August 02, 2019

தினமணி கதிர் துணுக்கு - 50 வருட பழசு!

 வேலூர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவர் திரு கதிர் (ஆனந்த்) இவர் திமுக பிரமுகர் திரு துரை முருகன் அவர்களின் மகன். ஆகவே அவரை திரு டி. எம். கதிர் (D.M.Kadir அல்லது D.M.K.) என்றும் குறிப்பிடலாம்!

பல வருடங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட இதே மாதிரி ஒரு துணுக்கை, தினமணி கதிரில் நான் எழுதியது நினைவுக்கு வந்தது. அதை இங்கே தருகிறேன்.


1967 வாக்கில் நான் டெல்லியில் இருந்தேன் அப்போது தினமணி கதிரில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன். டெல்லியில் கன்னாட் பிளேஸ் பகுதியில் இருந்த சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி என்ற நிறுவனத்தில் தான் தினமணி கதிர் கிடைக்கும். அங்கு போய் ஒவ்வொரு வாரமும் தினமணி கதிர் வாங்குவது வழக்கம். அங்கு எந்தப் பத்திரிகை வாங்கினாலும் ரசீது போட்டு தான் கொடுப்பார்கள்.


ஒரு தரம் நான் தினமணி கதிரை எடுத்துக்கொண்டு, ரசீது போடுபவரிடம் கொடுத்தேன் அவர் ஆங்கிலத்தில் D.M.K - 0.50 (?) என்று எழுதி ரசீது போட்டுக் கொடுத்தார். (வழக்கமாக DINAMANI KADIR என்றுதான் ரசீதில் எழுதுவார்கள்.)


அந்த ரசீதைப் பார்த்தபோது ஒரு துணுக்கு எனக்கு அதில் கிடைத்தது. சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சியைப் பொதுவாக டெல்லியில் சி. என். ஏ. என்று குறிப்பிடுவது வழக்கம். C.N.A என்றால் அறிஞர் அண்ணாவையும் குறிக்கும் அல்லவா? “அறிஞர் அண்ணாவிடம் இருந்து D.M.K.யை வாங்கினேன்” என்கிற மாதிரி ஒரு துணுக்கை எழுதி அனுப்பினேன். ரசீதின் படத்துடன் அது கதிரில் பிரசுரம் ஆயிற்று!

6 comments:

  1. துணுக்கு எழுத்தாளர்கள், எதையும் கவனித்து, எதை எப்படி ரசிக்கும்படி எழுதலாம், எதனை ரசிப்பார்கள், எந்தப் பத்திரிகை இதனை வெளியிடும் என்று கவனித்து உடனே செயலாற்றுவார்கள் போலிருக்கு.

    இப்போ மொபைல் இருப்பதால், நிறைய மீம்ஸ் திறமைசாலிகள் வெளியே தெரிகிறார்கள். அப்போ துணுக்கு எழுதுபவர்கள் குறைவு, துணுக்கு போய்ச்சேர்ந்து அது வெளியிடப்படும் வரை ஆவலைத் தூண்டுவதாக இருக்கணும் (தேர்தல் பற்றிய துணுக்கு தேர்தல் முடிந்து வெளிவந்தால் ரசிக்க முடியாது).

    ReplyDelete
  2. நிறைய மின்னூல்கள் (கிண்டிலில் வாசிக்க) வெளியிடுகிறீர்கள் போலிருக்கு.

    இதெல்லாம் மனதிருப்திக்குத்தான் என்று நினைக்கிறேன் (நிறையபேரை அடைவதற்கான மனதிருப்தி). மற்றபடி காசு அவ்வளவு கிடையாது இல்லையா (வரவு)?

    ReplyDelete
  3. நல்ல துணுக்கு. காலத்திற்கு ஏற்பப் போட்டிருக்கீங்க! இங்கேயும் முடிந்தவரை தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  4. ஸ்வாரஸ்யம்.

    தில்லி கனாட் ப்ளேஸ் பகுதியில் இப்போதும் CNA இயங்குகிறது. உங்கள் மின்னூல்கள் கிண்டிலில் கிடைப்பது அறிந்து மகிழ்ச்சி.

    ReplyDelete
  5. கன்னாட் பிளேஸ் அனுபவங்கள் இன்னும் நிறைய இருக்குமே உங்களிடம்! தொடர்ந்து எழுதினால் என்னைப்போல அந்த நாளில் டில்லியில் இருந்தவர்கள் அசைபோடத் தீனி கிடைக்குமே!

    ReplyDelete
  6. மதிப்பிற்குரிய திரு அகஸ்தியன் சார் அவர்களுக்கு,

    வணக்கம்.

    நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் பதிவுகள் தொடர்ந்து வருவதில் மகிழ்ச்சி.

    பழைய குமுதம் எல்லாம் திரும்பவும் படிக்கணும் போல இருக்கு. ஹும்...

    அன்புடன்

    சீதாலஷ்மி சுப்ரமணியம்

    ReplyDelete

............உங்கள் மேலான கருத்துகளை வரவேற்கிறேன்!