September 17, 2014

நெகிழ்ந்து போனேன்;

 பல வருஷங்களுக்கு முன்பு அமெரிக்கா வந்தபோது நடந்த நிகழ்ச்சி.
அப்போது மிசூரி மாநிலத்தில் இருந்த  ST LOUIS  என்ற நகருக்குச் சென்று என் மைத்துனியின் பெண்ணுக்குக் கலியாணம் நடத்திக் கொடுக்கும் பொறுப்பை ஏற்று கொண்டிருந்தேன். கலியாணத்திற்கு முதல் நாள் பகல், NEWARK-கிலிருந்து   MEMPHIS போய், அங்கு விமானம் மாறி ST LOUIS போகவேண்டும்.பகல் இரண்டு மணிக்கு NEWARK விமான நிலையம் போனோம்.

சில நிமிடங்கள் கழித்து பயங்கர புயல் காற்று வீசத் தொடங்கியது. அதனால் விமானம் புறப்படத்  தாமதம் ஆகும் என்று அறிவித்தார்கள். “ முக்கால் மணிக்கு மேல் தாமதம் ஆகிவிட்டால் MEMPHIS விமானத்தைப் பிடிக்க முடியாது என்பதால்  பதைபதைப்புடன் காத்திருந்தோம். அரை மணிக்குப் பிறகு விமானம் புறப்பட்டது. MEMPHIS அடைந்ததும்  அவசரம் அவசரமாக இறங்கி வேகமாகப் போனோம்.  “ST LOUIS போகும் விமானத்தில் ஏற எந்த கேட்டிற்குப் போக வேண்டும்” என்று கேட்டோம். 32- மாதிரி ஒரு எண்ணைச் சொன்னார்கள். நாங்கள் இறங்கியது 4-ம் எண் கேட்.   அடப் பாவமே. அவ்வளவு தூரம் பெட்டியைத் தூக்கி கொண்டு பத்து நிமிஷத்தில் எப்படி   போகப் போகிறோம் என்ற திகிலுடன் வேகமாக நடந்தோம். ஒரு நிமிஷம் கூட நடந்திருக்க மாட்டோம்,  என் மனவிக்கும் எனக்கும் மூச்சு வாங்கியது. முதல் தடவை தனியாக அமெரிக்காவில் பயணம் செய்கிறோம். விமானத்தைத் தவறவிட்டால் அடுத்து எப்போது விமானம் என்றும் தெரியாது. ஒருக்கால் மறுநாள் காலையில் தான் விமானம் என்றால் என்ன செய்வது? ராத்திரி எங்கு தங்குவது? சாப்பிடுவது?” என்று கலவரம் தனி டிராக்கில் போய்க் கொண்டிருந்தது. 
அப்போது நாங்கள் வந்த விமானத்தில் வந்த ஒரு அமெரிக்கர் எங்களிடம் வந்து. “ உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணுகிறேன்.. பெட்டியை நான் எடுத்து வருகிறேன். உங்கள் மனைவி நிதானமாக வரட்டும். நாம் சற்று வேகமாகப் போய், அந்த கேட்டில் இருக்கும் பணியாளர்களிடம் “விமானத்தை சில நிமிடங்கள் காத்திருக்க வையுங்கள்” என்று கேட்டுக் கொள்ளலாம்” என்றார்.
 (அவருக்கு 40,45 வயது இருக்கலாம். ஒரு கம்பெனியின் உயர் அதிகாரி மாதிரி இருந்தார்.)
 நாங்கள் இருவரும் கேட்டிற்குப் போனோம். “ ஸாரி, விமானம் நகர்ந்து விட்டது, டேக்-ஆஃபிற்கு ” என்று சொல்லி விட்டார்கள்.
 “ அடடா.. சரி.  ST.LOUISக்கு  அடுத்த சர்வீஸ் எப்போது" என்று விசாரித்தார்.
இரவு பத்து மணிக்கு - கிட்டதட்ட 5 மணி நேரம் கழித்து - இருப்பதாகச் சொன்னார்கள். அது வேறு கேட்டிலிருந்து புறப்படும் விமானம்.
 "சரி. இவர்களுக்கு இரண்டு ஸீட் பதிவு செய்யுங்கள். ஒரு வீல் சேர் எற்பாடு செய்யுங்கள்.” என்றார்.
 பத்து மணி விமான டிக்கட்டை வாங்கி கொண்டு புறப்பட்டோம்.  பெட்டியை அவரே தூக்கி கொண்டு வந்தார்.
அம்மாடி என்று லௌஞ்ச் சோபாவில் உட்கார்ந்தோம்.

 தன் பெயர் DAN FEI என்று அவர் சொன்னார்.
“ சரி.. அடுத்து   செய்ய வேண்டியது  NEWARK மற்றும் ST.LOUIS க்கு  தகவல் தெரிவிக்க வேண்டும். உங்களிடம் செல்போன் இருக்கிறதா?” என்று கேட்டார்.
“ இல்லை. எங்கள் பெண்ணிடம் சொன்னால் போதும்”என்று சொன்னோம்.
“கவலைப்படாதீர்கள். போன் என்னிடம் இருக்கிறது. உங்கள்  பெண்ணின் எண்ணைக் கொடுங்கள்” என்றார். அவர், டயல் செய்து போனை என்னிடம் கொடுத்தார். என் பெண்ணிடம் விஷயத்தைச் சொன்னேன். அவள். “ ST.LOUIS-க்குப் போன் பண்ணி சொல்லிவிட்டு உங்களுக்குப் போன்
பண்ணுகிறேன்” என்றாள். அதன்படியே  பண்ணினாள்.  அப்புறம் தான் எங்களுக்கு நிம்மதி ஏற்பட்டது.
“ ஒரு நிமிஷம்” என்று சொல்லி விட்டு DAN FEI  போனார். ஸ்டார்பக்ஸ் காஃபியுடன் வந்தார்.  எனக்குக் கொடுத்தார். அதன் விலை மூன்று டாலரோ நாலு டாலரோ இருக்கும்.

அவர் NEBRASKA போக வேண்டியவர். “என் விமானம் இரவு 11 மணிக்குத்தான். உங்களைப் பத்திரமாக ஏற்றி விட்டு விட்டு நான் போகிறேன்” என்றார். அதன் பிறகு அவர் எங்களுடனேயே இருந்தார்.
 பிறகு அவர் தன் மனைவிக்குப் போன் செய்து,  தான் 11 மணி விமானத்தில் வருவதாகச் சொன்னார்.
“ சார். உங்கள் மனைவியுடன் நான் ஒரு நிமிஷம் பேசலாமா?” என்று கேட்டேன்.
“ தாராளமாக” என்று சொல்லி போனை என்னிடம் கொடுத்தார்.  அவருடைய மனைவிக்கு வணக்கம் சொல்லிவிட்டு ” உங்கள் கணவர் ஒரு  GEM OF A PERSON.  அவர் செய்த உதவிக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. இப்படிப்பட்ட கணவரை அடைந்ததற்கு நீங்கள் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் ஆசிகள்” என்றேன்.
“உண்மை.. உண்மை. அவர் அற்புதமானவர். உங்கள் ஆசிகளுக்கு மிக்க நன்றி”  என்றார் அவரது மனைவி

 இரவு பத்து மணி வரை எங்களுடனேயே இருந்தார். இந்தியாவைப் பற்றி நிறைய விவரங்கள் கேட்டார். தான் ஒரு பெரிய எலக்ட்ரானிக் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மானேஜர்  என்று கூறினார். பத்து மணிக்கு எங்களை விமானத்தில் ஏற்றி விட்டு விடை பெற்றுக் கொண்டார்.

ஒரு வாரம் கழித்து அவரிடமிருந்து ஒரு  பார்சல் வந்தது.   NEBRASKA IN PICTURES   என்ற கனமான புத்தகம்.

அதற்குச் சில வாரங்கள் கழித்து, அவரிடமிருந்து   THANKS GIVING DAY  வாழ்த்துகள் என்று ஒரு பார்சல் கூரியரில் வந்தது. ஒரு பெரிய கேக்!
அதன் பிறகு அவரிடமிருந்து எதுவும் வரவில்லை.

சில வருடங்கள் கழிந்த பிறகு,  சுனாமி வந்த சமயம் ஒரு ஈ-மெயில் வந்தது.

“சுனாமி செய்தி பார்த்ததும் உங்கள் நினைவுதான் வந்தது  நீங்கள் சென்னையில் பீச் ஒட்டிய பகுதியில் வசிப்பதாகச் சொன்னீர்கள். சுனாமியால் உங்களுக்குப் பாதிப்பு எதுவும் இல்லையே?” என்று கேட்டிருந்தார். 
 

எப்போதோ நான்  சொன்னதை அவர் நினைவில் வைத்திருந்ததை கண்டு நெகிழ்ந்து போனேன்.  “ நாங்கள் பத்திரமாக இருக்கிறோம். Your concern touched my heart."  என்று  பதில் எழுதினேன்.

12 comments:

  1. அபூர்வமான மனிதர்தான்!

    ReplyDelete
  2. எத்தனை நல்ல மனது அவருக்கு.....

    ReplyDelete
  3. உங்கள் நல்ல மனதுக்கு உங்களுக்கு நல்லது தான் நடக்கும்...

    ReplyDelete
  4. He is really a great man. Please publish his photo if you have.

    ReplyDelete
  5. 1/ உங்கள் நல்ல மனதுக்கு என்பதைவிட அவருக்கு நல்ல மனது’ என்பதே சரியாக இருக்கும்.

    ReplyDelete
  6. Please publish his photo if you have.--
    இல்லையே. அவர் முகம் என் மனதில் தான் இருக்கிறது!

    ReplyDelete
  7. மிக அருமையான மனிதர்! நினைவில் வைத்து பகிர்ந்தமை சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  8. It is great to come across such helpful people in a new place and when you really need some help. A very trivial info of my experience - Once in Milan airport I was struggling to insert my belt (removed for security check) in the loops at the back of my pants (due to big paunch, hi..hi..) when an elderly European came and helped without any reservation! - R. J.

    ReplyDelete
  9. His helping you in time of need and your praising him to his wife go hand in hand, I think.

    ReplyDelete
  10. Excellent experience.When i went to Denver in March one young person helped me in Frankfurt air port carrying my trolly and consoling my wife that he will take us to the gate for Denver.He was also travelling with us to Denver. I have written this experience in my article in The Gulf today March 2014. Issue.Many people are in the world with kind heart and helping nature.Above all the person is from Nebraska was made me amazing.He is like the Nebraska Movie which i saw first in Denver.Above all your Humorus writing makes me more happy.It is god's grace and gift.I am happy to read your talented writing in this Blog.Take care.I returned to Bangalore on 19 Sep.

    ReplyDelete
  11. Dear Mr Raghvan
    Thank for your nice comments.
    You may await another remarkable, moving anecdote soon.
    -Kadugu

    ReplyDelete
  12. மகத்தான மனிதர் அவர். இந்நாட்களில் நல்ல மனிதர்களைக் காண்பதே அரிதாகி வரும் வேளையில் இதுபோன்ற விஷயங்கள் மனதுக்கு மகிழ்வும் நம்பிக்கையும் தருகின்றன.

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!