கள் பெரிய ரசிகர் என்று சொன்னாராம் (மற்றவர்கள் அதனைப் பார்த்து அதிர்ச்சியுற்றபோதும் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் அதனை சாதாரணமாக எடுத்துக்கொண்டார் என்று படித்திருக்கிறேன்)

    ReplyDelete
  5. 'திருமதி அழகன்' - நானும் (தமிழ்த்) தொலைக்காட்சியில் சில தேசங்கள், தலைவர்கள் பெயரை உச்சரிக்கும்போது, இதுகூடத் தெரியாமல் செய்தி வாசிக்க வந்துவிடுகிறார்களே என்று நினைத்திருக்கிறேன். அப்போது சரோஜ் நாராயணஸ்வாமி குரல் மனதில் வராமல் இருக்காது (ரேடியோ காலத்தில் நான் அவர் வாசிக்கும் செய்திகளைக் கேட்டிருக்கிறேன்)

    ReplyDelete
  6. நெ.த: 'திருமதி அழகன்' பின்னூட்டம்: திருமதி சரோஜ் நாராயணஸ்வாமி அவர்களுடன் எனக்கு அறிமுகம் உண்டு. அவருக்கு கலைமாமணி விருது தரப்பட்டிருக்கிறது.
    -கடுகு

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!