December 07, 2017

அக்கா, எப்படி இருக்கு அபார்ட்மென்ட் - பாகம் -3

மறுநாள் காலை எழுந்ததும், கமலா சின்ன வேலைக் கொடுத்தாள். 
‘பழைய வீட்டுத் தோட்டத்தில் நாலு பிளாஸ்டிக் பக்கெட்டுகளை விட்டுவிட்டு வந்துவிட்டோம்.. போய் எடுத்துக் கொண்டு வந்து விடுங்கள். கல்லு மாதிரி இருக்கிற பக்கெட்.. என் பட்டுப் புடவையைப் போட்டு வாங்கின பக்கெட்” என்றாள்.
     “கமலா.. நீ பட்டுப்புடவை போட்டு வாங்கின பக்கெட்டாக இருந்தாலும் சரி, இல்லை, வைரத் தோட்டைப் போட்டு வாங்கின பக்கெட்டாக இருந்தாலும் சரி, அது மொத்தத்தில் பிளாஸ்டிக் பக்கெட்தான்” என்றேன்.
     ”நீங்க சொல்றது நூற்றுக்கு நூறு உண்மை” என்று சொல்லியபடியே காலில் செருப்பை மாட்டிக் கொண்டாள். 
“என்ன கமலா… செருப்பு போட்டுண்டு கிளம்புறே… மார்னிங் வாக்கிங்கா? என்று கேட்டேன்.
     “வாக்கிங்தான். பழைய வீட்டு வரைக்கும் போய் பக்கெட்டை எடுத்துக் கொண்டு வரேன்.. உங்ககிட்ட சொல்லி, எதுக்கு ஆயிரம் பேச்சு வாங்கணும்” என்றாள். கமலா ‘பாவ்லா’ செய்பவள் அல்ல. போனாலும் போய்விடுவாள் என்று எனக்குத் தெரியும். எனக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் செய்வாள். உம்… நான் ஒரு வடிகட்டி. கமலா இதுவரை சொல்லிக் கொடுத்த ‘பாடங்களை’ நான் கற்றுத் தேர்ந்திருந்தால், இத்தனை வருஷத்தில் 30, 40 டிகிரி வாங்கியிருப்பேன்..!)
     ”கமலா.. நான் ஸ்கூட்டரில் போய் எடுத்து வந்து விடுகிறேன்… காந்திஜி நடை பயணம் போகிற மாதிரி கிளம்பிட்டே!..” என்று சொல்லியபடி ஆணியில் மாட்டியிருந்த ஸ்கூட்டர் சாவியை எடுத்துக் கொண்டு, மளமளவென்று படிக்கெட்டில் இறங்கினேன்
     முன்தினம்  ‘ஸ்கூட்டர்’ வைத்த ஈசானிய மூலையைத் தேடிப் போனேன். அங்கு போவதற்கு சில அடிகளுக்கு முன்னமேயே பெரிய ஷாக் ஏற்பட்டது. 


ஸ்கூட்டர் வைத்த இடத்தை பார்த்த போது, கிட்டத்தட்ட இரண்டு குப்பை லாரி அளவுக்குக் குப்பை மூட்டைகள் பல்வேறு இடங்களில் போடப்பட்டிருந்தன. எல்லாம் என் ஸ்கூட்டர் மீதும், அதைச் சுற்றியும். ஸ்கூட்டர் பாவம், அந்த மூட்டைகளின் கனத்தைத் தாங்க   முடியாமல் பரிதாபமாகக் காட்சி அளித்தது. அதற்கு உயிர் இருந்தால், அந்த மூட்டைகளின்  பயங்கர துர்நாற்றத்தில் உயிர் விட்டிருக்கும்.
     நான் மூட்டைக்  குவியல்களுக்கு இடையே, போர் வீரன் போல போய், வண்டியை எடுத்து வர வேண்டும். இது பெரிய காரியமல்ல. கிட்டதட்ட ஏழெட்டு நிமிஷம் மூச்சை அடக்கிக் கொண்டிருக்க வேண்டும்.
     உம், வீடு வாங்கும்போது வீட்டின் அறைகள், கூடம், பால்கனி இவைகளை மட்டும் பார்க்கக் கூடாது. சுற்றுப்புறமும் எப்படி இருக்கிறது என்றும் பார்த்திருக்க வேண்டும். இந்த தத்துவத்தை நானே எனக்கு போதித்துக் கொண்டேன். மாடியில் போய் கமலாவிடம், ஏதாவது மூச்சை விட்டேன் என்றால் , மினி சுனாமி உருவாகும்  என்ற பயமே காரணம்.
     திடீரென்று கீழ் ஃப்ளாட் கதவைத் திறந்து வெளியே வந்த ஒரு பெரியவர்.” சார் ஸ்கூட்டர் உங்களுடையதா?..அடடா,, தெரிஞ்சிருந்தால் ராத்திரியே சொல்லியிருப்பேன். … நீங்க புதுசா வந்திருக்கீங்களா. இன்னிக்குச் செவ்வாய்க்கிழமையாச்சே. ஸ்கூட்டரை அங்கே வைக்கக் கூடாதுன்னு மட்டும் யாரும் உங்ககிட்ட சொல்லலியா?”
     “ஸ்கூட்டரை வெக்கறதுக்கு நாள் கிழமை வார சூலை   இதெல்லாம் பார்க்கணுமா?” என்று மனதிற்குள் நினைத்தேன்; கேட்கவில்லை. அந்த கிழவனுக்குள் ஒரு புலி இருக்காது என்பது என்ன நிச்சயம்?
     ஆனால் அவர் தொடர்ந்து “செவ்வாய்க்கிழமை.  குப்பை லாரி வரும். அதனால் எல்லாரும் குப்பையை இங்கே போடணும்னு, ஏற்பாடு…. இடம் காலியாக இருக்கவே, வண்டியை வெச்சுட்டீங்க.. பாவம்” என்றார்.
     அவர் ‘பாவம்’ என்று சொன்னது என்மேல் பரிதாபப்பட்டு பாவம்’ என்று சொன்னாரா அல்லது அங்கு செவ்வாய்க்கிழமைகளில் ஸ்கூட்டரை வைப்பது பாவ காரியம் என்று சொன்னாரா? என்று தெரியவில்லை!
     “மாடியில் இருக்கிற சாவு கிராக்கிகள் குப்பை மூட்டையை கீழே கொண்டு வந்து போடாதுகள்.. தங்கள் வீட்டு பால்கனியிலிருந்து போட்டால், யாராவது பார்த்துவிடப் போகிறார்களே என்று பயந்து, நன்றாக இருட்டின பிறகு, மொட்டை மாடிக்கு எடுத்துக் கொண்டு போய் மூட்டையை தூக்கி விசிறி எறிந்துவிட்டு, ஓடிப்போய்விடுகிற ஜன்மங்கள்.. நானும் இந்த ஃப்ளாட்டை வித்துட்டு வேற இடத்துக்கு போகணும்னு பார்க்கிறேன்… என் ஒய்ஃப் தான் தடுக்கிறாள். அவளுடைய அக்கா பக்கத்து தெருவில் இருக்கிறாள்.. அக்கா பாசம் விடலை…” என்றார். தொடர்ந்து “குப்பை லாரி வந்து குப்பையை எடுத்துக் கொண்டு போயிடும்.  அதற்கு அப்புறம் ஸ்கூட்டரை வந்து எடுத்துக் கொண்டு போங்க” என்றார்.
     “ரொம்ப தாங்க்ஸ், சார் என்று சொல்லிவிட்டு வந்தேன்.
                      **                                   ***
     ஃப்ளாட்டுக்குள் நுழைந்ததும், “எங்கே பக்கெட்” என்றாள்.
     “தனக்கே தகராறாம், தம்பிக்குப் பலகாரமாம்” என்று சொல்வார்களே. அது மாதிரி,..” 
   கமலா சட்டென்று  குறுக்கிட்டு, “ போதும், பழமொழியும் காய்மொழியும்.. போன காரியம் என்ன ஆச்சு? யார் வாயையாவது பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, கைவீசிக் கொண்டு வந்து விட்டீங்களா?” என்றாள் கமலா.
     “ஸ்கூட்டர் கிடைக்கலை… பயப்படாதே.. ஸ்கூட்டர் வெச்ச ஈசானிய மூலையிலே, போய்ப் பார், ஒரு சின்ன பரங்கிமலையே உருவாகியிருக்கு. அதுக்குள் நம்ம ஸ்கூட்டர் புதைஞ்சு இருக்கு?
     “கொஞ்சம் புரியறமாதிரி சொல்லுங்க நீங்க கதை எழுதற மாதிரி எல்லாத்திலேயும் குழப்பிச் சொல்ல வேணாம். என்னது பரங்கிமலை?…. என்னது புதைஞ்சது? அடடா… ஆயிரம் கேள்வி கேட்டால்தான், ஒன்றிரண்டு கேள்விக்காவது அரைகுறை பதில் வரும்..”
     “கமலா அலுத்துக் கொள்ளாதே… விஷயத்தை சுருக்கமாகச் சொல்கிறேன்… நேத்து சாயங்காலம் காம்பவுண்ட் ஓரமாக, கிடைச்ச இடத்துலே நம்ம ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு வந்தோமில்லையா? இப்போ போய் பார்த்தால், ஸ்கூட்டர் தெரியாதபடி ஏகப்பட்ட குப்பை மூட்டைகளை அதன் மேல் மலை போல் போட்டிருக்கிறார்கள் எல்லாரும்..”
     “ஏன் போட்டிருக்கிறார்கள்?”
    “இன்னைக்குச் செவ்வாய்க்கிழமையாம். அதனால் போட்டிருக்கிறார்கள். எல்லா வீட்டுக்காரர்களும். செவ்வாய்க்கிழமை குப்பை லாரி வருமாம் அந்த மூலையிலே போடலாம்னு சொல்லியிருக்காங்க. எவ்வளவு குப்பை மூட்டை தெரியுமா? கிட்டப் போக முடியல. கூவமே நம்ப அபார்ட்மெண்ட்ல ஒரு ஃப்ளாட் வாங்கிண்டு வந்துட்ட மாதிரி இருக்கு.. ஹூம் இந்த கொசுக்களுக்கு வாசனை பிடிக்கும் சக்தியைக் கடவுள் கொடுத்திருந்தால், நம்ப அபார்ட்மெண்ட் மூலையை விட்டு கண்காணாத காத தூரத்திற்குப் போய்விடும். எப்போது லாரி வந்து, எப்போது அது குப்பையை எடுத்துக் கொண்டு போய், அந்த ஏரியாவில் இருக்கிற நாற்றம் விலகி, நாம் எப்போ போய் ஸ்கூட்டரை எடுக்கிறது என்று தெரியவில்லை… தொச்சு சொன்னான் என்று இந்த ஃப்ளாட்டை வாங்கப் பிடிவாதம் பிடிச்சு சாதிச்சுட்டே… நீ பிடிவாதம்  பிடிச்சே… நான் இப்போ மூக்கைப் பிடிச்சுண்டு இருக்கேன்..”
     தொச்சு பேரைச் சொன்னதும், கமலா முற்றிலும் பக்கெட்டை மறந்துவிட்டாள். என்மேல் பாய வேறு விஷயம் அகப்பட்டுவிட்டதே!
                                                   ***    ****   ****  ***
     பன்னிரண்டு மணிவாக்கில் லாரி வந்து, எல்லா மூட்டைகளையும் வாரி போட்டுக் கொண்டு போயிற்று. துர்நாற்றத்தை எடுத்துப் போக ’பொக்லைன்’ வர வேண்டுமோ என்னவோ, அந்தப் பக்கமே போக முடியவில்லை. கீழ்வீட்டுக்காரர்கள், கதவு , ஜன்னல் எல்லாவற்றையும் இழுத்து மூடி (அரக்கு  சீல் போடாத குறையாக, அழுத்தமாக மூடி இருந்தார்கள். சமையலுக்கு காஸ் சிலிண்டர் வாங்குவது போல், வாரத்திற்கு ஒரு நாள் ஆக்ஸிஜன் சிலிண்டரை வாங்கி உபயோகித்து, சுவாசிக்கிறார்களோ என்னவோ, அல்லது செவ்வாய்க்கிழமைகளில் வேடந்தாங்கல், மாங்காடு முட்டுக்காடு, திருநீர்மலை என்று மலை, காடு போன்ற பகுதிகளுக்குச் சென்று, மூச்சுவிட்டு விட்டு வருகிறார்களோ என்னவோ. தெரியவில்லை.
     எனக்கு அடுத்த பிரச்சனை- நல்ல காலம் மூச்சு விடுவது அல்ல-ஸ்கூட்டரை எங்கு விடுவது என்பது தான். “என்னப்பா தொச்சு…ஸ்கூட்டரை வெந்நீரால் குளிப்பாட்டி, பன்னீரால் கழுவி, அத்தர் பாட்டில்களைக் கவிழ்த்து, கடைசியாக மூக்கில் பஞ்சு உருண்டைகளை சுருட்டி அடைத்துக் கொண்டு, போதவில்லை என்றால் மூக்கின் மீது அழுத்தமான துணி ‘கிளிப்புகளைப் போட்டுக் கொண்டு இருக்க வேண்டுமோ என்னவோ’ என்று அலுத்துக் கொண்டேன்.

(தொடரும்)        

6 comments:

  1. அபார்ட்மென்ட் இல்லைனாலும் அம்பத்தூர் சொந்த வீட்டில் (தனி வீடு) அக்கம்பக்கத்து அபார்ட்மென்ட் குடித்தனக்காரங்க இப்படித் தான் எங்க வீட்டு வாசலில் குப்பைமலைகளையும் கொட்டுவதோடு அவங்க வண்டிகளை நிறுத்தும் இடமாகவும் உபயோகிச்சுட்டு இருக்காங்க. (இப்போவும், எப்போவும்) :( பின்னர் வருகிறேன்

    ReplyDelete
  2. கமலா கணவருக்குத்தான் மனைவி, மச்சினனால பிரச்சனைன்னு பார்த்தா, இன்னொரு ஃப்ளாட்டில் இருப்பவருக்கு மனைவி, மச்சினியாலும் பிரச்சனைனு சொல்றீங்களே. ஆமாம், உண்மைதான் என்று சொல்லலாம்னு பார்த்தா, என் வீட்டுல அதற்கு அப்புறம் ஏற்படும் பிரளயத்தை நினைத்து கண்டுகொள்ளாமல் செல்கிறேன்.


    //என்மேல் பாய வேறு விஷயம் அகப்பட்டுவிட்டதே// - இதை மனதில் வைத்து எந்த விஷயத்தில் பாயப்போகிறார்களோ.

    'நகைச்சுவை ஃப்ளோ நல்லா வந்திருக்கு. வாய்விட்டுச் சிரித்தேன். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. சார் எப்போ நயனதாரா ரசிகரானீங்க? முன்னால சாவித்திரி படம் போட்டீங்க. இப்போ நயனதாரா. என்னோட ஆசையை நிறைவேத்த 'தமன்னா' படமும் போட்டுடுங்களேன். (போய் பக்கெட்டை எடுத்துண்டு வாங்கோன்னா, காலைல உட்கார்ந்து கம்ப்யூட்டர்ல சின்னப் பையன்மாதிரி படம் போடறேன்னு விளையாடவேண்டியது. ஆன வயசுக்கு அடையாளம் தெரியாம சினிமா நடிகைகளின் படத்தை வரையறது. இதைச் சொன்னா, தேவையில்லாம அப்பாவி தொச்சுவை வாயால பிராண்ட வேண்டியது. ம். என் விதி.. என்னத்தைச் சொல்ல' என்று உங்கள் கதையில் வரிகளைச் சேர்க்கவாவது வசதியா இருக்கும்)

    ReplyDelete
  4. Nalla veLai, kuppaiyodu scooteraiyum thookama irundangale!:))
    Enjoying the series!

    ReplyDelete
  5. நெல்லை த்தமிழன் அவர்களுக்கு, உங்களக்கு GENERAL KNOWLEDGE மேல் இவ்வளவு தீவிரப் பற்று இருக்கும் என்று எனக்குத்ட் தெரியாது. யார் யார் எப்போது நயனதாரவிற்கு ரசிகரானாங்க என்பது போன்ற முக்கியத் தகவல்களைத் தெரிந்தும் கொள்ளும் ஆர்வத்தைப் பாராட்டுகிறேன். என் சிறு வயது முதளே அவருடைய விசிறி நான்.

    ReplyDelete
  6. நீண்ட நாட்களுக்குப் பிறகு கமலாவையும் தொச்சுவையும் அவன்(ர்) அம்மாவையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!