May 13, 2016

ஒரு காக்கா கதை

( இது கதையல்ல, நிஜம்)

கணிதம் சம்பந்தமாக பல புத்தகங்கள் எழுதியுள்ள HOWARD W. EVES என்பவர் IN MATHEMATICAL CIRCLES என்ற தலைப்பில் ஐந்து புத்தகங்கள் எழுதியுள்ளார். இது கணிதத் துணுக்குகள் புத்தகம். கணிதம் சம்பந்தமான சுவையான சம்பவங்கள், வியக்கத்தகு உண்மைகள், மனதைத் தொடும் வரலாற்றுக் குறிப்புகள் என்று! எல்லாம் கால் பக்கம், அரைப் பக்கம்தான். 

மொத்தம் சுமார் 1500 குட்டிக் கட்டுரைகள். அவற்றிலிருந்து ஒரு கட்டுரையைத் தருகிறேன். ஹோவார்ட் எழுதியதை அப்படியே மொழி பெயர்த்துத் தருகிறேன்.                                 *                               *                             
எண்களைப் பற்றி அறிந்திருந்த ஒரு காகத்தின் உண்மையான, மனதைத் தொடும் தகவல் ஒன்று உள்ளது. ஸ்காட்லாந்தில் ஒரு செல்வந்தர் பெரிய மாளிகையில் வசித்து வந்தார். அவருடைய எஸ்டேட்டில் ஒரு டவர் கட்டியிருந்தார். பங்களாவைக் கண்காணிக்க காவலாளிகள் பயன்படுத்து வதற்கான ‘வாட்ச் டவர்’ அது.

அந்த டவரின் உச்சியில் ஒரு காகம் கூடு கட்டிவிட்டது. அத்துடன் விடவில்லை. சதா சர்வ காலமும் காது கிழிய கத்திக் கொண்டிருந்தது. கூட்டில் முட்டை இட்டிருக்கக் கூடும். அந்த டவருக்குள் சென்று மேலே ஏறி அதை விரட்டப் பல தடவை அந்த செல்வந்தர் முயற்சி செய்தும் தோல்வியுற்றிருக்கிறார். எப்படி


அவர் தன் வீட்டிலிருந்து வெளியே வந்து டவரில் நுழைய வருவதை அந்தக் காகம் எப்படிக் கவனித்திருக்குமோ தெரியவில்லை. உடனே கோபுரத்தை விட்டுப் பறந்து போய், மிகவும் உயரமான மரக் கிளையில் உட்கார்ந்துவிடும். கோபுரத்துக்குள் நுழைந்தவர் திரும்ப வீட்டுக்குள் போகும்வரை அங்கே இருக்கும்.

இந்தக் காகம் நமக்குத் தண்ணி காட்டுகிறதே, அதற்கு நாம் தண்ணி காட்டலாம் என்று தீர்மானித்து ஒரு ஐடியா பண்ணினார். தன் பக்கத்து வீட்டுக்காரரை வரச் சொல்லி, காகம் படுத்தும் பாட்டைச் சொன்னார். தன் ஐடியாவையும் சொன்னார்.
மறு நாள் காகம் கத்த ஆரம்பித்ததும் இரண்டு பேரும் சேர்ந்து டவருக்குள் சென்றனர். காகமும் பறந்து போய் தூரத்தில் உள்ள உயரக் கிளையில் உட்கார்ந்துவிட்டது. சில நிமிடங்கள் கழித்து ஒருவர் மட்டும் டவரை விட்டு வெளியே வந்து வீட்டுக்குள் போனார். காகம் ஏமாந்து மறுபடியும் டவருக்கு வந்துவிடும், அப்போது உள்ளே இருப்பவர் அந்த காகத்தைச் சுட வேண்டும் என்பது திட்டம். ஆனால் பொல்லாத காகம் வரவே இல்லை. டவருக்குள் இருந்த இரண்டாவது நபர் வெளியே வந்து வீட்டிற்குள் சென்றார். உடனே காகம் பறந்து வந்து டவரில் உட்கார்ந்துவிட்டது.
உனக்காச்சு, எனக்காச்சு’ என்று அந்த செல்வந்தர் கங்கணம் கட்டிக் கொண்டு, மறு நாள் மூன்றாவது நபரை வரவழைத்தார். மூன்று பேராக டவருக்குள் நுழைந்தார்கள். காகமும் வழக்கமாகச் செய்வது போல் பறந்து போய்விட்டது.

சில நிமிடங்களில் ஒருவர் வெளியே வந்து வீட்டிற்குள் போனார். அடுத்த சில நிமிடங்கள் கழித்து இரண்டாவது நபர் வெளியே வந்தார். காக்கா கணக்கில் புலி. மூன்று பேர் உள்ளே போனார்கள். இரண்டு பேர் வெளியே வந்துவிட்டார்கள். அதனால் இன்னும் ஒருவர் உள்ளே இருக்கிறார் என்று கணக்குப் பண்ணி, டவர் பக்கமே வரவில்லை. மூன்றாவது நபரும் பொறுமை இழந்து வெளியே வந்ததும், சர்ரென்று டவருக்குப் பறந்து வந்தது காகம்.
மறு நாள் நான்கு பேரோடு இந்தப் போட்டி நடந்தது. அன்றைய தினமும் கெட்டிக்கார காகம்தான் வென்றது.
கடைசியாக ஐந்து பேர் டவருக்குள் போனார்கள். காகம் வழக்கம் போல் தூரத்தில் போய் உட்கார்ந்தது. பிறகு ஒவ்வொருவராக நான்கு பேர் வெளியே வந்தார்கள். இந்த முறை காகம் கணக்கைத் தப்பாகப் போட்டுவிட்டது. நான்கு பேர் வெளியே வந்ததும் அது டவருக்குப் பறந்து வந்தது.

இந்தக் கதையின் முடிவு எந்தக் குறிப்பிலும் கிடைக்கவில்லை. ஒருக்கால், ஐந்தாவது ஆசாமிக்கு காக்கையின் மேல் பரிவும் அபிமானமும் ஏற்பட்டிருக்கலாம். பாவம், இருந்துவிட்டுப் போகட்டும் என்று காக்கையை விட்டு விட்டார்களோ என்னவோ !

முக்கிய குறிப்பு: இந்தப் பதிவைத் தட்டச்சு செய்து உதவியது: சகோதரி திருமதி எஸ். ஷோபனா.  அவருக்கு என் நன்றி

5 comments:

  1. Marquee - 'Catching up with Joneses...they always refinance' -- I know if a wit is to be explained, the fun is lost. But I am really dumb and unable to enjoy this one. What shall I do?!

    ReplyDelete
  2. Broadly it means, I am told, that they move one step up to keep up with their Joneses.

    ReplyDelete
  3. Thank you. Thefirst part of 'catching up with Joneses' is clear, but what does the reference to 'refinance' mean? You may arress your response to 'Dear Dumb,...'!

    ReplyDelete
  4. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    டவரில் காவல் காக்கும் வேலையை செய்வதற்காக அந்தக் காகம் வந்ததோ என்னவோ!

    காக்கா கதை என்றுமே சுவாரசியம்தான்.

    நன்றி,

    அன்புடன்

    சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete
  5. காகம் கதை நன்று

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!