March 15, 2013

அப்புசாமி விருது - என் ஏற்புரை

முன் குறிப்பு: சென்ற ஆண்டு எனக்கு அப்புசாமி நகைச்சுவை பதக்கம் அப்புசாமி- சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளையால் தரப்பட்டது,  விழாவில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர், டில்லி கணேஷ், சித்ராலயா கோபு, பாக்கியம் ராமசாமி அவர்கள், எழுத்தாளர் சிவசங்கரி அவர்கள், எழுத்தாளர்  ராணிமைந்தன் அவர்கள் பேசினார்கள்.
அப்போது நான் பேசிய உரையை இங்கு தருகிறேன். =================================================== 
அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள், இன்று என் வாழ்நாளில் ஒரு முக்கிய தினம்.  அற்புத தினம், உன்னத தினம், பெருமைக்கும் பெருமிதத்திற்கும் உரிய தினம்.
நான் கனவிலும் எதிர்பாராத ஒரு கௌரவம் எனக்கு  அளிக்கப்பட்டிருக்கிறது.
நகைச்சுவைக்காகவே அமைக்கப்பட்டடுள்ள ஒரு அறக்கட்டளை என்னைக் கௌரவித்து இருப்பதாலும், அந்த அறக்கட்டளையை அமைத்துள்ளவர் திரு பாக்கியம் ராமசாமி என்பதாலும் அது தரும் விருது, கூடுதல் மதிப்பையும் அந்தஸ்தையும் பெற்றுள்ளது.
=                   =            =
கல்கி, தேவன், சாவி, நாடோடி, துமிலன், ஆர்.கே.நாராயணன், எஸ்.வி.வி போன்ற நகைச்சுவை விற்பன்னர்களால் ஈர்க்கப்பட்ட நான்
நகைச்சுவை எழுத முற்பட்டபோது, எனக்குத் திறமையைவிட ஆர்வம்தான் அதிகம் இருந்தது. அந்த காலகட்டத்தில் ஆர்வமே திறமை என்று  எண்ணிக் கொண்டிருந்த சிறுவன் நான்.
1962-ல்  டில்லி சென்றதும்,, குமுதத்திற்குச் சில பேட்டிக் கட்டுரைகள் நான் அனுப்பினேன். அவைகளைச்  செதுக்கிச் சரிப்படுத்தி, குமுதத்தில் பிரசுரித்தார்கள். தொடர்ந்து எழுதி வந்தேன்.

இந்த சமயத்தில் 1967-ல் தினமணி கதிரில் சாவி பொறுப்பேற்றதும் அவரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. சாவியே கைப்பட எழுதியிருந்தார். அறிமுகம் கூட இல்லாத எனக்கு சாவியிடமிருந்து கடிதம்!.


“தினமணி கதிரின் ஆசிரியர் பொறுப்பேற்றுள்ளேன். கதிருக்கு ஒரு நகைச்சுவை கதையை எழுதியனுப்புங்கள்” என்று எழுதியிருந்தார்.

’எனக்கு எழுதத் தெரியும், அதுவும் கதை எழுதத்தெரியும், அதுவும் நகைச் சுவையாக!’ என்ற தவறான தகவலை அவருக்கு யார் சொல்லியிருப்பார்கள்?

அந்த கடிதத்தை என் தலையில் வைத்த கிரீடமாக கருதிக்கொண்டேன். ’மிஸ்டர் பஞ்சு’ என்ற தலைப்பில் ஒரு கதை எழுதி அனுப்பினேன். மறு வாரமே அது பிரசுரமாயிற்று. இது விசேஷமல்ல. கதிரின் அட்டையில் ’மிஸ்டர் பஞ்சு நகைச்சுவை கதை --- அகஸ்தியன்’ என்று வேறு போட்டுவிட்டார்.

நகைச்சுவை என்னும் கரைகாணமுடியாத கடலில் என்னை இறக்கி, நீந்தச் செய்துவிட்டார் சாவி. அன்றிலிருந்து நகைச்சுவை புத்தகங்களாகவே படித்து வருகிறேன் MAD MAGAZINE துவங்கி SPIKE MILLIGAN, GEORGE BURNS, EVAN ESAR, JOEY ADAMS, WILLIAM HAZLETT UPSON, RICHARD ARMOUR, BOB HOPE, ART BUCHWALD, OGDEN NASH, PIERRE DANINOS என்று பல நூறு எழுத்தாளர்களின் புத்தகங்களைப் படித்து, அவர்களின் செய்முறைகளை உள்வாங்கி ஓரளவு திறமையை வளர்த்துக் கொண்டுள்ளேன்,
சாவியின் கேரக்டர் கட்டுரைகளைப் பார்த்து நானும் கேரக்டர் கட்டுரைகளை கதிரில் எழுதினேன். அவரைப் பின்பற்றி நானும் ’இங்கே போயிருக்கிறீர்களா?’ கட்டுரைகளை எழுதினேன்.

இது மாதிரியே மதிப்பிற்குரிய குருநாதர் பாக்கியம் ராமசாமி அவர்களின் எழுத்திற்குத் தீவிர ரசிகனானேன். ஒரு சில சமயம் அவர் எழுதிய பதப்பிரயோகங்களை அப்படியே நானும் உபயோகித்துள்ளேன்.

 
ஒரு நகைச்சுவை கதையில் சீரியஸான விஷயம் வந்தால் அதையும் அவர்  நகைச்சுவையாக எழுதியிருப்பார். உதாரணத்திற்கு ஒன்றிரண்டு சொல்லுகிறேன். அவர் எழுதினார்: ”அவனுக்கு கோபம் கோபமாக வந்தது. அவன் முகத்தில் எள் பிளஸ் கொள் வெடித்தது என்று எழுதியிருந்தார். வெறுமனே எள்ளும் கொள்ளும் என்று எழுதியிருந்தால் அதில் நகைச்சுவை இருந்திருக்காது.

மற்றொரு உதாரணம் – மருத்துவமனைக்குப் போய் வந்த ஒருவரிடம் அவருடைய நண்பர் கேட்கிறார்” ”ஏன், சார்  எக்ஸ்ரே எடுத்துப் பாத்தீங்களா?”

இவர் சொல்லுகிறார்:  ”எல்லாம் ஒன்றுவிடாமல் பாத்தாங்க. எக்ஸரே, ஒய் ரே,  அப்புறம் ஸத்யஜித் ரே என்று ஒன்றையும் விடவில்லை.”

இந்த ஜோக் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. நாலைந்து வருடங்களுக்கு முன்பு ஆனந்த விகடனில் ஒரு கதை எழுதினேன். கமலாவும் தங்கப் பானையும் என்ற கதை.

கமலா தன் அம்மாவிடம் என்னைப்பற்றி அலுத்து, சலித்துக்கொண்டு சொல்கிறாள்: ”ஏம்மா --- அவருக்கு (அதாவது எனக்கு)- பணம் அனுப்ப மனுஷாளே இல்லையா என்னஅப்படி அனுப்ப நாள் கிழமை இல்லாவிட்டால் கூட, மதர்ஸ் டே, ஸிஸ்டர்ஸ் டே, காஃபி டே  என்று எத்தனையோ ’டே’ இருக்கே” என்கிறாள். இது எக்ஸ்ரே ஜோக் பாதிப்பு தான்.

இந்த உரையை நான் எழுதிக்கொண்டிருக்கும்போது ஒரு குட்டி ஐடியா முளைத்தது. அதையும் சேர்த்து சொல்லுகிறேன். ”ஏம்மா --- அவருக்கு அதாவது எனக்கு - பணம் அனுப்ப மனுஷாளே இல்லையா என்ன? அப்படி அனுப்ப நாள் கிழமை இல்லாவிட்டால் கூட, மதர்ஸ்-டே, ஸிஸ்டர்ஸ்-டே, காஃபி-டே, மன்னா டே என்று எத்தனையோ ’டே’ இருக்கே!”
இந்த உத்தியை இந்த ஏகலைவனுக்குக் கற்றுக்கொடுத்த துரோணர் அவர். தீட்டிய மரத்தில் கூர் பார்க்கும் காரியத்தையும் நான் செய்திருக்கிறேன்.

ஒரு சமயம் கல்கியில் நகைச்சுவை மலரைத் தயாரிக்கும் பணியை ராஜேந்திரன் அவர்கள் என்னிடம் ஒப்படைத்தார். அதில் குருநாதர் பாக்கியம் ராமசாமி அவர்களின் கதை ஒன்றைப் போட விரும்பி எழுதித் தரும்படி அவரிடம் வேண்டிக்கொண்டேன். வேலை நெருக்கடி காரணமாக அவரால் குறித்த தேதிக்குள் எழுதித்தர இயலவில்லை. ஆனால் நான் மனம் தளரவில்லை. நானே .அப்புசாமி கதை’ ஒன்றை அவர் பாணியில் எழுதி வெளியிட்டுவிட்டேன்.

நான் நன்றாக வளரவேண்டும், அதுவும் 2012 ல் அப்புசாமி நகைச்சுவை விருது பெறும் தகுதியை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்திலோ என்னவோ, அவர் பாராட்டினார்.


பல ஆங்கில எழுத்தாளர்களையும் நான் விடவில்லை. பியர் டேனினாஸ் என்ற ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்  LIFE WITH SONIA என்று ஒரு பயங்கர நகைச்சுவை புத்தகத்தை ஃப்ரெஞ்சு மொழியில் எழுதியிருந்தார் . அதன் ஆங்கில மொழிபெயர்ப்பு எனக்குக் கிடைத்தது. சுமார் அறுபது வருஷத்துக்கு முன்பு எழுதப்பட்ட அந்த புத்தகம் தான், என் கமலா கதைகளுக்கு இன்ஸ்பிரேஷன்.

’பஞ்ச்’ பத்திரிகையின் ஆசிரியர் டக்ளஸ் ஜெரால்ட் சுமார் 165 வருஷத்திற்கு முன்பு எழுதிய MRS CAUDEL'S CURTAIN LECTURES என்ற புத்தகத்தைப் படித்தபோது, அப்படியே அதை தமிழ் சூழலில் எழுதலாம் என்று தோன்றியது. 'அம்புஜத்தின் அர்ச்சனைகள்' என்ற தலைப்பில் ஏழு அத்தியாயங்கள் எழுதினேன். இது மாதிரியே DIARY OF NOBODY என்ற சென்ற நூற்றாண்டு வெளியான புத்தகம் பிரமாதமான நகைச்சுவையுடன் இருந்தது.  GROSSMAN என்பவர் எழுதியது. அவர் எழுதியது அந்த ஒரு புத்தகம் மட்டும் தான்! அதைப் படித்துக் கொண்டிருக்கும்போதே மனதில் 'சாமண்ணாவின் டயரி' என்ற நாவலை உருவாக்கிவிட்டேன்.

இவைகளை எல்லாம் என் பெருமைக்காக மட்டுமல்ல, நல்ல நகைச் சுவை காலத்தைக் கடந்து நிற்கும் என்பதற்காகவும் சொன்னேன்.
சாவி அவர்களைப் பற்றி மதிப்பிற்குரிய சிவசங்கரி அவர்கள் பேச இருப்பதால் ஒரே ஒரு குட்டித் துணுக்கை மட்டும் கூறுகிறேன்.
ஒரு சமயம் சாவி அவர்களும், அப்போது விகடனில் உதவி ஆசிரியராக இருந்த ஜே.எம்.சாலி அவர்களும் வெளிநாடு போக திட்டமிட்டார்கள். முதல் பிரச்சினை விசா தான். சாவி சொன்னார் – ”இந்த விசா விஷயம் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. என்னைத் திருப்பிப் போட்டால் – விசா!...  சாவி .....விசா” என்றார். தொடர்ந்து ”உனக்கு மட்டும் என்ன?  ஒரு எழுத்தை மாற்ற வேண்டி இருக்கும். அவ்வளவுதான்.. சாலி … சாவி.” இந்த மாதிரி வார்த்தை விளையாட்டுகள் அவருக்கு கைவந்த கலை.


மற்றொரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். ஜோக்கில் புதிய ஜோக், பழைய ஜோக் என்று எதுவும் கிடையாது. ஒரு ஜோக்கை அதுவரை  நீங்கள் கேட்டிருக்கவில்லை என்றால் அது புது ஜோக்.

இப்போது ஒரு புது ஜோக் சொல்கிறேன்.

 மாலை நேரம் ஒரு தெருவில் நிறைய பையன்கள் விளயாடிக் கொண்டிருக்கிறார்கள். வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து, பையன்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர், நன்றாக விளையாடிக்  கொண்டிருந்த  ஒரு பையனைக் கூப்பிட்டு ”உன் பேர் என்னடா பையா?” என்று கேட்டார்.

அவன் ”என் பேர். சார்.. மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி..” என்றான். ”அட’’அப்படியா தம்பி? உனக்கு காந்தி யாருன்னு தெரியுமா?” என்று கேட்டார்.

“காந்தி யாருன்னு தெரியாது, சார்.”

“ சரி போகட்டும், காந்திதான் தெரியலைன்னு சொல்றே.. நேரு யாருன்னு தெரியுமா” என்றுகேட்டார்.

“நேரு தானே சார்,, தெரியுமே… இப்ப அதுக்கென்ன?” என்று கேட்டான்.

“நேரு யாருன்னு சொல்லு”

”நேருவா?,,,,, டேய்  நேரு,, டேய், வாடா இங்கே,.. அதோ இருக்கானே அவன் என் தம்பி, சார். அவன் தான் நேரு” என்றான்.

இது எப்படி இருக்கு?

இந்த ஜோக் சுமார் 100 வருஷப்பழசு.  அமெரிக்காவில் அந்த காலத்தில், நம் ஊர் தெருக்கூத்து மாதிரி  VAUDEVIILE நிகழ்ச்சிகளில் வந்த ஜோக் இது! ஒரிஜினல் ஜோக்கில் ஆபிரகாம் லிங்கன். ஜியார்ஜ் வாஷிங்டன் என்று இருந்ததாக நினைவு. உங்களில் பலர் சிரித்தார்கள். அவர்களைப் பொருத்தவரை இது புது ஜோக்!
நம் எல்லார் வாழ்க்கையிலும் அனுபவங்களிலும் இப்படி ந்கைச்சுவை இருந்து கொண்டுதான் இருக்கிறது. வெங்காய் சருகு மாதிரி மெல்லிய போர்வையைப் போர்த்திக் கொண்டு. சட்டென்று புலப்படாமல் விரவி இருக்கிறது, என் வாழ்க்கை அனுபவத்தை கொஞ்சம் மசாலா போட்டுச் சொல்கிறேன்.
 
 ஒரு சமயம்  என் மாமனார் டில்லிக்கு வந்திருந்தார். சாந்தினிசௌக் சண்டே மார்க்கெட் மிகவும் பிரபலம். டில்லிக்குச் சுற்றுப்பயணம் வருபவர்கள், சாந்தினிசௌக் மார்க்கெட்டில் சூப்பராய் காட்சி அளிக்கும் - ஆனால் உண்மையிலேயே சர்வ அடாஸ் பொருளை- வாங்கி ஏமாறுவார்கள். தாம் பெற்ற ஏமாற்றம் பெறுக இவ்வையகம் என்ற கொள்கையின்படி மற்றவர்களிடம் தாங்கள் வாங்கிய பொருளை பற்றி ஆஹா, ஓஹோ என்று பெருமை அடித்துக்கொள்வார்கள். அவர்கள் வாங்கிய பொருளை பற்றி பெருமை அடித்துக்கொள்ள முடியுமே தவிர உபயோகிக்க முடியாது!

சாந்தினி சௌக்கிற்கு போகாவிட்டால் ஏதோ தெய்வ குற்றம் என்கிற மாதிரி ரயிலைவிட்டு இறங்கியதும் இறங்காததுமாக என் மாமனார் 'மாப்பிள்ளை, முதல் வேலையாக என்னை சாந்தினிசௌக் அழைத்து போங்க. மற்ற இடமெல்லாம் பார்த்தாலும் ஒன்று தான்,பார்க்காவிட்டாலும் ஒன்று தான்' என்றார். அவ்ர் சொன்னதை நான் மனைவியிடம் சொல்லிவிட்டு "இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. இன்றைக்கே அழைத்துக்கொண்டு போகிறேன் என்ன வேண்டுதலோ என்னவோ!" என்று சொன்னேன்.

"ஏன், உங்கமாவை அழைச்சிண்டு போனபோது இப்படி கேட்கலை. உங்க சித்தப்பா பொண்ணு பயங்கர பாமா, பெரியப்பா பிள்ளை 'ரம்மி' ராமசாமி, உங்க அக்கா பேரன் 'வால்' வரதுக்குட்டியை அழைச்சிண்டு போனீங்களே, அதெல்லாம் அவங்க வேண்டுதலா, இல்லை உங்க வேண்டுதலா?" என்று ஆரம்பித்து என் அருமை மனைவி கமலா சொன்ன பழிப்புரையை பொழிப்புரையாக எழுதினாலும், அனுமார் வால் மாதிரி நீண்டு கொண்டே போகும்!
அடுத்த காட்சி:
இடம்: சாந்திசௌக். மாமனாரும் வாய் செத்த மாப்பிள்ளையான நானும் நடைப்பாதைக் கடையில் பேரம் நடத்திக் கொண்டிருக்கிறோம்

"மாப்பிளை, இந்த ஏர் -பேக் நல்லா இருக்கு. இதுமாதிரி கிட்டன் வாங்கிண்டு வந்தான். என்ன விலை கேளுங்கோ" என்றார் மாமனார். அவருக்கு ஹிந்தி தெரியாது என்பதாலும், அந்தப் பொருளுக்கு விலை படிந்தால் பணம் கொடுக்க வேண்டியது நான் என்பதாலும் விலை கேட்கும்படி சொன்னார். "ஏக் ஸௌ பச்சாஸ். ஏக் தாம்" என்று கடைக்காரர் சொல்லிவிட்டு, காதில் வைத்திருந்த பீடியை எடுத்து புகைக்க ஆரம்பித்தான்.

"என்ன சொன்னான்? ஒரு இழவும் புரியலையே" என்றார் மாமனார்
”கொஞ்சம் ஜாஸ்தியாக சொல்ற மாதிரி இருக்கிறது 150 ரூபாய் சொல்கிறான்” என்று பயந்து பயந்து சொன்னேன். என்னவோ நான்தான் அதிக விலை சொல்லுவது போல் நினைத்துக்கொண்டு
என் மாமனார் "என்னது 150 ருபாயா ? கிட்டன் 30 ருபாய்க்கு வாங்கிண்டு வந்தான்..."என்றார் மாமனார்

"எப்போது" என்று கேட்கவில்லை. மாமனார் தொடர்ந்து "சரி போகட்டும். விலைவாசி எல்லாம் ஏறிண்டே இருக்கு. ஒரே விலை கேளுங்கோ, 38 ரூபாய்க்கு தருகிறானா என்று" என்றார்.

இதை கேட்டதும் என் நாக்கு உலர்ந்துவிட்டது வாயை திறக்க முயற்சித்த போது என் முதுகில் யாரோ டின் கட்டுவது போல் பிரமை ஏற்பட்டது!

முற்பகல் அவரது பெண்ணை திருமணம் செய்துக்கொண்டதால், இப்போது பிற்பகல் விளைகிறது! விதியை நொந்துக்கொண்டு மெதுவாகக் கடைக்காரரிடம் "ஒரே விலை கேட்க சொல்லுகிறார். 35 ரூபாய்க்கு தரமுடியுமா?" என்று ஹிந்தியில் கேட்டேன். உடனே கடைக்காரர் தன் மூன்றாவது கண்ணை திறந்துக்கொண்டு பேச... அதாவது கத்த ஆரம்பித்தார்.
"என்னையா நான் என்ன திருடிக் கொண்டுவந்த பொருளையா விக்கறேன்? உனக்கு நாக்குல நரம்பு இருந்தா இப்படி கேட்பியா ? மூளை, கீளை இருக்குதா? சரியான பைத்தியக்காரனா இருக்கே. சாவு கிராக்கி" என்பது போன்ற பல ஹிந்தி வசவுகளை மளமளவென்று அடுக்கி, என்னை வைது தீர்த்தான்
"மாப்பிளை, என்ன சொல்றான்?" என்று மாமனார் கேட்டார்
"கொடுக்க முடியாதாம். திட்டறான்."
"என்ன திட்றான்? காரே புரே என்று ஹிந்தியில் ஏதோ கத்தினான். புரியலையே!"
விதி! அவனிடம் வாங்கிய திட்டுகளை செந்தமிழில் மொழிபெயர்த்து சொன்னேன்!
"அவன்ந்து என்னைத் திட்டறான், முட்டாள், அயோக்கியன் சாவு கிராக்கி, கஸ்மாலம்னு"
"என்னது நாலு திட்டுதானா? அவன் ஐந்து சொன்ன மாதிரி இருந்தது" என்று மாமனார் சொன்னார். மாப்பிளை வாங்கிய திட்டுகளை முழுமையாக தெரிந்துகொள்ளுவதில் அவருக்கு அவ்வளவு ஆர்வம்! விட்டு போன திட்டை சொன்னதில் அவருக்கு முகத்தில் திருப்தி ஏற்பட்டது!
சட்டென்று முகத்தை கடுமையாக்கிக்கொண்டு, "அவன் அப்படி திட்டினதும், பதிலுக்கு அவன் கிட்ட "ஏண்டா, 30-40 ரூபாய் சாமானுக்கு 150 ரூபாய் கேட்கிறது கொள்ளை இல்லையான்னு' உறைக்கிற மாதிரி கேட்கறது. ஹும், உங்களுக்கு ஒண்ணும் பவிஷு போறாது" என்றார். அதை தொடர்ந்து அவர் செய்த அர்ச்சனைகளை எல்லாம் சொன்னால் எனக்கு அவமானம், ஏர் பேக் வாங்காமல் திரும்பி விட்டோம்.

ஏர் பேக் வாங்காமல் ஊருக்குப் போய்விட்ட மாமனார், ஒரு வாரம் கழித்துக் கடிதம் எழுதினார். "மாப்பிளை, அந்த ஏர் பேக் இங்கே 200 ரூபாய்க்கு விற்கிறது. அதனால் அவன் சொன்ன 150 ரூபாய் விலை பரவாயில்லை. ஒண்ணு வாங்கி அனுப்புங்கள்" என்று எழுதிவிட்டார். மறுபடியும் சாந்தினி சௌக் போய் கேட்டபோது, ”ஒரே விலை 200 ரூபாய்” என்று சொன்னான். பேசாமல் 200 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொண்டு வந்து, கமலாவிடம், "150 ரூபாய்க்கு தரமாட்டேன் என்றான் கடைக்காரன். அடித்து பேசி வாங்கிவந்துவிட்டேன்" என்று ஜம்பம் அடித்துக் கொண்டேன்!
இந்த சின்ன அனுபவத்தை இன்னும் நீட்டிக் கொண்டே போகலாம்.
கிட்டதட்ட இந்த மாதிரி அனுபவம் உங்கள் எல்லாருக்கும் ஏற்பட்டிருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை!

என் உரையை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன். அனைவருக்கும் ,முக்கியமாக என் குருநாதர் பாக்கியம் ராமசாமி அவர்களுக்கும், நிகழ்ச்சிக்கு வந்து என்னைக் கௌரவித்த உங்கள் அனவருக்கும் நன்றி... அதோ ஒருவர் கை தூக்குகிறார்.. அவர் என்ன கேட்கப்போகிறர் என்பது எனக்குத்  தெரியும்
குருநாதர் ஏன்று ஒரு தரம் சொல்லிவிட்டீர்கள். போதாதா? வார்த்தைக்கு வார்த்தை குருநாதர், குருநாதர் என்று சொல்லவேண்டுமா? என்ற கேள்வி அவர் முகத்தில் தெரிகிறது  அதற்குப் பதில் சொல்லிவிடுகிறேன். பாக்கியம் ராமசாமியின் பல உத்திகளை நிறைய காபி அடித்து எழுதி இருக்கிறேன். அதனால்தான் அந்தக் குற்றமுள்ள நெஞ்சு இப்போது குறு குறு (குரு குரு!) என்கிறது!
வணக்கம்!

5 comments:

  1. ஆஹா.. நேரில் கேட்கக் கொடுத்துவைக்கவில்லை, படிக்கும் கொடுப்பினையைத் தந்த உங்களுக்கு நன்றி! முழுக்க மற்றவர்களைப் பற்றியே பேசினீர்களோ என்று நினைத்தேன், கடைசியில் சொந்த நகைசுவை வந்ததும் சந்தோஷம்!
    கடைக்காரரின் ஐந்தாவது திட்டை மாமனார் கேட்டு வாங்கியதை நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்.
    மற்றவர்களின் inspiration என்று இவ்வளவு அப்பாவியாக ஒப்புக்கொண்டு, இப்படியும் நல்லவங்க இருப்பாய்ங்களா என்று சொல்ல வைத்துவிட்டீர்கள்.
    நீங்கள் எழுதிய அப்புசாமி கதை படிக்க இங்கு வெளியிட முடியுமா?

    -ஜெ.

    ReplyDelete
  2. முரளி சேஷன்March 20, 2013 at 7:49 PM

    'நீங்கள் பாககியம் ராமசாமியின் நகைச்சுவையைப் பற்றி எழுதியது அருமை. கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.

    ReplyDelete
  3. Superb sir!! "K(g)uru kuru" cherry on the cake!!

    ReplyDelete
  4. தமிழோ, ஆங்கிலமோ... 50 வருடம், 100 வருடம் பழைய புத்தகங்களைப் படித்துக்கொண்டு, அதையே பேசி, அதே பழைய பானியில் எழுதிக்கொண்டு காலத்தில் உறைந்துபோய் இருக்கிறீர்கள். உங்கள் பிளாக், புத்தகம், கதை, கட்டுரை எதையாவது 50 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் ரசித்துப் பார்த்திருக்கிறீர்களா? இன்றைய மனிதனால் வாஷிங்டனில் திருமணம் மாதிரிப் புத்தகங்களை ரசிக்க முடியாது-- சிறு வயதில் ரசித்தவர்களையும் சேர்த்துச் சொல்கிறேன். அப்புசாமி கூட அப்படித்தான். 30 வருடம் முன்பு ரசிக்க முடிந்தவர்களால் கூட இன்று சகிக்க முடியாது. இதையெல்லாம் இன்னும் பேசிக்கொண்டு கடந்த காலத்திலேயே வாழ்ந்து கொண்டு இர்ரெலவன்ட் ஆகிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை விரைவில் உணர்ந்து கொண்டால் நல்லது. இல்லையேல் நீங்கள் சிரிக்கும்போது சிரிக்க ஆள் இருக்காது. Move on... for God's sake...!

    சரவணன்

    ReplyDelete
  5. ஆகா... அருமை ஐயா... உரையை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி... வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!