March 02, 2013

ஒரு கார்ட்டூனிஸ்ட்




செங்கல்பட்டுக்கு, பல எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் உருவாக்கிய பெருமை உண்டு. 40' களில் விகடன் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசை பெற்ற திரு. ஏ. கே. பட்டுசாமி, டைரக்டர் ஸ்ரீதர், சித்ராலயா கோபு, டைரக்டர் சி.வி. ராஜேந்திரன், எழுத்தாளர் ஞாநி, ஓவியர் மாயா, பேசும்படம் சம்பத்குமார், அப்புறம் நான்!. ஆங்கிலத்தில் எழுதிய, இந்தியன் எக்ஸ்பிரஸ் வேம்புசாமி, சுயராஜ்யாவில் எழுதிய பி.என்.. சம்பத் இரண்டுபேரையும் குறிப்பிடவேண்டும்.
இதில் நான் பெருமைப் \படக்கூடிய விஷயம் என்னவென்றால் இந்தப் பட்டியலில் உள்ள ஸ்ரீதர், கோபு, சம்பத் குமார், ஞாநி ஆகியவர்கள் என் நண்பர்கள்.  
திரு. பி. என். சம்பத் அவர்கள் என் நண்பர் மட்டுமல்ல. என் வீட்டிற்கு அடுத்த வீட்டுக்காரர். . அவர் சென்னை ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து வந்தார். தினமும் ரயிலில் பீச் ஸ்டேஷன் பயணம். அவர் கையில் எப்போதும் ஒரு பெரிய பையை வைத்திருப்பார்.. ரயிலில் அவருக்கென்று ஒரு ஜன்னல் சீட் யாராவது நண்பர்கள் துணி போட்டு ரிசர்வ் செய்து வைத்திருப்பார்கள். ரயிலில் ஏறி உட்கார்ந்ததும் பையிலிருந்து ஏதாவது ஆங்கில தினசரியை எடுத்துப் படிக்க ஆரம்பிப்பார், அவர் பையில் ஆங்கிலப் பத்திரிகைகள் தான் நிரம்பியிருக்கும்.
சுயராஜ்யா இதழில் அவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்தார். இருந்தாலும் ஒரு அலட்டல் இல்லாமல் இருப்பார்’ அந்த காலத்தில் :சுயராஜ்யா இதழின் ஆசிரியராக காஸா சுப்பாராவ்  இருந்தார், அதில் வாராவாரம் ராஜாஜி  ’மை டியர் ரீடர்’  என்ற தொடர் பத்தியை எழுதி வந்தார். (அதை இன்று நினைத்தாலும், அந்த மாதிரி எழுத்தும் கருத்தும் மீண்டும் எப்போது படிக்கப் போகிறோம் என்று மனதில் ஏக்கம் தோன்றுகிறது)
ஒரு சமயம் திரு சம்பத் அவர்களுக்குக் கடிதம் வந்தது. கைப்பட எழுதியவர் ராஜாஜி!. ”அன்புள்ள சம்பத்,  நாங்கள் – காஸா, நான், வி. பி. ராமன் மூன்று பேரும் வி. பி. ராமன் வீட்டில் அவ்வப்போது சந்தித்துப் பேசிக் கொண்டிருப்போம். அதில் நீங்களும் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும், வருகிற ஞாயிறு மாலை வர முடியுமா?
அன்புடன்
 ராஜாஜி
அந்த கடிதத்தை  மிகவும் பூரிப்புடன் சம்பத் காண்பித்தார். ”ராஜாஜியே உங்களைக் கூப்பிட்டிருக்கிறார். சாவகாசமாக உட்கார்ந்து பேசும் பிரைவேட் மீட்டிங்கிற்கு உங்களுக்கு அழைப்பு!. எவ்வளவு பெரிய கௌரவம்!” என்று நாங்கள் எல்லோரும் பாராட்டினோம். அவரோ ”ஏம்பா இதைப் பார்த்து நீங்கள் எல்லோரும் குதிக்கிறீர்கள்? எனக்கு வயிற்றைக் கலக்குகிறது, அந்த மகாமகா ஜாம்பவான்கள் கூட்டத்தில் நான் என்ன பேசுவேன். அவர்கள் GIANTS; நான் DWARF! நான் போகப்போவதில்லை" என்றார், அதன்படியே ஏதோ ஒரு சப்பைக் காரணத்தை எழுதிவிட்டு போகாமலிருந்தார்.

திரு. சம்பத்தின் பிள்ளைப் பற்றி எழுதுவதற்கு இந்த PROLOGUE போதும்  என்று நினக்கிறேன். 
சரி, யார் அந்தப் பிள்ளை?    
அவர் ஒரு நகைச் சுவை ஆசாமி, கார்ட்டூனிஸ்ட். அட்டகாசமான கலகல பேர்வழி. பெயர் ஸ்ரீகாந்த், துக்ளக் இதழில் தொடர்ந்து நகைச்சுவையையும் சடையரும் கலந்த கார்ட்டூன் ஐடியாக்களைக் கொடுத்து வருகிறார். வேறு சில பத்திரிகைகளிலும் இவர் படமும் ஜோக்கும் கொடிகட்டிப் பறக்கின்றன.
ஸ்ரீகாந்திடம் ”எப்படி துக்ளக்கில் உனக்கு வாய்ப்பு வந்தது?” என்று கேட்டேன். ( ஸ்ரீகாந்தை ஒருமையில் அழைக்க எனக்கு உரிமை இருக்கிறது. காரணம் ஸ்ரீகாந்த் பக்கத்து வீட்டு 72 வயது ‘பையன்’!) அதற்கு ஸ்ரீகாந்த உற்சாகத்துடன் கூறியது:. ”பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு கல்யாணத்தில் சோ அவர்களைச் சந்திக்கச் சான்ஸ் கிடைத்தது. அவரிடம் நான் வரைந்த ஒரு கார்ட்டூனைக் கொடுத்தேன், அன்றிரவு எனக்கு அவரிடமிருந்து ஃபோன் வந்தது.  "உன் கார்ட்டூன் இந்த வாரமே அட்டைப் படமாக வெளியாகிறது தொடர்ந்து அனுப்பிக்கொண்டு வா” என்றார், அன்றிலிருந்து இன்று வரை துக்ளக்கில் சான்ஸ் கொடுத்து வருகிறார்.”

தொடர்ந்து, “இப்போது என்னுடைய இரண்டாவது  கார்ட்டூன் புத்தகம் விரைவில் வெளிவர இருக்கிறது. சோ அவர்கள் அன்புடன் முன்னுரை எழுதித் தந்துள்ளார்” என்றார்.
.
ஸ்ரீகாந்தின் இரண்டு ஜோக்ஸ் அத்துடன் LIFE OF PI என்ற கட்டுரையையும் இங்கு தருகிறேன்.





 








                                                                                  

5 comments:

  1. ஆஹா..அந்த கார்ட்டூனிஸ்ட் யார் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் இன்று தீர்ந்தது...

    மிகுந்த திருப்தியுடன்...
    http://aaranyanivasrramamurthy.blogspot.in/2013/03/blog-post_2.html

    ReplyDelete
  2. புதிதாய் ஒரு அறிமுகம்! அறிந்து கொள்ள வேண்டிய அருமையான முகம்! நன்றி1

    ReplyDelete
  3. Life of "பை" அருமை. திறமை உள்ளவர்களை வாய்ப்புகள் தேடி வரும் என்பதற்கு ஸ்ரீகாந்த் ஸார், கடுகு ஸார் போன்றவர்கள் சான்று.

    ReplyDelete
  4. Life of "பை" அருமை. திறமை உள்ளவர்களை வாய்ப்புகள் தேடி வரும் என்பதற்கு ஸ்ரீகாந்த் ஸார், கடுகு ஸார் போன்றவர்கள் சான்று.

    ReplyDelete
  5. ஸ்ரீகாந்தை ஒருமையில் அழைக்க எனக்கு உரிமை இருக்கிறது. காரணம் ஸ்ரீகாந்த் பக்கத்து வீட்டு 72 வயது ‘பையன்’!)

    ஹா ஹா

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!