November 24, 2014

பென்குரியனும் பில் கேட்ஸும்

 சில பதிவுகளுக்கு முன்பு இஸ்ரேலின் முதல் பிரதமராக இருந்த பென் குரியனைப் பற்றி எழுதி இருந்தேன். ( இங்கே சொடுக்கவும்: பென் குரியன் பதிவு
அதில் ஒரு சுவையான தகவலை எழுத விட்டு விட்டேன். அதை இங்கு தருகிறேன்.

இன்னிக்கு உங்கள் வேலை
David Ben-Gurion
 பென் குரியன் பிரதமராக இருந்த ஒரு சமயம் (செப்டம்பர் 1953 வாக்கில்) தன் வீட்டில் சில நண்பர்களுடன் டின்னர் சாப்பிட்டு விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது சமையலறையிலிருந்த அவருடைய மனைவி குரல் கொடுத்தாராம் ”பென் குரியன். இன்னிக்கு உங்க டியூட்டி” என்று,

“ எக்ஸ்கியூஸ் மீ.. ஒன் மினிட்” என்று நண்பர்களிடம் சொல்லிவிட்டு, சமையலறைக்குப் போய் பாத்திரங்களைத் தேய்த்து வைத்து விட்டு வந்தாராம். அன்று  அவர் பாத்திரம் தேய்க்க வேண்டிய முறை தினமாம்!

இப்போது இதை எழுதியதற்கு ஒரு காரணம் இருக்கிறது:

’மைக்ரோஸாஃப்ட்’ பில் கேட்ஸின் மனைவி   MELINDA GATES, ’டைம்ஸ்’ வார இதழின் பத்துக் கேள்விகள் என்ற பகுதியில் இந்த வாரம்   இடம் பெற்றிருக்கிறார்..
Melinda Gates
அதில் வந்த ஒரு கேள்வியும் பதிலும் இதோ.
டைம்ஸ் நிருபர்: உலகின் மிகப் பெரிய பணக்காரர் (பில் கேட்ஸ்) எப்போதாவது பாத்திரம் கழுவி எடுத்து வைப்பாரா?

MELINDA GATES:  உண்மையைச் சொல்லப் போனால் ‘இல்லை’  இரவு டின்னருக்குப் பிறகு, எல்லாரும் சேர்ந்து இந்த வேலையைச் செய்வோம்.
பாத்திரங்களைக் கழுவுகிற வேலை அவருக்குப் பிடிக்கும்.
அவருடைய வீட்டில் சகோதரியுடன் வளர்ந்தவர். சகோதரியும் அவரும் சேர்ந்து பாத்திரங்கள் கழுவுவது வழக்கம்.
பாத்திரங்களை டிஷ் வாஷரில்   ’லோட்’ செய்ய  அவருக்குப் பிடிக்கும். கழுவின பாத்திரங்களை எடுத்து வைக்கும் வேலை பிடிக்காது... அல்லது, இப்படி வைத்துக் கொள்ளுங்கள். எடுத்து வைக்கும் வேலையை அவர் செய்வதற்கு நாங்கள் விடுவதில்லை!

November 17, 2014

அன்புடையீர்,

வணக்கம்.

அடுத்த பதிவு தாமதமாக வரும்.

எனக்குச் சற்று ஓய்வு தேவைப்படுகிறது.

-கடுகு

# # # # # # # # # # # # 

November 03, 2014

ஐன்ஸ்டீன்- தெரிந்த பெயர்; தெரியாத தகவல்கள்


ஐன்ஸ்டீன்,  தனது UNIFIED CONCEPT THEORY என்ற கோட்பாட்டை அறிவித்து, அது உலகம்  முழுதும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருந்த சமயம்  நடந்த நிகழ்ச்சி.
ஐன்ஸ்டீன் நியூயார்க்கில் தனது நண்பரின்  வீட்டில்2,3 நாட்கள் தங்கி இருந்தார். பிறகு அவர் தன் சொந்த ஊரான பிரின்ஸ்டனுக்குப் போனார். 
அவர் சென்றதும், அவர் தங்கி இருந்த அறையை வேலைக்காரப் பெண்மணி பெறுக்கப் போனார் . அறை சுவற்றைப் பார்த்தும் அதிர்ச்சி அடைந்தார். காரணம் சுவர் பூராவும் ஏதேதோ  எண்கள் எழுதப்பட்டிருந்தன. அத்துடன்  குறிப்புகளும் எழுதப்பட்டிருந்தன.  ஐன்ஸ்டீன் ஏதோ கிறுக்கித்தள்ளி இருந்தார்.
வேலைக்காரப் பெண்மணி தன் எஜமானரைக் கூப்பிட்டுக் காண்பித்தார். எல்லாம் கணித சூத்திரங்களாக இருந்தன.
ஐன்ஸ்டீனின் நண்பர்   உடனே இரண்டு பேருக்குப் போன் செய்தார். முதலில் ஐன்ஸ்டீனுக்குப் போன் பண்ணி, அந்த சுவரில் எழுதி இருப்பதைப் பற்றிக் கேட்டார். " ஓ, அவையெல்லாம் என் தியரி தொடர்பான சூத்திரங்கள்”‘என்றார்.

‘அப்படியா..சரி” என்று சொல்லிவிட்டு, போனை வைத்து விட்டார்அடுத்து,அவர்  பெரிய கண்ணாடி கடைக்குப் போன் பண்ணினார். ஐன்ஸ்டீன் ‘கிறுக்கிய’ கணித சூத்திரங்கள் பாதுகாப்பாக இருக்க, சுவர் அளவு கண்ணடி சட்டம் போட ஆர்டர் கொடுத்தார்!
*    *        *
ஒரு சமயம் ஐன்ஸ்டீனுக்கு ஒரு கடிதம் வந்தது. “ நீங்கள் மிகச் சிறந்த சிந்தனையாளர் . உங்களுடைய மிகச் சிறந்த ஆறு எண்ணங்களை, எங்கள் கமிட்டிக்குத் தெரியப்படுத்தினால் மிக்க மகிழ்ச்சி அடைவோம்” என்று கேட்டிருந்தார்கள்.
இதற்கு ஐன்ஸ்டீன் எழுதிய ஆறு வார்த்தைப் பதில்: கடவுள், தேசம், மனைவி, கணிதம், மனித சமுதாயம்,உலக அமைதி!”
*    *        *

October 23, 2014

புத்தக வேட்டை


ON BOOKS:
These are not books, lumps of lifeless paper, but minds alive on the shelves. From each of them goes out its own voice…and just as the touch of a button on our set will fill the room with music, so by taking down one of these volumes and opening it, one can call into range the voice of a man far distant in time and space, and hear him speaking to us, mind to mind, heart to heart.--Gilbert Highet
***************************
ஞாயிற்றுக் கிழமைகளில்  டில்லி செங்கோட்டை செல்லும்  தாரியாகஞ்சின் அரைமைல் நீள நடைபாதையில்  பழைய புத்தகங்கள் கொட்டிக் கிடக்கும். தாரியாகஞ்சின் வெகு அருகில் இருந்த மின்டோ ரோடில் என் வீடு இருந்ததால் அடிக்கடி போய் வருவேன்.

அறுபதுகளில், ஒரு சமயம் பியர் டேனினாஸ்  (PIEERE DANINOS 1913-2005 ) என்ற பிரஞ்சு எழுத்தாளர் எழுதிய  LIFE WITH SONIA  என்ற புத்தகம் (ஆங்கில மொழிபெயர்ப்பு) கிடைத்தது. நகைச்சுவைப் புத்தகம் என்று போடப்பட்டிருந்ததால், விலையைப்பற்றி  யோசிக்காமல் முழுதாக ஒரு ரூபாய் கொடுத்து வாங்கி விட்டேன்!

தன் மனைவியைக் கிண்டல் அடித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சூப்பர் புத்தகம். ( பின்னால் அவர் கட்டுரை ஒன்றைத் தமிழ்ப்படுத்திப் போடுகிறேன்!) அதன் பிறகு, மேஜர் தாம்ப்ஸன் என்ற கதாபாத்திரத்தை வைத்து அவர் எழுதிய மூன்று லட்டு புத்தகங்களைத் தேடிப் பிடித்து வாங்கினேன்.  இவரது புத்தகங்கள் 28 மொழிகளில்  வெளிவந்துள்ளன.

October 06, 2014

தொச்சு பகவான்



தொச்சுவை பார்த்தபோது எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. பல சமயம் -ஏன் ஒவ்வொரு சமயமும் என் மைத்துனன் தொச்சுவைப் பார்த்ததும் தூக்கிவாரிப் போடுவது சகஜம்தான். லேசான அதிர்ச்சி, கூடுதலான அதிர்ச்சி, அதிக அதிர்ச்சி என்று அதிர்ச்சியின் அளவில் மாறுதல் இருக்குமே தவிர, அதிர்ச்சி இல்லாமல் இருக்காது. ஆனால் இந்த சமயம் அவனைப் பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி சற்று அதிகமானது.

    தொச்சு காவி உடையில் இருந்தான்! காவி வேட்டி, கிட்டத் தட்ட கணுக்கால் வரை நீண்ட ஜிப்பா, ஆயிரம் தான் அங்கச்சியைத் திட்டிக்கொண்டே இருந்தாலும், துறவியாக மாறக்கூடியவன் அவன் அல்லவே!

அதிர்ச்சியிலிருந்து சுதாரித்துக்கொண்டு, “என்னப்பா இது புதிய கோலம்? உன்னை தொச்சுன்னு கூப்பிடவேண்டுமா அல்லது தொச்சு பகவான்னு கூப்பிட வேண்டுமா ....?  கமலா!  பார், யார் வந்திருக்கான்னு .... தொச்சு பகவான் வந்திருக்கிறார், பாத பூஜை பண்ணி உள்ளே “ஏள” பண்ணு என்றேன்.
    என் அருமை மாமியார் பின் தொடர, என் அருமை மனைவி கமலா, “தொச்சுவை பாதகன்னு சொல்லிக்கொண்டே இருப்பீங்க, திடீர்னு அவன் மேல் என்ன கரிசனம்? பகவான்னு சொல்றீங்க!'' என்று கேட்டுக் கொண்டே வந்தாள். தொச்சுவின் உடை அலங்காரத்தைப் பார்த்து, “என்னடா தொச்சு?.... இது என்ன வேஷம்? என்று கேட்டாள்.
    ”வேஷமும் இல்லே, கோஷமும் இல்லே. இது சும்மா ஒரு இது தான்.''
    ”என்னப்பா தொச்சு. டி வி. பேட்டியில் பதில் சொல்பவர்கள் போல், ஒரே இதுவா பேசறே?''
    ”உள்ளே வாடா, வந்தவனை வாசலிலேயே நிக்க வச்சுண்டு பேசற வழக்கத்தை எத்தனை வருஷமானாலும் விடமாட்டீங்களே!'' என்று கமலா தொச்சுவை வரவேற்றபடியே என்னையும் தூற்றினாள். சந்தடிசாக்கில் கந்தகப் பொடி வைப்பதில் கெட்டிக்காரி.
    ”அத்திம்பேர், இந்த டிரஸ்ஸைக் காவியாகப் பார்க்காதீங்க. இது கதர் துணி. சுதந்திரம் வந்து ஐம்பது வருஷம் ஆச்சு. காந்திஜி கதர் உடுத்தச் சொன்னார். ஆனால் நாம் காந்தியை மறந்து விட்டமாதிரி கதரையையும் மறக்க ஆரம்பிச்சுட்டோம் .... அதனாலே ....?''
    ”என்னப்பா, அதனால்'னு சொல்லி நிறுத்திட்டே? விளம்பர இடைவேளைக்குப் பிறகு தொடருமா'' என்று கேட்டேன்.