August 05, 2017

சிரித்தால் தப்பில்லை!

பெரியவனாகும் வரை...
தன் ஐந்து வயதுப் பையனை தன் அம்மாவின் வீட்டிற்கு - அதாவது பாட்டியின் வீட்டிற்கு, ஒரு அம்மா அனுப்பி வைத்தார். "இரண்டு நாட்கள் உன் வீட்டில்  இருக்கட்டும். நான் வந்து அழைத்துப் போகிறேன்' என்று சொன்னார்.
இரண்டு நாள், மூன்று நாள் என்று நாட்கள் போய்க் கொண்டிருந்தது. பேரனின் விஷமத்தை, பாட்டியால் சமாளிக்க முடியவில்லை. ஒரு வாரம் கழித்து, பாட்டி தன் பெண்ணுக்கு போன் செய்தார்.
"மேரி, உன் பையன் ஹென்றியை எப்போது உன் வீட்டுக்கு அனுப்பட்டும்?' என்று கேட்டார்.
"ஹென்றியையா அம்மா... அவன் வளர்ந்து காலேஜ் படிப்பை முடித்த அடுத்த  நாளே  அனுப்பி விடு' என்றாள்!

என் அதிர்ஷ்டம்...
ஆபீஸில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த பெண் மிகவும் அழகாக இருந்தார். அவளிடம் ஒரு பெண் அதிகாரி பேசிக் கொண்டிருந்தார்.
"ஆமாம்... இவ்வளவு அழகாக மூக்கும் முழியுமாக இருக்கிறாயே... ஏன் இன்னும் உனக்குக் கலியாணம் ஆகவில்லை?' என்று கேட்டார்.
அதற்கு அந்தப் பெண், "Sheer Luck" என்றார்.


பார்த்துப் பண்ணு...
ஆபரேஷன் அறையில், அறுவைச் சிகிச்சைக்காக படுத்திருந்த முதியவர் மருத்துவரிடம், "நீங்கள் ஆபரேஷன் ஆரம்பிப்பதற்கு முன்பு வெளியில் இருக்கும் என் மாப்பிள்ளையைக் கூப்பிடுங்கள். அவரோடு  நான் கொஞ்சம் பேச வேண்டும்' என்றார்.
அதற்கு  டாக்டர், "சார்... உங்கள் மாப்பிள்ளைதான்  உங்களுக்கு ஆப ரேஷன் செய்யப் போகிறார். முதலில் நாங்கள் உங்களுக்கு மயக்க ஊசி போடப் போகிறோம்' என்றார்   மருத்துவர்.
அந்த சமயம் அவருடைய மருமகன் உள்ளே வந்தார்.
பெரியவர் மாப்பிள்ளையிடம் சொன்னார், "பாலாஜி... ஒண்ணும் கவலைப் படாதே... தைரியமாக எனக்கு ஆபரேஷன் பண்ணு. எனக்கு ஏதாவது ஆகிவிட்டால், உன் மாமியார் உன் வீட்டிற்கு வந்து விடுவார் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு ஆபரேஷன் பண்ணு' என்றார்.
பந்தயம்
ஒரு பெரிய கம்பெனியின் முதலாளி, தன் வீட்டில் டிவியில் கிரிக்கெட் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய செகரட்டரி ஸ்டெல் லாவும்  இருந்தார்.
"இந்த டில்லி டீம் படு தண்டம். ஆட்டமா ஆடுறாங்க. நிச்சயமாக மண்ணைக் கவ்வப் போறாங்க. பம்பாய்தான் ஜெயிக்கும்' என்றார்.
"இல்லை சார்... டில்லியை பம்பாய் ஜெயிக்கவே முடியாது. டில்லி பெளலர்கள் சூரர்கள், பம்பாயை மளமளவென்று பொட்டலம் கட்டி விடுவார்கள்' என்றாள் ஸ்டெல்லா.
"சரி, பந்தயம் கட்டறேன்... டில்லி தோற்கும். பம்பாய் ஜெயிக்கும். என்ன பந்தயம்?'
"அஞ்சாயிரம், சார்...'
"ஓக்கே...'  என்றார் அவர்.
ஸ்டெல்லா சொன்னபடியே டில்லி வெற்றி பெற்று விட்டது. பந்தயத்தில் தோற்றுவிட்ட முதலாளி, பர்ஸைத் திறந்து, ஐந்து ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எடுத்து அவளிடம் கொடுத்தார்.
"சார்... இந்த ரூபாய் நோட்டுகளை என்ன செய்யப் போகிறேன் தெரியுமா? "எங்க முதலாளியை விட நான் கெட்டிக்காரி. அவரைப் பந்தயத்தில் தோற்கடித்து நான் ஜெயித்த பணம்' என்று எழுதி, இந்த நோட்டுகளை அத்துடன் வைத்து சட்டம் போட்டு மாட்டப் போகிறேன்' என்றாள்.
"அப்படியா?.. செய்... செய்... எனக்கு ஆட்சேபணை இல்லை... அந்தப் பணத்தை என்கிட்ட கொடு. என் கையெழுத்துப் போட்ட பத்தாயிரம் ரூபாய் செக்கைத்  தருகிறேன். அதைப் படம் போட்டு மாட்டி  வை' என்றார்.
எனக்கும்தான்...
ஒரு திரைப்பட நடிகையைஒரு பத்திரிகை நிருபர் பேட்டி கண்டார். நடி கையின் வயது  என்ன என்று கேட்க விரும்பினார். அது இங்கிதமாக இருக்காது என்பதால், சாமர்த்தியமாக, "எனக்குத் திடீரென்று உங்கள் வயது மறந்து போய் விட்டது' என்றார்.
நடிகை  கில்லாடி. "அடப் பாவமே.... எனக்கும்தான்  மறந்து போய் விட்டது' என்றார்.
அறை வேண்டுமென்றால்...
ஒரு கணவனும் மனைவியும் காரில் பெங்களூர் சென்று கொண்டி ருந்தார்கள். இரவு நேரம். சின்ன டவுன் வழியாகப் போய்க் கொண்டிருந்தபோது பலத்த காற்று, மழை வந்துவிட்டது. அவ்வளவு கனத்த மழையில் காரை ஓட்டுவது சரியில்லை. இன்றிரவு இங்கே ஏதாவது ஹோட்டலில் தங்கி விடலாம் என்று தீர்மானித்தார்கள். அவர்கள் அதிர்ஷ்டம் அவர்கள் சென்ற பாதையிலேயே ஒரு ஹோட்டல் வந்தது.
காரை   நிறுத்தி விட்டு, உள்ளே போனார்கள்.
"இரவு  தங்குவதற்கு ரூம் காலியாக இருக்கிறதா?' என்று கேட்டார்கள்.
ஹோட்டல் பணியாளர், "இருக்கிறது. இரண்டாம் மாடியில் ஒரு ரூம் இருக்கிறது. நீங்கள் அதில் தங்கலாம்' என்று சொல்லியபடியே ரூம் சாவியைத் தந்தார்.
அந்தச் சமயம் ஒரு பெரியவர் - ஹோட்டல் சொந்தக்காரர் - வந்தார். அந்தப் பணியாளரிடம் கேட்டார், "ரூம் கொடுக்கறதுக்கு முன்னே, அவங்க உண்மையிலேயே கணவன் - மனைவியா என்று கேட்டியா?.... ஏதாவது அத்தாட்சி இருக்கிறதா?' என்றார்.
பணியாளர்  பயந்தபடி, "இல்லைங்க... கேட்கவில்லை' என்றார்.
பெரியவர்அந்தத் தம்பதிகளிடம், "நீங்கள் கணவன் மனைவி என்பது சரி... எப்போது  உங்களுக்குக் கலியாணம் ஆயிற்று?' என்று கேட்டார்.
கணவன்,  "செப்டம்பர் 1984' என்று சொன்னார்.
உடனே  மனைவி, "என்ன சொல்றீங்க... அக்டோபர் 1985  என்று சரியாகச் சொல்லுங்க... சரியான அசமஞ்சம்... அசமஞ்சம்...' என்று சிடுசிடுப்பாகச் சொன்னார்.
அதைக் கேட்ட பெரியவர், "தம்பி, இவங்க கலியாணம் ஆனவங்கதான். சந்தேகமில்லை...  ரூம்  கொடு' என்றார்.
பணத்தைப் பார்க்க மாட்டேன்...
நகரத்திலேயே  பிரபல டாக்டரிடம் ஒரு ஆசாமி வந்தான்.
"டாக்டர் ஐயா... என்னை முழுசா டெஸ்ட் பண்ணுங்க. என் உடல் ஆரோக்கியத்தைப்  பற்றி  நான் தெரிஞ்சுக்கணும்' என்றார்.
டாக்டர், மூன்று நாட்கள் அந்த ஆசாமியை பல்வேறு சோதனைகள்-எக்ஸ்ரே, .சி.ஜி., ரத்த சோதனை என்று செய்தார். விரிவான மருத்துவ அறிக்கையையும் தயார் பண்ணினார்அத்துடன்  தன் "பில்'லையும் கொடுத்தார்.
அதைப் பார்த்த அந்த ஆசாமி, "டாக்டர்... இது என்ன இவ்வளவு பெரிய அமௌண்ட்டைப்  போட்டிருக்கீங்க... என்னால் கொடுக்க முடியாத தொகையாக இருக்கிறதே...'  என்றார்.
"அப்படியா, பரவாயில்லை. இதில் பாதித் தொகையைக் கொடுத்தால் போதும்என்றார் டாக்டர்.
"பாதியாஅதுகூட என் சக்தியை மிஞ்சிய தொகை...'
"சரி... ஒண்ணு செய்யுங்க... எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு கொடுங்க போதும்...'
"டாக்டர்...  ஒரு  பைசா கூட கொடுக்க முடியாது. நான் பரம ஏழைங்க...'
"ஏழையா? ஏழையாக இருக்கும்போது எதற்கு என்னிடம் வந்தீங்க? ஊர்லேயே  நான் பெரிய டாக்டர்னு தெரியாதா, உங்களுக்கு?'
"தெரியும்... அதனாலதான் வந்தேன். நம்ப உடம்பைப் பாத்துக்கணும்னா பணம், செலவு எதுவும் எனக்கு லட்சியமில்லை...' என்றார்  கூலாக!


6 comments:

  1. ஹாஹாஹாஹா! எல்லாமும் அருமை என்றாலும் அந்தப் பெண் "sheer luck" என்றாளே அது இன்னும் நல்லா இருந்தது. அதே போல் ஹென்றியை வளர்க்கச் சொல்லும் அம்மாவும்! ஒவ்வொன்றும் முத்துக்கள். உண்மையிலேயே காலையில் நல்ல சிரிப்பு! தேடித் தேடிக் கண்டெடுக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. அனைத்துமே ரசித்தேன். குறிப்பாக ஹோட்டல் அறையில் தங்கச் செல்லும் கணவன் மனைவி! பெரும்பாலான ஆண்கள் தங்கள் திருமண நாளை மறப்பது தானே... என்னையும் சேர்த்து!

    ReplyDelete
  3. அனைத்து ஜோக்குகளும் நன்றாக இருந்தன. ஆனாலும் ஜோக்கை, அதற்குப் போடும் படம் எப்படி அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. சிலசமயம் சாதாரண ஜோக்கை, நல்ல படம் எங்கேயோ கொண்டுசென்றுவிடும்.

    டாக்டர் ஆபரேஷன் ஜோக்கும் கணவன் மனைவி ஜோக்கும் இன்னும் நன்றாக இருந்தது. எந்த டாக்டருக்குத்தான், இரண்டு தலைவலிகளைச் சமாளிக்க முடியும்? ஒன்று பத்தாதா? கணவன் என்றைக்கு மனைவியின் பிறந்த நாளை நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறான்? திருமண நாளை பெரும்பாலும் மறக்க மாட்டான். யாருக்குத்தான் சுதந்திரம் இழந்த தினம் மறக்கும்? (எனக்கு என் நண்பனின் பிறந்த தினம் மறந்ததே கிடையாது. அதே மாதம் வரும் மனைவியின் பிறந்த தினம் எப்போவும் சந்தேகம்தான்)

    'நோட்டுக்களைச் சட்டம் போட்டு மாட்டப்போகிறேன் என்ற ஜோக், எனக்கு விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியம் அவர்கள் தமிழக அரசை எதிர்த்து கோர்ட்டில் ஜெயித்துப் பெற்ற 500 ரூ (இரண்டு 500 ரூ?) நோட்டைச் சட்டம்போட்டு தன் சீட்டுக்குப் பின்னால் சுவரில் மாட்டிவைத்துக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்திருந்தது (மானநஷ்ட வழக்கு)

    ReplyDelete
  4. நம்பமாட்டீர்கள்,பல ஜோக்குககள் 100 வருஷத்டதிற்கு முன்பு வெளியான புத்தகத்தில் படித்தது - கடுகு

    ReplyDelete
  5. Etched Graphics - இதன் கஷ்டமோ அல்லது Effortsஓ எனக்குத் தெரியவில்லை கடுகு சார். எனக்கென்னவோ நாய் முகப் படத்தை எடுத்து அதனை இலகுவான ஒரு ஆப்ஷன் மூலம் (Photoshop போன்றவற்றில் இருப்பது) கொசுவலைக்குப் பின்னால் நாய் இருப்பதுபோல் செய்வதாகத்தான் தோன்றுகிறது.

    எப்படி இதனைச் செய்கிறீர்கள்? இதில் விஷயமோ அல்லது வேலையோ இல்லை என்றால் நீங்கள் பதிவிட மாட்டீர்களே.

    தலைப்பில் உள்ள 2 அறிவுரைகளும் (Reach down, Knowledge is) ரசித்தேன். உங்கள் தளத்துக்கான நல்ல தேர்வு.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!