July 24, 2014

தாத்தாவின் புகழ் பெற்ற சுருட்டு-ராஸ்டன்


அமெரிக்க எழுத்தாளர்  லியோ ராஸ்டன்  நகைச்சுவைப் பொன்மொழிகள், குட்டிக்கதைகள், நாவல்கள், வாழ்க்கை வரலாறுகள் தவிர நிறைய கட்டுரைகளும்  ஹாலிவுட்டில் 5, 6 திரைப்படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு ’புக்-சேலி’ல்  இவர் எழுதிய Passion and Prejudices என்ற புத்தகத்தை வாங்கினேன். அந்த புத்தகத்தில் இருந்த ஒரு  கட்டுரையைத் தமிழில் தருகிறேன். அவர் கொடுத்திருந்த தலைப்பு: THE CIGAR: A FERVENT FOOTNOTE TO HISTORY
----------------------------------
கட்டுரையைப் படிக்க ஆரம்பிக்குமுன் ஒரு சுவையான துணுக்கு. இந்த புத்தகத்தை  நான் வாங்கிய விலை: 15 சென் ட்டுக்கும் குறைவு (ரூ.10). பிறகு ஒரு நாள், ராஸ்டனின் மற்ற புத்தகங்கள் ஏதாவது வாங்கலாமா என்று வலை வீசினேன்.  
1978–ல்  வெளியான  Passion and Prejudices புத்தகத்திற்கு  (புதுப் புத்தகம் -முதல் பதிப்பு)  ஒரு புக் ஸ்டோர் வைத்திருந்த  விலை:(படத்தைப் பார்க்கவும்!)  அதிர்ச்சி அடையாதீர்கள்: டாலர் 3272.97.  தபால் கட்டணம்  தனி!
-------------------------------------
இனி சுருட்டுக் கட்டுரைக்குப் போகலாம். சிகரெட் பிடிப்பவர்களின்  சிகரெட் மோகத்தை( அல்லது வெறியை)  புகை பிடிக்காதவர்களால் அறிந்து கொள்ள முடியாது. என் பதினாறாவது வயதிலிருந்து தினமும் ஒரு பாக்கெட் பிடித்து வந்தேன். இப்போது அந்த பழக்கத்தை உதறித் தள்ளி விட்டேன்.

  புகையிலையின்  மோகத்தை நான் நன்கு அறிவேன் அதன் பிடியில் அகப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் மீது எனக்கு உள்ள அனுதாபம் ஆழமானது.
    இரண்டாம் உலகப் போரின் போது- அதாவது 40 களில்-  நடந்த சம்பவம் சிகரெட் வெறி தொடர்பானது.
    ராபின் என்பவர் அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மென்டில் உயர் அதிகாரி. (இது அவருடைய உண்மையான பெயர் இல்லை. அவரது பேரன், பேத்தி எவராவது இந்தக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தால் மனவருத்தம் அடைவார்கள் என்பதால் பெயரை மாற்றி உள்ளேன்.
    ராபின், பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் படித்துத் தேறி ஸ்டேட்  டிபார்ட்மென்டில் வேலைக்குச் சேர்ந்தான். சாதாரண எழுத்தர் வேலைதான். இருந்தாலும் அதில் அவன் தன் செயல் திறமையையும், மொழித் திறமையையும் காட்டி மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெற்றான். 

July 18, 2014

ஒரு வேண்டுகோள்!

அன்புடையீர், 

வணக்கம். என் வலைப்பூவிற்கு தவறாது வருகை புரிந்து, நான் போடும் பதிவுகளைப் படிக்கும் உங்கள் அனைவருக்கும் என் நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன், ” உங்களுக்கு அல்லவா நாங்கள்  THANKS   சொல்ல வேண்டும்?” என்று உங்களில் சிலர் கேட்கக் கூடும்.
நீங்கள் வலைப்பூவிற்கு வந்து என் பதிவுகளைப் படிக்கிறீர்கள் என்பதே என்னைச்  சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. உங்கள் பின்னூட்டங்கள் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, எனக்கு இரண்டுமே பாதிப்பை ஏற்படுத்தாது. 

சிலசமயம் FEEDJIT- ஐப் பார்ப்பேன்.  உலகின் எங்கெங்கோ உள்ளவர்கள் பதிவுகளைப் படிக்கிறார்கள் என்பதே எனக்கு உந்து சக்தியாக செயல் புரிகிறது. பல சமயம்  பெயரே கேள்விப்படாத ஊராக இருக்கிறது. அந்த ஊர்/ நாடு எங்கிருக்கிறது என்று கூகுள் மேப்பில் தேடிப் பார்க்க வேண்டி இருக்கிறது! தமிழ்ப் பதிவுகளைத் தேடிப் படிக்கும் அவரது ஆர்வத்தைக் கண்டு வியக்கிறேன். பிழைப்புக்காக  எங்கோ ’டிம்பக்டூ’விற்குப் போனாலும் அந் தமிழரின்  ஆர்வம், ரசனை, ஈர்ப்பு  எல்லாம்   தமிழ் நாட்டிலும், தமிழ் இலக்கியம், கலை ஆகியவைகளில் தான் உள்ளன. 
அவர்  ஒருவருக்காகவாவது   வலைப்பூவில் ஒழுங்காகப் பதிவுகளைப் போட போடவேண்டும் என்று என் மனம் அறிவுறுத்துகிறது! முக்கியமாக அவருக்கு ஒரு ஸ்பெஷல் ’தேங்க்ஸ்’ சொல்லுகிறேன். 

பதிவுகள் போட என் பழைய நோட்டுப் புத்தகங்களை எடுத்துப் படிக்கிறேன். புதிதாகப் பல (பழைய!) புத்தகங்களை வாங்கி இரவு பகலாகப் படிக்கிறேன். நோட்டுப் புத்தகம், நோட்டுப் புத்தகமாகக் குறிப்புகளை எழுதி வைத்துக் கொள்கிறேன்.
காலையில் கண் விழிக்கும்போது, ’இன்று எந்தெந்த புத்தகங்களைப் படிக்க வேண்டும், எவற்றைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும், மொழி பெயர்க்க வேண்டும்’ என்று உத்தேசமாக திட்டமிடச் செய்கிறது வலைப்பூ பணி. இந்த ‘நிர்ப்பந்தம்’ என்னைச்    சோம்பேறித்தனமின்றி  செயல்பட வைக்கிறது. இதன் காரணமாக அதிக பலன் அடைபவன் நான்தான்.
ஒரு பொன்மொழி நினைவுக்கு வருகிறது: ”யார் கஞ்சன்? தான் படித்தவற்றை, ரசித்தவற்றை, அறிந்துகொண்டவற்றைப் பிறருக்குச் சொல்லாமல், பிறருடன் பகிர்ந்து கொள்ளாமல் வைத்திருப்பவன்தான் மகா கஞ்சன்!”. நான் வள்ளலாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை; கஞ்சனாக இருக்க விரும்பவில்லை!
நான் எழுதும் பல  விஷயங்கள், தகவல்கள், என் வலைப்பூவில் போடும் பொன்மொழிகள் எல்லாம் புதியவை என்று கூறமுடியாது. உங்களில் பலர் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்; படித்திருப்பீர்கள். சிலருக்காவது உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

EMERSON-னின் ஒரு பொன்மொழியைத் தருகிறேன் : What I need is someone who will make me do what I can. அதைத்தான் நீங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள். அதற்காகத்தான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்!

நிற்க, உங்களிடம் ஒரு வேண்டுகோள். சமீபத்தில் எனக்கு வந்த மூன்று கடிதங்கள்தான் இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.  மூன்று பேர் எழுதியுள்ள கடிதங்களிலும் உள்ள முக்கிய வரிகள்: ”உங்கள் வலைப் பூவை இன்றுதான் தற்செயலாகப் பார்த்தேன்.”, மற்றும், “முதல் பதிவிலிருந்து மூச்சு விடாமல் படித்துக் கொண்டு இருக்கிறேன்...”.

இந்த வலைப்பூ உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர் ஒருவருக்குத் (ஒரே ஒருவருக்குத்) தெரிவியுங்கள். படிப்பதும் படிக்காததும் அவர் இஷ்டம். என் வாசகர் வட்டத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்ற காரணத்தால் (அல்லது ஆசையால்) நான் இதைக் கூறவில்லை.
இந்த வலைப்பூவிற்கு ஒரே  ஒரு வாசகர் இருந்தாலும் எனக்கு ஆர்வம் குறையாது.

அந்த ஒரே வாசகர் நானாக இருந்தாலும் கூட! வலைப்பூவில் எழுதுவது எனக்கு உற்சாகமூட்டும் பணி.
மீண்டும் நன்றி கூறுகிறேன்.
-கடுகு

பி.கு: அடுத்த பதிவை விரைவில் போடப் பார்க்கிறேன்.

July 10, 2014

குட்டிப் பதிவுகள் திரட்டு!

1.இரண்டு கொடுத்தீங்களே

More Random Acts of kindness என்ற புத்தகத்தில் படித்தது

"என் நண்பர் (பெயர் தாமஸ் என்று வைத்துக் கொள்ளலாம்.) டாமினிகன் குடியரசு நாட்டில் Habitat for humanity என்ற தொண்டு நிறுவனத்தில் சேவை செய்து கொண்டிருந்தார். அச்சமயத்தில் Etin என்ற சிறுவனுடன் நட்பு ஏற்பட்டது. எடின் மகா ஏழைக் குடும்பத்தைச்சேர்ந்தவன். ஒரு கிழிந்த அழுக்கான சட்டையைத்தான் அவன் எப்போதும் அணிந்திருப்பான்.

ஒரு நாள் தாமஸ் தன் அலுவலகத்தை ஒழுங்கு செய்த போது ஒரு பெரிய பெட்டியில் துணிமணிகள் இருந்ததைப் பார்த்தார்.  அதில் எடினின் அளவுக்கு ஏற்றபடி சட்டைகள் இருந்தன. ஒரே மாதிரி டி-ஷர்ட்கள். அவற்றிலிருந்து இரண்டு சட்டைகளை எடுத்து அந்தப் பையனுக்குக் கொடுத்தார்.
அந்த சட்டையை எடின் மகிழ்ச்சியுடன் போட்டுக்கொண்டான்.  அந்த சட்டையில்தான் அவன் எப்போதும் அவரைப் பார்க்க வருவான்.

ஒரு நாள் என் நண்பர் வெளியே சென்றபோது வழியில் ஒரு சிறுவனைப் பார்த்தார்.   எடினுக்கு இவர் கொடுத்த சட்டையை அந்தப் பையன் போட்டுக்கொண்டிருப்பதைக் கவனித்தார்.

சில நாள் கழித்து எடின் அவரைப் பார்க்க வந்த போது அவனிடம்  “ஷர்ட்டை உனக்குத்தானே கொடுத்தேன்? வேறு யாரோ ஒரு பையன் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தேனே” என்று கேட்டார்.

அவரைக் கேள்விக்குறியுடன் பார்த்தபடி, எடின் ”ஆமாம் சார்.... நீங்க எனக்கு ரெண்டு ஷர்ட்டு கொடுத்தீங்களே. மறந்துட்டீங்களா?” என்று கேட்டான்.

”அந்தக் கேள்வி என்னை உருக்கி விட்டது” என்று கண்கலங்கியபடி எங்களிடம் கூறினார் தாமஸ்."



2. பால் பாயின்ட் பேனாவிற்காக ஒரு சட்டம்.

 ரூஸ்வெல்ட் அதிபராக இருந்தபோதுஅமெரிக்க அரசு ஒரு விசித்திர சட்டம் 1958-ல் இயற்றியது,
 அரசு அலுவலகங்ளின் தேவைகளுக்கு, பார்வையற்றவர்களைக்கொண்ட அமைப்புகள் தயாரிக்கும் பொருட்களைத்தான்  வாங்க வேண்டும் என்ற சட்டம் இயற்றியது. அப்படி வாங்கவேண்டிய  பொருட்கள்  பட்டியலில் அவ்வப்போது மேலும் சில  பொருட்கள்  சேர்க்கப்படும்

1952ல்   சேர்க்கப்பட்ட ஒரு பொருள் பால் பாயின்ட் பேனா. ஸ்கில் க்ராப்ட் என்ற கம்பெனியின் தயரிப்பு. அந்த கம்பெனியில் பணிபுரிபவர்கள் 5500 பேர். அனைவரும் பார்வையற்றவர்கள்.  வருடத்தில் சுமார் 5 மிலியன் டாலர் மதிப்பு பால் பாயின்ட் பேனாக்கள் அந்த கம்பெனி சப்ளை செய்கிறது. ஒபாமா அலுவலகத்தில் கூட இந்த பேனா தான். (ஆதாரம்: ரீடர்ஸ் டைஜஸ்ட்)

June 29, 2014

அன்புடையீர்

அன்புடையீர்,

வணக்கம். தவிர்க்க முடியாத காரணங்களால் அடுத்த பதிவு சற்று தாமதமாக  வரும்.

பதிவுக்குக் கட்டுரைகள் நிறைய எழுதி வைத்துள்ளேன். தட்டச்சு செய்ய அவகாசம் தேவைப்படுகிறது.

-அன்புடன் கடுகு

June 20, 2014

கமலா ஸ்வீட்ஸ் அண்டு ஸ்நாக்ஸ்


 அரசு  செலவில், தமிழ்நாடு சுற்றுலா வாரியத்தின் தயவில், எழுத்தாளன் என்ற முறையில் கிடைத்தது பல சுற்றுலா இடங்களுக்கு அழைத்துக் கொண்டுபோய் காட்டினார்கள். ஒரு வார ஓசிப் பயணம். தமிழ்நாட்டுச்  செல்வங்களைக்  “கண்டுகளிக்க  வாருங்கள்'' என்று அவர்கள்  எழுதிய கடிதத்தை எங்களில்  பலர்  "உண்டு களிக்க வாருங்கள்' என்று படித்திருக்க வேண்டும். அரசாங்க உத்தரவாக அதை  எண்ணிசிலர்  பயணத்திற்குச்  சில  நாட்கள் முன்பிருந்தே  உண்ணாவிரதம் இருந்து  தங்களைத்  "தயார்' படுத்திக்  கொண்டு  வந்திருந்தார்கள்!

ஒரு வாரம் போனதே தெரியவில்லை. பயணத்தை முடித்துக் கொண்டு உற்சாகமாக வீடு திரும்பி காலிங்  பெல்லை அழுத்திய போது, சுற்றுலாவில் ஏற்பட்ட சந்தோஷம், உற்சாகம், நிம்மதி எல்லாம் ரேஷன் கடை பாமாயில் போல மாயமாய்ப் போய் விட்டன. காரணம், என் வீட்டு ஹாலில், என் அருமை மைத்துனன் தொச்சு...!

கஷ்டங்கள் தனியே வராது. தொச்சு வந்தாலும் அப்படித்தான். போனஸாக அவன் மனைவி கீச்சுக்குரல் அங்கச்சியையும் பசங்களில் ஒரு நாலைந்தையும் அள்ளிப் போட்டுக் கொண்டு வருவான். ஒவ்வொருவரும் ஒரு தனித் தன்மையுடன் தொல்லை தருவார்கள்! அதுதான் தொச்சு குடும்பத்தின் ஸ்பெஷாலிடி!

இது 3-டி படம். கலர் கண்ணாடி போட்டுப் பார்க்கவும்.
போதாததற்கு வீடு முழுவதும் மிளகாய் வறுத்த நெடி. மூக்கை உண்டு இல்லை என்று பண்ணியது. ஒரே எரிச்சல் ஏற்பட்டது.

கமலா தலை கலைந்து முகமெல்லாம் வியர்த்து ஹாலுக்கு வந்தாள். வலது கை விரல்களில் ஏதோ மாவு ஏகமாக ஒட்டிக் கொண்டிருந்தது. (பவுடரை முகத்தில்தான் அப்பிக் கொள்வாள். கையில் அப்பிக் கொள்ளமாட்டாளே...?)

வாங்கோ... எப்படியிருந்தது டூர்...? நாளைக்குத்தானே வரணும் நீங்க...'' என்றாள்

ஆமாம்.... இதென்ன கையெல்லாம்...? வீடு ஏதோ மிளகாய்ப் பொடி ஃபாக்டரி மாதிரி இருக்கிறது.. சமையலறையில் எண்ணெய் காயற வாசனை... கைமுறுக்கு பண்ணிண்டு இருக்கீங்களா?'' என்று கேட்டேன்.