March 08, 2013

எழுத்துக் கொலை --அகஸ்தியன்

(இது ஒரு பயங்கர கதை. கதவைத்  தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு, விளக்கை அணைத்து விட்டு, கண்களை மூடிக் கொண்டுப் படியுங்கள்!!)
 - - - - - - - - - - - - - - - - - - 
மும்முரமாக மாத நாவலை எழுதிக் கொண்டிருந்தேன். இரண்டு கொலை செய்தாகிவிட்டது.  கதையில்தான். இருந் தாலும் குறைந்தபட்சம் மூன்று கொலை இருந்தால்தான் வாசகர்களுக்கு திருப்தி ஏற்படும் என்று மாத நாவல் ஆசிரியர் சொல்லியிருந்தார்.
மாதம், இரண்டு மூன்று நாவல்களை எழுதுபவன். ஒவ்வொரு நாவலிலும் மூன்று பேரையாவது கொலை செய்ய வேண்டு மென்றால் சுலபமான காரியமில்லை. நிஜமாகவே கொலைகள் செய்வது சுலபம் என்று தோன்றுகிறது.
"இரவு ஒன்பது மணிக்கு கதையை முடித்துக் கொடுத்துவிடுகிறேன். பையனை அனுப்புங்கள்'' என்று ஆசிரியரிடம் சொல்லி இருந்தேன். ஆகவே மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தேன்.
என் மனைவி --தீர்க்காயுசாக அவள் இருக்கட்டும் -இரண்டு நாளாக ஊரில் இல்லை. பிறந்தகம் போயிருந்தாள். அட நீங்க ஒண்ணு... சண்டை, கிண்டை எதுவுமில்லை, சும்மாத்தான் போயிருந்தாள். அவள் ஊரில் இல்லாததால் தொந்தரவு இல்லாமல் எழுதிக் கொண்டிருந்தேன்.
அவள் வீட்டில் இருந்தால், நான் எழுதுகிறேனே என்பதையும்.......
 சரி....சார், அந்த கதையெல்லாம் இப்போது எதற்கு?
மூன்றாவது கொலையைச் செய்தாக வேண்டும்.
மர்மத்தை உடைக்க வேண்டும். ஒன்பது மணிக்கு பத்திரிகை ஆபீஸ் பையன் வருவதற்குள் மூன்று கொலைகளைச் சுபமாகவும் முடிக்க வேண்டும். மூளையைக் கசக்கிக் கொண்டேன்.

கதை அங்குலம் அங்குலமாக நகர்ந்து கொண்டிருந்தது. திடீரென்று மின்சார விளக்கு போய்விட்டது. வந்து விடும் என்று பத்து நிமிஷம் காத்திருந்தேன். மின்சாரம் வரவில்லை. மின்சார இலாகா மீது கோபம்தான் வந்தது.
மெழுகுவத்தியை ஏற்றி வைத்துக் கொண்டு எழுத ஆரம்பித்தேன். என் நிழலே சுவரில் பூதாகாரமாக விழுந்தது. தூரத்தில் ஆந்தை அலறியது. எங்கோ குழந்தை அழுதது. அழுத குழந்தையை சமாதானப்படுத்த தாயார் அடித்தாள். (வன்முறையினால் சமாதானம் ஏற்படும் என்பது அவள் கணிப்பு.) 
ஸ்கூட்டரைத் தெருவில் கிரீச்சென்று யாரோ பிரேக் போட்டார்கள். மர்மக்கதை எழுத அகோர சூழ்நிலைதான். ஆனால் கதை வளரவில்லையே?
அப்போது....
வாசற் கதவை யாரோ தட்டினார்கள் - படபடவென்று. "யாரப்பா இப்படி கதவை தட்டுவது?'' என்று நான் அதட்டினேன்
பதிலுக்கு."சார். நான்தான்....''
"என்னய்யா... நான், பரோட்டா குருமா... யாரு?'' என்று கத்தினேன். பத்திரிகை ஆபீஸ் பையனாக இருக்கும். யமதூதன் மாதிரி வந்துவிட்டான். கோபம் கோபமாக வந்தது.
எழுந்து போய்க் கதவை திறந்தேன். கும்மிருட்டில் அவன் பல்தான் பளிச்சன்று தெரிந்தது. கிரில் கதவை திறந்து "கதை வந்து...'' என்று ஆரம்பித்தேன். அப்போது  யாரோ என் தலையில் ஒரு "படார்' என்று போட்டார்கள். சர்ரென்று நான்காவது மாடியிலிருந்து அதல பாதாளத்துக்குப் போய் ...இந்த சுவர் ஏன் இப்படி ஆடுகிறது? தலைக்குள் எப்படி ஆயிரம் நட்சத்திரங்கள் முளைத்தன? நாக்கு ஏன் ஒரு சகாரா பாலைவனமாக ஆகியுள்ளது? கண் லென்ஸ் ஏன் ’ஃபோகஸ்' செய்ய மறுக்கிறது. கால்கள் ஏன் பஞ்சர் ஆன டயராகிவிட்டன?
நான் மயங்கி விழுந்தேன். மயங்கி விழுந்தேன் என்பது பின்னால்தான் எனக்கு தெரிந்தது.

வில்லன்கள் எத்தனையோ பேரை சினிமாவில் சந்தித்திருக்கிறேன். நான். கதைகளில் அவர்களுக்குக் கரகரப்பான குரலும், வெட்டுத் தழும்பும்,  லுங்கியும், படியாத கிராப்பும், கையில் தாயத்துப் போன்ற பல விஷயங்களைத் தந்து பயங்கரமான ஆசாமிகளாக வர்ணித்திருக்கிறேன்.
ஆனால் எல்லா வில்லன்களும் அப்படி இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை என் எதிரே நின்றுக் கொண்டிருந்த ஆசாமி நிரூபித்துக் கொண்டிருந்தான்.
என்ன பர்சனாலிட்டி! லக்ஸ் சோப் விளம்பரம் கொடுக்கலாம் மேனியழகிற்கு! குரல் பயங்கர சாத்வீகம். பளிச்சென்று கண்ணைப் பறிக்கும் ஒயிட் அண்ட் ஒயிட். போதாதற்கு, பெயர் சாந்தமூர்த்தியாம்.
"ஏய், அகஸ்தி..... என்னை உனக்குத் தெரியாது? நான் சொல்லாமல் செய்பவன். ஆகவே உனக்கு என்ன மாதிரி  ஆபத்து வரும் என்று சொல்லப் போவதில்லை. ஒரு கண்  போகலாம். இடது கையில் இரண்டு விரல் குறையலாம்.  அப்புறம்.....”
"சார்''....
"சாரும் வேண்டாம் சக்கையும் வேண்டாம். மரியாதையாக சொல்லிடு... ஜோசப் கொடுத்தனுப்பிய பணத்தை எங்கே வெச்சிருக்கே? ஏன் என்கிட்டே கொடுக்காம ஏமாத்தினே?''
"யார் சார் ஜோசப்?'' பரிதாபமாக கேட்டேன்.  அதே சமயத்தில் ஒற்றைக் கண்ணுடன் நான் அவதிப்படுவது ஒரு முன்னோட்டம் மாதிரி வந்தது. உடல் சிலிர்த்தது. கூடவே பத்திரிகை ஆசிரியர் நாவலை முடிக்க முடியாமல் என்ன செய்தாரோ என்று அவரைப் பற்றி கவலையும் ஏற்பட்டது . விசித்திரம். இங்கு இந்த பாவி என்னைக் கையை வாங்குவேன், கண்ணைப் பறிப்பேன் என்று பயமுறுத்துகிறான். அதற்குக் கவலைப்படாமல் ஆசிரியரைப் பற்றி புத்தி போகிறதே!
இந்த ஆள்தான் நம்மை இங்கு கொண்டு வரச் செய்திருக்கிறான். இவனுடைய அடியாள்தான் அடியேனை அடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஜோசப்பாமே. யார் அவன்? மூணாம் கிளாஸ் படிக்கும்போது ஜோசப் என்று ஒரு பையன் படித்தான். அதற்குப் பிறகு ஜோசப் என்று எவனையும் எனக்குத் தெரியாது!

"என்னய்யா பெரிசா கோட்டையை பிடிக்கிறமாதிரி யோசனை? மூன்று லட்சத்தை முழுங்கிப்பிடலாம்னு பாத்தியா? முழுங்கினா, குடலை வெளியே உருவி எடுத்து, அந்த பணத்தை ஒத்தை ரூபா பாக்கி இல்லாம எடுத்திடுவோம்... என்னவோ டி.கே. காலனியிலே போய் குந்திக்கிட்டா கண்டு பிடிக்க முடியாதுன்னு நெனைச்சுகிட்டியாடா?...
"டா' போட்டான்.
"ஜோசப் யார் என்கிறதே எனக்குத் தெரியாது.. என்கிட்டே யாரும் பணம் கொடுக்கலை சார்...''
"பணம்! ஹூம், இப்போ நீ கொடுக்கலே. விழப் போகிறது பிணம். ஆமாம்! ஏய்... அகஸ்தி... இந்த சாந்தமூர்த்திகிட்டே யாராலும் வாலாட்ட முடியாது. வாலை மட்டுமில்லை. காலையும் ஒட்ட நறுக்கிடுவேன்... பணம் எங்கே?''
"பணம் எதுவும் யாரும் என்கிட்டே எப்பவும் கொடுக்கலை...''
"யாரும் கொடுக்கலையா? நான் கொடுக்கறேன்'' என்று சொல்லி சதக்கென்று மூஞ்சியில் ஒரு குத்துவிட்டான். மூக்கிலிருந்தும் முன் பல்லில் இருந்தும் ரத்தம் கொட்டியது. உதடு பல்லில் வெட்டப்பட்டது. வலியால் துடித்தேன்..
.
கதவைப் பூட்டிக் கொண்டு போய்விட்டான். நான் எங்கே யாரிடம் மாட்டிக் கொண்டிருக்கிறேன். யார் ஜோசப்? மூணு லட்சமாமே? ஏதாவது ஸ்மக்ளிங் விவகாரமா?
ஊரிலிருந்து மனைவி வந்தால், என்ன கலவரப்படுவாள்? யாரைக் கேட்பாள்? யாரிடம் சொல்வாள்? டி.வி.யில் நம் படத்தைப் போட்டு "காணவில்லை' என்று ஹேமா வெங்கட்ராமன் அறிவிப்பாரா? எந்த படத்தைக் கொடுப்பாள் என் மனைவி? மகாபலிபுரத்தில் மணி எடுத்த போட்டோதான் நன்றாக இருக்கிறது. அதில் தான் ஸ்டைலாகச் சிரித்துக் கொண்டிருக்கிறேன்.
ரத்தம் நாக்கில் பட்டது. ""என்ன பைத்தியக்காரத்தனமான யோசனை?'' என்று என் தலையை (லேசாகத்) தட்டிக் கொண்டேன்)
என் பெயரைத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறான்? உரிமையுடன் "டேய், டேய், அகஸ்தி' என்கிறான். (அந்த "டே'யே போடட்டும்)
திடீரென்று பயம் கவ்விக் கொண்டது. ஓவென்று அழ ஆரம்பித்தேன். தனியாக இருக்கும் போது மனிதன் தன் உண்மையான உணர்வுகளை மறைப்பதில்லை என்று யாரோ ஒருவர் எழுதிய பொன்மொழி நினைவுக்கு வந்தது.
பசியும் பயமும் கவலையும் அழுத்த, கண் அயர்ந்தேன்.

ஏதோ பேஸ்மென்டில் எலியைப் போல் மாட்டிக் கொண்டிருக்கிறேன் என்பது பொழுது புலரும் சமயத்தில் தெரிந்தது. ஆயிரம் கவலைகளுக்கும் நடுவே பசியும் எடுத்தது.
கதவைத் திறந்து யாரோ வந்தார்கள். "இந்தா.. டீ... தம்பி... உன்னைப் பார்த்தா பரிதாபமா இருக்கிறது... பணத்தைக் கொடுத்துடு... இல்லை பல்லு, முட்டி, முழங்கால், மூக்குத் தண்டு எல்லாம் பேந்துரும்... இந்த அருள்சாமி சொல்றதைக் கேளு....!
"அருளு... எனக்கும் ஒண்ணும் தெரியாது...''
"இதோ பார் அகஸ்தி... ஏதோவொண்ணு, புட்டி அது இதுன்னு செலவழிச்சிருப்பே. அது போக மீதியை கொடுத்துடு நம்ப "பாஸ்' மன்னிச்சிடுவார்.”
"இல்லைங்க அருளு'' என்று நான் பரிதாபமாக ஆரம்பித்தேன். ஆனால் அருள் கதவை மூடிக் கொண்டு போய்விட்டார்.
ஏழெட்டு யுகங்கள் கழிந்தது (போலிருந்தது). பயம், கவலை எல்லாம் போய்விட்டது. முகம் தொய்ந்துவிட்டது! முன் உதட்டில் வலி குறையவில்லை. சாந்தமூர்த்தி ஒரு தடவை வந்து வயிற்றில் எட்டி உதைத்து விட்டுப் போனார். நான் கதறியது அவர் காதில் விழவே இல்லை... உண்மையிலேயே சாந்தத்தின் அவதாரம்!
ஒரு நிமிஷம் போவதே வருஷங்கள் மாதிரி இருந்தது.
மறுநாள் இரவு கதவு திறந்த போது சாந்தமூர்த்தி, அருள், இன்னும் இரண்டு பேர்கள்  --அவர்கள் பெயர் கருணை, அன்பு என்று இருந்தாலும் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன் -- வந்தார்கள்.
ஒரு சின்ன எச்சரிக்கை கூட கொடுக்காமல், சாந்தமூர்த்தி பளார் என்று இடது கன்னத்தில் கோட்டை அறை ஒன்றை விட்டார். அப்படியே சுருண்டு விழுந்தேன்.
"ஐயோ அடிக்காதீங்க. சார் எனக்குப் பணம் பற்றி எதுவும் தெரியாது...'' கதறினேன்.
"டேய் அகஸ்தி பயலே...'' என்று ஆரம்பித்தார். ஆளைதான் வெட்டுவார் என்றால் இவர்கள் எல்லோரும் என் பெயரை முழுசாக அகஸ்தியன் என்று சொல்லக் கூடாதா? அதையுமா வெட்டவேண்டும்?
"உயில் கியில் எழுதிடு... இஷ்ட தேவதையை பிரார்த்தனை செய்துக்கோ. ஏன்னா ராத்திரி போட்மெயில் உன் மேலே ஓடப் போறது'' என்றார்.
"அய்யோ'' என்று நான் அலறிய அலறலைக் கேட்டு எனக்கே நடுக்கம் ஏற்பட்டது.
"சார் நான் ஒண்ணும் தெரியாதவன்''.
"போறுண்டா உன் கதை...'' என்று சொன்னவர், ""போடா, உனக்கு ஒரு சான்ஸ்... உன் பொண்டாட்டிக்கு ஒரு வார்த்தை சொல்லிடு. என்ன ஏதுன்னு விவரம் சொல்லக் கூடாது. உன் வீட்டிலே போன் இருக்கு இல்லே. பேசிடு. பாவம், எங்களுக்கும் மனசு இருக்கு. அருள்! அந்த "கார்ட்லெஸ்' போனைக் கொண்டா?'' என்றார் "பாஸ்'.
போன் வந்தது. நடுங்கிக் கொண்டே பட்டன்களை அழுத்தினேன். என் மனைவியிடம் என்ன சொல்வது? எதை விடுவது? இவர்கள் தவறாக என்னை இங்கு கொண்டு வந்து அடைத்திருக்கிறார்கள். தவறாக என்னை ரயிலில்... அய்யய்யோ... அவர்கள் தவறாக செய்தாலும், நான்தானே அனுபவிக்க வேண்டும்?
என் மனைவி எப்படி தத்தளித்துக் கொண்டிருப்பாள்.
மணி அடித்து "ஹலோ' கேட்டது.
என் மனைவிதான்.
"ஹலோ... ஹலோ.. நான்தான் பேசறேன்'' என்றேன்.
"கேட்கலையே... யார் பேசறது?''
"நான்தான்.. நான்தான் அகஸ்தியன் பேசறேன்.. காது கேட்கலை.. அகஸ்தியன் வீடுதானே.. என்னடி நோக்கு கேக்கலையா? உன் ஆம்படையாண்டி...'' என்று கத்தினேன்.
சட்டென்று போனை என் கையிலிருந்து பிடுங்கினார் சாந்தமூர்த்தி. "போதும்யா. நீ பேச வேண்டாம்.. நீ பேச வேண்டாம்.. நீ வீட்டுக்குப் போகலாம். ஆமாய்யா.. உன்னை விட்டுடறேன்...'' என்றார்.
"சார்...''
"ஏண்டா அருள்.. அந்த சோமாரி ஜான் சரியான முட்டாள்டா... இவனைப் போய் இழுத்துட்டு வந்திருக்கானே...டி.கே. கால
னிக்குப் போய்....''
"சார்..நான் அங்கேதான்
டி.கே. காலனியில் இருக்கிறேன்... எனக்கு ஒண்ணும் தெரியாது...''
"சும்மா பொலம்பாதைய்யா. உன்னைத் தான் விட்டுடறேன்னு சொன்னேனே.. தவறு அந்த ஜான் பயல் மேலே'' என்றார் சாந்தமூர்த்தி.
எங்கோ மணி ஒலித்தது. ஜான் வந்தான். பளாரென்று அறை விழ, "பாஸ்' என்றான் அவன் கண் கலங்கியபடியே.
"ஏண்டா எங்கோ போய் யாரையோ இழுத்தாந்தே. இவர் அகஸ்தியன்டா.. உன்னை அகஸ்தினைத் தான் பிடிச்சாரச் சொன்னேன்..''
சடாரென்று பல்ப் எரிந்தது தலைக்குள்.
யாரோ அகஸ்டினைப் பிடிப்பதற்குப் பதிலாக அகஸ்தியனைப் பிடித்துக் கொண்டு போயிருக்கிறார்கள். முதலில் வீட்டிலுள்ள போர்டில் அந்த ஸ்பெல்லிங் தவறை திருத்த வேண்டும்.
வீட்டுக்கு வந்தேன்.
என் பெயர்ப் பலகையில் இருந்த
AGASTIN என்னைப் பார்த்துc சிரித்தது. 
'H'-   எழுதாமல் விட்டதுடன், கடைசி எழுத்திற்கு முன் ஒரு 'A' எழுத்தையும்   எழுதாமல் விட்ட அந்த பெயிண்டர் பாவியைச்  சபித்தேன்.

15 comments:

  1. மெய்யாலுமே பயந்து போயிட்டேன். பெயர்ப் பலகையில், புனை பெயர் வேண்டாம் என்று எல்லா எழுத்தாளர்களுக்கும் மௌன எச்சரிக்கை செய்கின்றேன். அவர்கள் அதை கண்களையும் காதுகளையும் மூடிக் கொண்டு பார்த்துக் கேட்கக் கடவது!

    ReplyDelete
  2. ஹா... ஹா... ஹா... த்ரில்ல்லான க்ரைம் கதையில் கூட எப்படி ஹ்யூமரை சேர்த்து ரசிக்க வெக்கலாம்கறதுக்கு இது ஒரு பாடம்! வியந்துக்கிட்டே சிரிச்சேன்! சிரிச்சுக்கிட்டே ரசிச்சேன்!

    ReplyDelete
  3. what happened to the novel?have you completed it or not?

    ReplyDelete
  4. //Posted by கடுகு at 8:30 pm//
    8.30 PM க்கு ஆத்துக்கு ஒரு மாதிரி safe -ஆ வந்து போஸ்ட் பண்ணியாச்சு! 9 மணிக்குள் 3-ஆவது கொலையைப் பண்ணி, மர்மத்தை விடுவித்து எந்த பத்திரிகைக்கு அனுப்பினீர்கள் என்று சொல்லவும். புத்தகத்துக்கு சொல்லி வைக்கவேண்டும்! - ஜெ.

    ReplyDelete
  5. ரசித்துப் படித்து சிரித்தேன். (ஸ்பெல்லிங் தப்பா இருந்தா அடி கிடைக்கும்னு ஸ்கூல்ல டீச்சர் சொன்னது ஞாபகம் வந்தது :)

    ReplyDelete
  6. நல்ல கதை.ரசித்தேன் அகஸ்தி.

    ReplyDelete
  7. பெயர்ப் பலகையில் இருந்த தவறினை வைத்து சுவையான ஒரு சிறுகதை.....

    மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  8. யரோ அகஸ்டினைப் பிடிப்பதற்குப் பதிலாக அகஸ்தியனைப் பிடித்துக் கொண்டு போயிருக்கிறார்கள்.

    ஆள்மாறாட்டம் அருமையான் கதை ..

    ReplyDelete
  9. இந்த பயங்கர கதையை கதைவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு, விளக்கை அணைத்து விட்டு, கண்களை மூடிக் கொண்டுத் தான் படித்தேன். இருந்தாலும் பயமாக இருந்தது !



    இப்படிக்கு,

    முழ நீளத்தில் பெயர் வைத்துக் கொண்டிருப்பதால்,

    பெயர் குழப்பம் ...ஆள் மாறாட்டம் ..ஏற்படாது அதனால் யாரும் அடிக்க வரமாட்டார்கள் ..

    என்கிற அதீத நம்பிக்கையுடன் .....

    "ஆரண்ய நிவாஸ் ஆர். ராம மூர்த்தி"

    ReplyDelete
  10. Half way through the story, I guessed the name as Augustin since rest of them are having christian names. Still this is the really thrilling than the novel which you have completed by now.

    ReplyDelete
  11. மர்மக் கதையை சிரித்துக் கொண்டே படிக்க வைத்து விட்டீர்கள்.

    ReplyDelete
  12. Super Story. and a good twist.

    --D. sundarvel

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!