May 28, 2014

தொச்சு போட்ட சோப் -கடுகு

வீட்டினுள் நுழைந்தபோதே சமையலறையிலிருந்து தொச்சுவின் குரல் கேட்டது. என் முகத்தில் விழிக்காதே என்று சில வாரங்களுக்கு முன்பு அவனைக் கோபித்து அனுப்பியிருந்தேன்.  அதனால்தானோ என்னவோ, நான் இல்லாத சமயம் பார்த்து வீட்டிற்குள் (அதாவது சமையலறைக்குள்) படை எடுத்திருக்கிறான். உள்ளே படையலும் நடந்து கொண்டிருக்கும்!

அருமை அம்மாவிற்கும் அக்காவிற்கும் சோப் போட்டு விட்டு. பையிலும்  (தொப்பையிலும்) நிரம்பிய பிறகு, கையிலும் வாங்கிக் கொண்டு போவான். ஆகவே என்ன சோப் போடுகின்றான் என்றுகேட்க, பூனை போல் வீட்டிற்குள் நுழைந்தேன்.

என் மாமியார், ஆமாண்டி, கமலா, உழைச்சாத்தான் லாபம், லாபம் மட்டுமில்லை, நமக்குக் கிடைக்கிற பொருளும் உசத்தியாக இருக்கும்.... அப்ப என்னடா சொல்றே...நம்ப வீட்டிலேயே செய்யலாம்னு சொல்றியா? என்று கேட்டாள்.

வீட்ல செய்யக் கூடியது என்பதால்தானே டிவியிலே சொன்னாங்க...அக்கா எல்லாத்தையும் குறிச்சுக் கொடுத்தாள். நானும் மார்க்கெட்டெல்லாம் அலைஞ்சு எல்லாச் சாமானும் எங்கெங்கே கிடைக்கறதுன்னு கண்டு பிடிச்சுட்டு வந்தேன். ஆட்டோவிற்கே நூறு ரூபாய்க்கு மேலே ஆயிடுத்தே?என்றான் தொச்சு.

“நூறு ரூபாய்தானேடா... நான் தறேன்...என்று கமலா சொன்னதும்...

“போதும் அக்கா...இதுக்கெல்லாம் போய் உன்கிட்ட பணம் வாங்கிப்பேனா?... போன வாரம் கூட பம்பாய்க்கு போன் பண்ணதுக்காக நூறு ரூபாய் கொடுத்தே...

தொச்சு சொல்வதைக் கேட்ட போது எனக்கு ஒரே எரிச்சல். அதே சமயம் குழப்பம். இவர்கள் என்ன திட்டம் போடுகிறார்கள். என் அருமை சதி, பதிக்கு எதிராக என்ன சதி செய்கிறாள் என்று புரியவில்லை.

தொச்சு...இன்னும் ஒரே ஒரு தோசை போடறேண்டா...என்று மாமியார் கெஞ்சலாகவும் கொஞ்சலாகவும் சொன்னதும், சமையலறையில் நிசப்தம் நிலவியது. தொச்சுவின் வாய்க்கு வேறு வேலை கிடைத்து விட்டதே!

“என்ன கமலா...யாரு வந்திருக்கிறது, உன் தம்பிக்காரனா?என்று வார்த்தைகளைப் பாவக்காய் ஜூஸில் தோய்த்துக் கேட்டேன்.

May 20, 2014

அஞ்சறைப் பெட்டி


படித்தது, பார்த்தது, ரசித்தது, 
                   சிரித்தது, கேட்டது, திரித்தது 
                           என்று சில குட்டித் துணுக்குகள்!

1.சில பதிவுகளுக்கு முன்பு GONE WITH THE WIND புத்தகத்தைப் பற்றி குட்டித் துணுக்குப் போட்டிருந்தேன். அதே தகவல் இரண்டு நாளுக்கு முன்பு வெளியான  READER'S DIGEST  பத்திரிகையில் வெளியாகி உள்ளது!
சுட்டி: : GONE WITH THE WIND

2. மணற்கொள்ளை என்பது ஆற்று மணலை சட்டவிரோதமாக அள்ளிச் செல்வதைக் குறிக்கும்.  ஜமைக்காவில் ஒரு பகுதியில்    பிரம்மாண்டமான கட்டடங்களைக் கட்டிக் கொண்டிருக்கிறது ஒரு நிறுவனம்.  அதற்காக மணலை வாங்கி மலையாக குவித்து வைத்திருந்தது. அதிலிருந்து 500 டிரக் மணல்  திருடு போய்விட்டதாம்! (ஆதாரம்: TIME).

3. அமெரிக்காவின்  தெற்கு கரோலினா மாநிலத்தின்   கடல் பகுதியில் 1857’ம் ஆண்டு ஒரு கப்பல் மூழ்கி விட்டது. இப்போது  வெகு ஆழத்தில் அது கண்டு பிடிக்கப்பட்டது. அதில்  சுமார் 3600 சவரன் தங்கம் கிடைத்தது. (ஆதாரம்: TIME).

4. சோனி நிறுவனம் பற்றி இரண்டு தகவல்கள்.

**. நிதி நிலமை அவ்வளவு திருப்திகரமாக இல்லயாம். அதனால் 5000 ஊழியர் களுக்கு  ‘டாட்டா’  கொடுக்கத்  திட்டமாம்.

**சோனியின் புதிய காசெட் டேப் விரைவில் மார்க்கெட்டுக்கு வரப் போகிறது அதில் என்ன விசேஷமாம்? (அதன் கொள்ளளவு 185 டெராபைட்.) கிட்டத்தட்ட  60 மில்லியன் (அதாவது 6 கோடி) பாடல்கள் அதில் பிடிக்குமாம். ஒரு செகண்ட் கூட விடாமல் கேட்டால் கூட 100 வருஷம் தேவைப்படும்! (ஆதாரம்: டைம் இதழ்)

5. ஒபாமா சொன்னது
சில வாரங்களுக்கு முன்பு  அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிபர் ஒபாமா   ஒரு  உரை நிகழ்த்தினார். அப்போது அவர் சொன்ன தகவல்: நாலு  நிமிஷத்திற்கு  ஒன்று என்ற கணக்கில் நாட்டில் பல வீடுகள் ஸோலார் பேனல்கள்  வீடுகளாக  மாறி வருகின்றன.

May 10, 2014

வாயைத் திறந்தால் ஆபத்து!


அமெரிக்கக் காமெடியன் புகழ் பெற்ற Groucho Marx (1890-1977) நாடக, திரைப்பட நடிகர்   மட்டுமல்ல நல்ல நகைச்சுவை எழுத்தாளரும் கூட. டி..வி ஷோக்களிலும் கலக்கி இருக்கிறார்.
மார்க்ஸ் பிரதர்ஸ் என்ற பெயரில் அவரும், CHICO, ZEPPO, HARPO  என்ற அவரது மூன்று சகோதரர்களும் புகழ் பெற்று விளங்கினார்கள்.
 
Groucho எழுதும் கடிதங்கள் மிகுந்த நகைச்சுவையுடன் இருக்கும். 1965-ல் அமெரிக்க  LIBRARY OF CONGRESS  அவரது கடிதங்களைத் தொகுத்து வைக்க விரும்பியது. இது மிகப் பெரிய கௌரவம். GROUCHO LETTERS  என்ற பெயரில் வெளியான புத்தகத்தை, பின்னால் பிளாக் எழுதுவதற்கு உதவும் என்று அப்போதே 1970-ல் வாங்கி விட்டேன். ("பின்னால் பிளாக் எழுதுவதற்கு உதவும் என்று அப்போதே 1970-ல் வாங்கி விட்டேன்" என்பது  ரீல் தானே என்று கேட்பவர்களுக்கு என்னுடைய பதில்: ஆம்!)

சமீபத்தில் அவர் எழுதிய GROUCHO MARX AND OTHER SHORT AND LONG TALES என்ற புத்தகம் எனக்கு கிடைத்தது. நியூயார்க்கர்,  நியூயார்க் டைம்ஸ் போன்ற பத்திகைகளில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. அதில் இருந்த WHY HARPO DOESN’T TALK என்ற கட்டுரையில் ஒரு சுவையான தகவல் இருந்தது. அந்தக் கட்டுரையைச் சுருக்கித் தருகிறேன்.

·                *                 *

ஒரு சமயம் ILLIONOIS மாநிலத்தில் ஒரு சிறிய ஊரில் எங்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.  எங்கள் குழுவில் நாங்கள்  நாலு பேர்,  துணை நடிகர்கள் நாலு பேர்,  நடிகைகள் எட்டு பேர் இருந்தோம். ஒரு புதன்கிழமை மாலை அந்த ஊருக்குப் போய் சேர்ந்தோம். ஹால் மிகவும் சிறியதாக இருந்தது.
மறுநாள் மியூசிக் ரிகர்சல் பார்க்கப் போனோம். இசையைப் பொறுத்தவரை நான் ஒரு பெரிய பூஜ்யம். இருந்தாலும் குழுவின் தலைவைனாயிற்றே நான்! அதனால் போனேன்!
ஸ்டேஜிற்குள் நுழைந்ததும். எங்கிருந்தோ ’தாதா’ மாதிரி ஒரு ஆசாமி வந்தார். “யாருப்பா நீ.. போர்டைப் பார்க்கலை? இங்கே சுருட்டு குடிக்கக் குடிக்கக்கூடாது. ஆமாம்.. உனக்கு ஐந்து டாலர் அபராதம் போடறேன்” என்றார்.  
“முதல்லே நீங்க யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்று கேட்டேன்.
“ நானா?.. என்னையா கேட்கறே? நான் ஜான் வெல்ஸ். இந்த ஹாலின் மானேஜர்; சொந்தக்காரன். இங்கு சட்டவிதிகள் இருக்கின்றன. அந்த போர்டில் என்ன போட்டிருக்கிறது என்பதைப் பார்.
“போர்டா? .. அதோ அதுவா?.. அது என் கண்ணிலே படவில்லையே. கண்ணுக்குத் தெரியாத ஒரு மூலையிலே போட்டுவிட்டால் போதுமா? போர்டை ஏதாவது பாத்ரூமுக்குள்ளே மாட்டி வெச்சு, கதவை மூடி வெச்சிருக்கலாமே” என்றேன்.”
“ ஐயா.. நக்கல் புலியா? இப்படி சொன்னதுக்கு நீ ஐந்து டாலர் அபராதம் கட்டணும்” என்றார் அதிகாரமாக.

April 30, 2014

அமெரிக்கா :ஒரு லாபம் - ஒரு நஷ்டம் -ஒரு வியப்பு -ஒரு சிரிப்பு


1.ஒரு லாபம்
அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் இருக்கும் சான் ஃப்ரான்சிஸ்கோ நகருக்கு ஒரு சமயம் போயிருந்தேன். அங்கு சில நாள் தங்கி  பல இடங்களைச் சுற்றிப் பார்க்கத் திட்டம் என்பதால் ஒரு வாடகை காரை எடுத்துக் கொள்ள விரும்பினோம். விமான நிலையத்திலேயே வாடகைக்கார் கம்பெனி இருந்தது. அங்கு போவதற்கு விமான நிலையத்திற்குள்ளேயே ஓடும் ரயிலில் ஐந்து, ஆறு நிமிஷம் பயணம்  செய்து போகவேண்டும். 
 அங்கு போனோம். ஏராளமான கார்கள் நின்று கொண்டிருந்தன. நிறைய பேர் கார் ’புக்’ பண்ணிக் கொண்டிருந்தார்கள். நாங்களும் ஒரு கார் புக் செய்தோம்.  “ இதோ ஐந்து நிமிஷத்தில் கார் வந்துவிடும். காரைத் துடைத்துக் கொண்டிருக்கிறார்கள் வெயிட்” என்றார் ஒரு பணியாள்.காத்திருந்தோம்.  5. 10, 15 என்று நிமிஷம் ஆயிற்று. காரைக் காணோம். ஆனால் அந்த அந்தப் பணியாள் அவ்வப்போது வந்து பணிவுடன், “ சாரி.. டூ மினிட்ஸ்? என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.
சுமார் 20 நிமிஷம் கழித்து, கார் வந்தது. கார் சாவியை எங்களிடம் கொடுத்து விட்டு அந்த அலுவலர். “  சாரி. டிலே ஆகிவிட்டது. காரில் முழு டாங்க் பெட்ரோல் நிரப்பி இருக்கிறது. சாதாரணமாக, காரைத் திருப்பிக் கொடுக்கும்போது முழு டாங்க் பெட்ரோலுடன்தான் கொடுக்க வேண்டும் என்பது நிபந்தனை.. ஆனால் உங்களை காக்க வைத்ததற்காக உங்களுக்குச் சின்ன சலுகை தருகிறோம். காலி டாங்குடன்கூட காரைத் திருப்பிக் கொடுக்கலாம். இந்த சீட்டைக் காட்டினால் போதும்: என்றார். ‘கிட்டத்தட்ட 100 டாலர் பெட்ரோல் இலவசமாகத் தருகிறார்’ என்ற மகிழ்ச்சியோடு காரை எடுத்துக் கொண்டு போனோம்.

2.ஒரு நஷ்டம்!
சான் ஃப்ரான்சிஸ்கோவில் பல இடங்களைச் சுற்றி பார்த்தோம். 

April 23, 2014

கமலாவும் கம்ப்யூட்டரும்

  
ஒரு சின்ன முன்னோட்டம்
என்னுடைய ’கமலாவும் கத்தரிக்காய் கூட்டும்’   புத்தகம் 1988-ல் பிரசுரமானது. விலை ரூ.18! அணா, பைசா என்ற வார்த்தைகள் புழக்கத்திலிருந்த   காலத்தில் எழுதப்பட்ட கதைகள் தொகுப்பு. லைப்ரரி ஆர்டர் எதுவும் இல்லாமலேயே, 4.5  மாதங்களில்  விற்று விட்டது.  அதிலிருந்து ஒரு கமலா-தொச்சு கதையைப் போடுகிறேன்.  25-30  வருஷம் ஆனாலும் இன்னும் நகைச்சுவையை ரசிக்க முடியும். இது யாரோ சொன்னது அல்ல. இதைச் சொன்னது நான்தான்!
புத்தகத்தில் போடப்பட்டிருந்த  முன்னோட்டமும் கதையும். 
                                        ----------------------------------
     * கோபம் வந்தால் கமலா வேஸ்ட் பண்ண மாட்டாள். ஒருத்தர்  இல்லாவிட்டால் வேறு ஒருவர் மேல் அதைச் செலுத்தி விடுவாள்.
* தொச்சு மட்டும் பவநகர் சமஸ்தானத்திற்கு திவானாகப் போயிருந்தால், சமஸ்தானம் திவாலாகிப் போயிருக்கும்.
    * கமலா என்னை எத்தனை விதமாகத் திட்டினாலும், "நாசமாகப் போக' என்று திட்டமாட்டாள். காரணம் என் மேல் அவளுக்கு அளவு கடந்த ஆசை
   * ....என்று கமலாவிற்கு ஜிங்-சிக் போட்டேன். வெற்றிகரமான தாம்பத்யத்திற்கு ஆதார சுருதியே ஜிங்-சிக் தான்!
   * கமலா ஹார்மோனியம் வாசிக்க, ஏதோ ஒரு கட்டை சுயாட்சி பெற்று, தன்னிச்சையாக உரிமைக் குரலை எழுப்பியது. கமலாவின் கட்டைக் குரலுக்கு, ஹார்மோனியக் "கட்டை"யின் குரல் எவ்வளவோ தேவலாம்!.
       * கமலா பாடியது கர்நாடக இசை அல்ல. கர்நாடக இ(ம்)சை!
      * "கொள்ளை லாபம்” என்றாள் கமலா. "கொள்ளை போய் விடும் நமக்கு. லாபம் கிடைத்துவிடும் கடைக்காரருக்கு' என்றேன்

###########

கமலாவும் கம்ப்யூட்டரும்

     காலையில்  நான் கையில் பேப்பரை எடுத்தால் என் அருமை மனைவி கமலாவிற்குப் பொறுக்காது.

     "ஏன்னா. . . அடுப்பிலே குழம்பு கொதிக்கிறது. போய் அரை அணாவுக்குக் கொத்தமல்லி வாங்கிக் கொண்டு வாங்கோ. . . '' என்று டூ-இன்-ஒன் (அதிகாரம் ப்ளஸ்  அவசரம்) குரலில் என்னை விரட்டுவாள். அரையணாவிற்குக் கொத்தமல்லி கேட்டால் காய்கறிக்கடைக்காரர் கொத்திக் குதறி விடுவார் என்பது கமலாவுக்கு மட்டும் தெரியாது.

     இல்லாவிட்டால், சமையலறையிலிருந்து கத்துவாள், "பரணிலிருந்து அப்பளக் குழவியை எடுத்துக் கொடுங்கள்'' என்று.  எங்கள் வீட்டில் அப்பளக்குழவியை ஒரே ஒரு காரியத்திற்குப் பயன்படுத்துவாள் கமலா. டூத்பேஸ்ட் ட்யூபில் கடைசி  கடுகு அளவு "பேஸ்ட்"டை எடுக்கக்  குழவியை அதன் மேல் ஓர் ஐம்பது தடவை ஓட்டி, (ரோடு எஞ்சின் ஏறியது போல் தட்டையாகிப் போகும் வரை)  பேஸ்ட்டை எடுத்து உபயோகிப்பாள்.
அதுவும் இல்லாவிட்டால் பால்காரருடன் சண்டை போட ஆரம்பிப்பாள்,

     "நேற்று முக்கால் ஆழாக்குக் குறைச்சுக் கொடுத்தே. இன்னிக்கு அரை ஆழாக்குச் சேர்த்துக் கொடுத்துடு. ஞாபகம் வைச்சுக்க, இன்னும் ஏழரை ஆழாக்கு நீ பாக்கி.....நாளுக்கு நாள் பால் தண்ணியாயிண்டே போறது. ஹும்..... நான் கத்தி என்ன பிரயோஜனம்...? ஐயா கிட்டே பணம் வாங்கிண்டு போயிடுவே கரெக்டா.... அவர் ஒரு வார்த்தை சொல்லமாட்டார். அவர் அலட்டல் எல்லாம் சமையல் கட்டு வரை தான். . . . '' என்று பால்காரரைத் திட்ட முடியாத கோபத்தை என் பக்கம் திருப்பி விடுவாள்.

        ஒருவிஷயத்திற்குக் கமலாவைப் பாராட்டாமல் இருக்க முடியாது. கோபம் வந்து விட்டால் அதை வேஸ்ட் பண்ண மாட்டாள். ஒருத்தர் இல்லாவிட்டால் வேறு ஒருத்தர் மேல் அதைச் செலுத்தி விடுவாள்!

     இப்படித்தான் அன்றொரு நாள் அவள் வாதம், விவாதம், விதண்டாவாதம் மூன்றையும் கலந்து நாலு வீடுகள் கேட்கும் அளவிற்கு உரத்த குரலில் பால்காரருடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள்!

     "எனக்கா கணக்குத் தெரியாது? நான் தான் காலண்டரில் கரெக்டா எழுதிண்டு வர்றேனே! இதோ பார், ஒண்ணாம் தேதி இரண்டரை ஆழாக்கு, காலையில், சாயங்காலம் மூணு ஆழாக்குக் கொடுத்தே. முன்தினம் பாக்கி அரை ஆழாக்குப் போனா, இரண்டரை தான் கணக்கு. அப்புறம் இரண்டாம் தேதி மாடு உதைச்சிட்டுதுன்னு ஒன்பதரை ஆழாக்கு. . . ''

     ஆழாக்கு என்ற வார்த்தையைத் தமிழ்நாட்டில் இன்றும் பாதுகாப்பாகக் கட்டிக் காத்து உபயோகித்து வரும் ஒரே நபர் கமலா தான்.

     போன வருஷம் வரை மூணே காலணா, ஆறே முக்காலணா என்று சொல்லிக் கொண்டிருந்தவள், இப்போது தான் நயா பைசாவிற்கு வந்தாள். ஆறு மாதம் வரை ஒரு வீசை, அரை வீசை என்று சொல்லி அதற்குக் கிராம் கணக்கில் என்னைக் கேட்டு, காய்கறி, சாமான்கள் வாங்கி வந்து கொண்டிருந்தாள்!

     கமலா-பால்காரர் விவாதம், பேப்பரைப் படிக்க விடாமல் என்னைத் தடை செய்தது. ஆகவே, நான் "என்ன கமலா, பால்காரருடன் போராட்டம்?  உனக்கு ஒரு கம்ப்யூட்டரை வாங்கித் தந்து விடுகிறேன், பால் கணக்குப் பார்க்க'' என்றேன். அந்தக்கணம் என் நாக்கில் சனி குடியேறி இருக்க வேண்டும்!

     "ஆஹா...கம்ப்யூட்டர் தானே...நீங்க தானே...ஹும்... இந்த ஜன்மத்திலே இல்லே...''

     "ஏன் கமலா இப்படி அலுத்துக்கறே?... கம்ப்யூட்டர் வாங்கித் தருவேன். அதை உபயோகிக்க முதலில் கத்துக்கணும். அதுக்குன்னு என்னென்னமோ லாங்கவேஜ் இருக்காம்.''

     "இருந்தால் என்ன... நம்ப வீட்டுக்கு வந்தால், நாம்ப பேசற பாஷையைத் தானா புரிஞ்சுண்டுடறது... இப்போ நாய்க்குட்டி இருக்குது... அது வெள்ளைக்காரங்க வீட்டிலே வளர்ந்தால், "ஸிட்"டுனா உட்காரும். இந்திக்காரன் வீட்டிலே வளர்ந்தால் "பைட்"னா உட்காரும்... எல்லாம் பழக்கற விதத்திலே இருக்கிறது...''

     ''....ஆமாம், ஆமாம். கமலா, நீ சொல்றது ரொம்ப சரி'' என்றேன். (இப்படிச் சொல்லாவிட்டால் இந்த விவாதம் பதினெட்டு நாட்கள் தொடரும், கமலாவிற்குப் பாரதப் போரில் நிறைய ஈடுபாடு உண்டு.)

     "ஊர்லே ஒரு குப்பைத் தொட்டி விடாமல் கம்ப்யூட்டர் காலேஜ் விளம்பரங்களை எழுதியிருக்காங்க. .. எதிலேயாவது சேர்ந்தால், தன்னாலே தெரிஞ்சுண்டுடறது. இது என்ன பெரிய அசுர வித்தையா...?''  என்று கேட்டாள்.
                                                 *                             *
     போதாத காலம் என்று வந்து விட்டால் அது எத்தனையோ விதமாக  வரலாம். ஏன், ஏர் பஸ்ஸிலும் (அமெரிக்காவிலிருந்து என் மருமான் ஸ்ரீதர் உருவில்) அல்லது 17-ஆம் நூற்றாண்டு சைக்கிளிலும் (என் அருமை மனைவி கமலாவின் அருமைத் தம்பி தொச்சுவின் உருவில்!) வரலாம். எனக்கு ரொம்பவும் போதாத காலமாக இருந்திருக்க வேண்டும். ஆகவே அது இரண்டு உருவிலும் வந்தது.